ஒருவர் வாழ்வில் தானே தெரிந்து தேர்ந்தெடுக்கும் உறவு நட்பு. இவ்வுறவில் மிகுந்த நெருக்கம் உண்டு. நண்பர்கள் ஒருவருக்கொருவர் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மறைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். நாடு, இனம், மதம், மொழி, பால் என்ற பாகுபாடெல்லாம் நட்பிற்குக் கிடையாது. நண்பர் என்பவர் தன் நலம் விரும்பாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார். நண்பர்கள் இன்பதுன்ப காலத்துப் பிரியாது, ஒருவருக்கொருவர் உதவி, ஒருவரால் ஒருவர் பயன் பெற்றுக் கூடிவாழ்வர். தான் தவறுசெய்தால் கடிந்துரைத்து நல்லாற்றுப்படுத்துவார், எப்போது நட்பானோம் என்பது தெரியாமலேயே சிறுவயது முதல் ஏற்பட்டநட்பு. பார்க்காமலேயே நிகழும் நட்பு என நட்பின் வகைகள் பல. நட்பிற்காகவே நட்பெனும் உயர்ந்த நட்பு, புலனின்பங்களை நோக்காகக் கொண்ட மகிழ்ச்சிக்குரிய நட்பு, ஒன்று பெறுவது நோக்கிய பயன் கருதும் நட்பு என்றவாறும் நட்பை வகைப்படுத்துவர். நல்ல நட்பில் உயர்ச்சி, மகிழ்ச்சி, பயன் இம்மூன்றுமே அமையும்.
‘சேரிடம் அறிந்து சேர்' என்றார் ஔவையார். ஒருவன் ஆளாகுவதற்கும், சீரழிவதற்கும் அவனது சேர்க்கையும் ஒரு முக்கியமான காரணம். எனவே நட்குங்கால் ஆய்ந்து நட்க வேண்டும் என்பார் அதற்கென்று தனியே இவ்வதிகாரம் படைத்தார் வள்ளுவர். இது நட்புச் செய்தற்கு எளிய தன்மையை விளக்குவதற்காக நட்பு ஆராயும் வகைகளைக் கூறுகிறது, பண்பு கருதிய நட்பை ஆராயும் திறம் இங்கு சொல்லப்படுகிறது.
ஒருவருடன் நட்பாகப் பழகியபின் அவரை விடுதல் எளிதல்ல ஆதலால் ஆராயாது நட்பு கொள்வது மிகவும் கெடுதியானது; ஆராய்ந்து ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளாத நட்பு கடைசியில் அழிவதற்குக் காரணமான துன்பத்தைக் கொடுக்கும்; குணம்நாடி, குற்றமும்நாடி, மிகைநாடி மிக்க கொளல் என்பது வள்ளுவரின் கருத்தியல் ஆதலால் நட்பாவார் குற்றமும் குறையற்ற சுற்றம் கொண்டவரா எனவும் அறிந்து கொள்ளப்பட வேண்டும்; நல்ல குடும்பப் பின்னணியுடன், தன்மீது பழிவந்துவிடக்கூடாதே என்று விழிப்புடன் செயல்படுபவனாக இருந்தால் அவனைப் பற்றி வேறொன்றும் ஆராய வேண்டுவதில்லை; அழஅழத் திட்டி இடித்துரைக்கும் உலக வழக்கு அறிந்த பெரியவர் நட்பைத் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்; ஒருவனுக்குக் கேடு உண்டாகும்போது நட்பின் ஆழம் தெரிந்துவிடும்; அறிவு திரிந்தவ (பேதைய)ரை நட்டலைவிடுதல் ஆதாயம் தருவதே; துன்புறும்வேளை கைவிடும் நட்பினர் செயல் நம் ஊக்கம் குறைவதற்கும் காரணமாவதால் அத்தகையார் நட்பு வேண்டாம்; கேடுற்றசமயம் நட்பைத் துண்டிப்பார் செயலைச் சாகும்போது எண்ணினாலும் நெஞ்சம் வெம்மையுறும். குற்றமற்றவர் தொடர்பே கொள்ளத்தக்கது, ஒத்துவராதார் நட்பை எப்படியாகிலும் விலக்கிவிடுக;
இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.