வாரிசில்லாத அரசுகளுக்கு மான்யம் கிடையாது என்று ஆங்கில அரசாங்கம் அறிவித்ததும், அரசாங்கம் தரும் மான்யத்துக்காக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, ஆங்கிலேயரிடம் கெஞ்சிக்கதறி, இங்கிலாந்து வரை பல கடிதங்கள் எழுதி, கடைசியில் மான்யம் நிராகரிக்கப்பட்டவுடன், ஆங்கிலேயரிடம் சண்டையிட்ட ஜான்சிராணியின் வரலாற்றை ஒட்டுமொத்த இந்தியாவே படிக்கிறது.
ஆனால், ஆங்கிலேயனை சிறைப்பிடித்து, அவனை பிழைத்துப்போ என்று விட்ட வேலுநாச்சியாரைப் பற்றி தமிழர்கள் கூட படிப்பதில்லை. உலகின் முதல் தற்கொலைப்படைப் பெண் குயிலியை தமிழர்களே மறந்து போனோம். அனைத்துக்கும் பின்னால் இருப்பது சாதி. வேறு மாநிலத்து வரலாற்றை மாய்ந்து மாய்ந்து படிக்கும் நாம், நமது வரலாற்றை மட்டும் சாதியோடு ஒடுக்கி விடுகிறோம். இந்த மனநிலை மாறும் வரை, தமிழர் வரலாறு வெளிவர வாய்ப்பில்லை.