அதிகார விளக்கம் :- பாலில் தேன் கலந்தது போல் முத்தம் தித்திக்கும். உடலும் உயிரும் கலந்தது போல் கலந்த அவள் கண்மணியின் கருவிழியை கடந்து நெற்றியிலும் நிறைகிறாள். வாழ்தலுக்கான உயிராக இருந்து காக்கிறாள். அவளை மறக்கவே இல்லை எனவே நினப்பதும் இல்லை. அவரோ கண்ணை விட்டு விலகுவது இல்லை, மை கொண்டு மறைக்கவும் இயலவில்லை, நெஞ்சில் நிலைப்பதால் வெப்பமான உணவு உட்கொள்ளவில்லை. கண்ணையும் இமைக்காமல் அவரை காப்பதால் அன்பற்றவராக இந்த மனிதர்கள் அவரை நினைக்கிறார்கள். அவரோ என் உள்ளத்தில் நீங்காமல் இருக்கிறார்.
காதலர் இருவரும் ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள காதலின் உயர்வைச் சொல்வது இவ்வதிகாரம். களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ள அவர்களிடை, இடத்தாலும் பொழுதாலும், உண்டாகும் சிறிய பிரிவுகவில் ஒருவர் மற்றவரை எண்ணிப் பார்த்துத் தங்கள் காதலின் மிகுதியைப் பேசுகின்றனர். காமம் என்பது உடற்புணர்ச்சி குறித்தது என்றும் காதல் என்பது உள்ளப் புணர்ச்சி குறித்தது என்றும் கூறுவர். ஒருவரையொருவர் தத்தம் கண்ணிலும் நெஞ்சிலும் வைத்துப் போற்றும் காதலரின் உள்ளப் புணர்ச்சியின் பரிமாணத்தை வள்ளுவர் மிக நுட்பமாகவும் கற்பனை நயத்தோடும் இங்கு எடுத்துக் காட்டியுள்ளார்.