அதிகார விளக்கம் :-
ஆள்வினையுடைமை என்பதற்கு இடைவிடாத மெய்ம்முயற்சி உடையன் ஆதல் எனத் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். மனஊக்கமும், செயலூக்கமும், ஒன்றிணைந்து மெய்ம்முயற்சியான ஆள்வினையுடைமை உண்டாகிறது.
ஆள்வினையுடைமையாவது செயல்களை ஆளுமையுடன் செய்யும் திறன் பெற்றிருத்தலைக் குறிக்கும். ஆளுமைத்திறன் என்பது தான் செய்யும் தொழிலைத் தனக்கு கட்டுபட்டதாகச் செய்து கொள்ளும் தன்மையைக் குறிக்கும். ஆள்வினை என்ற சொல்லுக்கு முயற்சி என்றும் உழைப்பு என்றும் பொருள் கொள்வர். முயற்சி என்பது ஒழுக்கம், அறிவு, கல்வி, ஊக்கம் போன்று ஒருவனிடமிருந்து பிரிக்கமுடியாது நிலைத்து நிற்கவல்ல உயர்வாழ்வுப் பண்பு ஆகும். வாழ்வுக்குச் செல்வம், புகழ் வேண்டியிருந்தாலும் அவற்றை ஈட்டுதற்கு முதற்கண் வேண்டுவது தன் முயற்சியே. குறளிற் பல இடங்களில், முயற்சியின் பெருமையைச் சிறந்ததென்றும், அதுவே மாந்தர் வாழ்வில் நல்ல துணையாம் என்றும் பேசப்படுவதைக் காணலாம்.
செல்வம் முயற்சியால் வருவது; நல்லூழால் அன்று என்பது வள்ளுவரின் அசையா நம்பிக்கை. ஆள்வினையுடைமை தனிமனித வெற்றிக்கும் தன் சுற்றத்தின் துயர் களைவதற்கும் துணை செய்வது, செயலை அரைகுறையாக விட்டு ஓடுபவனை உலகமும் ஒதுக்கிவிடும்; இன்பங்களின் பின்னால் செல்லாமல் வேலை செய்வதில் கருத்துடன் இருப்பவனாலேயே மற்றவர்க்கு உதவமுடியும்; முயற்சி செய்பவனிடமே செல்வம் சேரும்; முயற்சி இல்லாதவனுக்கு வறுமை உண்டாகும்; எப்பொழுதுமே தெய்வத்தின் துணையை நாடாது முயன்று செயல்படுக; தளராது தொடர்ந்து முயல்வது பெருவலியான ஊழையும் ஒதுங்கி நிற்கச் செய்யும்.
இவை முயற்சி செய்வோரை ஊக்குவிக்கும் வள்ளுவரது வாக்குகள்.