அதிகார விளக்கம் :-
செங்கோன்மை என்பது செவ்விய கோல் அதாவது வளையாத கோல் போன்ற நேர்மையான ஆட்சியைக் குறிக்கும். குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் அரசியல் அறத்தைப் பேணுவது ஆட்சியாளரது கடமை. அரசாட்சியில் குற்றத்தையும் குணத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து செம்மையாக ஆள்வதே செங்கோன்மையாகும். வருவாய், வரிமுறை, நீதி, நிர்வாகம், அரசுப்பணி, தேர்வு முறை போன்ற அனைத்து அரசாட்சியின் உறுப்புக்களும் மக்கள் நலங்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியவை. இவை எல்லாவற்றிலும் நேரிய ஆட்சிமுறை தேவை. இவற்றில் உண்டாகும் குற்றங்களை ஆராய்ந்து நீதி வழங்குதல் பற்றியே இவ்வதிகாரம் பேசுகிறது. நீதி வழங்குதல் என்பதை முறை செய்தல் என்கிறார் வள்ளுவர். ஆராய்ந்து எந்த ஒரு பக்கமும் அன்பு காட்டாது தெளிவாகத் தகுந்த ஒறுத்தல் விதிப்பதை முறை செய்தல் எனக் குறிக்கிறார் அவர். நல்லாட்சியே செங்கோலாட்சி.