பச்சைமுத்துவுக்கும் வாசுவுக்கு நடுவே ஒரு கதிரையை போட்டு அதில் ஒரு பஞ்சு மூட்டையை கிடத்திய சீனு கட்டையால் அடிக்க வாசு அடித்தாங்க முடியாமல் கத்துவது போல் குரல் கொடுக்கலானான்.
பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து அடித்தவன் கை வலிக்கவே ஓய்வெடுக்க அமர்ந்து கொண்டான். பச்சைமுத்து கத்திக் கொண்டிருக்க வாசுவும் ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அது "காப்பாத்துப்பா... காப்பாத்துப்பா... " என்பது மாத்திரமே!
சீனு ஆதி மற்றும் கார்த்திக் வரும் வரை தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, வாசு அவனுக்கு பலிப்புக் காட்டிக் கொண்டிருந்தான்.
"வீரியம் பெருசில்ல காரியம் முக்கியம்னு கம்னு இருக்கேன் மவனே! போட்டேனு வை மண்டை ரெண்டா பொளந்துடும்" சீனு உதட்டை அசைத்து மெதுவாக சொல்லியவாறு கட்டையை தூக்கி வாசுவுக்கு காட்ட நிஜமாகவே அலறிவிட்டான்
"டேய் டேய் என் பையன ஒன்னும் பண்ணிடாதீங்கடா... எனக்கு இருக்குற ஒரே பையன்டா அவன். என்ன கேட்டாலும் கொடுக்குறேண்டா. அவன் என் குடும்ப வாரிசுடா... " பச்சைமுத்து கத்த
"என்ன கேட்டாலும் கொடுப்பியா?" என்றவாறு அவர் முன்னால் அமர்ந்தான் கார்த்திக்.
சுபாஷை பிடிக்க பச்சைமுத்துவை கடத்த வாசு திட்டம் போட்ட பொழுதே ஆதி சொன்னதுதான். ஆதி மற்றும் சீனு பேசினால் பச்சைமுத்து கண்டு பிடித்து விடுவார். கார்த்திக்கின் குரல் அவருக்கு பரீட்சயம் இல்லை. ஆதலால் கார்த்திக் மட்டும் அவரோடு பேசி சுபாஷை பற்றி அறிந்துக் கொள்ளட்டும்.
கார்த்திக்கின் அருகில் அமர்ந்த ஆதியும் என்ன கேட்க வேண்டும் என்று பட்டியலிட கார்த்திக் விசாரணையை ஆரம்பித்தான்.
"சுபாஷ் சந்திரன். அவனை பத்தி சொல்லு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீயும் செத்துப்போன மினிஸ்டர் நல்லதம்பியும் அவனை பார்க்க போய் இருக்கீங்க. இதோ இங்க இருக்கானே உன் மகன் அவன்தான் உங்களுக்கு தேர் ஓட்டிக்கிட்டு. சி...சி... கார் ஓட்டிக்கிட்டு போய் இருக்கான். அதான் அப்பன் மகன் ரெண்டு பேரையும் தூக்கினேன். சொல்லு அன்னைக்கி என்ன பேசினீங்க"
கார்த்திக் கேப்பே விடாமல் பேச பச்சைமுத்து வெலவெலத்துப் போய் ஏற்கனவே முத்து முத்தாக வியர்வையில் நனைந்து கொண்டிருந்தவர் அச்சத்தால் வியர்வையால் குளிக்கலானார்.
அவரின் முகம் தெரியா விடினும் அவரின் உடல் மொழி அவரின் பயத்தின் அளவை காட்டிக் கொடுக்க, யோசனையில் விழுந்தான் ஆதி.
"என்னய்யா மழைல நனைஞ்ச கோழிக் குஞ்சா மாறி இருக்க, சீக்கிரம் சொல்லு இல்ல உன் பையன போட்டுடுவேன்" கார்த்திக் வந்தமர்ந்த பின் வாசு அமைதியாக இருந்தவன் கார்த்திக் சொன்னதைக் கேட்டு மீண்டும் கதற ஆரம்பித்தான்.
"வேணாம் சார் வேணாம் சார்... விட்டுடுங்க சார். எங்கப்பா நீங்க என்ன கேட்டாலும் சொல்லிடுவாரு சார். அப்பா சொல்லிடுப்பா... பெரிய பெரிய கத்தியெல்லாம் வச்சிருக்காருப்பா... சொல்லிடுப்பா... போய்டலாம்"
போனில் கவனம் சிதறாமல் பேசுபவனை பார்த்த சீனு "உலக மகா நடிப்புடா சாமி...." கையை மேலே தூக்கி வணங்கியவன் வாசுவின் காலை தொட்டு கும்பிடுவது போல் கைகளை சுழற்றி கும்பிட வாசுவும் நக்கலாக காலாலையே ஆசீவாதம் செய்து சீனுவை வெறுப்பேத்தினான்.
"சொல்லுறேன் சொல்லுறேன். என் பையன ஒன்னும் பண்ணிடாத" பச்சமுத்து கதற
"அது உன் கைலதான் இருக்கு. சுபாஷ் சந்திரன்" கார்த்திக் பெயரோடு நிறுத்திக் கொள்ள பச்சமுத்து ஆரம்பித்தார்.