பாரதிப்பிரியன்
Well-Known Member
என் உயிரின் உயிரான மனைவிக்கு.....
(மனைவிக்கு ஓர் கடிதம்)
பாகம்-1
(மனைவிக்கு ஓர் கடிதம்)
பாகம்-1
என் ஆருயிரில் வாழும் ஓருயிரான சினேகிதி என் மனைவிக்கு
நீயும் நானும் ஒரே வீட்டில் வசித்து வந்த போதும் சில நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, ஏன் வருடங்களாக உன்னோடு மனம் விட்டு பேசிட இயலவில்லை. உனக்கும் எனக்கும் திருமணம் நடந்த புதிதில் எந்நேரமும் நாம் மனம்விட்டு பரிமாறிய பல விஷயங்கள் கடந்த காலங்களில் நடைபெறவில்லை. எத்தனையோ சூழல்கள், எவ்வளவோ மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்பட்டு கடந்தும் போய்விட்டது. ஆயினும் நான் தான் உன்னோடு நேரம் செலவிடவில்லை என்பதை பல நேரங்களில் உணர்ந்து இருக்கின்றேன். நீயோ உணர்வுக்குள் எனக்காகவும், உணர்ச்சியில் குடும்பத்திற்க்காகவும் கூடுதலாக பொறுப்பை சுமந்து கொண்டு எப்போதும் போல புன்னகையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறாய்.
நீ எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் செய்த சுயநலமில்லா தியாகங்கள், குடும்பத்து உறவுகள், சுற்றுமுள்ள நண்பர்கள் அத்தனை பேரின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதில் மும்முரமாக இருந்தாய்.
உன்னை பற்றியது தான் இந்த மொத்த கடிதமும். உனக்கு இதை இத்தனை நாட்கள் கழித்து எழுதவேண்டிய அவசியத்தை நம் பிள்ளைகள் ஏற்படுத்தி கொடுத்து விட்டார்கள். முதலில் அவர்களுக்கு நன்றி. விடலை பருவம் தாண்டி, பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் அவர்கள் உன்னை ஊதாசீனமாக பேசியது பற்றி கேள்விப்பட்ட போது நான் கொதித்து போனேன். எனக்கு கொதிக்கிறது என்றால் உனக்கும் எவ்வளவு உள்ளுக்குள் கொதிக்கும் என்று எண்ணிய போதுதான் உனது வலியை நானும் உள்ளுக்குள் ரணமாக உணர்ந்தேன்.
பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதையும், அவர்களை கண்டிப்பதையும் விட உன் தோளோடு தோளாகவும், உணர்வோடு உணர்வாகவும் நிற்க தீர்மானித்தேன். அதுவே இப்போது உனக்கு அத்தியாவசியமான மருந்து. அதற்காகவே இந்த கடிதம்.....
1. என் மனைவி என் சிநேகிதி:
உனக்கும் எனக்குமான முதல் சந்திப்பு முதல் இன்று வரை நீ என்னை உன் ஆத்ம தோழனாக மட்டுமே எப்போதும் பார்த்து உள்ளாய். உன்னுடைய இளமை காலம் தொட்டு நடைமுறையில் இப்போது சந்திக்கும் அத்துணை செயல்களையும் என்னோடு நீ பகிர்ந்து கொள்ள தவறியதே இல்லை. ஏன் மறைக்க நீ முயற்சித்ததும் கூட இல்லை. உரிமையோடு, நம்பிக்கையோடு என்னிடம் மட்டுமே நீ பகிர்ந்து கொள்வாய்... பிள்ளைகள் பிறந்த போது வரை என் நெஞ்சில் மீது சாய்ந்து கொண்டு, அவர்கள் வளரும் போது நாம் நடைப்பயிற்சி சென்றபோது, இப்போது அலைபேசியில் என்னோடு பேடும் போது.... நீ பகிர்ந்து கொள்ளாத எதுவுமே என்னிடம் இல்லை. அடிக்கடி கூறுவாய்... உனக்கு என் மீது அதீத நம்பிக்கை அளவின்றி கொட்டிக்கிடப்பதாக. நீ எப்போதும் கூறும் ஒரு வாக்கியம் "உங்களிடம் மட்டும் தான் என்னுடைய எல்லா இன்பத்தையும் துன்பத்தையும் பயமின்றி கொட்ட முடியும் என்று....!!!!
எனக்கும் உன்னோடு எதையும் சொல்லாமல் ஒளித்துவைக்க இயலாது. என் துன்பத்தை கூட உன்னோடு பகிரும் பொழுதை தள்ளிவைத்து சொல்லி இருக்கிறேன். ஆனால் என்னுடைய சந்தோஷங்களை உன்னோடு சொல்ல, நான் எப்போதும் தாமதித்தது இல்லை. முதலில் உன்னோடு சொல்லிவிடவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து உள்ளேன். ஏன் என்பது உனக்கே தெரியும், என் சந்தோஷத்தை என்னை விட சந்தோஷமாக உன்னால் மட்டுமே ஆராதிக்க முடியும். தலையில் வைத்து கொண்டு ஆனந்த கூத்தாட முடியும்... அந்த சந்தோஷ தருணங்களில் நீ பிள்ளைகளை மறந்து விடுவாய், சுற்றம் மறப்பாய்... உன் கண்களும், கணங்கள் தாங்கிய முகமும் அப்படியொரு பிரகாசத்தில் வண்ணமயமாய் ஜொலிக்கும். அப்படியென்றால் துன்பத்தில்????
உனது துன்பங்கள் தான் எத்தனை எத்தனை சிநேகிதியே... நீ என்னை திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வில் இணைவதற்கு பட்ட துன்பங்கள், திருமணத்திற்கு பின் என் சொந்தங்களாலும், உன் சொந்தங்களாலும் பட்ட வேதனைகள், இத்தனைக்கும் பிறகும் அத்தனையையும் நீ மறைத்துக்கொண்டு வேலை முடிந்து நான் வீடு திரும்பும் போது எனக்காக புன்முறுவலுடன் காத்து நிற்பாய்... என்னை வரவேற்று மகிழ்வோடு உபசரிப்பாய்... எத்தனையோ அலுவலக சுமைகள், வேதனைகள் என்னுடைய அசதிகள் எனக்கு மறந்து போகவும், சிலநொடிகளில் பறந்து போகவும் செய்தது உன் மடியல்லவா? அந்த மடிமீது தானே என்னை கிடத்தி என் தலைக்கோதி உற்சாகமூட்டி, வீறுகொண்டு நான் நடைபோட செய்து இருக்கின்றாய்.
முதல் பிரசவத்தில் நீ துடித்து துவண்ட கணம் இன்றும் நினைவில் உள்ளது. நம் மகனின் பிறப்பில் நீ கண்ட வேதனை அத்தனையும் நரகவேதனை. கடுமையான உதிரப்போக்கு.... பனிக்குடம் உடைந்து மகன் கருவறையில் உயிருக்கு போராடி நேரம்.. நீயும் தான்...பிரசவ அறைக்குள் உன் கரம் பற்றிக்கொண்டு நான் நின்றிருந்த நொடிகள்.... பிள்ளையை அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்க செய்யலாம் என்ற பெண் மருத்துவரிடம் இல்லை நிச்சயம் என்னால் இயலும், நான் தங்கிக்கொள்வேன். என் பிள்ளையை நான் பத்திரமாக பிரசவிப்பேன். உத்திரம் போனால் போகட்டும்.... என் உயிர் என் கணவர் கரங்களில் உள்ளது. அவர் என் கரம் பற்றியிருக்க என்னை அவ்வளவு எளிதில் காலன் எடுத்து செல்லமுடியாது என்று நீ கூறிய நம்பிக்கையான வார்த்தைகள்.... இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. உன் தமையன் உனக்காக உதிரம் வழங்க ஓடோடி வந்தான். பிரசவத்திற்கு பிறகு நீ மயக்கத்தில் இருந்த ஒவ்வொரு நொடியும் நான் கண்ணீர் சிந்தியதை யாருமே அறியார். உன்னைத் தவிர.......
மகளின் பிரசவம் அடுத்த வலி என்பதை விட, அவள் உனக்குள் கருவாக உருவாகியது முதல் பிரசவம் வரை நீ சந்தித்த இடர்கள் எவ்வளவு தோழி... என் சொந்தங்கள் செய்த அத்துணை செயல்களிலும் கண்ணீரை சுமந்தாய். கருவுற்று இருந்த போதும் உன்னை அவர்கள் நடத்திய விதம் அவ்வளவு எளிதாக மறக்க கூடியது அல்லவே. என் பணி நிமித்தம் நான் வெளியூரில் வேலை செய்த போது. தினமும் என்னிடம் தொலைபேசியில் உரையாடுவாய். ஆனால் ஒன்றையும் கூற மாட்டாய். உன் தோழி ஒருமுறை என்னிடம் நீ அனுபவிக்கும் வேதனைகளை கூறாமல் இருந்திருந்தால்... அதுகூட எனக்கு தெரியாதே போயிருக்கும்.
பிரசவ வேதனையில் ஒருவரும் உனக்கு உதவ முன்வராது போக நீயே ஆட்டோவில் ஏறி மருத்துவமனை சென்றதும், செவிலியர் மூலம் எனக்கு தகவல் சொல்லியதும் எனக்கு மறக்க கூடிய விஷயமா? அத்தோடு உன்னையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அத்துணை பேரையும் பகைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றேன். வேண்டாம் என்று மறுத்தாய். ஆயினும் என் பிடிவாதத்தில் நான் உறுதியாக நிற்க பின் சம்மதித்தாய்....
என் மொத்த சம்பளமும் உன் கையில் கொடுத்த அந்த முதல் மாதம் தொட்டு இன்றுவரை என் வருவாயை விட சேமிப்பு மிகுந்து இருக்க நீயல்லவா காரணம். பிள்ளைகளுக்கும் சரி எனக்கும் சரி, உனக்கும் சரி அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு சேமிப்பும் வளர்த்து எடுத்தாய்... யாருக்கு தெரியும் என் குடும்பம் நிமிர்ந்து நிற்க அடித்தளமே நீயென்று.... பிள்ளைகளுக்கு தெரியுமா? உன் அற்புதம்... உறவுகள் அறியுமா உன் தியாகம்... அத்தனையும் உன்னாலே சாத்தியப்பட்டது. காரணம் நீ என் மீது கொண்ட வெளிப்படை தன்மை கொண்ட சிநேகம்... நம்பிக்கை.... இந்த சிநேகமும் நம்பிக்கையும் தான் நம் காதலின் அடிப்படை என்பது யாருக்கும் தெரியாதே தோழி.... தெரிந்திருந்தால் ஒருவேளை பிள்ளைகளுக்கு உன் அருமை புரிந்திருக்குமோ? ஒரு போதும் நீ உன் வலிகளை வெளிப்படுத்தி கொள்ள விரும்பியதே இல்லையே....
ஆருயிர் தோழி,..!! நீ என் மனைவி என்பது உலகத்திற்கு நன்றாக தெரியும். ஆனால் நீயும் நானும் முதலில் நண்பர்கள் என்றும் பின்புதான் கணவன் மனைவி என்பதும் நமக்கு மட்டுமே தெரியும். அதனால் தான் நீ என் மனைவி..... ஆனால் என் சினேகிதி.....
தொடரும்.....