'நெஞ்சமெல்லாம் அலரே!!' அத்தியாயம் 13(a)

Advertisement

Rudraprarthana

Well-Known Member
அலர் - 13
nea131.jpg
காரில் இருந்து இறங்கிய மறுநொடி வில்லில் இருந்து பாய்ந்த அம்பாய் கணப்பொழுதில் எழில் பாய்ந்து சென்று வீட்டை திறந்து உள்ளே ஓடி மறைய.., வழி நெடுக விடாமல் அவனை கேள்விகளால் துளைத்துகொண்டு வந்தவளை அடக்க வேண்டி எழில் அலரை கலைத்து விட்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து கீழே இறங்கி, 'ஏய் நில்லுடா..' என்று கால்களில் சிக்கிய புடவையை ஏற்றி சொருகிக்கொண்டு அவனால் கலைத்து விடப்பட்ட தலைமுடியை கொண்டை இட்டவாறு, 'டேய் பிராடு மாமா நில்லுடா' என்று அவளிடம் இருந்து தப்பிக்க ஓடியவனை பின்னே விரட்டி சென்றாள்.

"முடியாது நீ அடிக்கமாட்டேன்னு சொல்லு நான் நிற்கிறேன்" என்றவாறே அவளிடம் பேரம் பேசிக்கொண்டே கூடம், சமையலறை, பின்கட்டு, மாடிப்படி வளைவு என்று அவளை தன்னை பின்தொடர வைத்து அவளுக்கு போக்கு காட்ட..,

"வேண்டாம்டா ஓடாதே ஒழுங்கா நில்லு..", என்றவள் மீண்டும் சிக்கிய புடவையை ஏற்றி பிடித்தவாறு, "ப்ச் புடவை கட்டிட்டு என்னால உன் வேகத்துக்கு ஓட முடியலை நில்லுடா" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கூறியவள்,

ஒரு கட்டத்திற்கு மேல் அவனை பிடிக்க முடியாமல் போக இடையில் கரம் பதித்து நின்றவள், "டேய் உனக்கு லாஸ்ட் சான்ஸ் தரேன் ஒழுங்கா இப்ப வந்தேன்னா நாலு அடியோட போயிடும்.. என்னை இன்னும் ஓடவிட்ட அப்புறம்.." என்று ஆட்காட்டி விரலை கொண்டு எச்சரித்தவள் முன் வந்தவன் அவளை இறுக அணைத்து இதழோடு இதழ் பொறுத்தியவன் சில நொடிகளில் அவள் மூச்சு காற்று சீராகியதை கண்டு அவளை விடுவிக்க..., என்ன நடந்தது என்று புரியாமல் திகைத்திருந்தவள் 'டேய்' என்று அவனை பிடிக்கும் முன் மீண்டும் ஓடத்தொடங்கியவன் ஒரு கட்டத்தில் படுக்கையறையினுள் நுழைந்திருந்தான்.

அவனை பின்தொடர்ந்தவள் சட்டென கதவை சாற்றி தாளிட்டு அதன் மீதே நின்று, இதுநேரம் வரை தன்னை அலையவிட்டவனை கொலை வெறியோடு பார்த்து கொண்டு நின்றாள்.

அவள் வருவதற்குள் கட்டிலின் மறுபுறம் சென்று பாதுகாப்பாக நின்றிருந்த எழில், "குள்ளச்சி கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் அடி நான் வேண்டாம்ன்னு சொல்லலை" என்று கூற..,

'டேய்..' என்று பல்லை கடித்தவள், கண்களில் கனலுடன் உரத்த குரலில், "அதுதான் ஆபிஸ்ல இல்லாத பொறுமையை தேடி பிடிச்சி, கடன் வாங்கி, இழுத்து நிறுத்தி, நீ சொன்னதை எல்லாம் கேட்டேனே அதுபோதாதா..!!! இன்னும் என்ன பொறுமை எருமை..!!" என்றிட..,

எழிலோ, "ஏய் அது இல்லைடி எட்டு மாசத்துக்கு முன்னாடி நடந்ததை யோசிச்சியே அதுக்கு அப்புறம் நடந்ததை யோசிச்சியா..? என்றவன் "இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என் மேல எந்த தப்பும் இல்லை எல்லா தப்புமே உன் அப்பா, சித்தப்பா மேல தான்டி" என்றான் தன்னை பிடிக்க வந்தவளிடம் சிக்காமல் கட்டிலை சுற்றி ஓடிக்கொண்டே.

"எதூஊஊ எங்கப்பா மேல தப்பா, டேய் 420" என்று கைமுஷ்டிகளை இறுக்கி பல்லை கடித்தவளின் கோபம் இருமடங்காக பெருகி வழிய "நீ தப்பிக்க எங்கப்பா மேலே பழி சொல்றியா..??" என்றவள் அவனை அடிக்க பொருள் தேடி விழிகளை சுழல விட்டவாறு கட்டிலின் மீது ஏறி மறுபுறம் குதிக்க.., அதற்குள் கட்டிலை சுற்றி இந்த புறம் வந்திருந்த எழிலன் கதவை திறக்க முற்ப்பட..,

அதை கண்டவள் முகம் செந்தணலாகி போக, 'மாமாஆஆஆ..' என்று உரக்க அழைத்துக்கொண்டே நொடியில் கட்டிலை கடந்து அவனை நெருங்கி கதவை திறந்து கொண்டிருந்தவன் சட்டையை பின்புறமாக பற்றிக்கொள்ள, அதற்குள் கதவை திறந்து விட்டிருந்தவன் அவள் கையில் சிக்கி இருக்கவும் வெளியில் தப்பிக்க முடியாத நிலை..,

"ஏய் மொதல்ல சட்டையை விடுடி" என்று அவன் திமிர.., அலர்விழியோ "ஏண்டா பிராடு பண்றது எல்லாம் பண்ணிட்டு அடுத்தவங்க மேலயா பழி போடுற.., சொல்லுடா நான் இதுவரை உன்கிட்ட ஏதாவது மறைச்சிருப்பேனா..? நீ ஏண்டா மறைச்ச..???" என்று ஆதங்கத்துடன் கேட்க..,

தலையை திருப்பிய எழில் "ஏன்டி உனக்கு இப்போ பதில் வேணுமா இல்லை சட்டை வேணுமா..??விடுடி சொல்றேன்" என்று கூற..,

அவளோ இன்னும் அழுத்தமாக அவன் சட்டையை பற்றி இழுக்க அது அவன் கழுத்தில் இறுக்கத்தை கூட்டி வலியை உண்டாக்க..,

"ஏய் கழுத்தை நெறிக்குதுடி.., விடு சொல்றேன்" என்று திரும்ப..,

"விட்டா நீ ஓடிடுவடா.., எனக்கு தெரியாதா" என்று கூற..,

ஒரு நொடி மௌனித்த எழிலோ, "நீ விடாட்டியும் ஓடுவேன்டி" என்றவன் நொடிப்பொழுதில் சட்டை பொத்தான்களை அவிழ்த்து 'இந்தா நீயே வச்சிக்கோ..' என்றவன் சிட்டாக பறந்துவிட இப்போது அவன் சட்டை மட்டுமே அலரின் கையில்.. அதை கண்டவளின் கோபம் கரை கடந்த வெள்ளமாகிட கையில் இருந்த சட்டையை கீழே போட்டு ஆத்திரம் தீர அதை மிதித்தவள் மனது அடுத்து நீ தான்டா..!! என்று கறுவிக்கொண்டது.

அவன் செயலில் கொதித்துபோனவளாக ஆத்திரம் தாளாமல் சில நொடிகள் இருகரங்களாலும் தலையை பிடித்துகொண்டு கட்டிலில் அமர்ந்தவள் உடனே எழுந்து மடமடவென்று சேலையில் இருந்து இரவு உடைக்கு மாறி வெளியில் வந்தாள். இப்போது இரண்டே நொடிகளில் எழிலை அடைந்தவள் கையில் மறுநொடி சிக்கி இருந்தான் எழிலன்.

ஓங்கி முதுகில் ஒன்று வைத்து இழுத்து வந்து அவனை சோபாவில் அமர்த்தியவள் அவன் மடியில் சம்மணம் இட்டு அமர்ந்து அவன் தப்பித்து ஓட முடியாது என்பதை உறுதி செய்திருந்தாள்.

"ஏய் கீழ இறங்குடி, எதுவா இருந்தாலும் பக்கத்துல உட்காந்து கேளு எப்போ பாரு குரங்கு குட்டி மாதிரி தாவி மடியில் ஏறிக்கிற.." என்று கடுப்புடன் அவளை கீழிறக்க முயல..,

'எது குரங்கா..??' என்றவள் அவன் வாயிலே ஒன்று வைத்து மீண்டும் அழுத்தமாக அவன் மடியில் அமர்ந்து ஒரு கரத்தால் அவன் கழுத்தை வளைத்து மறுகரம் கொண்டு அவன் தாடையை பற்றியவள், "டேய் சீட்டர் எவ்ளோ ஆட்டம் காட்டுற நீ..!!! இங்க உட்காந்தா தான்டா நீயும் தப்பிச்சு ஓட முடியாது எனக்கும் அடிக்க வசதியா இருக்கும், இறக்கி விட்டு தப்பிக்க பார்க்கிறியா..??" என்று கூற..,

"என்னடி சொல்ற..?" என்று ஒரு நொடி விழித்தவன்.., 'அடிப்பாவி அப்போ இவ்ளோ நாளா நீ என் மடியில ஆசையா உட்காரலையா அடிக்க வசதியா இருக்கும்ன்னு தான் வந்து உட்காறுரியா..?? நான் கூட யோசிப்பேன் கோவமா இருக்கும்போது எல்லாரும் தள்ளி போவாங்க இவ என்ன வித்யாசமா நடந்துக்குறான்னு, இப்போதானே புரியுது" என்றான் இறங்கிய குரலில்.

"ஆமா பின்னே எனக்கே இவ்ளோ ஆட்டம் காட்டுற உன்னை மடியில உட்க்காந்து கொஞ்சனும்ன்னு வேற உனக்கு நெனப்பிருக்கா...?? என்றவள் இப்போது கழுத்தில் இருந்து அவள் கரங்களை அகற்றி அவன் முகம், மார்பு, தோள் வளைவு என்று அனைத்து இடங்களிலும் ஆத்திரம் தீரும் மட்டும் அடிக்க தொடங்கினாள்.

அவளின் பூக்கரங்களில் இருந்து விழுந்த ஒவ்வொரு அடியும் அவனுக்கு மசாஜ் செய்வது போல இருக்க 'ஏய் முகத்தை விட்டுடுடி' என்றவன் இந்த பக்கம் அந்த பக்கம் என்று உடலை திருப்பி காட்டி அவளிடம் புன்னகை முகமாய் பெற்று கொண்டவன்.

சில நொடிகள் கழித்து, 'போதும்டி குள்ளச்சி விடு' என்று அவள் கரங்களை தன்னில் சிறை பிடித்தவன், "இப்போ கோவம் போயிடுச்சா என் குள்ளச்சிக்கு..!! நான் சொல்றதை கொஞ்சம் கேட்கிறியா..??" என்றான் அவள் முகத்தை பற்றி நெற்றியில் முட்டிவாறு..

ஆம் எழிலின் கோபத்தின் வடிகால் அமைதியும் தனிமையும் என்றால் அலரின் கோபத்தின் வடிகால் அடியும் உதையும் தான்.., இருவரும் அவர்கள் விருப்பம் போல தங்களை செயல்படுத்த, மற்றவர் பக்கபலமாக இருந்து துணையின் கோபத்தை குறைப்பர்.

அவன் குரலின் தீவிரத்திற்கு கட்டுப்பட்டு ஒரு நொடி தன் செயலை நிறுத்தி அவன் விழிகளுக்குள் ஊடுருவியவள் கண்கள் கலங்கி போயிருந்தது..,

அதை கண்டவன், 'ப்ச் எதுக்குடி' என்று அவள் விழி நீரை துடைக்க.., அலரோ அவனை இறுக அணைத்துக்கொண்டு, "ஏன்டா முன்னமே சொல்லலை..??? உன்னால நான் மாமாவை எப்படி எல்லாம் பேசிட்டேன்... போடா இப்போ புதுசா என்ன சொல்ல போற..? அவர் கஷ்டப்பட்டது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா.." என்று மீண்டும் அவன் கன்னத்தில் அறைய முயல..,

அவள் கரத்தை பிடித்தவன்,"அதுக்கு தான்டி நான் உன்னை பொறுமையா இருக்க சொன்னேன்" என்றவன், "எல்லாத்தையும் அலசின நீ ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்ட சொல்லப்போனா நான் மறைச்சதுக்கும் இப்போ நடக்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை சொல்றேன் கேளு, அதுக்கு அப்புறம் முடிவு பண்ணு" என்று கூற..,

அவன் குரலின் அழுத்தமும் விழிகளில் உறுதியும் இருப்பதை கண்டவள், 'சரி சொல்லு' என்றாள்.

அவளை தன் கைவளைவில் கொண்டு வந்தவன் நான் சொல்றதை கோபப்படாம கேளு என்றே ஆரம்பித்தவன் அவளிடம், "உங்கப்பா அன்னைக்கு சரணும் கீர்த்தியும் ரெண்டு வாரம் ஒண்ணா இருந்தாங்கன்னு சொன்னாரே..?? அதை கேட்டு உனக்கு எவ்ளோ அதிர்ச்சியா இருந்ததோ அதே அளவு தான் எனக்கும்.., ஏன்னா இந்த விஷயத்தை பத்தி சரண் என்கிட்டே இதுவரைக்குமே சொல்லை.." என்று கூறவுமே

'இதை நான் நம்பனுமா..??' என்று அலர் அவனை முறைக்க..,

"ஏய் இருடி உடனே ஆரம்பிக்காத" என்றவன் தொடர்ந்து, "உனக்கு நியாபகம் இருக்கா நாம எப்போ சரணை சந்திச்சோம்ன்னு" என்று கேட்க..,

'ஹ்ம்ம்' என்று தலை அசைத்தவள், "மாமா அப்ராட்ல இருந்து வந்த ரெண்டாவது நாள்"

"அதே தான்டி.. அன்னைக்கு தான் அவன் என் கிட்ட நாலு வருஷத்துக்கு முன்ன நடந்ததை சொன்னான். இப்போ பிரச்சனை என்ன..?? கீர்த்தி கர்ப்பமா இருக்கிறது அதனால தானே நீ கோபப்பட்ட..!! என்று கேட்க..., பதிலேதும் இன்றி அவன் வார்த்தைகளுக்கு உன்னிப்பாக செவி மடுத்திருக்க..,

எழில் மீண்டும், "உங்கப்பா என்ன சொன்னாரு ரெண்டு வாரம் அவங்க ஒண்ணா இருந்தாங்கன்னு.., அப்போ நாம சரண் கிட்ட பேசிட்டு வந்த அப்புறம் தானே அவங்க ரெண்டு பெரும் ஒன்னா இருந்திருக்கணும்.. சரியா..??" என்று கேட்க..,

அவளும் இப்போது கோபத்தை தள்ளி வைத்திருக்க, 'ஆம்' என்று தலை அசைத்தாள்.

"சோ அந்த ரெண்டு வாரம் என்ன நடந்தது..? கீர்த்தி சரணும் எங்க இருந்தாங்க..??? அவளை யார் போகவிட்டா..?? இது உங்க அப்பாக்கு எப்படி தெரியும்...?? அப்புறம் கீர்த்தி ரெண்டு மாசம் உங்கப்பாவோட கண்காணிப்புல தான் இருந்திருக்கா அப்பவே அவளுக்கு பிரேக்னேன்ட் ஆனது தெரிஞ்சிருக்கணும் ஆனா ஏன் அப்பவே உங்கப்பா கிட்ட சொல்லலை..?? அந்த ரெண்டு வாரம் பத்தி நம்ம கிட்ட இருந்து மறைச்சது உங்கப்பான்னா.., கீர்த்தியோட நிலையை ஏழு மாசமா உங்கப்பாவுக்கே தெரியாம மறைச்சது உன் சொத்தப்பா... இவங்க ரெண்டு பேரால தான் இவ்ளோ பிரச்சனையும் புரியுதா..? என்று கேட்க அவளும் அவன் கூற்றை ஆராய தொடங்கினாள்.

மேலும் தொடர்ந்த எழில், "இன்னும் சொல்லப்போனா சரணும் கீர்த்தியுமே நம்ம கிட்ட இதை பத்தி வாய் திறக்கலை... அதுலயும் கீர்த்தி ரொம்ப வித்யாசமா நடந்துக்குறா, மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க முன்ன உங்கப்பாவை அப்படி பேச்சு கேட்க வச்சு அவமானபடுத்தினா.., எப்படி இருந்த உன் சித்தப்பாவை இப்போ ஆட்டி வைக்கிறா.., சரணை நீ அவ்ளோ பேசும் போதும் அமைதியா இருக்கா..? அவ மனசுல என்ன நினைக்கிறான்னே புரியலை.." என்று எழில் கூறவும், கீர்த்தியுடன் பெரிதான நெருக்கம் இல்லை என்றாலும் இப்போது நினைத்து பார்க்கையில் அன்றைய அவளின் செயல்கள் சற்று அசாதாரணமாகத்தான் தோன்றியது அலர்விழிக்குமே..!!

"ஆனா ஒன்னு நம்ம ஹனிமூன் அப்போ என்கிட்ட பேசின கீர்த்திக்கும் இப்போ பேசாம அழுத்தமா இருக்க கீர்த்திக்கும் நிறைய வித்தியாசம்... இதுக்கு கண்டிப்பா உன் சொத்தப்பன் தான் காரணமா இருக்கனும், குழந்தை மாதிரிடி அவ..!! அவங்கப்பன் பண்ணின வேலையால தான் கீர்த்தி இவ்ளோ அழுத்தமா இறுகி போயிருக்கனும்.., எல்லாத்துக்கும் மேல குழந்தை என்றவன் முகமே உணர்வுகள் தொலைத்து இருந்தது..., சில நிமிடங்களுக்கு பின் மொத்தத்துல இவங்க நாலு பேரும் சேர்ந்து என்ன பண்றாங்கன்னே புரியல... சம்திங் பிஷ்ஷி" என்றவன் தாடையில் கரம் பதித்து அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

அதை கேட்ட அலர்விழிக்கும் அவன் கூற்று சரி என்று தான் பட்டது... "ஆம் பிரச்சனையின் மையபுள்ளியே கீர்த்தியிடம் தான் தொடங்குகிறது என்று அலரும் புரிந்து கொண்டாள். பின்னே ஏழு மாதங்களாக கர்ப்பத்தை மற்றவரிடம் மறைக்க வேண்டிய அவசியம் என்ன..!! அதுவும் அவளுக்காக சரணை தள்ளி நிறுத்தி இருக்கும் தன் தந்தை நாதன் இடமே." அதிலும் சரண் தவறு செய்திருந்தால் கர்ப்பம் உறுதி ஆனதுமே... இப்போது தேடி வந்தவள் அப்போதே வந்து திருமணத்தை நடத்தி இருக்கலாமே..!! இத்தனை மாதங்கள் மறைக்க வேண்டிய அவசியம் என்ன..?? எதற்கு சரனை குற்றவாளி ஆக்க வேண்டும்..!!

"அது மட்டுமின்றி அன்று மருத்துவமனையில் சரண் கீர்த்தியின் காதலை அலர் அறிந்த போது கீர்த்தியின் முகத்தில் இருந்த மகிழ்வும் பூரிப்பும் மிளிரவும் இன்று அணுவளவும் இல்லை. உண்மையாக காதலித்திருந்தால் எத்தகைய இக்கட்டையும் காதலனிடம் பகிர்ந்து இத்தகைய நிலையை கீர்த்தி தவிர்த்திருக்க வேண்டும் அல்லவா."

"அதிலும் வீட்டில் இருந்து கொண்டே பெங்களூரில் இருப்பதாக பொய் வேறு.., பிரகாசமும் கீர்த்தியும் நாதன் மற்றும் சரணை பெரும் இக்கட்டில் நிறுத்தி இருப்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது.., இங்கு நான்கு வருட முந்தைய கதையை எழில் அவளிடம் கூறி இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்வதற்கில்லை.., ஏனெனில் வெளிப்படை தன்மையே இல்லாமல் இருக்கும் கீர்த்தி மற்றும் பிரகாசத்தின் ஒத்துழைப்பின்றி..!! நாதனையே ஏமாற்றி வாயடைக்க செய்து மற்றவர் முன்னிலையில் தலை குனிய செய்தவர்கள், அவளையும் சமாளித்திருப்பார்கள் என்பது புரிபட..," சில நொடிகள் அவனையே பார்த்திருந்தவள் மெல்ல அவனிடம்.,

"ஐ ஆம் கன்வின்ஸ்ட்" என்று கூறவும்..,

நிஜமாவாடி என்று விழிகளில் மகிழ்வுடன் கேட்டவன் மனதில் ஒருவித நிம்மதி பரவ இருக்கரங்களையும் தலைக்கு பின் கோர்த்து சோபாவில் தலை சாய்த்தவன் 'ஷ்ஷப்பா..' என்ற பெருமூச்சை அவன் இழுத்து விடுமுன் மீண்டும் அவன் மடியில் அமர்ந்தவள் அவன் சிகையை பற்றி, "இப்ப சொல்லு எதுக்கு கதிர் பத்தி என்கிட்டே இருந்து மறைச்ச..???" என்று கேட்க...,

'திரும்பவுமா..??' என்றவன் சோர்ந்து போன குரலில் "ஏய் இப்போ தான் நீ கன்வின்ஸ் ஆகிட்டியேன்னு கொஞ்சம் நிம்மதி ஆனேன் அது பொறுக்கலையா..?? கொஞ்சம் டைம் குடுடி" என்றான் அவள் கரங்களை பிரித்தெடுத்தவாறு.

"எதுக்கு டைம்..? சமாளிக்க என்ன பொய் சொல்லலாம்னு நீ யோசிக்கவா..??" என்று கேட்க..,

"அடிப்பாவி நான் எதுக்குடி பொய் சொல்லணும் நிஜமாவே அவன் விஷயத்தை நான் சொல்ல மறந்துட்டேன்டி.., மறைக்கனும்ன்னு எல்லாம் இல்லை.. அன்னைக்கு ஹோட்டல் போனப்போ தான் அவனை ஒரு பொண்ணுகூட பார்த்தேன், உன்கிட்ட சொல்ல வரதுக்குள்ள நீ வேதாக்கு வாங்க வேண்டிய லிஸ்ட் ஆரம்பிச்சிட்ட அடுத்து அந்த பரதேசி வந்துட்டான் என்றதும் அலர் அவனை முறைக்க சரி உன் நொண்ணன் வந்துட்டான் அப்புறம் உங்கப்பா கூட கடையில பிரச்சனை இதுல தான் மறந்துட்டேன்... நிஜமாவே.. மாமாவை நம்புடி" என்று பாவமாக அவன் பார்க்க..,

அவளுக்குமே அன்றைய நாள் நன்கு நினைவில் உண்டு இருந்தாலும்..,"எப்படிடா நம்ப சொல்ற.., உன் மேல இருக்க தப்பை ஏதேதோ கதை கட்டி எங்க அப்பா மேல திருப்பி என்னையே சரி சொல்ல வச்சிட்ட.. உன்னை எப்படி நம்ப..!!"

"ஏய் லூசு, கதை இல்லைடி உண்மையாவே உங்கப்பா மறைச்சதுதான் பெரிய தப்பு..!!" என்று கூற,

"அப்போ ஏண்டா அதை அங்க ஆபிஸ்லயே சொல்லலை..., கார்ல வரும் போது யோசிச்சி இங்க வந்து சொல்லணும்" என்று கேட்க..,

"என் அறிவுக்களஞ்சியமே.., இதை தான்டி அங்க சொல்ல வந்தேன்.., ஆனா உன்னை பார்த்து பயத்துல வார்த்தை வரலை..,"

"என்னது பயந்துட்டியா.., என்று அவன் கன்னத்தை இருமருங்கிலும் பிடித்தவள் அவன் விழிகளை ஆராய்ந்தவாறே எப்படி பயந்திருப்ப பாரு நீ..!! இதை நான் நம்பனுமா..??" என்று புருவம் உயர்த்தியவள்..,

ஆம் "நிஜம் அதுதான் அவன் மறைத்தது தான் சரனை அவள் பேச காரணமாகி போனது என்று எண்ணியவன் உள்ளுக்குள் குற்றஉணர்வு அதிகரித்து இருந்தது.. அதில் பேச்சு வராமல் அவன் ஸ்தம்பித்து போனதில் அவளிடம் தன் நிலையை அங்கு விளக்க முடியவில்லை"

"இங்கபாரு எங்கப்பா ஒரு விஷயத்தை மறைச்சா அதுக்கு வேலிட் ரீசன் இருக்கும்" என்றிட..,

திகைத்து போனான் அகனெழிலன்... "ஏன்டி உங்கப்பா மறைச்சா ரீசன் இருக்கும் அதே நான் மறைச்சா ரீசன் இருக்காதா..??" என்று ஆதங்கத்துடன் கேட்க..,

"ஆமா எங்கப்பா எது பண்ணினாலும் அடுத்தவங்க நல்லதுக்கு தான் பண்ணுவாரு, ஒஹ்ஹ்ஹ உங்களுக்கும் ரீசன் இருக்குமா..? அப்படி என்னங்க சார் ரீசன் சொல்லுங்க கேட்போம்" என்று அவன் தோளில் கரம் பதித்து அவன் முகம் பார்க்க..,

"உங்கப்பாவும் பாட்டியும் தான்டி..!!" என்று கூற..,

அவன் பதிலில் அலரின் விழிகள் பெரிதாக விரிய.., "எங்க பாட்டி ஓகே.., அது என்ன எங்கப்பா புரியலை..??"

அவள் விழிகளை பார்த்தவாறு, "அவரோட ஹெல்த் கண்டிஷனுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் கூடாது அதனால தான் சொல்லலை உன்கிட்ட சொன்னா அது கண்டிப்பா அவர்கிட்ட போகும்.., தொட்டதுக்கு எல்லாம் கோவபடுவாறு இதுல உன் சொத்தப்பன் பண்ணினது தெரிஞ்சா அவ்ளோ தான்... உங்கப்பாவோட நல்ல மனசுக்கு கொஞ்சம் கூட ஒத்துபோகாத குணம் அவனுக்கு அப்படி இருக்கும் போது உங்கப்பா உன் சொத்தப்பனை விட்டுட்டு சரண் மேல கோவபடுராருன்னா என்னோட கெஸ் படி அவருக்கு இன்னும் நடந்தது எதுவும் முழுசா தெரியல..!! தெரிஞ்சது உன் சொத்தப்பன் செத்தப்பன் தான்டி" என்றிட,

அலர்விழியோ திறந்த இமை மூடாது அவனையே அதிசயித்து பார்த்திருந்தாள்.., ஆம் இது நாள் வரை வார்த்தையால் அல்லாமல் செயல்களால் அவளுக்கு உணர்த்தி கொண்டிருப்பவன் முதன் முறையாக நாதனை பற்றிய அவன் எண்ணத்தை பகிர்கிறான்..., தந்தையை பற்றி பேசியவனின் வார்த்தையில் பொய்யில்லை நிஜமான அன்பு அவன் விழிகளில் தென்பட அதில் அவள் இதழ்களும் சிறிது பிளந்திருக்க அதை ஒன்று சேர்த்தவன்,

"என்னடி லுக்கு..!! எனக்கு அவர் தாய் மாமா அந்த அக்கறை எனக்கு எப்பவும் இருக்கு.., நீ சொல்லி தான் செய்யனும்ன்னு ஒன்னும் இல்லை.. என்ன ஒன்னு நமக்கு நடுவுல அதிகமா மூக்கை நுழைக்கிறது தான் எரிச்சலா இருக்கு.., அப்படி என்ன என் மேல நம்பிக்கை இல்லை அவர் மட்டும் தான் உன்னை நல்லா பார்த்துப்பாரு நாங்க எல்லாம் கொடுமை படுத்துவோம்ன்னு ஒரு எண்ணம், அப்போ எனக்கும் கோவம் வரத்தான் செய்யும்" என்று கூற,

அவன் பேச்சு மனதிற்க்கு இதம் அளித்தாலும் அவனை சீண்டும் பொருட்டு,"ஒஹ் அதான் சார் வார்த்தைக்கு வார்த்தை மாமா, மாமான்னு எங்கப்பாவை வாயார கூப்பிடுறிங்களே அதுலே தெரியுது உங்க அக்கறை" என்று இதழ்களை சுழிக்க..,

சுழித்த இதழை சுண்டி இழுத்து அதில் இதழ் பொறுத்த முயல 'விடுடா' என்று அவள் தலையை திருப்ப முயலவும், 'நான் கோவமா இருக்கேன்' என்றவன் இதழ்களை இன்னும் அழுத்தமாக பற்றி நெருங்க.., "அதுக்கு" என்று அவனை பார்க்க,

உனக்கு கோபம் வந்தா நீ மடியில உட்காருறது உன் உரிமைன்னா எனக்கு கோவம் வரும்போது இதுவும் என் உரிமை என்று கண் சிமிட்டியவன் அழுத்தமாக அவள் இதழ்களை சேர அலர் தான் சில நொடிகள் திண்டாடி போனாள். மெல்ல விலகியவன் அவள் மீதிருந்த கரத்தை அகற்றாமல், "இப்போ வரை அவரு உனக்கு அப்பாவா மட்டும் தான் நடந்துட்டு இருக்காரு எப்போ எனக்கு தாய் மாமாவா நடந்துக்கறாரோ அப்போ கூப்பிடுவேன்" என்றான்.

இதற்கு அவள் என்ன பதில் கூற..!! திருமணம் ஆன நாளில் இருந்தே எழிலுக்கும் நாதனுக்கும் ஏழாம் பொருத்தம் ஆக தான் இருந்து வருகிறது.. அதிலும் எழில் அமைதியாக இருந்தாலும் அவனிடம் குற்றம் கண்டுபிடித்து ஏதேனும் பேசுவதை வாடிக்கையாய் நாதன் கொண்டிருப்பதை அவளும் உணர்ந்தே தான் இருந்தாள்.

சில நொடிகள் இருவரிடமும் மௌனம் குடிகொள்ள.., அலர் அவனிடம், சரி நீ எப்போ வேணும்னாலும் கூப்பிடு அது உன் விருப்பம் ஆனா எதுக்கு என்னை லூசு சொன்ன..? உனக்கு என்னை பார்த்தா அப்படி தெரியுதா..??" என்றிட..,

"அட ராமா.., திரும்ப ஆரம்பிக்குறாளே இதுக்கு ஒரு எண்டே இல்லையா" என்று நொந்து போனவன், "எனக்கு இல்லடி உனக்கு தான் அப்படி தெரியுது... ரெண்டு முறை நீ யாருன்னு நீயே கன்பெஸ் (confess) பண்ணி இருக்க..." என்று இதழ் மடித்து புன்னகையை கட்டுபடுத்திய வண்ணம் அவளை எழுப்பி நிறுத்தியவன் ஓட முயல.., மறுநொடியே அலர் அவனை பிடித்து இழுக்க கால் இடறி எழில் கீழே விழுந்திருந்தான்.

அப்போதும் அவனை விடாமல் அவன் மீது ஏறி அமர்ந்து அவன் எழாதவாறு பார்த்துக்கொண்டவள் அவன் தாடையை பற்றி, "ஆமாடா உன் பின்னாடியே லூசு மாதிரி சுத்துறேன் பாரு உனக்கு என்னை பார்த்தா அப்படி தான் தெரியும் என்றவள் ஒழுங்கா இதுக்கு பதில் சொல்லு என்கிட்டே இருந்து உண்மையை மறைச்சது சரியா..? தப்பா..?" என்று கேட்டு கை ஓங்கவும்..,

'அம்மா..' என்ற குரல் வாயில் புறம்..,

ஹாய் ஹனிஸ்...

இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !!' அடுத்த அத்தியாயத்தின் முதல் பகுதி பதித்துவிட்டேன். சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமென்ட் அளித்த செல்லகுட்டிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... உடனே பதில் சொல்ல முடியலை சிக்கிரம் தரேன்.., என்ன முயன்றும் பதிவு பெருசாகிட்டே போகுது அடுத்த பகுதி இன்னும் கொஞ்ச நேரத்துல போடுறேன்... காத்திருங்கள்

நன்றி

ருத்ரபிரார்த்தனா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top