5 நாட்களுக்குப் பிறகு…
எதையோ அலைந்து திரிந்து தேடிவிட்டு வந்திருந்தான் அரவிந்த். அவன் வந்ததும் அவனுக்கு நீர் கொடுத்து அவனே பதில் சொல்லும் வரை பொறுமையில்லாமல் அவனிடம் கேள்வி கேட்டாள் ரிதிகா.
“அரவிந்த்.. அந்தக் கோவிலிலும் அவர்கள் இல்லையா!?” என்று கண்கள் இடுங்கக் கேட்டாள் ரிதிகா.
சோர்ந்த முகத்துடன் ,”இல்லை ரித்தி… இந்தத் தீவின் நதிக்கு இந்தப் பக்கம் எங்குத் தேடியும் அவர்கள் இருப்பதற்கான அடையாளம் இல்லை. ஒரு வேளை நாம் கண்டது பிரமையோ என்று தோன்றவும் ஆரம்பித்துவிட்டது” என்றான் அரவிந்த்.
ஆம்.. அன்று குளிக்க சென்ற ஆதிரையும் அர்ஜூனும் அப்போது பொழிந்த மழைக்குப் பின் குகைக்குத் திரும்பவுமில்லை அவர்கள் எங்குச் சென்றார்கள் என்பதற்கான தடயமும் இல்லை. பாறையின் அருகில் ஆதிரை மயங்கிய போது ஓடி வந்த ருத்வி அவளின் நிலையை ரிதிகாவிடமும், அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த அரவிந்திடமும் சைகை மூலமாகச் சொல்லியது. அதனைக் கேட்ட மறுகணம் இருவரும் மெதுவாக அந்த அருவி இருக்கும் இடத்திற்குச் சென்றனர். ஆதிரையும் அர்ஜூனும் அங்கு இல்லை. சற்று தூரத்தில் மழை பொழிந்து கொண்டிருப்பதற்கான சப்தம் மட்டும் கேட்டது. எங்கென்று அவர்கள் அருகில் செல்வதற்குள் மழை பொழிவது நின்றது. ஆனால் மழை பொழிந்தபின் இருந்த மண் வாசமும் ஈரப்பதமும் அப்படியே இருந்தது. மழையினால் மயங்கி இருக்க வாய்ப்பிருக்குமென்று எண்ணியே அவர்கள் இருவரும் அங்குச் சென்றனர்.
இருந்தும் ‘அவர்கள் சிறுப் பிள்ளைகள் இல்லையே.. எங்குச் சென்றிருந்தாலும் விரைவில் வீடு வந்துவிடக் கூடும்’ என்று எண்ணி ஆதிரையுடன் அர்ஜூன் இருப்பதை ருத்வியிடம் மீண்டும் ஒருமுறை உறுதிச் செய்து கொண்டு இருவரும் குகை திரும்பினர். ஆனால் காலம் கடந்துக் கொண்டேச் சென்றது, அவர்கள் வருவந்தற்கான வழித்தடம் தெரியவில்லை. அவர்கள் வராததால் கவலையுற்ற அரவிந்த் மீண்டும் ரிதிகாவிடம் சொல்லிக் கொண்டு அவர்களை தேடிக் கொண்டு வெளியில் சென்றான். நதிக்கரையின் இந்தப் பக்கமுள்ள எல்லா காட்டுப் பகுதிகளையும் கடந்த நான்கு நாட்களில் தேடிவிட்டான். கடைசியாக இன்று அந்த குகைக் கோவிலுக்கும் சென்று பார்த்துவிட்டான். அங்குமில்லாததால் அரவிந்த் கொஞ்சம் பொறுமையை இழந்தும் தெரிந்தான்.
“அப்படி இருக்க வாய்ப்பே இல்லை அரவிந்த். நான்தான் ஆதிரையை வருவதற்காக குகைக் கோவிலில் இருந்த அந்த வெளிச்சத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டேனே. அது நிறைவேறுவதற்கு அடையாளமாக அந்த ஒளி ஒரு நொடி பிரகாசமாக எறிந்து மீண்டும் பழைய நிலையை அடைந்ததே!. நீங்க சொன்னபடி பார்த்தால் வேண்டிக் கொண்ட அடுத்த பௌர்ணமியில் வேண்டுதல் நிறைவேறுமனு சொன்னீங்க. அதன்படி நான் வேண்டிக் கொண்டது போன பௌர்ணமிக்கு முன்புதான். அப்போ ஆதிரை இங்கு வந்ததும் அவள் சொன்ன அவளைப் பற்றிய அத்தினை செய்திகளும் உண்மை இல்லாமல் போக வாய்ப்பில்லையே!” என்று ஒரு நீண்ட நெடிய மூச்சுடன் சொல்லி முடித்தாள் ரிதிகா.
“ம்ம்.. இது போல பிரட்சனைகளை எண்ணித்தான் நான் ஆதிரையைக் கூப்பிட வேண்டாம் என்றேன் ரித்தி. பார்.. இப்போது அவர்கள் உயிருடன் இருப்பதே தெரியவில்லை” என்றான் கவலையுடன்.
“எப்படி உங்களுக்கு பிரட்சனை வருவது முன்பே தெரியும். அப்பறம் அர்ஜூனும் ஆதிரையை விரும்புதாக ஆருடம் போல சொன்னீங்க அது எப்படி.? “ என்று கேட்டாள் ரித்கா..
“அது.. அந்தக் குகை கோவில் கல்வெட்டில் சொல்லியிருந்தது. நீ தான் நான் கல்வெட்டு ஓலைச்சுவடி என்றாலேகாதை மூடிக் கொள்வாயே. அதனால் அதுபற்றி உன்னிடம் நான் பேசுவதற்கில்லை” என்றான் அரவிந்த்.
“ஓ…” என்றவள் ஒரு நொடி தாமதித்து, “ என்னவென்று படித்தீர்கள்.. எனக்கு இப்போது சொல்ல முடியுமா?” என்று கேட்டாள் ரிதிகா.
“சரியாக நினைவில்லை. இந்தத் தீவினுள் கணவன் மனைவி இருவருமாகத்தான் நுழைய முடியும். அப்படி இல்லையென்றால் திருமணம் ஆகப் போகிறவர்கள் ஒன்றாக வரக் கூடுமென்றுதான் இருந்தது. அதை வைத்துத்தான், அவர்கள் ஒன்றாக வந்ததை வைத்து அதிய யுகித்து சொன்னேன். அதை எதற்கு இப்போது கேட்கிறாய்.?” என்றான் அரவிந்து
“அந்த ஆருடச் செய்தி போல ஆதிரையும் அர்ஜூனும் எங்கிருக்கிறார் என்றும் அதில் இருக்கலாம் அல்லவா? அதனால்தான்” என்றாள் ரிதிகா.
“எனக்கு அது குறித்து இருப்பதாக நினைவில்லை ரித்தி. ஒரு நிமிஷம் இரு. நான் எனக்கு ஒரு copy எழுதி வைத்திருந்தேன். அதை படித்துக் காட்டுகிறேன்.
அதனை எடுத்துப் படித்ததும், ரிதிகா, உத்ராவிற்கு ஒரு குரல் கொடுத்து அந்தக் கரடியை வரவைத்தாள். “அரவிந்த், ஆதிரையும் அர்ஜூனும் அந்தத் தீவில் தான் இருக்க வேண்டும் . இதோ இந்தக் குறிப்புகளை பல முறை படித்துவிட்டு அதன் முதல் எழுத்துகளை ஒன்றாக சேருங்க..” என்றாள் ரிதிகா.
அதனைப் பார்த்ததும் ஏதோ விடிவெள்ளியை பார்த்தது போல அரவிந்தின் முகம் மாறியது, “இது.. இது எனக்குத் தோன்றவில்லையே. Genious நீ..ஏய் ரித்தி பேசாம நீ என்னோடு அகல்வாரய்ச்சில சேர்ந்துக்கோ ..” என்று அந்தக் குறிப்புகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான் அரவிந்த்.
“அவசியம் ஏற்படும் போது எங்களுக்கும் இது போன்ற ஆராய்ச்சில ஆர்வம் வரும்…” என்று பெருமிதமாக புன்னகித்த வண்ணம் பேசினாள் ரிதிகா.
“அது சரி.. நான் உடனே கிளம்புகிறேன். உத்ரா நீயும் என்னுடன் வா.. அந்த மிருகங்களிடம் மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேர வேண்டுமே” என்று சொல்லிய வண்ணம் சில ஈட்டி, குத்து கத்தி போன்ற ஆயுதங்களுடன் ஏற்கனவே செய்து ஒளித்து வைத்திருந்த படகினை இன்னும் கொஞ்சம் சீரமைத்து விரைவாக அந்த நதியில் பயணத்தை தொடர்ந்தான்.
அரவிந்த் கிளம்பிய பின்பும் அரவிந்த எடுத்து வைத்திருந்த குறிப்புகளையே பார்த்திருந்த ரித்காவிற்கு , அரவிந்த் எழுதிய குறிப்புகளில் சிலது விடுபட்டிருப்பதாக உணர்வு உண்டாக ருத்வியுடன் , ஒரு சிறிய விளக்கினை பிடித்துக் கொண்டு அந்தக் குகை கோவிலுக்கு மெதுவாக நடந்து சென்றாள். ஒரு வேளை அரவிந்த் சீக்கிரம் வந்தால் பதற்றமடையாமல் இருக்க ஒரு சிறு குறிப்பினை அந்த மேஜையின் மீது எழுதி வைத்துவிட்டுக் கிளம்பினாள்.
இந்திரபிரதேஷில்(சிம்லாவில்)…
முதல் முறை அனுபவித்த குதிரை பயணத்தில் சேகருக்கு 10 வயது குறைந்தது போல உடல் கலகலத்தது. அவருக்கு அப்படியென்றால், குட்டி ராஜாவிற்குக் குதுகலத்தில் தலக்கால் புரியவில்லை. Cartoon –ல் மட்டுமே பார்த்திருந்த குதிரையை நேரில் பார்த்தவுடன், “டாஜா.. வரான். நிஜ குதிரல டாஜா வரான். வழி விவுங்க.. வழி விவுங்க…” என்று யாருமில்லாத காட்டில் கத்திக் கொண்டே வந்தான். அவனது சைகையையும் மழலை மறையாத கொஞ்சும் தமிழிலும் காதம்பரன் மற்றும் சேகர் மட்டுமல்லாமல் உடன் வந்திருந்த குதிரை செலுத்துபவர்களும் கூட சப்தமிட்டு சிரித்துக் கொண்டே வந்தனர். சேகருடனும் ராஜாவுடனும் குதிரைச் செலுத்த தெரிந்த ஒருவர் அமர்ந்திருந்தனர்.
இவ்வாறாக டெல்லியிலிருந்து காரில் ஏறிய காதம்பரனும் , சேகரும் ராஜாவுடன் சிம்லா அடைந்த பின் அங்கிருந்த இந்திரபிரதேசிற்கு சொந்தமான குதிரை லாயத்திலிருந்து குதிரைகள் மூலமாக இந்திர பிரதேஷ் வந்தடைந்தனர்.
முதல் முறையாக அந்தக் காட்டு பகுதிக்கு வந்த சேகர் குதிரை ஊருக்குள் போவதற்கு முன் மேட்டிலிருந்து பிரமிப்பாக இந்திரபிரதேஷை பார்த்தார். எல்லாம் மரத்தால் கட்டப்பட்ட வீடுகள். சில வீடுகள் மரத்தின் கிளைகள் மீதும் இருந்தது. மண் சாலைதான் என்ற போதும் அதிக புழுதி இல்லாமல் இருந்தது. பொதுவில் நடக்கும் பாதைகளாகவும் வீட்டுக்கு வீடு கொஞ்சம் இடைவெளியுடனும் இருந்தது. அது மாலைப் பொழுது என்பதால் குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். சில அங்கிருந்த அம்மிக்கல்லில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு ஏதோ 70s படம் பார்ப்பது போல் தெரிந்தது. இல்லை அதைவிடவும் பழமையானது. அங்கிருந்த வீடுகளையெல்லாம் சிறியதாக்கி காட்டிய வண்ணம் தெரிந்தது ஒரு பெரிய வீடு. ஒருவேளை அரண்மனையோ!. எதுவோ அதுதான் கஜேந்திரனின் வீடாக இருக்க வேண்டும். அந்த வீட்டிற்கு அருகில் ஒரு பெரிய குதிரைலாயமும் , மாட்டுத் தொழுவமும் இருந்தது.
இவ்வளவு பெரிய ஊரில் கழிவுகளை எப்படிப் பதப்படுத்துகிறார்கள் என்பதற்கென்ப ஊரிலிருந்து சற்று தொலைவில் இரு பெரிய குப்பை கிடங்கு இருந்தது. எப்படியும் எல்லாம் மக்கும் குப்பைகள் என்பதால் அவற்றைப் போட்டு பதப்படுத்திக் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மண்ணாகிய நிலையில் உரமாகப் பயன்படுத்துகிறார்கள் போல. ஒன்று அறைகுறையாக மக்கியும் மற்றொன்று புதிய குப்பைகளாகவும் தெரிந்தது.
இவ்வாறாக சேகரின் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க ராஜா அதற்குள் களைத்துபோய் தூங்கிக் கொண்டிருந்தான். கடைசியில் அவர்கள் கஜேந்திரனின் வீட்டுக்குள் சென்றனர். அவர்களது வருகைக்காக காத்திருந்தது போல இருந்த சிவசக்தி பாட்டி, “வாங்க… வாங்க” என்று தன் மடியில் அழுகையும் கோபமுமாக இருந்த அஸ்மிதாவை இறக்கி அந்த மூங்கில் மர நாற்காலியில் அமர வைத்துவிட்டு வந்தார்.
அஸ்மிதாவின் அழுகையில் கண்விழித்த ராஜா, அவளை இமைக்காமல் பார்த்தான். அர்ஜூனை காணாமல் தவித்துக் கொண்டிருந்த அஸ்மிதாவிற்கு ராஜாவைப் பார்த்ததும் ஏனோ அர்ஜூன் நினைவு வந்தது. அவளையும் அறியாமல் அவளது அழுகை குறைந்து நின்றது. ராஜாவை நேராக நோக்கினாள்.