அதிகார விளக்கம் :-
முறைசெய்தலை 'செங்கோன்மை'யிலும் முறைசெய்யா ஆட்சியைக் 'கொடுங்கோன்மை'யிலும் கூறிய பின் குடிகள் அஞ்சும் செயல்களை ஆட்சித்தலவன் செய்யலாகாது என்பது பற்றி 'வெருவந்த செய்யாமை' என்ற தலைப்பில் தொகுத்துக் கூறுகிறது இவ்வதிகாரம். குற்றத்திற்கு மிகையான ஒறுத்தல், குடிகளை நடுக்குறச் செய்து 'ஆள்பவன் கொடியன்' என உரைக்கவைப்பது, காணுதற்கு அரியவனாயிருப்பது, கடுமையான முகம் காட்டுவது, கடுஞ்சொல் கூறுவது, இரக்கம் காட்டாதிருப்பது, அரசியல் சுற்றத்தொடு கலந்தெண்ணாமல் தன்விருப்பம்போல் முடிவு எடுப்பது, வறிதே சினம் கொண்டுசீறிப் பாய்வது, பண்பிலாதார் சூழ்ந்திருப்பதை ஏற்பது ஆகியன ஆட்சித்தலைவனது அஞசத்தக்க செயல்களாகச் சொல்லப்படுகின்றன. குடிகள் திடுக்கிடும்படியான செயல்கள் செய்பவனது செல்வம் பயன் தராது; விரைந்து கரையும் எனத் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. வெருவந்த செய்யும் நாட்டுத் தலைவனை வெங்கோலன் என அழைக்கிறார் வள்ளுவர்.