எல்லா நாடுமே வசிக்கத்தகுந்தது என்றாலும் வளமான நாடே மக்களால் விரும்பப்படுவது. வளமான நாடு எது என்பது இவ்வதிகாரத்தில் விளக்கப்படுகிறது. இயற்கை வளமும் மக்கள் வளமும் சேர்ந்து அமைவது ஒரு வளமான நாடாகும் எனச் சொல்லப்படுகிறது. நாடென்ப நாடா வளத்தன என்று இவ்வதிகாரப் பாடல் ஒன்று குறு விளக்கம் செய்கிறது. இது ஒரு நாடு என்பது தன்னிறைவு பெற்றதாக விளங்கவேண்டும் என்ற கருத்தை நல்குவது; தம் நாட்டில் இல்லாதவற்றைப் பிற நாடுகளிலிருந்து எளிதே பெறக்கூடிய நிலையில் இருப்பதையும் இது குறிக்கும்.