அதிகார விளக்கம் :-
சினம், சீற்றம், கோபம், வெகுளல், கனலுதல், கடுகடுத்தல் என்பன சினத்தில் பல நிலைகள்; கடுஞ்சினம் கொள்ளாமையே 'வெகுளாமை' என்பர். மணக்குடவர் 'வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது' என்றார். எளியார் மீது வலியார் வெகுண்டெழக்கூடாது என்பது பொருள். வெகுளாமை அதிகாரம் இல்லறத்தார் துறவறத்தார் இருவர்க்குமே பொருந்துவதாகும்.
வெகுளாமை
சினம் என்பது மனித உறவுகளுக்கும் வாழ்வின் மகிழ்ச்சிக்கும் எதிரானது; அது இவற்றை அழிக்கவல்லது, வலியவனுக்கு எதிரான சினம் வெகுண்டவனுக்குத் தீங்கு பயக்கும். பலமில்லாதவனுக்கு எதிரான சினமும் தீமை பயப்பதுவே. சினம் கொண்டவனையே தீபோல சுடும் என்று சொல்லி சினம் காக்க என வள்ளுவர் இவ்வதிகாரத்தில் எச்சரிக்கிறார். சினம் காப்பதற்கு ஒரு வழியாக அதை மறந்துவிடுக என்கிறார். மனத்தில் சினம் என்ற எண்ணம் மனத்தில் தோன்றவிடக்கூடாது என்றும் சொல்கிறார். சினத்தால் விளையும் தீமைகள் பேசப்படுகின்றன; சினம் என்பது முகமலர்ச்சியையும் உள்ளமகிழ்ச்சியையும் கொல்வது மட்டுமல்லாமல் வெகுள்வானின் உயிர்க்கே கேடாக அமைவதுவதுமாகும்; சூழ்ந்துள்ளவரையும் சுடவல்ல நெருப்பு அது. சினத்தை ஓர் ஆற்றல் என நினைக்க வேண்டாம் எனவும் பொறுமை காக்க எனவும் அறிவுரை சொல்லப்படுகிறது. சினத்தை விட்ட அளவு ஒருவர் உயர்ந்தவர் ஆகிறார். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.