ரிஷி ஏன் கீதாராணியை அந்த கோலத்தில் பார்த்து கதறி அழுதான் என்று அவனுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் அன்னை என்ற பாசம் இருந்ததால் தான் மனம் விட்டு அழுது விட்டானே ஒழிய கீதா செய்தவைகளை அனைத்தையும் அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனுக்கு செய்தவைகளை அவன் மறந்து வாழ முயற்சித்தாலும் சில நேரம் கனவாக அவனை துரத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
கயலின் அருகாமையும், காதலும் அவனை நல்ல மனிதனகாக மாற்றி இருக்கா விட்டால் ரத்னவேலை சென்னையில் சந்தித்த போதே வாக்குவாதம் முற்றி, அடி தடியென்று இறங்கி கொலையில் முடிந்திருக்கும்.
கயலோடு வாழ வேண்டும் என்ற ஆசை அவனை கட்டி போட்டிருக்க, ஒதுங்கிப் போக நினைத்தவனைத்தான் ரத்னவேல் கொலை செய்ய முயற்சி செய்திருந்தார்.
மயிரிழையில் உயிர் தப்பியவனும் மனைவியோடு மனமொத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்தானே ஒழிய பழிவாங்க கிளம்ப வில்லை.
அவனின் அன்னை நல்லவளாக இருந்திருந்தால் அவனும் பிறந்ததிலிருந்தே நல்லவனாக இருந்திருப்பான். கயலுக்கு நல்ல கணவனாக இருந்திருப்பான். அவளை துன்புறுத்தாமல் இருந்திருப்பான். அவளை விட்டு பிரிய நேர்ந்திருக்காது என்று அழுதானா? அது அவன் மனதறிந்த ரகசியம்.
கீதாராணி தற்கொலை செய்து கொண்டாள் என்று மலர்விழி தகவல் சொன்னதும் மும்பையிலிருந்து தான் மட்டும் ப்ரதீபனோடு விமானத்தில் வந்திறங்கினான். நானும் வரேன் என்ற கயலை கூட அழைத்து வர மறுத்து விட்டான்.
கீதாராணியின் கம்பீரமான தோற்றம் கண்ணுக்குள் வர தற்கொலை செய்து கொண்டாள் என்பது அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. மருத்துவமனை கட்டிலில் கீதாவின் பிரேதம் வைக்கப் பட்டிருக்க மாடியிலிருந்து குதித்ததில் முகம் நசுங்கி கோரமாக காட்ச்சியளித்து, பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அமுதனை விசாரித்ததில் அறிந்து கொண்ட ரிஷி அதனாலயே வீட்டாரை தவிர்த்தான்.
நீண்ட நேரம் வைத்திருக்க கூடாதென்று கீதாவின் கடைசியாசையாக அவளுக்கு கொல்லி வைக்க சொல்லி ரிஷியை கேட்டிருந்த படியால் ரிஷி வந்த உடனையே கீதாவின் உடல் உடனடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.
அங்கே ரத்னவேலும் வந்திருக்க இந்த கொஞ்சம் நாட்களிலையே ஆளே அடையாள தெரியாத அளவுக்கு கறுத்து, சோர்ந்து போய் கீதாவின் பிணத்தை வெறித்து அமர்ந்திருந்தார்.
ரத்னவேலை பார்த்து அமுதன் முறுக்கிக் கொள்ள பிரச்சனை பண்ணுவாரோ என்று பிரதீபன் விறைப்பாக நின்றிருக்க இறுதி சடங்குகளை ரிஷி அமைதியாக செய்து கொண்டிருந்தான்.
எந்த பிரச்சினையும் பண்ணாது அமைதியாக அமர்ந்திருந்த ரத்னவேலை பார்க்கும் பொழுது அவரும் தற்கொலை செய்து கொள்வாரோ என்று ப்ரதீபனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
என்னவோ! ஊருக்கே கெட்டவர்களாக இருந்தாலும், இவர்களை போன்ற அண்ணன், தங்கையை எங்குமே பாத்திருக்க முடியாது. நாணயத்துக்கு இரு பக்கம் என்று சொல்வதா? ஒரு உடல் இரு உயிர் என்று சொல்வதா? இன்று குற்றுயிராய் தங்கையின் முகத்தை இறுதியாக ஒரு தடவை பார்த்துக் கொள்ள அசையாது அமர்ந்திருந்தார் ரத்னவேல்.
நேற்று மாலை விஷேச அனுமதியோடு கீதாவை பார்க்க சென்ற ரத்னவேலுக்கு கீதா திக்கித்திக்கி சொன்னவைகள் அனைத்தும் நியாபகத்தில் வந்து அலைக்கழிக்க கண்களில் பெருகும் கண்ணீரை இமை தட்டி ஊமையாக சிந்திக் கொண்டிருந்தார்.