கண்டிப்பாக மருத்துவமனையை சுற்றியும் சுபாஷ் ஆதியை கண்காணிக்க ஆட்களை நிறுத்தி இருப்பான் என்று உணர்ந்த கார்த்திக் வீட்டாரை பத்திரமாக அனுப்பி வைத்த பின் வாசுவை அழைத்து ரகசியமாக பேச அவன் சொன்ன படி வாசு மருத்துவமனை வாசலை நின்ற ஆதியின் தொண்டர்களை சந்தித்து
"ஐயாவை இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு யாரும் தொந்தரவு செய்யாதீங்க. அவங்க மனைவி உயிருக்கு போராடும் நிலமைல இருக்குறதால அவர் வேற எதையும் யோசிக்கிற நிலமைல இல்ல. கார்த்தி சார் வைப் வேற அண்ணனுக்கு இப்படி ஆச்சேனு அடிக்கடி மயங்கி விழுறாங்க, அதனால அவரும் மனைவியை விட்டு நகராம இருக்காரு. குடும்பமே சோகத்துல இருக்கு கொஞ்ச நாளைக்கு தொந்தரவு கொடுக்காம இருங்க. கட்ச்சி வேலையெல்லாம் தர்மண்ணாவ பாத்துக்க சொன்னாரு" என்று விட்டு உள்ளே சென்றான்.
அந்த தகவல் கண்டிப்பாக சுபாஷை அடைந்தால் அவன் ஆதியை விட்டு விட்டு குடும்பத்தோடு வெளிநாடு பறப்பதை பற்றி மட்டும் யோசிப்பான் என்று கணக்கு போட்ட ஆதி. மருத்துவமனையின் பின் கேட் வழியாக கார்த்திக் மற்றும் வாசுவோடு வெளியேறினான்.
ஏற்கனவே டி.ஜி.பியோடு பேசியதால் அவர் சாந்திப்ரியாவை ரகசியமாக சந்தித்து குமரகுருவின் ஆதரரங்களை காட்ட அதிர்ச்சியடைந்த சாந்திப்பிரியா சுபாஷை அரெஸ்ட் பண்ண தான் உதவி செய்வதாக கூறி அவரோடு புறப்பட்டாள்.
சுபாஷ் பேசும் பொழுதெல்லாம் ஒவ்வொரு காரணம் கூறி டி.ஜி.பி கூறிய நேரத்தில் வந்து சேருவதாக கூறியவள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தாள்.
ஆதியை சந்தித்த டி.ஜி.பி சுபாஷை அரெஸ்ட் பண்ணலாம் என்று கூற
"இல்ல சார் என் அப்பாவை கொன்னது மட்டுமில்லாம, என் மனைவியையும் கொல்ல பாத்தான். என் மச்சான் வேற தலைல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்கான். அவன் வாயாலேயே சொன்னாதான் உண்டு. அதுக்கு நானும் கார்த்திக்கும் முதல்ல தனியா போறேன். கேமரா, மைக்குனு டெக்னோலஜி எவ்வளவோ இருக்கே"
"அவன் இடத்தை கண்டு பிடிச்சி நீங்க தனியா போனாலும் அவன் உஷாராகிட்டா? சொல்வான்னு என்ன நிச்சயம்?"
"எங்களை பார்த்ததும் கண்டிப்பா ஷாக் ஆவான் ஆனா தனியா போனதால நாமளே போய் மாட்டிக்கிட்டதா நினைச்சி முட்டாள் தனமா உண்மைய சொல்வான் சார். தான் தான் அதி புத்திசாலின்னு நினைக்கிற எல்லாருமே இப்படித்தான் செய்வாங்க"
"அது சரி உங்கள செக் பண்ணா? கேமரா இருக்குறது தெரிஞ்சிடுமே!"
"கன்னு ஏதாவது இருக்குமான்னுதான் செக் பண்ணுவான். கேமரா இருக்கும்னு யோசிக்க மாட்டான்" ஆதி உறுதியாக சொல்ல அவன் சொன்ன படிதான் நடந்தது.
ஆதியும் கார்த்திக்கும் சட்டை பட்டனிலும், பேனாவிலும் கேமராவை பொருத்திக் கொண்டு போக துப்பாக்கி ஏதாவது வைத்திருக்கிறார்களா என்று மாத்திரம் தான் பரிசோதனை செய்தான் சுபாஷ்.
தனியாக வந்ததை கூட சந்தேகப்பட்டு பாதையை கண்காணிக்க ஆள் அனுப்பியவன் அரைமணிநேரமாக சந்தேகப்படும் படி யாரும் வரவில்லை என்றதும்தான் விட்டு விட்டான்.
ஆனால் சுபாஷின் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி நான்கு வண்டியில் போலீஸ் படையே சுபாஷின் வாக்குமூலத்தை பதிவு செய்ய காத்திருந்ததை அவன் எதிர்பாத்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆதியையும், கார்த்திக்கையும் கொன்றொழிப்பதே அவன் முடிவாக இருக்க உண்மைகளை அச்சமின்றி சொன்னவன் தன் காதல் மனைவியும் கேட்டுக்கொண்டிருப்பாள் என்று கிஞ்சித்தும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.
வாசுவின் அருகில் அமர்ந்து மடிக்கணனியின் வழியாக சுபாஷை பாத்திருந்த சாந்திப்பிரியா தந்தையை கொன்றது தன் கணவன் தான் என்ற அதிர்ச்சி தாங்காமல் வெறி கொண்டு வண்டியிலிருந்து இறங்க முற்பட அவளை அடக்கி வைப்பது வாசுவுக்கே பெரும் பாடானது.
கார்த்திக் உள்ளே வரலாம் என்று சொன்னதுதான் தாமதம் காட்டாறு வெள்ளமாய் பாய்ந்தவள் சுனாமியாய் சுபாஷை தாக்கலானாள்.
Last edited: