அதிகார விளக்கம் :-
ஊக்கம் உள்ளத்தின் எழுச்சியாக இருப்பது. மடி என்பது உள்ள எழுச்சி இன்மையாலும் உடம்பின் சோம்பலாலும் உண்டாவது. தன் குடியை மேன்மேல் உயரச் செய்ய விரும்புவர் சோம்பலைச் சோம்பலுறச் செய்து வாழ்வர். மடியுடையான் தன் குடும்பத்துக்கு கேடு உண்டாக்கிவிட்டுத்தான் சாவான். நெடுங்காலம் இருப்பதால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கடமைகளைத் தள்ளிப் போடுவதும், காலம் கடந்துவிட்டதால் எப்படி கடமை புரிவது என்று அதையே காரணம் சொல்வதும் சோம்புடையார் குணங்கள். அவர்கள் தங்களை மறதியுள்ளவராகக் காட்டிக்கொள்வர். சுறுசுறுப்பின்றி நாள் முழுவதும் ஓய்வு மனநிலையிலேயே இருப்பர்.
மடியை ஆளத்தெரியாதவர் புதுச் செல்வங்களை ஈட்டவும் மாட்டாமல், முன்பு இருந்த பொருளையும் பேணிக் காக்க இயலாமலும் எல்லாவற்றையும் இழந்து நிற்பர். அரசியலார் உறவு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முன்வராமல் சோம்பலுணர்வு தடுக்கும். நண்பர்களும் சுற்றமும் இடித்துரையையும் எள்ளல் மொழிகளையும் கேட்டு அதற்கு மறுப்புச் சொல்ல இயலாமல் மானம் இழப்பர். மடிமை குடியில் தங்கிவிட்டால் பகைவர்க்கு அடிமையாகவும் நேரிடும். சோம்பலை நீக்கியவன் உலகெல்லாம் வெல்லும் வல்லமை பெறுவான். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
இவ்வதிகாரப் பாடல்கள் குடியியல் அதிகாரங்களை, குறிப்பாக குடிமை, குடிசெயல்வகை ஆகியவற்றை எண்ண வைக்கிறது.
ஆட்சியாளர் மேல் வைத்துக் குடிகட்கும், குடிகள் மேல் வைத்து ஆள்வோருக்கும் அறம் உரைத்தல் வள்ளுவர் வழக்கம். அறம் இருபாலார்க்கும் இன்றியமையாதது என்பதால் தனிமனிதனது குடும்பத்துக்கும், நாட்டை ஆள்பவர்க்கும் அந்நாட்டுக் குடிகளுக்கும், சோம்பலை அகற்ற அறிவுரை கூறுமாறு அதிகார அமைப்பு உள்ளது.