super
வியப்பினால் உயர்ந்த அவர்களின் புருவம் இன்னும் இறங்கவில்லை. சிறிது நேரத்தில் அந்தத் தீவு நீரினுள் நகர்வது நின்றது. அவர்கள் இன்னும் கடலின் மேற்பரப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். நிலவின் ஒளி நீரில் மூழ்கிய நிலையிலும் மங்கவில்லை. அவ்வளவு பெரிய தீவே நீரில் மூழ்கியிருக்கிறது. இருந்த போதும் அதற்கான எந்த மாற்றமும் , கடலின் மேற்பரப்பில் தெரியவில்லை.
அர்ஜூன் மிகவும் குழப்பத்துடன் நின்று வானத்தை நோக்கி , இல்லை இல்லை கடலின் மேற்பரப்பை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான். phone – ல் இருந்த கொஞ்ச நஞ்ச signal – ம் விட்டுப் போயிருந்தது. சுற்றிப் பார்த்தால் , காற்று குமிழ் என்பதற்கு மேல் , ஒரு கண்ணாடி குமிழ் என்றே சொல்லலாம். ஏதோ aquarium பார்ப்பது போல கடல் நீரில் மீன்கள் நீந்துவது தெளிவாக தெரிந்தது. என்ன aquarium -ல் மீன்கள் கண்ணாடி குடுவையில் இருக்கும் , ஆனால் இங்கு ஒரு தீவே கண்ணாடி குடுவையில் இருக்கிறது.’ என்று கற்பனையினால் புன்னகித்தான். ' இப்படி நீரில் மூழ்குவதால்தான் இப்படி ஒரு தீவு இருப்பதே இத்தனை நாள் தெரியவில்லையா!. ஒருவேளை இது தீடிரென்று உருவான தீவா!. வாய்ப்பே இல்லை. தீவு உருவாக எரிமலையே மிகப் பெரிய காரணம். எரிமலை சென்னை கடற்கரைக்கு மிக அருகிலிருந்தால் கண்டிப்பாக கேப்டன் சொல்லியிருப்பாரே! இது ஏதோ மாயவித்தை போல இருக்கிறது' என்று பலவாறு எண்ணி அர்ஜூன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஆதிரை மெதுவாகப் படகிலிருந்து இறங்கி, முன்பு அந்தத் தீவில் கடற்கரை இருந்த இடத்தை நோக்கிச் சென்றாள். 'ஒருவேளை இந்தக் காற்று குமிழ் கை பட்டால் உடையக் கூடுமோ! அப்படி உடைந்தால் இந்தத் தீவு மீண்டும் கடல் பரப்பிற்கு மேலே போக கூடுமோ! முட்டாள்தனமாக இருக்கிறது' என்று தனக்குள் சிரித்துக் கொண்ட போதும், ‘ஆனால் இங்கு நடப்பது எதுவும் சாதாரணமாக தோன்றவில்லை. எல்லாம் மாயம் போல இருக்கிறதே! எங்கோ வந்து வசமாக மாட்டிக் கொண்டோமே!’ என்று கலங்கினாள். பின் ‘100 -ல் ஒரு பங்கு நாம் தொட்டால் காற்று குமிழ் உடைந்து, தீவு மீண்டும் மேலே செல்ல முடிந்தால் நல்லாயிருக்குமே! முயன்று பார்ப்போம்’ என்று விரைந்து தீவின் நிலப்பரப்போடு ஓட்டியபடி தென்பட்ட குமிழின் சுவரை தொடச் சென்றாள்.
அப்போது 'ஆதிரை...’ என்று அசரீரி ஒலித்தது. மீண்டும் மீண்டும் ஒலித்தது.
விக்கித்து நின்றாள் ஆதிரை. ஆதிரைக்கு எல்லாம் நினைவு வந்தது. 'வசியம் போல இந்தக் குரல், இந்தக் குரல் கேட்ட போதுதான் என் நிலை மறந்தேன்' என்று அறிந்த அந்த வினாடி அர்ஜூனிடம் தாவி குதித்துக் கொண்டு போய் ஒட்டி நின்றாள் ஆதிரை.
“ சார் சார்..” என்று குரலில் நடுக்கத்துடன், “ எனக்குப் பயமாக இருக்கிறது சார். இது… இதுதான். இந்தக் குரல் தான் சார். உங்களுக்கு கேட்கிறதா!” என்றாள் ஆதிரை.
"என்ன குரல் ஆதிரை. எனக்கு ஏதும் கேட்கவில்லையே!” என்றான் அர்ஜூன்.
"இதுதான் சார். இந்தக் குரல்தான் சார், என்னைச் சென்னை கடற்கரையிலிருந்து அழைத்து இங்கே இந்தத் தீவில் விட்டுச் சென்றது இந்தக் குரல் தான் சார். என்னை விட்டுவிட்டாதீங்க சார். மீண்டும் இந்தக் குரல் வேறு இக்கட்டான சூழலில் என்னை இழுத்துச் சென்றுவிட போகிறது" என்று நடுக்கத்துடனே சொன்னாள் ஆதிரை. கண்களில் அச்சத்தையும், காதுகளை அசரீரி கேட்கும் போதெல்லாம் மூடிக் கொண்டும் பேசினாள்.
நம் கண்ணுக்கு தெரியக் கூடியவற்றை, அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் எந்த அச்சமும் இல்லாமல் , தைரியமாகச் சமாளிக்க முடிகிறது. அதுவே நம் கை மீறி நமக்குப் புரியாமல் போகும் போது, அச்சம் பற்றிக் கொண்டு செய்வதறியமால் போகிறது. ஆதிரையின் சூழலும் இப்போது அப்படியே. வாழ்க்கையின் நேரிடையான எல்லா பிரட்சனைகளையும் சமாளித்த ஆதிரையால், அவளை மீறி நடக்கும் இவற்றைக் கண்டு அச்சமும் , குழப்பமும் மட்டுமே உணர முடிந்தது. இதிலிருந்து மீள, இப்போது அவள் எதிரில் தெரியும் அவளது கடுவன் பூனையைத் தவிர வேறெதுவும் துணையில்லாமல் போனது. அவனைப் பற்ற தற்போது உண்டான நல்லெண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால்தான் என்னமோ, ஆதிரை அவளையும் அறியாமல் அன்னியன் என்றபோதும் , அர்ஜூனின் கைகளை தோட்பட்டை வரை இறுகப் பிடித்த வண்ணம் உடல் நடுங்க பேசிக் கொண்டிருந்தாள்.
ஆதிரையை இப்படி பார்த்தறியாத அர்ஜூன், “ஏ.. என்னமா. எதற்குப் பயம். நான்தான் உன் உடன் இருக்கிறேனே!. உன்னை யாரெனும் இழுத்துச் செல்ல விட்டுவிடுவேனா!. பயப்படாதே ஆதி" என்று அவள் தலையை வருடினான். ஆதிரை அர்ஜூனை பற்றியதும், அசரீரி கேட்பது நின்றுவிட்டது.
அவன் தலை வருடல் ஏதோ இதம் தரவதாலோ , இல்லை அசரீரி நின்றதாலோ, ஆதிரை அப்படியே அவனது தோள் மீதே சாய்ந்த வண்ணம் சில நிமிடங்களில் கொஞ்சம் அமைதியானாள். அவள் அமைதியானதும் ,” ஆதிரை , வா முதலில் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு எப்படி இங்கிருந்து கிளம்பலாமென்று யோசிக்கலாம்" என்றான் அர்ஜூன்.
அவன் குரலில், “ம்ம்.. “ என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆதிரை. அந்தப் பார்வையில் அர்ஜூன் ஒரு நொடி விக்கித்து போனான். ஆதிரை அழகான பெண் என்றதற்கு மேல் வேறெதுவும் அவன் உணர்ந்ததில்லை. ஆனால் இவ்வளவு அருகில் ஆதிரையின் அழகினில் அவன் மயங்கிதான் போனான் போல. அவளது விழிகள் பால் மனம் பாராமல் இருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. 'இவள். இவள் எப்படி ஒரு குழந்தையின் தாயாக இருக்க முடியும். அவள். அவள் கண்களில் எந்த வித களங்கமும் தெரியவில்லையே! என் அஸ்மிதாவின் கண்களைப் போல ஒரு மாற்றமும் இல்லையே! ’ என்று சில வினாடிகள் அவள் கண்களையே பார்த்தவன் அவன் வசம் இழக்கும் முன் 'என்ன காரியம் செய்கிறோம்' என்று சட்டென வேறுபுறம் திரும்பினான்.
அவனின் இந்த மன போராட்டம் எதுவும் அறியாமல் , ஆதிரை, “ சாப்பாடா சார். எங்குப் போவது உணவிற்கு. நாம் இருப்பதோ காட்டில்" என்று அவனைப் பிடித்திருந்த கைப்பிடியைத் தளர்த்திய போதும் அவனை விட்டாளில்லை. முன் அவன் சொல்லி அவன் கையை பிடித்துக் கொண்டிருந்தவள், இப்போது அவன் கையைவிட்டால் எங்கே அந்த அசரீரி மீண்டும் கேட்குமோ என்று அவன் கையை விடவேயில்லை.
அவள் பேசுவதற்கு எடுத்துக் கொண்ட கால நேரத்தில் அர்ஜூன் ஓரளவு சமாளித்தான். பின் அவள் கேள்விக்கு பதிலாக, “ இந்தப் படகில் எப்போதும் சப்பிட bread -jam இருக்கும் , சில biscuits -ம் இருக்கும். கொஞ்சம் குடி நீரும், முதலுதவி பெட்டியும் இருக்கும். அதனோடு life jacket , படகு ஓட்ட extra -petrol , torch light இருக்கும். இதெல்லாம் எனக்குத் தெரிந்து எங்கள் எல்லாப் படகிலும் இருக்கும். இவையில்லாமல் வேறேதேனும் இருக்கிறதா, என்று நாளை ஆராய்ந்து பார்க்கலாம். அவற்றைக் கொண்டு கடல் மேற்பரப்பினை அடைய முடிகிறதா, என்று பார்ப்போம். இப்போது வா சாப்பிடலாம். காலியான வயிறு இருக்கும் தைரியத்தையும் தின்றுவிடுமென்று என் அக்கா அடிக்கடி சொல்வாங்க. அதனால் சப்பிட்டுவிட்டு மேலும் என்ன செய்யலாமென்று யோசிக்கலாம்.” என்று கோர்வையாக சொல்லிக் கொண்டே அந்தப் படகின் சின்ன அறைக்குள் நடந்தான். சிறிது இருட்டிய போதும் , படகினை start செய்து அதனால் உண்டான current power கொண்டு, அந்த அறையிலிருந்த பல்பை ஒளிர விட்டான்.
அவனைத் தொடர்ந்து நடந்த ஆதிரை “ஓ… உங்க அக்காவா!. உங்க அக்கா பெயர்தான் அஸ்மிதாவா!” என்று கேட்டாள்.
அஸ்மிதாவின் பெயர் கேட்டதும் , அவள்புரம் திரும்பிய அர்ஜூன், “அஸ்மிதாவை உனக்கு எப்படித் தெரியும். அதனோடு அஸ்மிதா எப்படி என் அக்காவாக முடியும்" என்று புன்னகித்தான்.
“ஓ.. “ என்றாள் ஆதிரை. “ஓ… இல்லை. ஆமா, அம்முதான் என் அக்கா! அஸ்மிதா இல்லை. இந்தா சாப்பிடு" என்று ரொட்டி துண்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அதனை கொறித்தபடியே, ‘அஸ்மிதா இந்தக் கடுவன் பூனையின் அக்காயில்லை. பின் யார்? அதற்கு இவன் பதிலே சொல்லவில்லையே!’ என்று நினைத்தாள்.
‘அஸ்மிதா! யாராக இருக்கும் !!'