உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள்.

Advertisement

Eswari kasi

Well-Known Member
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் திரு.ஷிவ் கேரா உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். படிப்பில் பெரியளவில் இல்லையென்றாலும் தனது விற்பனை, வியாபாரம் மற்றும் பேச்சுத்திறமை மூலம் உயர்ந்த இடத்தை அடைந்தவர் இவர். இவரின் “You can win” புத்தகம் நிறைய பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் சென்ற அவரது பேச்சின் முடிவில் ஒரு கதையை கூறினார். அந்தக் கதையை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். (கதை என்பதால் லாஜிக் இல்லை)

இந்தக் கதையில் நீங்கள் தான் முக்கிய கதாப்பாத்திரம். ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றை பயணியாக, விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்துவிடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது. அப்போது விமானி உங்களிடம், பாராஷூட் ஒன்றை கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார்.

நீங்களும் பாராஷூட்டை எடுத்துக்கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால் சோதனையாக அந்த பாராஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கிவிடுகிறது. காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப் புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

சில நொடிகள் சுற்றிமுற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப் பட்டிருக்கிறது.

முதல் விதி, மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது, கிழக்கு பக்கமாக சென்றால் மட்டும் தான் அந்தக் காட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று ஒரு யோசனையும் வரவில்லை. காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் வேறு ஒரு பக்கம்.

அப்போது அந்த இடத்தில் திடிரென்று ஒரு தேவதை உங்கள் முன் தோன்றுகிறது. உங்களின் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு, உங்களிடம் இரு பொருள்களை நீட்டுகிறது.

ஒன்று மணிப் பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக்கூடிய திசை தெரியும். ஆனால் நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என்று தெரியாது.

தேவதை, உங்களிடம் இந்த இரு பொருள்களையும் காண்பித்து, “நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இருப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்?” என்று கேட்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தேர்வு செய்வீர்கள்? எது உங்களுக்கு மிக முக்கியமானதாக தோன்றும்?

திசையா, நேரமா?

வேகமா, வழியா?

ஆம், உங்கள் யூகமும் பதிலும் சரிதான். திசைகாட்டும் கருவிதான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

இந்தக் கதைக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் இதே நிலை தான். பல பிரச்சினைகள் நமக்கு வரும்போதும், சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது.

ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தெரியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாதக் காரியமே.

வெற்றிக்கு வேகமாக ஓடுவதை காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது.

எனவே உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றிபெறட்டும்.
*திட்டமிடுங்கள் உழையுங்கள் வெற்றி பெறுங்கள்*

படித்ததில் பிடித்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top