சுதிஷா
Well-Known Member
அத்தியாயம்-33
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அர்ஜுன் நிர்வகித்துவரும் அவனது மாலின் ஆபீஸ் அறையில் அபியும் .ஆதியும் ஒரு சோபாவிலும், பிரபாவும் மற்றும் மதுவும் கவுச்சிலும் அமர்ந்திருக்க,மற்றொரு பக்கம் ப்ரீத்தியும் மற்றும் கிருஷ்ணாவும் நின்று கொண்டிருந்தனர் என்றால் அவர்கள் அருகில் சூர்யா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
திருனேஷ் அப்பொழுதுதான் அந்த அறைக்குள் நுழைந்தவன் அனைவரும் ஒவ்வொரு முக பாவனையோடு அமர்ந்திருப்பதை கண்டு குழம்பி “இவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு, ஏன் இப்படி உட்கார்ந்து இருக்காங்க” என்று எண்ணியபடி உள்ளே வந்தவன் கண்டது அந்த ஆபீஸ் அறையின் கீழே நடுநாயகமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த பூஜாவையும் அவளருகில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த அர்ஜுனையும்தான்.
அவனும் தன் தலையை கைகளில் தாங்கியபடி சோகமே உருவாக அமர்ந்திருக்க ஒன்றும் புரியாமல் “இங்க என்ன நடக்குது” என்றான்.
அவன் குரலில் நிமிர்ந்து பார்த்த பூஜா சோகமான குரலில் “திரு திரு இங்க வாயேன்” என்று கூற,அர்ஜுனோ சடாரென்று தலையை நிமிர்த்தி திருவை பார்த்து “வராத வராத” என்று கண்களாலேயே சைகை காட்ட திருவோ அதை புரிந்து கொள்ளாமல் “என்னடா ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க,” என்று கேட்டபடியே பூஜாவின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்தவனின் தோள் மேல் கை போட்டு “நான் நாளைக்கு பூனே கிளம்பபோறேன்,உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்படி இருக்க போறேன்னு தெரியலையே”என்று பழைய காலத்து பாட்டி போல் மூக்கை சிந்தி அழுதவாறே அவனை உலுக்கி எடுக்க,அவனோ நிலை தடுமாறிக் கீழே விழுந்தான்.
திரு, “ஹேய் எதுக்கு இப்போ என்ன கீழே தள்ளிவிட்ட”.
பூஜா, “என்னது தள்ளி விட்டன்னா, உன்னை எல்லாம் ஒரு ப்ரோவா மதிச்சு நான் என் வருத்தத்தை சொன்னா, எனக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு,நீயே போய் கீழே விழுந்துட்டு நான் தள்ளி விட்டேன்னு சொல்றியே, இது உனக்கே நியாயமா இருக்கா……” என்று கேட்டவள் மேலும் “இங்க வா” என்று மறுபடியும் அவனை அருகில் இழுத்து அமர வைத்தவள் “இங்க பாரு இத்தனை பேர் என்னை சுத்தி இருக்காங்களே யாராவது எனக்காக பீல் பண்றாங்களா,அவங்கள விடு நான் பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்ணுனனே அவனாவது பீல் பன்றானா பாரு லவ் பண்ற பொண்ணு ஊருக்குப் போறாளேன்ற சோகம் கொஞ்சமாவது அவன் கண்ணுல தெரியுதா பாரு திரு பாரு உன் ஃப்ரெண்ட் முகத்தை நல்லா பாரு. நீயாவது எனக்காக பீல் பண்ணு பாப்போம்” என்று கூறியவாறு மீண்டும் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
உடனே வேகமாக அவள் பிடியிலிருந்து தன் சட்டையை விடுவித்துக் கொண்டு பின்னால் நகர்ந்து கொண்ட திருனேஷ் “என்னடா அர்ஜுன் இது” என்று கேட்க,அர்ஜுனோ “உன்னை யாருடா அவ பக்கத்துல வர சொன்னா, ஒருத்தர விடாம எல்லாத்தையும் இப்படித்தான் அவ உலுக்கி எடுத்துட்டு இருக்கா, ஏதோ அவங்க மூணு பேரும் அண்ணாவா போயிட்டதால தப்பிச்சாங்க”என்று ஆதி, பிரபா, கிருஷை கை காட்டியவன் மேலும் “உனக்கெல்லாம் அவ்வளவு மரியாதை கொடுக்க மாட்டா இல்லையா அதான் உன்னை இந்தப் பாடு படுத்துறா”என்று கூற, அப்போதுதான் அவன் சுத்தி அமர்ந்திருக்கும் அனைவரின் முகத்தையும் பார்த்தான்.
அவர்கள் அனைவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்து இருப்பதும் எங்கே சிரித்துவிட்டால் பூஜா அதற்கும் ஒப்பாரி வைப்பாள் என்று பயந்தே அமைதியை கடைபிடிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டவன்.இப்போது பாவமாக அர்ஜுனை பார்க்க அவனோ தன் பக்கத்தில் இருக்கும் இடத்தை தட்டி “டேக் யுவர் சீட்”என்க, திருவோ அவனை முறைத்தான் அதை அலட்சியம் செய்த அர்ஜுன் “இப்போ வந்த உனக்கே இவ்ளோ காண்டாகுதே ரெண்டு மணி நேரமா நாங்க இப்படிதான் இருக்கோம் எங்கள பத்தி யோசிச்சியா பொங்காத வா….” என்று அருகில் அமர்த்தி கொண்டு மீண்டும் தன் பழைய நிலையிலேயே அமர்ந்து கொண்டான்.
திருவும் “எதுக்கு வம்பு எதாவது பேசுனா நம்மள போட்டு உளுக்கி எடுத்துடுவா அதனால நாமும் பேசாம உட்கார்ந்துகலாம்” என்று முடிவெடுத்தவன் கன்னத்தில் கை வைத்து அமர்ந்துகொண்டான்.
அனைவரின் அமைதியை கண்ட பூஜா “உண்மையாலுமே நான் பூனே போறது உங்களுக்கு கவலை இல்லையா,ஒரு சின்ன பிள்ளைய தனியா அவ்வளவு தூரம் அனுப்பறோமேங்கற கவலை உங்க முகத்துல கொஞ்சமாவது இருக்கா” என்று அனைவரையும் பார்த்து அழுதுகொண்டே புலம்ப, முதலில் பொறுமை இழந்த ஆதி “பூஜா நீ என்ன வேற எங்கேயோ வா போக போற இதோ இங்க இருக்கு பூனே அங்கதானே போற,அதுக்கு ஏன் இவ்வளவு பாடு படுத்துற, எல்லாத்தையும் பார்க்கணும்னு உனக்கு தோணுச்சுனா உடனே வந்து பார்த்துட்டு போலாமே”என்க.
பூஜா, “பாருங்க பாருங்க இப்போ கூட நீங்க யாரும் வந்து என்னை பார்க்கிறேன்னு சொல்ல மாட்டேங்கறீங்க.நானா தான் விருப்பப்பட்டா வந்து பார்க்கணும் அப்படித்தானே”
பிரபா, “பூஜா நீ எங்கள மிஸ் பண்றதா நினைச்சேனா ஒரே ஒரு போன் போடு நாங்க எல்லாரும் வந்து உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரோம். கவலைப்படாதே” என்று சொல்ல, அவளோ சந்தேக பார்வையோடு “சத்தியமா எல்லாரும் வருவீங்க தானே” என்று கேட்க,உடனே அனைவரும் அவள் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்த பின்னரே அமைதியானாள்.
பூஜா, “சரி சரி பசிக்குது அழுது அழுது ரொம்ப டயர்டா ஆகிட்டேன் வாங்க போய் ஜூஸ் குடிக்கலாம்.அர்ஜுன் உங்களுடைய ஃபுட் கோர்ட்ல இருந்து கொஞ்சம் சாப்பாடு வர வைங்க” என்று கூற,அவனோ அவளை கடுப்பாக பார்த்து “ஏண்டி இவ்வளவு நேரம் இருக்கிறவங்கள எல்லாம் கொடுமை படுத்திட்டு உனக்கு டயர்டா இருக்கா, எங்களுக்குதான் டயர்டா இருக்கு உன்னையெல்லாம் வெச்சுகிட்டு” என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவள் சொன்னது போல் புட் கொண்டு வர சொல்லி போன் செய்தான்.
அதன் பின் அன்று முழுவதும் அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிட்டனர்.சூர்யா அப்பொழுதும் திருவை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.புனேவில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் பூஜாவிற்கு எம்பிஏ படிக்க இடம் கிடைத்திருக்கிறது. அங்கு செல்வதற்காகவே அவள் இவ்வளவு அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தோழிகள் ஐவரும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான முதல் படியை பூஜா எடுத்து வைத்தாள்.அடுத்த நாள் அனைவரிடமும் பிரியா விடைபெற்று தன் படிப்பிற்காக பூனே கிளம்பினாள் பூஜா.
பூஜா அவர்களைப் பார்த்து கையசைத்து விட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனின் கண்கள் அவள் கண்களை விட்டு மறைய மறைய கலங்க ஆரம்பித்தது.அதை முதலில் உணர்ந்து கொண்ட திரு அவன் தோளை ஆதரவாக பிடிக்க அர்ஜுன் வேகமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் “ஐ…..ஐ ஆம் ஓகே” என்க,
திருவோ அர்ஜுனிடம் “உனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்குமா சின்னதுல இருந்து ஒன்னா இருக்க அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருப்பாங்க” என்று கேட்க, அப்பொழுதுதான் அர்ஜுன் அவர்களைப்பற்றி யோசித்தவனாக வேகமாக திரும்பி நால்வரையும் பார்க்க, அவர்களோ ஒருவர் கையை ஒருவர் ஆதரவாக கோர்த்து கொண்டும் ,கண்களை விட்டு வெளியேற துடிக்கும் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டும் நிற்பதை கண்ட ஆண்கள் தங்கள் இணைகளின் தோளை ஆதரவாகப் பற்றிக்கொண்டனர் என்றால், திருவோ சூர்யாவின் அருகில் செல்லாமல் கண்களாலேயே சமாதானம் கூறினான். அதை அவள் புரிந்து கொண்டாலும் அவன் மேல் இருக்கும் கோபத்தில் முகத்தை திருப்பி கொண்டாள்.
திருவும் ஒரு பெருமூச்சோடு “இவ என்னைக்கு தான் மாறப் போறாளோ தெரியல” என்று நினைத்துக் கொண்டான். அதன் பின் அனைவரும் அங்கிருந்து தங்களது இல்லம் நோக்கி சென்றனர்.
பூஜாவை விமானத்தில் ஏற்றி விட்டு தங்கள் வீட்டிற்கு வந்த பிரபாவும் மதுவும் தங்களுக்குள் ஏதோ பேசிய படியே உள்ளே நுழைய அங்கு ஹாலில் அமர்ந்திருந்த பிரபாவின் பெற்றோர்களும் வீட்டில் உறுப்பினர்களும் அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பிரபா அதை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் அறை நோக்கி செல்ல முனைய, அவனை தடுத்து நிறுத்திய அவன் தந்தை “பிரபா என்ன இது நேரம் கெட்ட நேரத்தில் வெளியில போயிட்டு வரீங்க” என்று அதிகாரமாக கேட்டார்.
அதில் கோபம் வர பெற்றவனாய் “என்னப்பா இது நான் என்ன சின்ன பையனா எங்க போனாலும் உங்ககிட்ட சொல்லிட்டு போறத்துக்கு அது மட்டும் இல்லாம இந்த நேரத்தில் வெளியில போயிட்டு வந்தா என்ன கெட்டுப் போய்விடும். என்னோட பொண்டாட்டி கூட தானே போயிட்டு வரேன்.இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை”என்று கேட்க,
அவனது தாயோ ஆங்காரமாக “அதுதான் பிரச்சனையே.நேரம் கெட்ட நேரத்தில் பொம்பள பிள்ளைய எதுக்கு வெளில கூட்டிட்டு போயிட்டு வரனும்.நம்ம குடும்பத்துல இது மாதிரி என்னைக்கு நடந்திருக்கு”என்று தன் மருமகளை மறைமுகமாக சாடினார்.
பிரபாவோ அதில் மேலும் கோபம் கொண்டவன் “அம்மா சும்மா சும்மா அவளை ஏதாவது குறை சொல்ல காரணம் தேடிட்டே இருக்காதீங்க. புருஷன் பொண்டாட்டி வெளியில் போயிட்டு வர்றதுக்கு கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா” என்க,
அவனது தாயோ “இருக்குப்பா இருக்கு அதெல்லாம் இருக்கு ஆனா இது குடும்பம் நடத்துற இடம் உங்க இஷ்டத்துக்கு ஹோட்டல் மாதிரி வந்துட்டு போக கூடாது.இதோ நிற்கிறாளே உன் பொண்டாட்டி என்னைக்காவது இந்த வீட்டு மருமக மாதிரி நடந்து இருக்காளா. இதுக்கு முன்னாடிதான் படிச்சிகிட்டு இருந்தா இப்போ படிப்பும் முடிஞ்சிடுச்சு இல்ல இப்ப வீட்டு வேலை பார்த்துட்டு வீட்டோட அடக்கமா இருக்கிறாளா, ஒன்னு உன் கூட வெளியில சுத்தறா இல்ல அவளோட ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில சுத்துறா, நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு மருமகள பார்த்ததே இல்லை.எதுக்கு இவளை கட்டி இங்க கூட்டிட்டு வந்தேனு கூட எனக்கு தெரியல” என்று அவனுக்கு மேல் கோபமாக கத்த, அதில் கடுப்பின் உச்சிக்கே சென்றான் பிரபா.
பிரபா, “போதும்மா எல்லாத்துக்கும் அவளையே குறை சொல்லிக்கிட்டு இருக்காத்தீங்க,நீங்க உங்க பொண்ணுங்கள நடத்துற மாதிரிதான் இவளையும் நடத்துறீங்களான்னு கொஞ்சம் யோசிங்க எல்லாரையும் ஒரே மாதிரி நீங்க முதல்ல பாருங்க அப்புறம் அடுத்தவங்கள சொல்லலாம்” என்றவன் மேலும் “இதுக்கு மேல என் வைப் பத்தி யாரும் கமென்ட் பண்ண கூடாது” என்று உறுதியாக கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு தங்கள் அறை நோக்கி சென்றான்.
மது ஏற்கனவே பூஜா பிரிந்துசென்றதால் கலங்கிப் போய் இருந்தவள் இப்போது வீட்டில் இருப்பவர்களும் தன்னையே குறை சொல்வதை கண்டு முகம் வாடி போனாள்.அதை கண்ட பிரபாவின் மனது மனைவிக்காக வருந்தியது.
முதலில் இந்த மாமியார் மருமகள் சண்டைக்கு ஏதாவது ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்தவன் வெகுநேரம் சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவெடுத்தான்.
அதன்படி அடுத்த நாள் தன்னுடைய அலுவலகத்தில் கிருஷ்ணாவை சந்தித்தவன் தான் எடுத்த முடிவு பற்றி கூற அவனும் சற்று நேரம் யோசித்தவன் “எனக்கு ஓகே தான் கண்டிப்பா நாம இதை பண்ணலாம்” என்று கூறிவிட பிரபாவுக்கு அப்பொழுது தான் நிம்மதி பிறந்தது. அதன்படி தான் செய்ய நினைத்த காரியத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பிரபா வேகமாக செய்ய ஆரம்பித்தான்.
அங்கு சூர்யா, அபி இருவரும் தங்களது ஐந்தாவது வருட மருத்துவ படிப்பில் காலெடுத்து வைத்திருந்தனர். ப்ரீத்தி மேற்படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றுவிட ,அவளது வீட்டினரும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எப்படியும் வேறு வீட்டிற்கு வாழப் சென்று கஷ்டப்பட போகிறாள். அதுவரை தங்களுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.அவளும் வீட்டில் முடங்கி இருப்பது கிருஷ்ணாவோடு வெளியில் சுற்றுவது என்று நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தாள்.
இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தது. சூர்யா கல்லூரியின் மரத்தடியில் கன்னத்தில் கை வைத்தவாறு அமர்ந்து திருவின் செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது எல்லாம் திரு அவளை கண்டுகொள்வதே இல்லை அவள் எதிரில் வந்தாலும் நேராக பார்த்துக் கொண்டோ அல்லது தன் போனில் பேசிக் கொண்டோ சென்று விடுவான்.அவனின் அந்த செயல் அவளை மிகவும் தாக்கத்தான் செய்தது. அவன்தான் என் மனதில் இல்லை பிறகு ஏன் அவன் என்னை கண்டு கொள்ளாமல் சென்றாலும் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவள் அருகில் வந்த அபி சாதாரணமாக பேச துவங்கியவள் சூர்யாவிடம் இருந்து பதில்வராததை கவனித்து அவள் முகத்தை பார்க்க அவளோ ஏதோ யோசனையுடனும் கண்களில் அலைபுறுதலுடனும் இருப்பதையும் கண்ட அபி அவளின் நிலையை புரிந்து கொண்டாலும் வேண்டுமென்றே தெரியாதது போல் “என்ன ஆச்சுடி ஏன் உன் முகம் வாடி போய் இருக்கு” என்று கேட்க, அவளோ “இல்ல ஒன்னும் இல்லை” என்றாள் தடுமாற்றத்துடன்.அபியும் அவளை ஆழ்ந்து பார்த்தவள் பின் எதுவும் பேசாமல் விட்டுவிட்டாள்.
அதன் பின் சூர்யாவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல் நாட்கள் சாதாரணமாக சென்று கொண்டிருந்தது.ஒரு நாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குள் வந்தவள் அவளது வீட்டு உறுப்பினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் மனதில் “எதாவது முக்கியமான விஷயமா இல்லை பிரச்சனையா இருக்குமோ”என்று எண்ணியவள் அவர்களிடம் கேட்டுவிட எண்ணி “எல்லாரும் என்ன சீரியஸா பேசிட்டு இருக்கீங்க” என்றாள்.
ராஜ், “உட்காருமா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உனக்காகதான் வெயிட்டிங்”என்று கூற,அவளோ புருவம் சுருங்க யோசித்தவள் “என்னப்பா என்ன விஷயம்” என்று கேட்க, அவரோ “இல்லமா ஒரு நல்ல வரன் வந்து இருக்கு,அதுதான் உடனே முடிச்சிடலாம் யோசிச்சுகிட்டு இருக்கோம் நீ என்ன சொல்ற”என்றார்.
தந்தையின் கேள்வியில் அதிர்ந்து போனவளின் மனதில் மின்னலென திருவின் முகம் வந்து சென்றது. இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவள் “அ…..அது அப்பா என்ன திடீர்னு”என்று திணறியபடி விழிக்க, அவரோ “இல்லம்மா நல்ல வரன் அதான் உடனே முடிச்சிடலாம்னு பார்க்கிறோம்” என்றார்.
சூர்யா, “இல்லப்பா இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு அதுதான் யோசிக்கிறேன்” என்று கூற,அவரோ உடனடியாக “அதெல்லாம் மாப்பிள வீட்ல பேசிட்டேன்மா அவங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் படிக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க” என்று மலர்ந்த முகத்தோடு கூற,இதற்கு மேல் எப்படி என்ன பேசுவது என்று தடுமாறியவளின் நினைவில் அன்று திரு பேசியது நினைவில் வர என்ன நினைத்தாளோ தன் சம்மதத்தை தந்தையிடம் தெரிவித்துவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
என்னதான் தந்தையிடம் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்தாலும்,அவள் மனம் மிகவும் பாரமாக இருந்தது. திருமணம் என்றாலே அவள் நினைவு திருவை நோக்கி செல்ல, தன் நினைவு செல்லும் பாதையை கண்டு குழம்பியவள் “எனக்கு ஏன் மனசு இவ்ளோ கஷ்டமா இருக்கு. திருமணம் என்று சொன்னவுடனே அவன் ஏன் என் கண் முன் வந்தான்” என்று பல கேள்விகளுடன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
ஆனால் இவ்வளவு நாட்களும் யாரை தான் விரும்பவில்லை, விரும்பவில்லை என்று சொல்லி கொண்டு இருந்தாளோ அவன் அவள் மனதில் எப்போதோ சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டான் என்பதையும், தனக்குள் தோன்றிய இந்த உணர்வுக்கு பெயர்தான் காதல் என்பதையும் அறியாமல் போனதை என்னவென்று சொல்வது. அவளது காதலை எப்போது உணர்ந்து கொள்ள போகிறாளோ அதற்குள் திருவின் அதிரடி எப்படி இருக்க போகிறதோ விதியின் கையில் அனைத்தும்.
சூர்யாவின் நிலை இப்படி இருக்க அங்கு மதுவின் வீட்டில் குடும்பத்தினர் அனைவரையும் பிரபா வர சொல்ல,அனைவரும் “என்ன, ஏது” என்று புரியாமல் குழுமியிருந்தனர்.சரியாக எட்டு மணிக்கு உள்ளே நுழைந்தவன் கைகளில் ஒரு பைல் இருந்தது.
அனைவரும் “அது என்ன” என்பது போல் யோசனையாக பார்த்திருந்தனர்.பிரபா அந்த பைலை அவர்கள்முன் வைத்தவன் “இது நம்மளோட ரெஸ்டாரன்ட்டோட பிராஞ்ச சிங்கப்பூர்ல ஓபன் பண்றதுகான அப்ரூவல்” என்று கூற அனைவரும் இந்த செய்தியில் மிகவும் மகிழ்ந்தனர் .
மதுவும் இதை எதிர்பார்க்காதவள் தன் கணவனை எண்ணி பெருமைப்பட்டாள் ஆனால் அடுத்து அவன் சொன்ன செய்தி அனைவரையும் அதிர வைத்தது என்றால் மதுவோ என்ன கூறுவது என்று புரியாமல் திகைத்துப் போய் நின்றாள்.
அவர்களின் திகைப்பிற்கான காரணத்தை அடுத்த எபியில் பார்க்கலாம்…….