பாரதிப்பிரியன்
Well-Known Member
வாழ்வில் - பிள்ளைகள் நமக்கு எப்படி?
சிநேகத்தின் ஊற்றாகிய பிரியசகியே,
உணர்வுக்கு உயிரும், உணர்ச்சிக்கு துடிப்பும் என்று, நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் என் மேன்மைமிகு தோழியே... உனக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களை உச்சி நுகர்ந்து முத்தமிட்டு தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் அன்பின் அடையாளமாக துலங்கும், லீலி மலர்களாய் பிள்ளைகள். அறிவுக்கும் ஆற்றலுக்கும் மகன், அன்புக்கும் அரவணைப்பிற்கும் மகள். மகனின் சாயலில் நீ முழுமையாக இருக்கக் கண்டுள்ளேன். நிச்சயம் எனக்கு தெரியும், அவன் உன் சாயலை தாங்கியே பிறப்பான் என்று. கருவில் அவன் உருவான தினம் தொட்டு.... உலகை அவன் கண்விழித்து பார்த்த கணம் வரை அவனோடு நான் பேசிய நொடிகள் அதிகம்.
ஒவ்வொரு முறையும் உன்னை மகிழ்விக்க, அவனை நான் பாடி அழைத்துள்ளேன். கருவறையின் பொக்கிஷ மேடையில் படுத்துக்கொண்டு நம் சம்பாஷனைகளை அவன் கேட்பதை உணர்த்த உன் வயிற்றை அவன் உதைத்துக் காட்டிய தருணங்கள் இன்றும் நினைவில் உள்ளது. அப்போது எல்லாம் உன் முகம் தாங்கி நிறைந்த மகிழ்வின் உணர்வுகளை மறந்து போக முடியுமா? அத்தனை மலர்ச்சி...!!! அத்தனை கிளர்ச்சி!! ....
உன் முகத்தில் தோன்றி உன் அழகை இன்னும் மெருகூட்டும். வலிக்க செய்யாமல் உன் கருவறை விட்டு, நிகழ் வாழ்வில் நுழைய அவனோடு நான் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஏராளம். கருவறையின் பஞ்சணையில் படுத்துக்கொண்டு என்னை கெஞ்ச வைத்தவன் நம் செல்வ மகன்.
பிறந்தவுடன் என்னை முறைத்துப் பார்த்து விட்டு உன் மீது ஒட்டிக் கொண்டவன். "இனி இது என்னுடைய சொத்து நீ எட்டி செல்" என்பது போல இருந்தது அது. ஒவ்வொரு அசைவிலும் உன்னை மட்டுமே பிரதிபலிப்பான். உன்னை பார்த்துக்கொண்டே இருப்பான். உன்னுடைய செயல்கள் அவனுடைய செய்கைகளில் பிரதிபலிக்கும். நான் உன்னோடு கொண்ட அக்கறையையும், அன்பையும் வாழ்நாள் முழுதும் உன்மீது காட்ட பொறுப்பு எடுத்துக் கொண்டவன். உன்னை நான் கொஞ்சினால் கோபம் கொள்வான். தான் மட்டுமே உன்னை கொஞ்ச வேண்டும் என்பான். நான் யாரை கொஞ்சுவது என்று கேட்டால் அவனை கொஞ்ச சொல்வான். உன்னை நேரடியாக அவன் முன் தொடக்கூட விடமாட்டான். அவ்வளவு அன்பையும் உன்மீது கொட்டி கவிழ்ந்தவன்.
மூன்று வயது கடந்த போதுதான் என்னிடம் நெருங்கினான். மீண்டும் நீ கருவுற்ற போது, என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். விளக்கம் பெற்றான். இந்தமுறை உன் கருவறையில் இருந்த நம் மகளிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தவன் அவன் தான். உன்னையும் நம் செல்வ மகளையும் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டவன். பாப்பா தூங்க என்ன செய்ய வேண்டும் பப்பா? (பப்பா என்றால் அப்பா என்று எங்கள் மகன் கூறுவார்) பாப்பா தூங்க பாட்டு பாடு. பாப்பா பாட்டு கேட்டால் தூங்கி விடுவாள் என்று கூறுவேன்.
மழலை பள்ளியின் பாடல்களை உன் வயிற்றின் அருகில் வாயை வைத்து சப்தமாக அவனின் தேன் குரலில் பாடுவான். ஒரு பாட்டை பாடிவிட்டு உன்னையும் என்னையும் பார்த்து வாயில் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டு , "உஸ்ஸ்... சத்தம் போடாதீங்க... பாப்பா தூங்கட்டும் என்று அவன் கூறியதை கேட்டு நீயும் நானும் சிரித்து சிரித்து ரசித்து மகிழ்ந்த நேரங்கள் நம்வாழ்வின் பொற்காலங்கள்....
மகளின் பிறப்பில் நீ ஆவலுடன் இருந்தாய். ஆவலுக்கு காரணம், நீ என்னை மகளில் காண துடித்துக் கொண்டிருந்தாய். அந்த அற்புத நாளில் உன்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதே நம் மகன் அழத் தொடங்கியிருந்தான். உனக்கும் பாப்பாவிற்கும் உடம்பு சரியில்லை என்று அழுதான். ஊசிப் போடக்கூடாது என்றான். உனக்கு வலிக்கும் என்று அடம்பிடித்தான். சமாதானப்படுத்தி அடக்குவதற்குள் சோர்ந்து போய் உறங்கியிருந்தான்.
நம் தேவதை உன் கருவறையின் கதவுகளை திறந்து பூவுலகின் அழகை விழித்திறந்து பார்த்தபடியே வெளி வந்தாள். முதல் சுவாசத்தை உடலுக்குள் நிறைத்ததும் அவள் தேடிய முதல் ஆள் அவளுடைய சகோதரன் தான். பிறகு தான் நான்.
அவள் அழுத குரல் கேட்டு விழித்து எழுந்த நம் மகன், ஓடி வந்து என் பின்னே மறைந்து கொண்டு எட்டிப் பார்த்தான். "பாப்பா பாரு உன்னய தேடுறா"? என்ற போது அச்சரியமும் மகிழ்வுமாக நம் மகளின் பிஞ்சு கண்களை தன் பஞ்சு கரங்களில் தொட்டு பிடித்துக்கொண்டான். விழியை திறந்து அண்ணனை கண்ட நம் மகள் ஒரு நொடி கூட எடுக்கவில்லை. அடுத்த கணமே அவனை பார்த்து புன்னகைக்க, இந்த இளம் பூக்கள் பரிமாறிக் கொண்ட அன்பின் பரி பாஷையை இன்றும் கூட நினைத்துப் பார்த்தால் நம் இருவர் விழிகளுக்குள்ளும், நீரும் வரும்... நிறைவான மகிழ்வும் ஊற்றெடுக்கும்.
இவர்களிடையேயான புரிதலுக்கும் பாசத்திற்கும் காரணம் நாமே. கருவறையின் பொக்கிஷ அறைக்குள் பிள்ளைகளை விரும்பி உருவாக்கி உயிர் கொடுத்தோம். ரசித்து ரசித்து, பேசி திளைத்து அவர்களுக்கு அன்பை உணரவைத்தோம். அவர்களின் காதுகளும் உணர்வுகளும் கர்ப்பகிரகத்தில் கேட்கும் படி நாம் நடந்ததே காரணம்.
இந்த தொடரின் நோக்கம் தம்பதிகள் புரிதலை, புரிந்து கொள்ளவே. நிறைய பேரின் வாழ்வு கசப்பாக புரிதல் இல்லாமையே காரணம். புரிதலை புரிந்து நேசித்து வாழ ஊக்கம் தரவே. விட்டுக்கொடுக்கவும், மன்னிக்கவும் பழகுங்கள். உங்கள் துணையிடம் தோற்க வெட்கப்படாதீர்கள். உங்கள் துணையிடம் தோற்க கணவர்களே நீங்களும், மனைவிகளே நீங்களும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
நேசிப்பவரிடம் தோற்றுப் பாருங்கள், உளமார மன்னித்துப் பாருங்கள். உங்கள் காதல் இன்னும் அழகாகும். அது உங்கள் பிள்ளைகளில் பிரதிபலிக்கும். உங்கள் பிள்ளைகளை அன்பில் மூழ்கடிக்கும்.
இது அறிவுரை அல்ல, வேண்டுகோள். நானும் என் மனைவியும் வாழும் வாழ்வை நீங்களும் தான் கொஞ்சம் வாழ்ந்து பாருங்களேன்....!!!!! பிடித்தால் தொடருங்கள். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்.
வாழ்த்துக்களுடன்
பாரதிப்பிரியனும் கண்ணம்மாவும்
முடிந்தது