'நெஞ்சமெல்லாம் அலரே !!' எபிலாக்

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

வந்துட்டேன் சொன்னது போலவே 'நெஞ்சமெல்லாம் அலரே !!' எபிலாக் உடன் நான் வந்துட்டேன். இத்தனை தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும் ஆனால் தாமதத்திற்கு நீங்கள் தான் காரணம்.., ஆம் நான் இந்த கதையை முடித்த போது 'உயிரில் உறைந்த உறவே!!' கதைக்கு மூன்றாம் பாகம் எழுதும் எண்ணமில்லை அதனால் அக்கதை மாந்தர்களை இத்துடன் இணைத்து இரண்டு கதைக்கும் ஒரே எபிலாக் போடுவதென்று தீர்மானித்து இருந்தேன். ஆனால் உங்களின் அன்பும் ஆதரவுடன் UUU மூன்றாம் பாகம் எழுத தொடங்கி விட்டதால் இக்கதைக்கு மட்டும் எபிலாக் கொடுப்பது என்று முடிவு செய்து வந்துவிட்டேன்


10461

'டேய் மாமா எந்திரி' என்று இழுத்து போர்த்தி கொண்டு தூங்கி கொண்டிருந்தவனை அலர் பிடித்து உலுக்க,

எழிலிடம் அசைவில்லை

பின்னே உறங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் உறங்குவது போல் நடிப்பவர்களை எங்கனம் எழுப்ப..!!

'டேய் பிராடு நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும் மரியாதையா இப்போவே எந்திரிச்சேன்னா ...' என்று எச்சரிக்க தொடங்கவும்

குப்புற படுத்து இருந்தவனிடம் இருந்து சிறு அசைவு கூடவே, "தூக்கம் வருதுடி பட்டு நாளைக்கு சேர்த்து சாப்ட்டுக்கிறேன், பசியில்லை" என்று சோம்பலான குரலில் அவன் கூற,

"டேய் என் கோபத்தை கிளராத" அவன் முதுகில் பட்டென்று ஒன்று வைத்தவள், "பசியில்லையா" என்று கடுப்புடன் அவனை பார்த்தவள் கண்களை இறுக மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி மீண்டும் அவனிடம் , "வேண்டாம், உன்மேல கொலை வெறியில இருக்கேன் மரியாதையா எந்திரிடா எருமை" என்றது அவனை திருப்ப முயல

இப்போது போர்வையை விலக்கியாவாறே, "ப்ச் என்னடி உன் பிரச்சனை ..?? மனுஷனை நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா..?? என்றவாறே திரும்பி படுத்தவன் அதே வேகத்தில் அலரை இழுத்து தன் மீது போட்டு கொண்டு என்ன சொல்லணுமோ இப்போ சொல்லு என்று கண்களை திறவாமல் கூற,

"டேய் கண்ணை திற" என்றாள் கோபத்துடன்

அவனோ அதை அலட்சியபடுத்தி "எதுக்குடி நீ பேசுறதை கேட்க காது திறந்து இருக்கே அது போதாதா..??" என்றிட,

"ஏன் லேட்..??" அலர்

"ப்ச் இன்னைக்கு சர்ச் இருக்குன்னு சொல்லிட்டு தானே கிளம்பினேன் அப்புறம் என்ன கேள்விடி இது..??" என்று சலித்து கொண்டவன் இப்போதும் கண்களை திறவாமலேயே அவள் கரங்களை பிடித்து தன் நெற்றியில் வைத்து "ஒரே தலைவலிடி செல்லம் கொஞ்சம் மசாஜ் பண்ணு" என்று கூற,

"எப்படி சார்க்கு இன்னைக்கு சர்ச் திண்டுக்கல் தலப்பாக்கட்டில பிரியாணிக்கு மசாலா சரியா இருக்கா ரைத்தால உப்பு அளவா இருக்கா மீனாட்சி தியேட்டர்ல பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோக்கு கூட்டம் எல்லாம் கரெக்டா வந்தாங்களான்னு பார்க்க சொல்லி இருந்தாங்களா..??? என்று அவனிடம் இருந்து தன் கரங்களை உதறியவள்,

"
எப்போ இருந்துடா உன்னை தியேட்டர்க்கும் ஹோட்டல்க்கும் சர்ச் அனுப்பினாங்க" என்று கேட்க, அதுநேரம் வரை மூடி இருந்த எழிலின் விழிகள் அன்னிச்சையாக விரிந்து கொண்டது.

அவன் மனமோ வேகமாக, "இவளுக்கு எப்படி தெரிஞ்சது...?? போன் ஆப் பண்ணிட்டோம் கடைக்கும் போகல, மாமா நேரா பஸ் ஸ்டான்ட் வந்துட்டார் அப்புறம் எப்படி தெரிஞ்சிருக்கும்" என்று கணக்கிட

அவன் எண்ணப்போக்கை உணர்ந்து , "போன் ஆப் பண்ணிட்டா உன்னை ட்ராக் பண்ண முடியாதா..??" என்று எள்ளலுடன் ஒற்றை புருவம் உயர்த்தி அவள் கேட்க

அவனோ பதறிப்போய் எழுந்து அமர்ந்தவன், "ஏய் என்னடி ட்ராக் அது இதுன்னு ஏதோ கொலை குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி பேசுற" என்றவனுக்கு வியர்க்க தொடங்கிட,

அதை மனதினுள் குறித்து கொண்டவள் குரலில் ஏகத்திற்கும் நக்கலுடன் "அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதிலை சொல்லுங்க சார்" என்று அவன் மடியில் அமரவும், 'விதி வலியது!!' என்று எழிலுக்கு புரிந்து போனது இருப்பினும் முயற்சியை கைவிடாதவனாக,

"ஏய் டயர்ட்டா இருக்கு தலைவலின்னு சொல்றேன்" என்று பல்லை கடித்து,

"எப்ப பாரு தூங்குறவன் கிட்ட குறுக்கு விசாரணை பண்றதே பொழப்பா போச்சுடி உனக்கு" என்று அவளிடையை பற்றி தூக்கியவன், "எந்திரிடி எதுவா இருந்தாலும் எதிர்ல உட்காந்து பேசு" என்று உயிரை கையில் பிடித்து கொண்டு அவளை விலக்க முயல,

"அதுதான் ராசா நடக்காது" என்றவள் அவன் புறமாக திரும்பி அமர்ந்து ஒற்றை கையால் அவன் கழுத்தை வளைத்தவள், "பொய் வாயை திறந்தா பொய்" என்று சீறியவள் தன் கைபேசியை திறந்து அதில் இருந்து சில போட்டோக்களை காண்பிக்க எழிலுக்கு விழிகளே தெறித்து விடும் போல இருந்தது.

ஆம் அதில் நாதனும் எழிலும் பஸ் ஸ்டாண்டில் இருந்து அவன் புல்லட்டில் கிளம்பி சினிமா தியேட்டருக்கு சென்றது இடைவெளியின் போது அவசர அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்த எழிலுக்கு நாதன் வாஞ்சையுடன் சமோசா ஊட்டி விட்டது படம் முடிந்து இருவரும் தலப்பாகட்டிக்கு சென்று பிரியாணியை ஒரு பிடி பிடித்து இறுதியாக உண்ட ஐஸ்க்ரீம் வரை ஒவ்வொன்றும் துல்லியமாக புகைபடமாக்க பட்டிருப்பதை கண்டு திகைத்து போனான்.

'எப்படி இது சாத்தியம்' என்றவனின் விழிகளில் என்ன முயன்றும் அச்சம் படரத்தான் செய்தது.

"சொல்லுடா" என்று அவன் கழுத்தில் பதிந்திருந்த கரத்தில் அழுத்தம் கொடுக்க, அவள் கைகளில் சிறை பட்டிருந்தவனுக்கு அதிலிருந்து மீளும் ஆசையே இல்லை இருப்பினும் வீம்புடன், "ஏய் முதல் விடுடி என்னை" என்றவன் அவளிடம்

"புருஷனையே உளவு பார்க்கிறியா..?? அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா..??" என்று இறங்கிய குரலில் கேட்க,

"அப்போ இதெல்லாம் மார்பிங்ன்னு சொல்ல போறீயா சொல்லுடா...??" என்றவளின் குரலில் அடக்கபட்ட கோபம்

"அது அது வந்து அப்ப... அப்படி எல்லாம் இல்லைடி செல்லம், ஆனா நம்பு சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாதுடி" என்று விழி உயர்த்தி அவளை பார்க்க,

"உனக்கு ஒன்னும் தெரியாது..? இதை நான் நம்பனும்" என்றவள் அவன் மடியில் இருந்து இறங்கி எதிரே அமர்ந்து 'கண்டின்யு பண்ணு' என்பதாக தலையை மெல்ல அசைக்க,

அவளது பார்வையை புரிந்து கொண்டவன் 'என்னடி இப்படி நம்பாத மாதிரியே பார்க்கிற' என்று பாவமான குரலில் கேட்டு அவளருகே அமர்ந்தவன்,

பட்டு உனக்கு என்னை தெரியாதா..??" என்று அவள் தோளில் கைபோட்டு தன்னோடு அணைக்க முற்ப்பட,

தன்னை சுற்றி இருந்த கரத்தை ஓரவிழியால் பார்த்தவள் மறுநொடியே அதை சுற்றி எடுத்து அவன் பின்னால் வளைக்கவும்

"ஏய் என்னடி பண்ற கையை விடு" என்று அவன் அலற,

அலரோ கட்டுக்கடங்கா சீற்றத்துடன், "டேய் எனக்கு தான்டா உன்னை பத்தி முழுசா தெரியும்" என்று அவன் கையை திருப்பியவள், "இப்படி பட்டு சிட்டுன்னு டைவர்ட் பண்ணாம உண்மையை சொல்றது உனக்கு நல்லது" என்று எச்சரிக்க,

"ஆஆ ஏய் லூசு வலிக்குதுடி..!! விடு சொல்றேன்" என்று எழில் கூறவும் அவன் கரத்தை விட்டவள் சுட்டு விரலை நீட்டி,

"ரெண்டு இன்ச் டிஸ்டன்ஸ்ல உட்காந்து பேசு இல்லை நடக்குறதே வேற" என்றவள் சம்மணமிட்டு அவன் பேச்சை கேட்க ஆயத்தமாகவும்,

"ரொம்ப ஓவரா போறடி குள்ளச்சி" என்று முனுமுனுத்தவாறே அவளிடம் இருந்து தள்ளி அமர்ந்தான்.

"ஹ்ம்ம் இப்போ சொல்லு"

"அது தான்டி செல்லம் சொல்றேன்' என்று காலையில் அவன் ரெயிட்க்கு கிளம்பியதில் இருந்து கதையை ஆரம்பித்து ஒவ்வொன்றாக விளக்கி அவள் பொறுமையை சோதிக்க தொடங்கினான்,

ஒரு கட்டத்தில் 'டேய்ஈஈஈஈஈஈ' என்று தலையை பிடித்து கொண்டவள், "இதோ பார் இந்த தலையை சுத்தி மூக்கை தொடர வேலையே வேண்டாம் நடந்தது என்ன அதை மட்டும் சொல்லு" என்றால் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக

"சரி சொல்றேன், வாழக்கம் போல நான் வீட்டுக்கு வந்துட்டு இருந்த வழியில மாமா தான் கால் பண்ணி பஸ் ஸ்டான்ட் கிட்ட வர சொன்னாரு. அங்க போனப்புறம் டிக்கெட் எடுத்துட்டேன் கிளம்புன்னு சொன்னாருடி ஆனா முடியவே முடியாதுன்னு சொன்ன என்னை வலுக்கட்டாயமா தியேட்டர்க்கு கூட்டிட்டு போயிட்டாரு. உனக்கே தெரியும் அவர் பொன்னியின் செல்வனோட வெறித்தனமான விசிறி, பத்து முறைக்கு மேல படிச்சி இருப்பாரு இப்போ அதை படமா பார்க்கிற எக்சைட்மென்ட் குழந்தை போல பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோக்கு புக் பண்ணிட்டு கூப்பிடுறாரு எப்படிடி மறுக்க முடியும் சொல்லு" என்று கேட்க,

"சோ அப்பா கட்டாயபடுத்தினதால தான் நீ போன அப்படி தானே" என்று ஆழ்ந்த குரலில் அவள் கேட்க,

'ஹ்ம்ம்'

'அப்போ ஏண்டா போன் ஆப் பண்ணி வச்ச..??' என்று கேட்க சிறு தடுமாற்றம் எழிலிடம்,

"தடுமாற்றமா..?? எழிலிடமா..??"

இருக்காதா பின்னே..!! அன்று நாதன் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டு இருவரிடையே இருந்த கசடை நீக்கிய பின் மாமனாரை புல்லட்டில் ஏற்றி கொண்டு சென்றவன் அதன் பின் மாமனாருக்கும் மனைவிக்கும் இடையே மத்தளமாக அவன் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல...!!

ஒரே ஒரு நாள் நாதன் தன்னை பார்த்ததையே தாங்கி கொள்ள முடியாமல் உறக்கம் தொலைத்த மனைவி ஒரு புறம் என்றால் மனம் திருந்தி எழிலோடு இணைந்து வாழ்க்கையை ரசிக்க தொடங்கி இருக்கும் மாமனார் மறுபுறம்.

ஆம் நாதனே தான்..!! இத்தனை வருடங்களில் நாதனிடம் அத்தனை மாற்றம் , அனைத்திற்கும் ஒரே காரணம் அகனெழிலன். வளர்மதியும் அலர்விழியும் செய்ய முடியாததை தன் நிபந்தனையற்ற அன்பாலும் பொறுமையாலும் எழிலன் நிகழ்த்தி காட்டி இருந்தான் என்றால் மிகையல்ல..!!

அவரது மாற்றத்தில் அதிசயித்து வளர்மதி நம்ப முடியாமல் போனார் என்றால் அலர்விழியோ அசந்து போய் வாயில் கரம் பதித்து நின்று விட்டாள். அத்தகைய பெரும் மாற்றம் அவரிடம்..!! ஏதோ மறுஜென்மம் எடுத்து புதிதாக பிறந்தது போல அத்தனை பொறுமை, அனுசரணை, விட்டுகொடுத்தல், இனிமையுடன் பழக தொடங்கி இருந்த மனிதர் அனைத்திற்கும் மகுடமாய் தன் சரிபாதியான வளர்மதிக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் அனைவரையும் வியக்க வைத்திருந்தது.

"நாதா உனக்கு காத்து கருப்பு அடிச்சிடுச்சா..??" என்று தாயம்மாள் ஒருமுறை வாய்விட்டே கேட்டுவிட்டார் நாதனிடம்,

அதற்கு புன்னகையை பதிலாக கொடுத்த நாதன், அவரிடம் "இல்லைம்மா இவ்ளோ நாள் ஆண் என்கிற கர்வமும் ஈகோவும் என் கண்ணை மறைச்சிட்டு இருந்தது இப்போ நிதானமா என்னோட வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது தான் தெரியுது வளர் இல்லைன்னா என்னோட முன்கோபத்தினாலும் மூர்க்கதனத்தாலும் என் வாழ்க்கை எப்பவோ அஸ்த்தமிச்சி போயிருக்கும், இப்போ சமுதாயத்துல தலை நிமிர்ந்து நடந்துட்டு இருக்க நான் வளர் இல்லைன்னா ஒன்னுமில்லாதவனா ஆகி இருப்பேன். அதை புரிஞ்சிக்காம வீம்போட அவளையும் கஷ்டபடுத்தி நானும் நிம்மதி இல்லாம அருமையான தருணங்கள் எத்தனையோ இழந்துட்டேன்" என்றவரின் குரலில் உண்மையான வலி நிறைந்திருந்தது.

"எப்படி என்னோட மரியாதை அவ கையில இருக்கோ அதே போல அவளோட மரியாதை என் கையில...!! என் பொண்டாட்டியை நானே மதிக்கலைன்னா வேற யார் மதிப்பா..?? அவளை அசிங்கப்படுத்துறது என்னை நானே அசிங்கப்படுத்துறது ஆகிடாதா..??? என் மனைவியை நான் எப்படி நடத்துறேன் என்பதை பொறுத்தே என்னோட மதிப்பு இருக்கும் என்னை பற்றிய மற்றவர்களின் மதிப்பீடு அமையும்".

"என்னோட தவறான புரிதலால என் பெண்ணுக்கு இப்படி எந்த அவமானமும் நடக்காத போதே நான் அகனெழிலன் கிட்ட எத்தனை முறை கோபப்பட்டு இருப்பேன், ஆனா வளரும் இன்னொருத்தரோட பொண்ணு தானே நான் அவளை பேசினது நடத்தினது எல்லாம் அவருக்கு எவ்ளோ வலியும் வேதனையும் கொடுத்திருக்கும்... மாற்றம் ஒன்னே மாறாதது !! மனுஷன் வளர்ச்சி உடம்புல இல்லைம்மா மனசுல இருக்கு" என்று பேசிய தந்தை கதிர், அலர் இருவருக்குமே புதிதாக தெரிய அவர் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க தொடங்கினர்.

"ஆமாம்மா மனசளவுல எந்தளவு பக்குவப்பட்டிருக்கான் என்பதை பொறுத்தே மனஷனோட வளர்ச்சி அமையுது. இத்தனை வயசுக்கு அப்புறமாவது நான் வளர முயற்சி பன்றேன்னு சந்தோஷப்படும்மா, என்னோட வெத்து ஈகோவால, வீம்பால, கர்வத்தால, இத்தனை வருஷம் தவற விட்டதை இப்பவாவது மீட்டு எடுக்கிறேனே என்று தாயிடம் கூறியவர் அனைவரையும் பார்த்தவாறு, "எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனக்கு அகனனால கிடைச்சி இருக்கு" என்று எழிலை பார்த்தவர் கொண்டு வந்த தேநீர் கோப்பையை வளரிடம் அளித்து,

"என் பொண்டாட்டிக்கு நான் செய்யாம வேற யார் செய்வா..??" என்று கூறவும் அனைவரின் பார்வையும் நாதன் அருகே நின்றிருந்த எழிலிடம்..!!

இருக்காதா பின்னே அவரிடம் இடம்பெற்ற மாற்றம் அத்தனையும் அகனெழிலன் என்ற ஒற்றை மனிதன் நிகழ்த்திய அதிசயம் அல்லவா...!! சில வருடங்களுக்கு முன் நாதன் எழிலிடம் தஞ்சமடைந்தாரோ அன்றிலிருந்தே நாதனின் பார்வையை சிறுக சிறுக மாற்றி காலப்போக்கில் அவர் கோபத்தை முற்றிலுமாக அகற்றி புது மனிதராக பிறப்பெடுக்க வைத்து இருந்தான் எழில்.

சேரும் இடத்தை பொறுத்து நம் பார்வையும் சிந்தனையும் மாற்றம் பெரும் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை என்பதை அனுபவபூர்வமாக நாதன் உணர்ந்திருந்தார். அவ்வகையில் இப்போது தான் நாதன் சேர வேண்டிய இடம் சேர்ந்து மனிதனாக வாழ தொடங்கி இருப்பவர் கிடைத்திருக்கும் வாழ்க்கையை ரசித்து வாழ கற்று மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க, அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து தன் எண்ணத்தை திணிக்காமல் அன்பாய் அனுசரணையாய் நடக்க தொடங்கிய பிறகு வாழ்க்கையே வண்ணமயமாகி போனது.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவரது மாற்றத்தில் அவரது குடும்பமே ஒருபுறம் குதுகலித்தது என்றால் ஒரே ஒரு ஜீவன் மட்டும் வெகுவாக கலங்கி போனது.

வேறு யார் நம் நாயகி அலர்விழி தான்..!!

தந்தை மகள் இருவருக்கிடையில் எழில் மீதான உரிமை பனிப்போர் சத்தமின்றி தொடங்கிட அதில் எழில் தான் மிகவும் அல்லல்பட்டு போனான் இத்தனை வருடங்கள் எழிலன் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்லி மாளாது, இருவருமே அவனை விட்டு கொடுக்க தயாராக இல்லை.

பல நேரம் இருவரையும் சமாளித்து கொண்டு செல்ல எழில் முயன்றாலும் சில நேரம் ஒருவரால் ஒருவர் காயப்பட தான் செய்கின்றனர்.

இதோ இன்று மாமனாரின் விருப்பத்தை நிறைவேற்ற மனைவியிடம் சொல்லாமல் அவன் சென்றது போல. அலரை போலவே தன் பேரன்பினால் எழில் நாதனின் சிந்தையை சிறை செய்ய அதன் பின் நாதனால் எழிலின்றி ஓர் அணுவையும் அசைக்க முடியவில்லை. தொழிலில் நிர்வாகத்தில் இத்தனை வருட அனுபவம் இருந்தாலும் அனைத்திலும் இப்போது அவன் ஆலோசனையை விருப்பத்தை கேட்டு நிற்கிறார்,

எழிலால் அவரை மறுக்க முடிவதில்லை. அதே சமயம் நாதனுடன் எழில் நேரம் செலவிடுவதை அலரால் சுத்தமாக ஏற்றுகொள்ள முடியவில்லை. நாதனிடம் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக அவரை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் எழிலை பிடித்து கத்தி தீர்த்துவிடுவாள். பலமுறை எழில் கடைக்கு செல்வதற்கு தடை விதித்தவள் அதையும் மீறி அவன் அங்கு சென்றதை அறிந்து இப்போது அவர்களை கண்காணிக்கவே நாதனின் கடை வாயிலிலேயே அவருக்கே தெரியாமல் கேமரா பொருத்தி எழிலை கண்காணிக்கும் நிலைக்கு சென்று விட்டாள்.

இதோ இரவு மணி பன்னிரண்டை நெருங்கினால் தன்னவனின் பிறந்த நாள்..!! என்றுமே முதல் வாழ்த்து அவளுடையதாக இருக்கையில் இப்போது சில வருடமாக அவளுக்கு போட்டியாக நாதனும் நள்ளிரவு நேரம் எழிலை வாழ்த்த முந்தி நிற்கும் நிலையில் அவளும் என்ன தான் செய்ய..??

அவளின் சிந்தனையை தடை செய்யாமல் தலைக்கு பின் இருகரங்களையும் கோர்த்து கொண்டு சாய்ந்து படுத்திருந்த எழில் மீது சில கணங்கள் பார்வை பதித்தவள், "சரி உனக்கு எதுவும் தெரியாது அப்படி தானே " என்று கேட்கவும் அடக்கப்பட்ட புன்னகையுடன் மீசை துடிக்க எழிலின் தலையும் 'ஆம்' என்பதாக அசைய,

'சரி நம்பிட்டேன்' என்றவள் எட்டி அருகே மேஜை மீதிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து ' இதுல கையெழுத்து போடு' என்று பேனாவை அவனிடம் நீட்ட,

அவனோ அதை வாங்காமல், 'என்னடி இது..??' என்று கேட்க

பார்த்தா தெரியலை 'டிவோர்ஸ் பேப்பர்ஸ்' என்று அவன் தலையில் இடியை இறக்க,


'என்னது' என்று விதிர்விதிர்த்து போனான் எழிலன், இருக்காதா பின்னே மாமனாருடன் திரைப்படத்திற்கு சென்று வந்ததற்காக விவாகரத்து என்றால் மூச்சடைக்க தான் செய்தது எழிலுக்கு.
 
Last edited:

Rudraprarthana

Well-Known Member
10462

"எஸ் டிவோர்ஸ் பேப்பர்ஸ் கையெழுத்து போடு" இன்னையோடு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கட்டும் என்று கடுமையான குரலில் கூற,


பதறிப்போய் 'நோ முடியாது' என்று கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தவன், அவளையும் சட்டென இழுத்து நிறுத்தி காற்று புகாதவாறு அணைத்து கொண்டு , "ஏய் என்னடி பேசுற" என்றவனின் குரலில் கலக்கம் பிறக்க அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன் "சாரிடி பட்டு உன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான் கண்டிப்பா இனி யார் கூப்பிட்டாலும் நான் சினிமாக்கு போக மாட்டேன், எனக்கு எப்பவும் நீ தான் முக்கியம்" என்றான் ஒட்டுமொத்த காதலையும் குரலில் திரட்டி அவனை புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.

அவளோ அதை கருத்தில் கொள்ளாமல், "நான் முக்கியம்ன்னு நெனச்சா கையெழுத்து போடு" என்று பிடிவாதமாக நின்றாள்.

அதில் சுறுசுறுவென எழுந்த கோபத்துடன் எழில் "ஏய் அறிவுகெட்டவளே என்னடி பேசுற..?? டைவர்ஸ் என்ன உனக்கு சாதரணமா போச்சா..?? அதுவும் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கா..??என்று நெற்றியை பிடித்து கொண்டவன், நம்ம குழந்தைங்க பத்தி யோசிக்க மாட்டியா..??" என்று கேட்க,

"ஏன் அவங்களுக்கு என்ன..?? டைவர்சுக்கும் அவங்களுக்கும் என்னடா சம்பந்தம்" என்று அலர் புரியாமல் கேட்க,

"ஏய் லூசு என்னடி பிரச்சனை உனக்கு..?? கொஞ்சமாவது புரிஞ்சி பேசு" என்று சீறியவன்,

"ஊருக்கே கவுன்சிலிங் பண்றவளுக்கு தெரியாதா உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு நானும் என் பிள்ளைங்களும் எப்படி இருப்போம்" என்று வலியுடன் கேட்க,

அதுநேரம் வரை அவன் பேசுவதை புரியாமல் பார்த்திருந்தவள், "என்னது என்னை டைவர்ஸ் பண்ணுவியா..???" என்று ஒரே உதறலில் அவனிடம் இருந்து விடுபட்டு அவன் சட்டையை கொத்தாக பிடித்தவள்

"என்ன தைரியம் இருந்தா என்னையே டைவர்ஸ் பண்ணுவேன்னு சொல்லுவ...?? என்ன தைரியம்டா உனக்கு " என்று அவன் வாயில் ஓங்கி ஒன்று வைக்க,

எழிலோ வாயில் கை வைத்தவன், "ஏன்டி லூசு இப்போ உன்ன டிவோர்ஸ் பண்ண தானே என்னை நீ கையெழுத்து போட சொன்ன" என்று கேட்க,

"ஓஓஓ... நானே... உன்னை... டிவோர்ஸ்..." என்றவாறே அவனை பார்த்தவள், "உனக்கு அப்படி ஒரு நெனப்பு இருக்காடா " என்று கேட்ட அலர் நொடியில் உக்கிர காளியாக அவதரித்து உலக்கையுடன் அவன் முன் நின்றாள்.

"ஏய் என்னடி இது..??" என்று அதை பார்த்து எழில் மிரள,

அவனை மெத்தையில் அமர்த்தி அவன் முன் மீண்டும் பேப்பரை நீட்டியவள் "இதோ பார் இதுல உன்னை கையெழுத்து போட சொன்னது என்னை டிவோர்ஸ் பண்றதுக்கு இல்லை" என்று நிறுத்த,

வேற யாரை..?? என்று குழம்பி போன எழில், "ஏய் நீ தானேடி என் பொண்டாட்டி ஒருவேளை எனக்கே தெரியாம உன் கனவுல நான் யாருக்காவது தாலி கட்டிடேனா..??" என்று சிந்திக்க,

"எங்க அப்பாவை" என்று அலர் அழுத்தந்திருத்தமாக கூற,

விளையாட்டை கைவிட்டு 'என்னது..??' என்று அன்னிச்சையாக எழுந்து நின்றவனின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி,

"ஆமா இனி எங்கப்பாக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லி அவரை நீ விவாகரத்து பண்ணனும் இல்லை.." என்ற போதே அவள் குரல் கமறிட

அவளுக்கு பதிலளிக்காது இமைக்காமல் அலரை பார்த்த எழிலின் பார்வை அவளை சிறுக சிறுக சிதறடிக்க விழிகளில் திரண்ட நீருடன் அவள் பார்வையை தழைக்க ஆழ்ந்த மூச்சை எடுத்து பின்னந்தலையை வருடியவன் உலக்கையை அவளிடம் இருந்து பிடுங்கி தூர எறிந்துவிட்டு மெத்தையில் இருத்த பேப்பரையும் கிழித்து போட்டு அவளை வாரி அணைத்து கொள்ள, வார்த்தைகள் அற்ற மௌனம் இப்போது அறையை நிறைக்க தொடங்கியது.

மௌனமே காதலாகி போக அலரை வருடி கொடுத்தவாறே எழில் நின்றிருந்தான். அவளும் தன் கேவலை அடக்கி அவன் அணைப்பில் சுகமாய் அடங்கி எழிலின் நெஞ்சில் புதைந்திருந்தாள்.

இதற்குமேல் அலர் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டிய உறவு இல்லையே அவர்களது பல நாட்களாக அவளை அரித்து கொண்டிருக்கும் விடயத்தை வேறு எப்படி கையாள என்று புரியாது தாங்க முடியமல் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது புரிபட இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மனதினுள் தீர்மானித்தான்.

"எங்க அப்பா வந்த பிறகு நீ என்னை விட்டு ரொம்ப தூரமா போற மாதிரி எனக்கு பீல் ஆகுது மாமா, எங்க அப்பா தான் புரியுது ஆனா இப்போ போதாததுக்கு உன்னோட பொண்ணுங்க வேற, வீட்டுக்கு வந்தாலே உன்னோட நேரம் முழுக்க அவங்க கூட தான் என்று தேம்பியவள் அவங்களை பார்த்ததும் நீ எல்லாமே மறந்துடுற என்றவள் இப்போது கண்ணீரை துடைத்தவாறே அவன் முகம் பார்த்து என்னையும் சேர்த்து தான் என்றபோது எழிலிடம் சிறு அதிர்வு,

"ஆமா, உனக்கு நான் முக்கியம்ன்னு தெரியும் ஆனா இப்போ என்னால உன்னை யார் கூடவும் பங்கு போட முடியலை.., உனக்கும் எனக்குமான நேரம் ரொம்ப குறைஞ்சிடுச்சி அதுக்காக குழந்தைங்களை கட்டுபடுத்த முடியாது அதான் அப்பா..." என்று உதடு கடித்து நின்றவளுக்கு அதற்க்கு மேல் வார்த்தை வரவில்லை மெளனமாக அவனை கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்து விழி மூட எழிலின் பார்வை அவள் மீதே..!!

இத்தனை வருடங்களில் அனைத்து தரப்பினரும் எளிதாக நெருங்க கூடிய நீதியின் புறம் மட்டுமே நின்று எதிரில் இருப்பவர்களை தூங்க விடாமல் செய்து எடுக்கும் வழக்குகளில் எல்லாம் பெரும்பாலான வெற்றி பெற்று நகரில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருப்பவளிடம் இருந்து வெளிவரும் வார்த்தைகள் அத்தனையும் அவன் மீது அவள் கொண்டுள்ள மாறாத நேசமும் கொள்ளை அன்பின் வெளிப்பாடு அல்லவா..??

கம்பீரமாக நீதிமன்றத்தில் நுழைந்து எதிர் தரப்பினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவள் வீட்டிற்கு வந்தால் பொறுப்பான குடும்ப தலைவி குழந்தைகளுக்கு அன்பான அன்னை ஆனால் தங்கள் அறைக்குள் என்றுமே அவன் மீது கொண்டிருக்கும் பித்து குறையாமல் சிறுகுழந்தையாய் அவனன்பில் அடைக்கலம் ஆகி நிற்கிறாள்.

ஒற்றை அணைப்பில் தன்னை உணர்த்த முயல, அதற்க்குள் அலரின் கண்ணீர் எழிலின் சட்டையை தாண்டி இருந்தது

'அமுலு' என்று அவள் முகம் நிமிர்த்த , முடியாது என்பதாக அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் பதித்து நின்றாள் அலர்விழி.

"ஒரு நிமிஷம் விடுடி" என்று அவள் கரங்களை விலக்கி சென்று அறையின் விளக்கை ஒளிர செய்தவன் அடுத்த நொடி அவளுக்காக வாங்கி வந்திருந்த சிக்கன் லாலிபாப்பை எடுத்து வந்து அவள் முன் நீட்டி, "அவர் கூட போனா நான் உன்னை மறந்துடுவேனா..?? என்னோட மூச்சு காற்றே நீ தான்டி..!! உன்னை கூட கூட்டிட்டு போகலையே தவிர எனக்குள்ள தானே நீ இருக்க" என்றவாறே அவளுக்கு ஊட்ட,

முகம் மலர்ந்த புன்னகையுடன் அதை வாங்கி கொண்டவளின் கரத்தை பிடித்து அவளுக்கு பிடித்த மட்டன் கோலா, தந்தூரி சிக்கன் என்று அனைத்தையும் திணித்து,

"ஆமா மத்ததெல்லாம் போட்டோ எடுத்து அனுப்பின நாதாரி நான் வாங்கின பார்சலை மட்டும் எப்படிடி அனுப்பாம விட்டான்" என்று அடக்கப்பட்ட குரலில் எழில் சீற,

"அது அண்ணன் மறந்து இருப்பாங்க" என்று சாப்பிட்டு கொண்டிருந்தவள் தன் போக்கில் சொல்ல அதான் பின்னர் தான் வெற்றியை காட்டி கொடுத்தது புரியவும் கண்களை சுருக்கி இதழ்களை கடித்து அவனை பார்க்க,

"நெனச்சேன்டி அவனாதான் இருப்பான்னு" என்று விழிகள் சிவந்தவன்

"அந்த பரதேசி இன்னும் திருந்தலை இல்லை..??அவனாவது மறக்கிறதாவது..??? நமக்குள்ள பிரச்சனை உண்டாக்குறதே அவனுக்கு வேலையா போச்சு இருக்குடி அவனுக்கு..." என்று எழில் கருவ,

"இதோ பாருங்க எனக்காக தான் என் அண்ணனை உங்களை பாலோ பண்றாரு அதுக்காக அவரை திரும்ப எதிலாவது கோர்த்து விட நினைச்சிங்க அப்புறம் என்ன பன்னுவேன்னே தெரியாது" என்று அவள் எச்சரிக்க,

"ஏய் என்னடி பண்ணுவ, பெரிய அண்ணன் நொண்ணன்னுட்டு" என்று அவளிடம் எகிற அதேநேரம் பன்னிரண்டு மணிக்கு ஒரு நிமிடம் முன் அலர் செட் செய்து வைத்திருந்த அலாரம் ஒலிக்க வேகமாக கைகளை கழுவி வந்தவள் அவனுக்காக செய்து வைத்திருந்த பரிசை எடுத்து வர அதற்குள் வெளியில் இருந்து 'அகனா' என்ற நாதனின் குரல்.

"இதோ வரேன் மாமா" என்று அவசரமாக எழில் திரும்ப,

"டேய்" என்று வேக மூச்சுக்களுடன் அலர் அவனை பார்க்கலானாள் அதற்குள் மீண்டும் 'அகனா' என்ற நாதனின் குரலுடன் இணைந்து 'அப்பாஆஅ' என்ற அவன் தேவதைகளின் குரலும் இணைந்து கொள்ள தத்தளித்து போனான்.

ஒரு நொடி நிதானித்து கதவை நெருங்கி "ஒரு நிமிஷம்டாம்மா அப்பா வந்துட்டேன்" என்று குரல் கொடுத்தவன் மனைவியை நெருங்கி சொல்லுடி என்று அவசரமாக அவள் நெற்றியில் இதழ் பதிக்க "ஹாப்பி பர்த்டே மாமா" என்று எக்கி அவன் இதழில் தன் முத்திரையை பதித்து அவள் பரிசான தங்க சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் அணிவிக்க அதில் கோர்க்கபட்டிருந்த இதய விடிவிலான டாலரை உற்று பார்த்தான் எழில்.

இதயத்தினுள் அலர் என்று நூதனமாக பொறிக்கப்பட்டு அதன் பின்னே விழி வரையப்பட்டு இருப்பதை கண்டவன் அவளை பார்க்க,

"இனி இதை பார்க்கும் போது நீ எனக்குன்னு எங்கப்பாக்கு புரியணும் அதான்" என்று இதழ் சுழிக்க அவள் செய்கையில் சட்டென சிரித்து விட்டவன் அவள் நெற்றியை முட்டி நிற்க திரும்ப 'அப்ப்பாஆஆஅ' என்று குரல் கதவின் பின்புறம் இருந்து,

'வந்துட்டேன்' என்று ஓடி சென்று எழில் கதவை திறக்க, மின்னலென அவனை நோக்கி ஓடி வந்த அவன் தேவதைகள் இருவரும் அடுத்த நொடி அவன் கரங்களை நிறைத்திருந்தனர்.

ஆம் தேவதைகள் தான்..!! வரமாய் அவன் கரம் சேர்ந்த தேவதைகளை கண்டவனுக்கு அவர்களை முதன் முதலாக உறுதி செய்த நாள் நினைவிலாடியது.

மூன்றாம் மாதம் ஸ்கேன் செய்ததில் அலர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருப்பதை மருத்துவர் உறுதி செய்ய எழில், நாதன்,வளர்மதி உட்பட அனைவரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றாலும் அவிரனை தான் கையில் பிடிக்க முடியவில்லை. ஏற்கனவே தங்கையின் வரவை எண்ணி கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவனுக்கு இப்போது இரு குழந்தைகள் என்றதுமே அவன் மகிழ்வு நூறு மடங்காக பெருகி இருந்தது.

நெகிழ்ச்சியுடன் அலரின் முகத்தை தாங்கிய எழிலின் விழிகள் கலவையான உணர்வுகளுடன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டவள் எழிலை காற்று புகாதவாறு அணைக்க அவளை வருடி கொடுத்த எழிலின் இமையோரமும் ஈரம் கசிந்திருந்தது.

ஆனால் இரட்டை குழந்தைகளின் செய்தியை கேட்ட நாதன் எந்த அளவு மகிழ்ச்சி கொண்டாரோ அதைவிட இருமடங்காக அவருக்கு உள்ளுக்குள் அச்சம் முகிழ்க்கத்தான் செய்தது. ஆம் அச்சம் தான்..!! ஆனால் அது தன் மகள் குறித்தோ இரு குழந்தைகளை குறித்தோ அல்ல மாறாக எழிலை குறித்து தன் மகளின் பிரசவத்தின் போது அவன் கொண்ட வலிகளை குறித்து...!! ஒரு குழந்தையின் வரவிலேயே மரித்து உயிர்த்தெழுந்தவன் இம்முறை இரு குழந்தைகள் எனும் போது எத்தகைய உயிர்வதை கொள்வானோ என்ற எண்ணமே நாதனின் உறக்கத்தை பறித்திருந்தது.

இரு நாட்களுக்கு பின் ஒரு முடிவோடு மகள் வீட்டிற்கு சென்றவர் மகள் மருமகனுடன் பலகட்டமாக பேசி சம்மதிக்க வைத்தவர் மாலை வீட்டிற்கு திரும்பிய போது மகள் குடும்பத்தையே தன்னுடன் அழைத்து வந்து விட்டார்.

ஆம் எழிலை புரிந்து கொள்ளாமல் ஒருமுறை தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே வெறுத்து போயிருந்த மனிதர் இம்முறை எந்த தவறும் நடை பெற கூடாது என்று யோசித்தவருக்கு புலப்பட்ட வழி தான் இது..!!

மகளின் பேறுகாலத்தை அவர்கள் இருவரும் தனியே எதிர்கொள்வதை விட இங்கு தன் வீட்டில் இருக்கும் போது மகள் மீதான எழிலின் பதட்டம் ஒரு வகையில் குறையுமே என்று எண்ணியே நாதன் இம்முடிவை எடுத்திருந்தார்.

நாதன் இதை கூறிய போது முதலில் மறுத்த அலருக்கு மருத்துவர் கூறியது நினைவிலாட, "என்னதான் எழில் முற்றிலுமாக அன்றைய நினைவுகளில் இருந்து மீண்டிருந்தாலும் இப்போது இரட்டை குழந்தைகள் எனும் போது நூற்றில் ஒரு வாய்ப்பாக பழைய நினைவுகளை கிளரும் வாய்ப்பை அவனுக்கு அளிக்க அலர் விரும்பவில்லை. அவள் எழிலுடன் தனியே இருப்பதை விட பெண்களின் அரவணைப்பில் குடும்பத்தின் பாதுகாப்பில் இருப்பது எழிலின் மனநிலையை சமநிலையில் வைக்கும் என்று தீர்மானித்து தந்தையின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாள்.

அதன்பின் அவர்களின் ஜாகை நாதன் வீட்டில் தான். வளர்மதி, தாயம்மாள் உடன் இருப்பதாலும் நாதன் பல நேரம் கடையை சம்பத்திடம் ஒப்படைத்து விட்டு அலருடனே இருப்பதாலும் எழில் எவ்வித கவலையும் இன்றி அலுவலகத்திற்கு சென்று வந்தவன் அவிரனை தாங்கியது போலவே அலரின் பேறுகாலத்தை இயல்பாக மகிழ்வாக எதிர்கொண்டான். அதுவே அலருக்கு பாதி சக்தி அளிக்க இருகுழந்தைகளை சுமக்கும் பாரமே பெரிதாக தெரியாமல் போனது அலர்விழிக்கு. சொன்னது போலவே பிரசவ அறையில் அலரின் நம்பிக்கையாய், சக்தியாய் அவளின் அனைத்துமாய் உடன் இருந்தவன் கைகளில் நிமிட நேர இடைவெளியில் பிறந்த அவன் இரு பெண் மகவுகள் பிறந்த நாள் பரிசாய் வீற்றிருந்தனர். அவன் பல வருடமாய் தவமிருந்த வரம் அதுவும் அவன் பிறந்த நாளின் போதே கை சேர்ந்ததில் அவன் கொண்ட உணர்வுகள் எழுத்துக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டது.

'என் தங்கங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!' என்றவாறே இருவரையும் தூக்கி கொண்டவன்,

"இன்னும் தூங்காம என்னடாம்மா பண்றீங்க" என்று கேட்க,

"உங்க பர்த்டே அப்போ எப்படிப்பா தூக்கம் வரும் மாமா மாமி கூட சேர்ந்து உங்களுக்கு கிப்ட் ரெடி பண்ணிட்டு இருந்தோம்" என்று இருவரும் கோரஸாக கூற அதே நேரம் நாதன், அவிரன், கதிர், ரேணு என்று அனைவரும் அறையினுள் நுழைந்தனர்.

எழிலோ மகள்களை மெத்தையில் இறக்கி நிறுத்தியவன், "இன்னைக்கு என் செல்லகுட்டிகளுக்கும் பர்த்டே அதுக்கு அப்பாவோட கிப்ட்" என்றவன் அவர்களுக்காக வாங்கி வந்த பரிசையும் சாக்லெட்டுகளையும் அளிக்க அவனை கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு புறம் முத்தம் வைத்தவர்கள் 'லவ் யுப்பா' என்று தாங்கள் அவனுக்கு கொண்டு வந்திருந்த பரிசை அவனிடம் நீட்டினர்.

இருவருமே போட்டி போட்டுகொண்டு எழிலை வரைந்து அவனுடன் அவர்கள் இருவரும் கைகோர்த்து செல்வது போல, உடன் அன்னையும் அண்ணனும் இருப்பது போல என்று அவர்களுக்கு தெரிந்த வரையில் வரைந்து அவனுக்கு அளிக்க தனக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் செய்து கொடுத்த பொக்கிஷங்களை எடுத்து பத்திரமாய் பாதுகாத்து திரும்பிட அவனை கட்டிக்கொண்ட அவிரன், "ஹாப்பி பார்த்டேப்பா" என்று கூற,

"நீயும் தூங்கலையா கண்ணா" என்று கேட்ட எழில் அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனுக்காக வாங்கி வந்த பொருட்களை அளிக்க, அதற்குள் அப்பா என்று எழிலை நெருங்கிய அவன் மகள்கள்

"அப்பா இங்க பாருங்க அண்ணா எங்களுக்கு கொடுத்த கிப்ட்" என்று கழிவுபொருட்களில் இருந்து அவிரன் அவர்களுக்கு செய்து கொடுத்த பொருட்களை எடுத்து காட்ட எழிலன் முகத்தில் மகனை எண்ணி பெருமிதம்.

அலர் கூறியது போலவே அதன் பின் எழிலை யாரும் நெருங்க முடியாத அளவு மகள்கள் அவனை ஆக்கிரமித்து அவன் நேரத்தை களவாடி கொண்டிருந்தனர். அலர் அழைத்தும் எழிலை விட்டு வர மறுத்தவர்கள் கதிரின் இரண்டு வயது பெண் குழந்தை அழு குரலில் தான் சிந்தை கலைந்து உடனே அவளிடம் ஓடி சென்றனர்.

எழிலை நெருங்கி கட்டிக்கொண்ட கதிர் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க அதன் பின் ரேணு, வளர்மதியும் கூற இறுதியாக வந்த நாதன் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் அகனா" என்று எழிலை அணைத்து விடுவித்து தன் பரிசை அவனிடம் நீட்டினார்.

அதை பிரித்து பார்க்க உள்ளே ஒரு சாவி கொத்து வீற்றிருப்பதை கண்டு 'என்ன மாமா இது..??" என்று கேட்க

நானும் பல வருஷமா உன்னை கடையில வந்து உட்கார சொல்லி சொல்லிட்டேன் ஆனா நீ முடியாதுன்னு சொல்லி நழுவிட்டே இருக்க என்றவரின் பார்வை இப்போது புதிதாக அவன் கழுத்தை அலங்கரித்து கொண்டிருந்த செயினில் நிலைகொண்டு பின் மகளை பார்த்தது.

"அமுலுக்கு ஓகேன்னா இனிமேல் கடை பொறுப்பை ஏத்துக்கோ வளருக்கு கோவில்களுக்கு போகணும்ன்னு ரொம்ப நாள் ஆசை அதனால நானும் அவளும் யாத்திரை கிளம்பலான்னு ஒரு எண்ணம்" என்று கூற, எழிலிடம் பெரும் யோசனை, 'சரி மாமா நான் யோசிச்சி சொல்றேன்' என்றான்.

அன்று மாலை பேத்திகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாதனின் வீடே கோலாகலமாக களைகட்ட தொடங்கி இருந்தது. வெற்றி தாமரை குடும்பத்துடன் அன்று காலையே வந்துவிட்டனர் சித்தார்த்து, சுபியை கண்டதும் எழிலின் மக்கள் அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என்று ஆர்பரித்து கொண்டிருந்தனர்.


மதியம் போல சுடரும் பாலனும் வேதவியாசினி மற்றும் சர்வேஷுடன் வந்து சேர, மாலை கீர்த்தி சரண், ப்ரீத்தி விஷ்வதேவ் தம்பதியினர் வந்து சேர்ந்தனர். வேதாவின் உதவியுடன் மகள்கள் இருவரையும் அலங்கரித்த அலர்விழி அவர்களை விழா மேடைக்கு அழைத்து வர பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கி இரண்டு மணி நேரமாக நீண்டு கொண்டிருந்தது.

இறுதியாக இரு மகள்களையும் கையில் ஏந்திய எழிலுக்கு ஒருபுறம் மகனும் மறுபுறம் மனைவியுமாக நின்று விருந்தினர்களை உபசரிப்பதை கண்ட நாதனின் கண்களோடு சேர்ந்து மனமும் நிறைந்து போனது.

சுபம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top