அதிகார விளக்கம் :-
பொச்சாப்பு என்பது கடமைகளைச் செய்வதில் ஆர்வமற்றும் ஈடுபாடற்றும் இருந்து அவற்றைப் பொருட்டாக மதியாமல் இருப்பதைக் குறிப்பது. அச்சொல் மறதி அதாவது நினைவாற்றல் இல்லாமையைக் குறிப்பது அல்ல. பெருகிவரும் செல்வம், தொடர்ந்துவரும் வெற்றி போன்றவற்றால் எழுகின்ற மகிழ்ச்சியால் பலருக்குக் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சிய மனப்பான்மை உண்டாகிறது. அதன் விளைவாக தாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைக்கூட எண்ணிக்கொள்ளாமல் ஒதுக்கிவைப்பர். இதுவே பொச்சாப்பு எனப்படுவது. எதிர்மறையில், பொச்சாவாமை என்பது மகிழ்ச்சிச் செருக்கால் சோர்வடையாமல் இருப்பதைச் சொல்வது. இன்றைய வழக்குநடையில் பொச்சாவாமையை மிதப்பின்மை எனச் சொல்லலாம்.