Very Good.. Suspense double goodView attachment 10933
ப்ரீத்தி குறித்து வித்யாவிற்கு சீக்கிரமே தெரிந்து விடும் என்று சங்கரன் கூறவும் 'தெரியட்டுமேப்பா அதனால என்ன..??' என்றான் தேவ்...
'தேவ் என்ன பேசுற..?'
'சரியா தான்பா பேசுறேன்' என்று அவன் கூறவும் திகைத்து போனார் சங்கரன்.
'இது என்ன உளறல் தேவ்..!! ஒழுங்கா ப்ரீத்தி கிட்ட பேசு இல்ல நிச்சயம் ப்ரீத்தி உங்க அம்மாகிட்ட மாட்டிக்க வாய்ப்பு இருக்கு' என்று பதறிட,
அவனோ வெகு நிதானமாக 'மாட்டட்டும்' என்றான் சிறு அலட்சியத்துடன்
'தேவ்'
'எஸ்ப்பா'
"தேவ் உனக்கு மூளை கெட்டு போச்சா..??"
"என்னப்பா இப்படி கேட்குறீங்க இதுக்கு நான் என்ன பதில் சொல்ல..??"
"ப்ச் தேவ் உனக்கு நிஜமா புரியலையாடா ..??" என்று கேட்ட மனிதருக்கு அத்தனை அங்கலாய்ப்பு..!!
"என்னப்பா புரியணும்..??"
"மருமகள் மாட்டினா உன் அம்மாகிட்ட நீயும் தான் மாட்டுவ"
"சோ வாட்..??"
"என்னது சோ வாட்டா..??" என்று திகைத்து போனவர், 'தேவ்' என்றார் கோபமாக
அவர் கோபத்தை உணர்ந்தவன், "ப்பா... அப்பாஆ நீங்க இவ்ளோ பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்ல சொன்னா புரிஞ்சிகோங்க" என்றான் இலகுவாக
"என்னடா புரிஞ்சிக்கணும்" என்று அவர் குரல் உயர்த்த
'பொய் ரொம்ப நாளைக்கு நிற்காதுப்பா.., நானும் ஒரு பொய்யான வாழ்க்கைக்கு தயாரா இல்லை'
"தேவ்..!!"
"அப்பா My wife is not a born criminal just born to a criminal and turned so for few years just because of him" என்றிட,
"தேவ்..!!"
"ஆமாப்பா என் வைப் ஒரு கிரிமினலுக்கு பிறந்தவ தானே தவிர அவ பிறக்கும் போதே கிரிமினல் கிடையாது அவ கொஞ்ச காலம் அப்படி இருந்திருக்கலாம் ஆனா அதுக்கும் காரணம் அந்த கிரிமினல் தான் புரியுதா..??" என்று கேட்க,
"எனக்கு புரியுது கண்ணா அதனால தான் மருமகளை ஏத்துக்க முடிஞ்சது"
"அம்மாக்கும் புரியும்பா சீக்கிரம் ப்ரீத்தியை ஏத்துப்பாங்க..!!"
'ஆனா ஏன் ப்ரீத்தியை... அப்போ நீ..??' என்றவர் கேள்வி முடியும் முன்னமே,
"அப்பா ப்ரீத்தியோட இயல்புல அவ இருக்கப்போ ரொம்ப ஈசியா என் வைப் உங்க வைப் கிட்ட மாட்டிப்பான்னு தெரிஞ்சிதான் விட்டுட்டு வந்தேன்" என்று கூற,
அதில் மேலும் அதிர்ந்தவர் 'தேவ் நீ பேசுறது எதுவும் எனக்கு சரியா படலை, உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க எதுவா இருந்தாலும் சொல்லு ஆனா இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் கண்ணா ப்ரீத்தி மாட்டினா அப்புறம் ..,' என்றவருக்கு எப்படி மகனுக்கு புரிய வைப்பது என்ற தவிப்பு..!!
மறுபுறம் அவன் அமைதியாக இருக்கவும், 'தேவ் நீ செய்தது சாதாரண தப்பு இல்லை உன் அம்மாக்கு தெரிஞ்சா நிச்சயம் உன்னை மன்னிக்க மாட்டா..!!'
"என் அம்மாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்ப்பா..!! இன்பாக்ட் அன்னைக்கு ஐவிஎப் பண்ணும் முன்னாடி என் மனசுல வந்து நின்னது அம்மாவோட முகம் தான்பா" என்று கூற,
'தேவ்' என்று அதிர்ந்தவருக்கு மகனின் கணக்குகளை கணிக்க முடியாத குழப்பம்,
"ஆனா அன்னைக்கு அத்தையை கன்வின்ஸ் பண்ண முடிஞ்ச என்னால நிச்சயமா.." என்றவன் பேச்சை நிறுத்தி மூச்சை ஆழ இழுத்து விட்டு "அம்மாவை மீறி இதுவரை எதுவும் செய்ததில்லை ஆனா நான் கேட்டு அம்மா மறுத்து அதன் பிறகு நான் அதை மீறி..ப்ச் ப்ச் இல்லப்பா என்னால முடிஞ்சிருக்காது அதான்.." என்று தலை கோதியவன்,
"ப்ரீத்தி பத்தி அத்தைக்கு தெரியும் ஆனா அம்மாக்கு தெரியாது இல்லயா" என்று விண்டு போன மனதுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மகன் பேசுவதிலேயே அவன் நிலையை உணர்ந்தவர்,
"தேவ் அம்மாவ இழக்க போறியா..??" என்று நேரிடியாக விஷயத்திற்கு வர,
"என்னால ப்ரீத்தியையும் இழக்க முடியாதுப்பா ..!!" என்று உடனே பதில் வந்தது.
"தேவ்..!!"
"அம்மா, ப்ரீத்தி ரெண்டு பெரும் என்னோட இரண்டு கண்கள் ஒண்ணுக்காக இன்னொன்னை இழக்கமாட்டேன் புரிஞ்சிக்கோங்கபா அவங்க மூலமா பார்வை இன்னும் அழகாகும்" என்று கூற,
மகனின் நிலை புரிந்தவரும் "அப்புறம் ஏன் தேவ்..?? எதுக்கு இப்படி செய்யற ..?? எனக்கு என்னமோ நீ ரொம்ப அவசரபடர மாதிரி தோணுதுடா... நீ இங்க வா நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம் " என்றவரின் குரலில் ஏகத்திற்கும் வருத்தம்
அவனோ அவர் கேள்விக்கு பதிலலிக்காமல் "ஆமா நான் ப்ரீத்தியை அங்க விட்டுட்டு வந்ததை பத்தி நீங்க என்ன நெனச்சீங்க..??" என்றான்
"இதுல நினைக்க என்ன இருக்கு உன் அம்மாக்கும் மருமகளுக்கும் நல்ல புரிதல் வந்து ப்ரீத்தி இங்க எல்லாரோடும் இணக்கமா இருக்கனும்ன்னு தானே..??" என்று கேட்க,
'இல்லைப்பா'
'வேற என்ன..??'
"அம்மா ப்ரீத்தியை யார்ன்னு தெரிஞ்சிக்கணும் அதுக்காகத்தான்"
"என்ன உளறல் இது தேவ்..??"
'உளறல் இல்லைப்பா நிஜம்'
"தேவ் உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி மாத்தி பேசுற உங்க அம்மாக்கு தெரியணும்ன்னு சொல்றவன் அப்புறம் ஏன்டா முதல்ல அம்மாக்கிட்ட சொல்லாம மறைக்க சொன்ன..?? என்று நெற்றியை பிடித்து கொண்டு தேவ் நீ என்னை குழப்புற..??" என்று பெருமூச்சு எடுத்துவிட்டவருக்கு மகனின் போக்கில் சுத்தமாக உடன்பாடு இல்லை.
மனைவிக்கு தெரியவருகையில் மிகப்பெரிய பிரளயமே வெடித்து அது நிச்சயம் மகனுக்கு பாதகமாக முடியும் என்பதை அறிந்திருந்தவருக்கு மகனின் அறிவீனமான செயலில் ஏகப்பட்ட ஆத்திரம்.
"இல்லை எனக்கு ஏதோ சரியா படலை நான் உடனே போய் மருமகள் கிட்ட பேசுறேன்" என்றார்.
"நோப்பா..! ஸ்டாப்..!! டோன்ட் எவர் தின்க் அபவுட் இட் அப்புறம்.. அப்புறம்..." என்று அவன் நிறுத்த,
"என்ன மிரட்டலா..??"
"நீங்க எப்படி எடுத்துகிட்டாலும் சரி பட் இட்ஸ் அ ப்ராமிஸ் ஆன் மீ நீங்க ப்ரீத்தி கிட்ட எதுவும் பேசகூடாது" என்றான் உறுதியான குரலில்
மகனின் உறுதி புரிந்தவரும் தோய்ந்து போய் அமர்ந்து, "தேவ் உன் பேச்சு எனக்கு ரொம்ப பயத்தை கொடுக்குதுடா.. ப்ளீஸ் கண்ணா... நீ நிதானமா யோசிக்கலாமே" என்று தந்தையாக முடிந்த வரை அவனை வழிக்கு கொண்டு வர அவர் முயற்சிக்க,
பின்னங்கழுத்தை வருடியவனுக்குள்ளும் பெரும் புயல் மையல் கொள்ள "விபரீதம் தெரியாம ஒரு விஷயத்தை செய்ய நான் ஒன்னும் குழந்தை இல்லப்பா... பலகட்டமா யோசிச்ச பிறகு தான் ஒவ்வொன்னையும் நிதானமா செய்திட்டு இருக்கேன்"
'கண்ணா'
"நீங்க எதை பத்தியும் கவலை படாம இருங்க..!! எது நடக்குதோ அது நடக்கட்டும் எதையும் தடுக்க நினைக்காதீங்க நடப்பவை எல்லாம் நன்மைக்கே..!! நிச்சயம் நல்லது தான் நடக்கும் அதை புரிஞ்சிக்க முதல்ல என்னை நம்புங்க" என்றான்.
மகனின் பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் பொதிந்திருப்பது வரை அத்தந்தைக்கு புரிந்தாலும் என்ன என்று அறிய முடியாமல் தவித்த மனிதர், "அந்த நல்லது உனக்கு நடக்குமா..??" என்றார்
கனத்த அமைதி விஷ்வாவிடம்
"ஏன் அமைதியாகிட்ட பேசு தேவ்"
சில நிமிடங்களுக்கு பின் கரகரத்த குரலை செருமிக்கொண்டே, 'நல்லது நடக்கும்பா அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்' என்றான்.
அதை கேட்ட சங்கரனுக்கு மனம் நிலைகொள்ளாமல் தவிக்க "எது நடந்தாலும் எனக்கு நீ முக்கியம் தேவ்..!! யு ஆர் மை எவரிதிங்" என்று தன் ஒட்டுமொத்த அன்பையும் ஒற்றை வாக்கியத்தில் தேக்கிட,
தந்தையின் மெய்யன்பில் சிலிர்த்தவன் புன்னகையுடன் "லவ் யூப்பா..!! மிஸ் யூ..!!" என்று கைபேசியை அணைத்து விட்டு மெத்தையில் விழுந்தவன் விழி மூடாமல் சில நொடிகள் விட்டத்தை வெறித்து பின் மீண்டும் கைபேசியை எடுத்து, 'போர்ட்டி எயிட் டேஸ் மோர் டார்லிங்' என்று ப்ரீத்திக்கு அனுப்பியவன் அதை மூட போக அவன் கண்ணில் வால்பேப்பராக இருந்த ப்ரீத்தியின் புன்னகை முகம் விழுந்தது.
அதை கண்டவனின் முகம் இத்தனை நேரம் கொண்டிருந்த இறுக்கம் களைத்திட இதழ்களோ தாமாகவே அவள் நினைவில் மீண்டும்,
"பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா..??
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா..??
நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு
பூக்களுக்கு நீயே வாசமடி..!!
புன்னகைக்கு நீயே தேசமடி..!!
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே... "
கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் ஊடுருவிய ப்ரீத்தியை ரசித்து கொண்டே பாடலை தொடர்ந்திருந்தான்.
**
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கடந்திருக்க சேலத்தில் இருந்த ப்ரீத்தியிடம் பல மாற்றம்..!! ஆம் இப்போதெல்லாம் தினமும் அவள் அன்றாட நாட்கள் காலை ஏழு மணியளவில் தோட்டத்தில் வசுந்தராதேவியுடனான நடைபயிற்சியுடன் தொடங்கும். அவருடன் இணைந்து பழங்கதைகளை பேசுபவளை வசுந்தரா தேவிக்கு பேரன் மனைவி என்பதை தாண்டி ப்ரீத்தியை அவள் அனுசரணையான குணத்திற்க்காகவே மிகவும் பிடித்து விட்டது.
இன்றுமே வீட்டில் அவர் பேச்சிற்கு மரியாதை உண்டு என்றாலும் பெரும்பாலும் மகனோ மருமகளோ முக்கிய முடிவுகளை ஆலோசிக்க, உடல் நலன் விசாரிக்க, அவர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே பேசும் நிலையில் அவருக்காக அவருடன் அமர்ந்து பேசிய நாட்கள் வெகு சொற்பமே..!! ஆம் இன்னுமே பல வீடுகளில் வயது முதிர்ந்தவர்கள் எதிர்பார்ப்பது தங்கள் பேச்சை காது கொடுத்து கேட்க ஒரு உற்ற துணையை தான். பெரும்பாலும் வயோதிகத்துடன் போராடி மாத்திரை, மருந்து என்று வெறுத்து போயிருப்பவர்களுக்கு வேளாவேளைக்கு உணவும் மற்ற தேவைகள் கிடைத்தாலும் பெரும்பாலும் பேச்சு துணை என்பது அமையபெறாது.
வர்ஷினி, தேவ், ஆகாஷையும் குறை சொல்ல முடியாது படிப்பு வேலை என்று இருக்கும் பிள்ளைகள் அவரிடம் தினமும் நேரம் செலவிடுவார்கள் என்றாலும் அதுவும் அவர் உடல் நலன் அல்லது சில நேரம் ஆலோசனை அல்லது ஏதேனும் சந்தேகம் என்ற வகையிலேயே நின்று விடும்...
ஆனால் ப்ரீத்தி அவர் தேவை உணர்ந்து காலை மாலை நடைபயிற்சியின் போது அவர் கணவர் விஷ்வநாதன் தொடங்கி சிவசங்கரன், பார்வதி, சௌமியின் தந்தை, வித்யா, விஷ்வா என்று அனைவரை பற்றியும் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் பிரீத்தியிடம் ஒருவித பூரிப்புடன் பகிர்ந்து கொள்பவரின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்டுக்கொள்பவள் அதன் பின்பும் குழந்தை உறங்கும் போதெல்லாம் அவர் அறைக்கு சென்று மகாபாரதம்,ராமாயணம் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மை குறித்தும் விவாதிக்க வசுந்தராவிற்கு நேரம் அத்தனை இனிமையாக நகரும்.
அவருடன் நேரம் செலவிட தொடங்கி விட்டதில் ப்ரீத்தி வசுந்தராவின் உற்ற துணையாகி போனாள். சிவசங்கரன் முதற்கொண்டு வர்ஷினி வரை அனைவரும் காலையே கிளம்பிவிடும் நிலையில் ப்ரீத்திக்குமே அவருடனான பேச்சுக்கள் இதம் அளித்தது.
அதன் பின் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்து அவனுடன் கழிப்பவள் வீட்டினர் அனைவருக்கு காலை உணவை அவள் கையாலேயே பரிமாற தொடங்கி இருந்தாள்.
ஆம் எப்போதும் சோம்பி இருக்க பிடிக்காத ப்ரீத்திக்கு குழந்தையின் பொருட்டு முழு ஓய்வு என்று அவளை அறையோடு கட்டிபோட்டு இருப்பதை அறவே வெறுத்தாள். பின்னே முன்னர் தான் அவளும் தாயும் மட்டுமேயாக தனித்து இருந்தவள் அதன் பின் பிரகாசத்தின் வீட்டிலும் அறையோடு அடைந்து கிடந்து என்று தனிமையை முற்றிலுமாக வெறுப்பவள். பள்ளி, கல்லூரி காலங்களில் ப்ரீத்தி இருக்கும் இடம் என்றுமே களைகட்டி கொண்டு இருக்கும் நன்கு படிப்பவள் என்பதால் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உதவும் குணம் கொண்டவள் என்பதால் எப்போதுமே ப்ரீத்தியை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.
இங்கு இத்தனை சொந்தங்கள் மத்தியிலும் குழந்தையை சாக்கிட்டு அறையோடு அடைந்து கிடப்பதில் அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. அதனால் இங்கு வந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு சமைக்கலாம் என்று செல்ல வசுந்தரா தேவி பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
பிரசவித்த தாய்க்கு முழு ஓய்வு அவசியம் எதுவானாலும் மூன்று மாதத்திற்கு பிறகு செய் என்று அனுமதித்தவர் அவளின் பல கட்ட கெஞ்சல்களுக்கு பிறகே உணவை பரிமாறுவதற்கு ஒப்புகொண்டார். வித்யா ப்ரீத்தியுடன் சகஜமாக உரையாடாவிட்டாலும் அவர் பார்வை என்றும் போல் அவள் பின்னே அவள் பேச்சு, செயல், பழகும் விதம் என்று அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தது.
தினமும் காலை விஷ்வாவின் மெசேஜ் தவிர்த்து வேறு எந்த தொந்தரவும் இல்லாத ப்ரீத்தி அவன் வீட்டில் ஒரு அங்கமாக அத்தனை அழகாக தன்னை பொருந்தி இருந்தாள். பெரும்பாலான நேரம் குழந்தையை கவனித்து கொள்ள பட்டம்மாள் அவளுக்கு உதவுவதால் இப்போது எல்லாம் வசுந்தராவின் பிசியோ ப்ரீத்தியின் பொறுப்பாகி போனது. என்னதான் அப்பாடத்தில் அவள் தனிப்பட்ட முறையில் சிறப்பு பெறவில்லை என்றாலும் அதன் அடிப்படைகளை மிக தெளிவாகவே கற்று வைத்திருந்தாள்.
அதற்கு காரணமும் பிரகாசம் தான்..!!
ஒருவனை அழிப்பதற்காக அவள் தேடி தேடி படித்து கற்றவை அனைத்தும் அவளறியாமலே இப்போது ஆக்கபூர்வமான திசையில் பயன்படுத்தபட்டு கொண்டிருக்கிறது.
சிவசங்கரன் மருத்துவமனையில் இருந்து வந்ததுமே குளித்து முடித்து பேரனை தேடி வந்துவிடுபவர் அவனை கொஞ்சிகொண்டே பிரீத்தியிடம் அரை மணி நேரம் போல மருத்துவமனை தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வார். முதலில் இதையெல்லாம் ஏன் தன்னிடம் கூறுகிறார் என்ற கேள்வி அவளுக்கு எழுந்தாலும் அவர் பேச பேச தான் அனைத்தையும் தன் மகனின் மனைவி மட்டுமல்ல அவர் வீட்டின் மருமகளான அவளுக்கு தெரிய வேண்டியதை தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதே புரிந்தது.
முதல் நாளே தன்னை வித்யாவின் கேள்வி கணைகளில் இருந்து காப்பாற்றிய ஆகாஷுடன் அண்ணி, கொழுந்தன் என்ற உறவையும் தாண்டி ப்ரீத்திக்கு அவனுடன் அழகான நட்பு உருவாகி இருந்தது.
அது தினமும் இரவு அல்லது பகல் வேளை உணவை (அவன் ஷிப்ட்டிற்கு ஏற்ப) முடித்த பின்பும் உணவு மேஜையிலும் தோட்டத்திலும் அவர்களின் உரையாடல் நீண்டு கொண்டே போகும். இயல்பிலேயே மருத்துவத்தின் மீது ஆர்வம் கொண்ட ப்ரீத்திக்கு ஆகாஷ் சந்திக்கும் கேஸ் அல்லது மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை அதன் சிக்கல்கள் குறித்து பேச தொடங்க அவர்களின் பேச்சு நேரம் போவதே தெரியாமல் நீளும்.
இதற்கிடையில் பல நேரம் கீர்த்தி குறித்த நினைவும் அவளுக்கு எழாமல் இல்லை..!! என்ன ஒன்று இதற்கு மேலும் அவளுக்கு நல்லது நினைத்து கூட அவள் வாழ்வில் ப்ரீத்தி தலையிடாமல் இருப்பதே அவளுக்கு செய்ய கூடிய ஆக சிறந்த உதவியாக இருக்கும் என்பதை புரிந்து மனதார தினமும் தங்கையின் வாழ்வு சிறக்க வேண்டுவதோடு நிறுத்தி கொள்வாள்.
ஒருவேளை கீர்த்தி குறித்த தவிப்பு அவளுக்கு அதிகமாக ஏற்பட்டால் எழிலிடம் அவள் குறித்து விசாரித்து கொள்பவளுக்கு அலரிடம் பேச பயம்..!!
ஆம் இருக்காதா பின்னே..!! பிரகாசத்தை ஆட்டி படைத்த ப்ரீத்திக்கே குழந்தையின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி அரண்டு போக வைத்தவள் அல்லவா..!! எங்கே அவள் ஒன்று கேட்க போய் சரணுக்காக கோபப்பட்டு அலர் தன்னை திட்டி விடுவாளோ என்ற பயத்தில் அலரிடம் கீர்த்தி குறித்து பேச தயக்கம் அதனால் பேசும் போது பொதுவான நலன் விசாரிப்புடன் நிறுத்திக்கொள்வாள். அதுவும் நாதன் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் காலையும் மாலையும் அவருக்கு அழைத்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருந்தாள்.
என்னதான் ஒரு தாய் வாயிற்று பிள்ளைகளாக இல்லாமல் போனாலும் சௌமி மற்றும் வர்ஷினியின் பிணைப்பை அந்த இரு தினங்களில் கண்முன்னே கண்டவளுக்கு நெஞ்சம் தவித்து போனது.. அக்காள் தங்கை உறவின் அழகும் அருமையும் கண்டவளுக்கு அதன் அருமை புரியாமல் தன் தங்கைக்கு தானே தீங்கிழைக்கும் அளவிற்கு நிலை தாழ்ந்து போனோமே என்று தன்னை குறித்தே அருவெறுப்பு மேலிட்டது.
தான் ஏன் தன் உடன் பிறந்தவளுடன் இத்தகைய பிணைப்பை கொள்ளாமல் போனோம்..?? ஒருவேளை கீர்த்தியுடன் அவள் சேர்ந்து வளர்ந்திருந்தால் இப்படி அவள் வாழ்வை தட்டி பறிக்க நினைக்காமல் விட்டு கொடுத்து வாழ்ந்திருப்பாளோ..?? என்ற எண்ணம் பலநேரம் எழுந்து அவளை வதைக்காமல் இல்லை.
பொதுவாக சொல்வார்களே இரட்டையர்கள் ஒருவரை பிரிந்து ஒருவர் இருக்க மாட்டார்கள் ஒருவருக்கு காய்ச்சல் என்றால் மற்றவரும் அதை அனுபவிப்பர் என்று ஆனால் இங்கு இத்தனை வருடங்களில் இதில் எதையும் உணராதவள் இப்போது தங்கையின் மனவலிகளை தானும் உணர்ந்து துடிக்க துவங்கி இருந்தாள்.
"கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய
முகுந்தனைக் காணும்விழிகள்
ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது
இனிமையை வார்க்கும்விழிகள்
மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள்
பள்ளிகொள் ளும்பரமனின்
மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள்
செல்வசுகம் யாவுமருள்க"
என்று வெள்ளிக்கிழமை காலையே பூஜையறையில் வசுந்தரா தேவியுடன் அமர்ந்திருந்த ப்ரீத்தி கனகதாரா ஸ்தோத்திரத்தை மனமுருக பாட வசுந்தரா அவள் குரலில் லயித்து கண் மூடி அமர்ந்திருந்தார்.
ப்ரீத்தி பாடி முடிக்கவும் முதல் முறையாக அவள் பாடலை கேட்ட வசுந்தரா , "உனக்கும் நல்ல குரல் வளம் இருக்கு ப்ரீத்தி ஆமா நீயும் தேவ்வும் முதல் முதல்ல எங்க சந்திச்சிங்க ஒருவேளை பாட்டு தான் உன்னையும் தேவ்வையும் ஒன்னு சேர்த்ததா..??" என்று சிரித்து கொண்டே கேட்டவர் ஒரு நாள் உங்க ரெண்டு பேரோட கச்சேரியை ஒண்ணா கேட்கணும்" என்று கூற ப்ரீத்தியோ அவருக்கு என்ன பதில் சொல்லவது என்று புரியாமல் விழித்தாள்.
ப்ரீத்தி விஷ்வாவை போல தேர்ந்த பாடகி இல்லையென்றாலும் சிறு வயதில் இருந்தே பள்ளி கல்லூரி மேடைகளில் பாடி இருக்கிறாள் அதோடு சமூகத்தில் அவள் கொண்ட அழுத்தங்களை போக்குவதற்காக பல நேரம் பாடலை கேட்க தொடங்கியவள் அதன் பின் ஓய்வு நேரங்களில் நிறைய பாடல்களை கேட்கும் வழக்கத்தை கொண்டிருப்பவள்.
அப்படி கேட்பதோடு அல்லாமல் அவ்வப்போது பாடலுடனே சேர்ந்து அதை முனுமுனுப்பதோடு சரி. ஆனால் நல்ல குரல் வளமும், இனிமையும் பெறபட்டவள் பாடலை கேட்பவர் யாரும் இதுவரை காதை பொத்திகொண்டது இல்லை.
பூஜையறையில் இருந்து ப்ரீத்தி வெளியில் வர அங்கே, 'அம்மா அம்மா ப்ளீஸ்ம்மா...' என்று வித்யாவை வர்ஷினி விடாமல் சுற்றி கொண்டிருந்தாள்.
என்னடா வர்ஷு..?? என்று கேட்டவாறு அங்கே வந்தார் சங்கரன்.
"ப்பா நீங்களாவது அம்மாக்கிட்ட சொல்லுங்கப்பா" என்றால் சிணுங்கலுடன்,
"என்னம்மா சொல்லணும், விஷயத்தை சொல்லாம இருந்தா எப்படி..??"
"அப்பா ப்ளீஸ்பா நான் இனி ஈவினிங் கிளாசஸ் போகலை வீட்ல இருந்தே படிக்கிறேன்" என்றாள்.
"ஏன் திடீர்ன்னு இந்த முடிவு..?? கிளாசஸ் புரியலையா..? யாரும் சரியா எடுக்கலையா..?? சொல்லுடா நான் பேசுறேன்"
"இல்லல்லபா அதெல்லாம் இல்ல..!! எனக்கு.. நான் அண்ணிக்கிட்டயே படிக்கிறேனே அவங்க சூப்பர்ரா சொல்லி கொடுக்குறாங்கபா பாருங்க இந்த முறை நான் நைண்டி பைவ் பர்சென்ட் எடுத்திருக்கேன் என்று இதுநாள் வரை திணறிக்கொண்டு இருந்த பாடத்தில் அவள் எடுத்த மதிப்பெண்ணை கூறியவள், இதுக்கு காரணம் அண்ணி தான்பா.. எனக்கு அவங்க டீச்சிங் மெத்தட் ரொம்ப பிடிச்சிருக்கு ப்ளீஸ் அம்மா கிட்ட சொல்லுங்க"
'தேவி'
'என்ன..??' என்பதாக வர்ஷுவை ஒரு பார்வை பார்த்தவர் சங்கரனிடம் 'சொல்லுங்க..!!' என்றார்.
'வர்ஷு ஆசைப்படுற மாதிரி ப்ரீத்திகிட்டே படிக்கட்டுமே'
'வர்ஷுவை பொறுத்தவரை என்னை விட தேவ் டிசிஷன் தான் இம்பார்ட்டன்ட் தேவ் ஓகே சொன்னா எனக்கு ப்ராப்ளம் இல்லை' என்று அவர் முடித்து கொள்ள,
'நான் அண்ணா கிட்ட பேசுறேன்டா அவன் கண்டிப்பா ஒத்துப்பான்' என்று சங்கரன் மகளை சமாதானப்படுத்தினார்.
அதை தொடர்ந்து அடுத்த நாள் திரையில் தோன்றிய விஷ்வாவின் முன் ப்ரீத்தியும் வர்ஷுவும் அமர்ந்திருந்தனர் .
ஹாய் செல்லகுட்டீஸ்...
இதோ "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி...