“பொண்ணா? டாக்டர் மாதிரி சொல்ற?”-கணவனைப் பார்த்து அடிக்குரலில் மென்மையாக கேட்டாள் அவள்.
அவன் டாக்டர் இல்லை தான்!!
இருப்பினும் ஆண்குழந்தை கருவில் தரித்திருப்பின் என்ன அறிகுறிகள் தோன்றும்? பெண்குழந்தை தரித்திருப்பின் என்ன உடலியல் மாற்றங்கள் ஓரு பெண்ணுள் தோன்றும்? என்பதில் கொஞ்சம் அறிவுள்ளவனாகவே இருந்தான்.
அதனால் மனைவியை, ‘நான் சொல்றேன்ல? நம்ப மாட்டாயா?’ என்பது போல ஓர் பார்வை பார்த்தவன், மனைவியை நோக்கி அடுத்தவருக்கு இடையூறு இல்லாத மெல்லிய குரலில்,
“ஆம்பளைப்பையன்னா.. உன் தோள் நிறம் மங்கியிருக்கும்.. பின் கழுத்து எல்லாம் ரொம்ப கறுப்பாயிருக்கும்.. கொஞ்சம் ஊதிப் போய் தெரிவே...” என்றவன்,
எதிர்பாராதவிதமாக சட்டெனக் குனிந்து அவள் காதோரம் நாடிப் போய் கிசுகிசுக்கும் தொனியில், “ஆனால் என் பொண்டாட்டி இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மாகி.. ரொம்ப அழகா இருக்கா.. ஸோ கன்பார்ம்.. இது பேபி கேர்ள் தான்..!!”என்றபடி நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.
கணவனின் பேச்சில்.. கொஞ்சம் மலைத்துப் போய் தான் நின்றாள் ஷக்தி. கணவன் கூறிய அறிகுறிகள் அவளிடம் இல்லை தான்!! இருப்பினும் கணவன் சொல்வதை முற்றாக ஏற்றுக் கொள்ள மறுத்தது அவள் உள்ளம்!!
அவனது கையைப் பற்றிக் கொண்டு சின்ன குழந்தைகள் போல சிணுங்கியவள், வயிற்றைக் காட்டி, “இல்லை இளா.. உள்ளே இவன் ரொம்ப உதைக்குறான்.. ராஸ்கல்!!... அப்போ இவன் பேபி பாய் தானே?” என்று கண் சிமிட்டிக் கேட்ட தன் ஷக்தியின் அழகில் வெகுண்டு போய் நின்றான் இளா.
அந்த சமயம்.. இவர்கள் நின்றிருந்த பக்கமாக.. ஆறு மாத கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு .. ஓர் இளம்பெண்மணியொருத்தி செல்ல, அந்தப் பெண்ணை யோசனையுடன் நோக்கிக் கொண்டே, மனைவியைப் பார்த்தவன், “இரு.. உன் வயிற்றில் இருக்குறது ‘இவளா? இவனா?’ ன்னு இப்போ நான் கண்டுபிடிக்கிறேன்” என்றவன் அவர்களைக் கடந்து சென்ற பெண்மணியை அழைத்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ சிஸ்டர்... “- அவன் குரலில் அந்த பெண்மணியும் திரும்பிப் பார்க்க, அவளிடம் மரியாதை ததும்பும் குரலில், “என் வைஃப் உங்க குழந்தையை தூக்கணும்னு ஆசைப்படறாங்க... இஃப் யூ டோன்ட் மைன்ட்.. கொஞ்சம் தூக்கிக்கலாமா?”என்று கேட்டான்.
அந்தப் பெண்மணியோ... மேடிட்ட மணிவயிற்றுடன் நின்றிருந்த ஷக்தியின் அப்பாவியான முகத்தைப் பார்க்க...அதில் தோன்றிய மிருதுத் தன்மையும், தாய்மையும் அந்தப் பெண்மணியின் முகத்தில் புன்னகையை வளரச் செய்தது.
பார்த்ததும் யாரும் நேசக்கரம் நீட்டும்.. புன்னகை நிறைந்த முகம் ஷக்திக்கு.
அந்த வதனத்தையும்... அன்பும், பரிவும் சொட்டும் ஈர்க்கும் பெரிய நயனங்களையும் பார்த்துத் தானே மிஸ்டர். இளங்கோவடிகளும் விழுந்தான்?
கர்ப்பிணிப் பெண்ணின் ஆசையை நிறைவேற்ற.. அந்த இளம்பெண்ணும் இசைந்து, “கண்டிப்பா..!!” என்ற வண்ணம் குழந்தையை இளா பக்கம் நீட்ட,
இளாவும் குதூகலமாக மாறிப் போய், அந்த இளம் மழலையை, “வாங்க வாங்க செல்லம்...” என்றவனாகத் தூக்கிக் கொள்ள, கணவன் என்ன செய்ய நாடுகிறான்? என்பது புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாள் அவள்.
அவனோ குழந்தையைத் தூக்கி செல்லம் கொஞ்சி... அதை சிரிக்க வைத்து தானும் முகம் மலர்ந்தவன், குழந்தையை மனைவியிடம் நீட்ட,
தன்னிடம் பொக்கை வாயை திறந்து கொண்டு பால் மணம் மாறாமல் சிரிக்கும் குழந்தையை புறந்தள்ள மனமேயற்று போனது அவளுக்கு.
மலர்ச்சியுடன் குழந்தையை வாங்க கை நீட்டினாலும், அந்த பெண்மணி அறியா வண்ணம், கணவன் காதோரம் கிசுகிசுப்புடன், “இளா என்ன பண்ற?” என்று கேட்டு காதைக் கடித்தாள் அவன் மனைவி.
குழந்தையைக் கொடுத்து விட்டு, “சொல்றேன் இரு.. இவனைக் கொஞ்சம் தூக்கிப்பிடி ஷக்தி.. அப்போ இவன்.. உன் வயிற்றில் கால் ஊன்றி நின்னான்னா.. கண்டிப்பா பொண்ணு தான்..”என்று கூறினான் அவளது கணவன்.
கணவன் என்ன புது டெக்னிக்ஸ் எல்லாம் சொல்கிறான் என்று தோன்றினாலும், “ஒருவேளை கால் ஊன்றி நிற்கலைன்னா... ஆம்பளைப் பையன் தானே?” என்று தன் வயிற்றில் இருப்பது ஆண்குழந்தையாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் கேட்டாள் அவள்.
“ம்ஹஹூஹூம்... குழந்தை உன் வயிற்றில் கால் ஊன்றி நிற்கும்!..” என்று உறுதியான குரலில் தலையை மறுப்பாக ஆட்டிக் கூறிய கணவனை நோக்கிக் கொண்டே, குழந்தையைத் தூக்கிப் பிடித்து.. வயிற்றில் கால் ஊன்றி நிற்க வைத்தாள் ஷக்தி!!
என்ன ஆச்சரியம்? அவள் நினைத்ததற்கு மாறாக குழந்தை அவள் வயிற்றில் இரு கால்களையும் ஊன்றி நிற்க..“நான் சொன்னேன்ல? இது பேபி கேர்ள் தான்..” என்று தன் முத்து மூரல் வரிசை காட்டி அழகாக நகைத்து.. தன் சந்தோஷத்தை வெளிக்காட்டினான் இளா.
இவன் எதை வைத்து இது பெண்குழந்தை தான் என்று அடித்துச் சொல்கிறான் என்று தோன்ற, கணவன் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.
அவனோ, மனைவியின் முகத்திலுள்ள கேள்வியை உற்றுப் படித்தவனாக, சிறு புன்னகையுடன், “அந்த காலத்தில்.. ஸ்கேன்னிங் பண்ணி.. ஆணா, பெண்ணான்னு தெரிஞ்சுக்குற வழிமுறையா இருந்தது? இல்லைல? அப்போ இந்த மாதிரி சில விஷயங்களை வைச்சுத் தான் கண்டுபிடிச்சாங்க... பிறக்கப் போறது ஆண் குழந்தையா? பெண்குழந்தையா?ன்னு..பார்க்குறதுக்கு.. இன்னும் நடை பழகாத குழந்தையை... கர்ப்பிணித் தாயைத் தூக்கச் சொல்வாங்க..
அந்த குழந்தை.. கர்ப்பிணித் தாய் வயிற்றில் ஒரு காலோ, இரண்டு காலோ வைச்சால்.. அது பெண்குழந்தையின்னும், கால் வைக்கலைன்னா.. ஆண் குழந்தையின்னும் அம்மா சொல்வாங்க ஷக்தி!!” என்று இதமான குரலில் தன் ஷக்திக்கு விளக்கம் அளித்தவன்,
அவளிடமிருந்து குழந்தையை வாங்கி.. அதன் தாயிடம் ஒப்படைத்தவனாக, “ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்”என்றுரைக்க.. இதுவரை அவர்களின் அந்நியோன்யத்தைக் கவனித்துக் கொண்டிருந்த பெண்மணிக்கோ... அந்த தம்பதிகளின் காதல் கொஞ்சம் பிடித்துப் போயிருக்க வேண்டும்.
அதுவுமில்லாமல் இது தான் அவர்களுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தை போல.. அது தான் அந்தக் குழந்தைக்காக இத்தனை எதிர்பார்ப்பு என்று எண்ணிக் கொண்டவளாக அந்தப் பெண்ணும், வெகு ஆர்வத்துடன், “இது உங்க முதல் குழந்தையா?” என்று கேட்டாள்.
அதைக் கேட்டு ஷக்தியின் வினோதமானவன் சிரித்தான்.
************************
இப்படி ஈருடல் ஓருயிராக வாழ்ந்த தலைவனுக்கும், தலைவனுக்கும் நிகழ்ந்த ஊடல் யாது? அதை தலைவன் எங்கணம் எதிர்கொண்டான்? எல்லா கேள்விகளுக்கும் பதில் கதையை முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!
'என் வினோதமானவனே!"-விஷ்ணுபிரியா
புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 320,321 இல் கிடைக்கும்!