அதிகார விளக்கம் :-
பிறன்மனை விழையாமை' ஆண்களுக்கென உரைக்கப்பட்ட பாடல் தொகுப்பாகும். காம இனபங்களைத் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயசெயல். உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இணைவிழைச்சு இயல்பூக்கமாயினும், புறத்தொழுக்கம் இருப்பின் இல்வாழ்க்கை சிறவாது என்பதால், மாந்தர்க்கு அது ஒரு வரையறைக்குள் கொண்டுவரப் பெற்றுள்ளது. பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது இவ்வதிகாரம். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது காமுறுவது பேதைமை, தீமை, பழி,பாவம் என்று கடியும் அதிகாரம், 'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று பிறன்மனை விழையாமையைப் புகழ்கிறது.