KAADHAL SEIVEN KATTALAIPPADI - 1

Advertisement

Harini Madhuravalli

Writers Team
Tamil Novel Writer
காதல் செய்வேன் கட்டளைப்படி..

காதல் 1

“எல்லாம் எடுத்துகிட்டியா? பிரஷ், பேஸ்ட், சோப்பு, டவல். எதையும் மறக்கலையே?” தாயின் குரலுக்கு பதில் அளிக்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள் குகப்ரியா..

“குகா.. உன்னை தான் கேக்குறேன்.. பதில் சொல்லாம போனையே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்..”

“ஒரே கேள்விய எத்தனை தடவை கேட்பீங்க? நானும் பதில் சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன்.. அயம் ட்வென்டி த்ரீ.. டோன்ட் ட்ரீட் மீ லைக் அ சைல்ட்மா..” குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது..

“எதையும் மறந்திட போறேன்னு தான் திரும்ப திரும்ப கேக்குறேன்.. அது உனக்கு எரிச்சலா தான் வரும்.. அங்க போயிட்டு அதை வெச்சுட்டேன் இதை வெச்சுட்டேன்னு போன் பண்ணுவ இல்ல, அப்போ இருக்கு உனக்கு..” தாயின் கண்டிப்பில் மேலும் கடுப்பான குகா

“ஒரு தடவை மறந்ததை எத்தனை முறை சொல்லிக் காமிப்பீங்க?” என்றாள்

“ஒரு தடவைனாலும் மறந்த தானே..” அவரும் விடாது கூறினார்..

“ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன்..” என்றவள் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..

“கிப்ட் எடுத்துகிட்ட தானே?” என்று மறுபடியும் குகாவின் தாய் ஆரம்பிக்கவும்..

“அம்மா உள்ள போங்க.. கடுப்பேத்தாம.. கிப்ட் அகல்யாகிட்ட இருக்குன்னு பத்து தடவை சொல்லிருப்பேன்..” கடுகடுத்தவாறே அடுத்த தெருவில் இருந்த அகல்யாவின் வீட்டிற்குச் சென்றாள் குகப்ரியா..
வீட்டிற்குள் நுழையும் போதே “அத்தை..” என்று கத்திக் கொண்டே சென்றாள்.. அவளை வரவேற்றார் அகல்யாவின் தாய்.

“வா குகா.. எப்படி இருக்க? இளைச்சு போயிட்ட..”

“வேலை அத்தை..” என்றாள் சோகமாக.

“என்ன வேலையோ.. உங்க ரெண்டு பேரையும் நாங்களா வேலைக்குப் போகச் சொன்னோம்.. உங்க சிநேகிதப் பிள்ளைங்க எல்லாம் இப்போ ஒரு குடும்பத்தை நடத்துறாங்க.. உங்களுக்கு எப்போ நாங்க கல்யாணம் செஞ்சு வைக்கிறது.. உங்களோடவே சுத்திக்கிட்டு இருந்த ரோகிணிக்கு நாளைக்கு கல்யாணம்.. உங்களுக்கும் பார்க்க ஆரம்பிச்சுடவா?” என்றார் ஆர்வமாக

“அத்தை.. கொஞ்ச நாள் நாங்க ஜாலியா என்ஜாய் செஞ்சுக்கிறோமே.. அப்பறம் மேரேஜப் பத்தி யோசிப்போம்..” என்று கூறியவள் அப்பொழுது தான் அகல்யாவின் தம்பி சற்று தள்ளி நின்றுக் கொண்டு தன்னை முறைப்பதை கவனித்தவள், அவன் அருகில் சென்று

“மச்சான்.. எப்படி இருக்க? எதுக்கு என்னை முறைக்கிற?” என

“போ போ.. போய் உன் அத்தையே கொஞ்சு.. நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேன்..” என்றான் கோபமாக

“இல்ல மச்சான். அத்தைய இப்போ கரெக்ட் செஞ்சா தானே, நாளைக்கு நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரும்போது என்னை நல்லா கவனிச்சுப்பாங்க.. அதுக்கு தான்..” கண்ணடித்து அவள் கூற, அகல்யாவின் தாய் தலையில் அடித்துக் கொண்டார்..

“பார் மச்சான்.. உங்க அம்மா தலையில் அடிச்சுக்கிறாங்க..”

“அது கிடக்குது.. விடு செல்லம்.. பின்னாடி பழி வாங்கிக்குவோம்..” என்றான் கூலாக

“அப்படிங்கிற..”

“ஆமாங்கிறேன்..”

“நீ இன்னைக்கு காலேஜுக்கு போகலையா?”

“என் செல்லம் ஊர்ல இருந்து வந்துருக்கு.. அதைப் பார்க்காம எனக்கு படிப்பா முக்கியம்..”

“கரெக்ட்டா என் கருத்த மச்சான்..” என்று அவனை கொஞ்சியவள் “உங்க கொக்கா எங்க? இன்னும் ரெடி ஆகலையா?” என்க.
அவன் பதில் அளிக்கும் முன்பு அகல்யாவின் தாயார் “குளிச்சிட்டு இருக்கா குகா..” என்றார்

“என்னத்தை.. இப்போ தான் அவ குளிக்கிராளா? இனி தலைய காய வெச்சு ஹேர் ஸ்டைல், கண்ணுக்கு காஜல், உதட்டுக்கு லிப் க்ளோஸ்ன்னு ஒரு மணி நேரம் ஆக்குவா ரெடி ஆக. சீக்கிரமா அவளை எழுப்பி விட்டுருக்கலாம்ல..” சோகமாக குகா கூற

“அஞ்சு மணிக்கு தானே ரெண்டு பேரும் வந்தீங்க.. ட்ரைன்லையும் தூங்கிருக்க மாட்டீங்க, இன்னைக்கு கல்யாணா வீட்டுலையும் ராத்திரி முழுக்க முழிச்சுட்டு ஆட்டம் தான் போடப் போறீங்க.. அதான் கொஞ்சம் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்.. இங்க இருக்க தூத்துக்குடி.. ரெண்டு மணி நேரத்துல போய்ரலாம்.. ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு இப்பவே போய் என்ன செய்யப் போறீங்க?”

“சரியா ரிசப்ஷனுக்கு போய் இறங்க அவ என்ன எங்களுக்கு வெறும் ப்ரெண்டா? பெஸ்ட் ப்ரெண்ட்.. நியாயமா ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவகூட நாங்க இருந்திருக்கணும்.. ஆபிஸ் வேலைல எங்களால போக முடியலை.. அட்லீஸ்ட் முதல் நாள் ஆச்சும் சீக்கிரமா போகலாம்ன்னு பார்த்தா உங்க பொண்ணு மேக் அப் போட்டே நேரத்தை ஓட்டிடுவா..” என்றவள்,

அகல்யாவின் தம்பியிடம் “டேய் மச்சான், போய் தண்ணி வால்வ அடைச்சு விடு.. தண்ணி நின்னா தான் அவ பாத்ரூம விட்டு வெளிய வருவா.. இல்ல குளிச்சிகிட்டே இருப்பா.. என்ன தான் உருண்டு பெரண்டு குளிச்சாலும் சட்டில இருந்தா தான் அகப்பைல வரும்ன்னு உங்க அக்காக்கு தெரிய மாட்டுது..”

“சரியா சொன்னா பட்டு.. ரொம்ப மேக் அப் போடுறா.. சென்னைல யாரையும் கரெக்ட் செஞ்சுட்டாளோன்னு எனக்கு டவுட்.”

“செஞ்சா செஞ்சுகிட்டு போகட்டும் மச்சான்... அவ போனா தான் நம்ம ரூட் கிளியர் ஆகும். முதல்ல அவளை இந்த வீட்ல இருந்து விரட்டுறதுக்கான வேலையைப் பார்ப்போம்..” குகா சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, அகல்யாவின் தாய் இருவரின் முதுகிலும் ஒன்று வைத்தார்..

“என் மகளைப் பார்த்த ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? வாய்லையே போடுறேன்..” என

“என் மேலையே கை வச்சுட்டீங்கள.. கல்யாணம் மட்டும் முடியட்டும் உங்களை முதியோர் இல்லத்துல விடல என் பேர் குகப்ரியா இல்ல..” சவால் விட..

“இந்த ஸ்கேல எங்க வெச்சேன்னு தெரியலை.” அகல்யாவின் தாய் இருவரையும் அடிப்பதற்காக ஸ்கேலை தேட, குகா வேகமாக அகல்யாவின் ரூமுக்குள் சென்று மறைந்தாள்.

அகல்யாவின் தம்பிக்கு இரண்டு அடிகள் தாயிடம் இருந்து கிடைத்தது..
“பட்டு என்னை அடி வாங்க விட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட..” அவன் கத்த

“அடுத்து தோசை கரண்டி பறக்கும்..” தாயின் வார்த்தையில் அவனும் தனது ரூமிற்குச் சென்று மறைந்தான்..

“எருமை இன்னும் நீ கிளம்பலையா? பத்து மணின்னு சொன்னா பதினொரு மணிக்காச்சும் ரெடியா இருப்பன்னு தான் பத்துன்னு சொன்னேன்.. இப்போ பதினொன்றை ஆகப் போகுது.. பன்சுவாலிட்டியே இல்லைடி உனக்கு..” தலையை உலரவைத்துக் கொண்டிருந்த அகல்யாவிடம் குகா கூற

“மூடிட்டு போய் பூஜை ரூம்ல இருந்து சந்தனத்தை எடுத்துட்டு வா..” என்றாள் அகல்யா..

“கிளம்புறதே லேட். இதுல சந்தனம் ஒரு கேடா உனக்கு?” என்று திட்டிக் கொண்டே அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்..
மேலும் அரைமணி நேரம் தனது அலங்காரத்தை முடித்துக் கொண்டு, இருவரும் தூத்துக்குடியை நோக்கிப் புறப்பட்டனர்..

“லஞ்ச் நம்ம போறதுகுள்ள தீரப் போகுது.. பசியோட என்னை இருக்கவிட்ட உன்னை கடிச்சுக் குதறிடுவேன்..” கையை அகல்யாவின் முகத்திற்கு நேரே காட்டிக் கூறினாள் குகா.

“தின்னிப் பண்டாரம்.. ஹோட்டல்ல வாங்கித் தரேன்..”

“நிஜமா?”

“நிஜமா தான்டி.. கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு வரியா? தூக்கமா வருது.. நைட்டும் ட்ரைன்ல தூங்க விடாம தொணத்தொணன்னு பேசிகிட்டே வந்த..” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

“தூங்கு மூஞ்சி..” என்று கூறியவள் ஹெட்போனில் பாட்டைக் கேட்க ஆரம்பித்தாள்..
இரண்டு மணி நேர பயணத்தில் இருவரும் தூத்துக்குடியை அடைந்தனர்.. அங்கிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்றனர்..

“வாங்க வாங்க.. என்னமா ரெண்டு பேரும் இவ்வளவு லேட்டாவா வரது..” ரோகிணியின் தாய் இருவரையும் கேட்டார்

“இல்ல ஆண்ட்டி ஆபிஸ்ல கொஞ்சம் வேலை..”

“சரி வாங்க சாப்பிடுங்க.. அப்பறம் பேசுவோம்..”

“ரோகிணியைப் பார்த்துட்டு வரோம் ஆன்ட்டி.” அகல்யா கூற
 

Harini Madhuravalli

Writers Team
Tamil Novel Writer
“மணி மூணாகப் போகுது.. வந்து சாப்பிடுங்க.. ரோகிணி எங்கயும் போக மாட்டா.. பத்து நிமிஷம் கழிச்சு அவளைப் பார்க்கலாம்..” என்றவர் கையோடு அவர்களை டைனிங் ஹாலிற்கு அழைத்துச் சென்றார்..

“ஆன்ட்டி சாப்பிடுங்கன்னு சொல்றாங்க.. நீ என் பசி தெரியாம ரோகிணியைப் பார்க்கணும்னு சொல்ற.. அவளைத் தானே ரெண்டு நாள் புல்லா பார்க்கப் போறோம்.. சாப்பாட்டை விட அவ முக்கியமாடி?” உணவை வாயில் வைத்துக் கொண்டே குகா கூற, அகல்யா தலையில் அடித்துக் கொண்டாள்..

“சரியான சாப்பாட்டு ராமி.. உன்னைக் கட்டிக்கப் போறவன் ரொம்ப பாவம்.. தீனி வாங்கிப் போட்டே அவன் சொத்து காலி ஆகிடும்..”

“என் ஆள் கூட பரவால.. உன் ஆள் உனக்கு மேக் அப் செட் வாங்கிக் கொடுக்கவே ஒரு லட்சம் சம்பாதிக்கணும்.”

“ச்சீ பே..”

“நீ பே..”
உணவை முடித்துக் கொண்டு இருவரும் ரோகிணி இருந்த அறைக்குச் சென்றனர்..

“வருங்கால மாமி..” என்று கூறிக் கொண்டே இருவரும் அவளைக் கட்டிக் கொண்டனர்..

“இது தான் வர நேரமாடி? சென்னைல இருந்து நேரா இங்கயே வர வேண்டியது தானே..” தன்னைக் கட்டிக் கொண்ட இருவரையும் விளக்கியவள், முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“புடவை வீட்ல தானே இருக்கு. அதை எடுக்க தான் வீட்டுக்குப் போயிட்டு அங்க இருந்து வந்தோம். இன்னும் பங்க்ஷன் ஆரம்பிக்கலைல அப்பறம் என்ன..” குகா கூற

“ஆரம்பிச்ச பிறகு வந்திருந்தீங்க இன்னும் டென்சன் ஆகிருப்பேன்..”

“கூல் கூல் மாமி..”
மெத்தையில் ரோகிணி அமர்ந்திருக்க அகல்யா அவள் மடியில் படுத்துக் கொண்டாள்..

“மாமி இனிமே இந்த மடியில எங்களுக்கு இடம் இல்லை.. உங்க அண்ணாக்கு மட்டும் தான் இடம்..” சோகமாக கூறுவைதைப் போல் அகல்யா கூற

“ஐயோ.. மாமி, அண்ணா இப்படி எல்லாம் சொல்லாதிங்கடி.. இந்த ஸ்லாங்கே எனக்குப் பிடிக்கலை..”

“அயர் பையனை உஷார் செஞ்சுட்டு இந்த ஸ்லாங் பிடிக்கலைன்னு சொன்னா என்னடி அர்த்தம்..” சொல்லிக் கொண்டே குகாவும் அவள் மடியில் படுத்துக் கொண்டாள்.

“அவரைப் பிடிச்சுருக்கு.. அவரோட பாமிலி பழக்க வழக்கம் எல்லாம் பிடிக்கலை..”

“மாப்பிள்ளைகிட்ட ஈவினிங் சொல்லிடுவோம்டி குகா.”

“சொல்லிக்கோங்க.. நானே அவர்கிட்ட நிறைய டைம் சொல்லிட்டேன்..”

“அவங்க எல்லாம் ரொம்ப ஆச்சாரமா இருப்பாங்க? நீ எப்படி அங்க குப்பைக் கொட்டப் போறன்னு தான் எனக்கு தெரியலைடி..” அகல்யா கூற

“உன்னை மாதிரி சாயங்காலம் குளிக்கிறவங்க தான் அதுக்கு கவலைப்படனும்.. ரோகிணி காலைல குளிச்சுட்டு தான் சாப்பிடுவா.. நீ பார்த்து நடந்துக்க உன் லவ்வர் வீட்ல குளிச்சா தான் சோறுன்னு சொல்லிடப் போறாங்க..”

“சோறுன்னு சொன்னா நீ தாண்டி பல்லைக் காட்டுவ நான் இல்லை..”

“கூழ் ஆனாலும் குளித்து குடி பாலிசிய நானும் ரோகிணியும் பாலோ பண்ணுவோம்.. ஆபீஸுக்கு போற நாள் மட்டும் தான் மார்னிங்கே குளிப்ப.. மீதி நாள் எல்லாம் குளியலுக்கு லீவ் விடுற கேஸ்.. நீ ஆச்சரத்தைப் பத்தி அவளுக்கு கிளாஸ் எடுக்குற பார்த்தியா? எல்லாம் நேரம்..”

“நீ மூடு..”

“நீ மூடு...”

“ச்சை.. ரெண்டு பேருமே மூடுங்கடி.. அவன் அவன் இங்க கல்யாணக் கவலைல இருக்கான்.. நீங்க வேற..” கடுப்புடன் கூறினாள் ரோகிணி..

“மூஞ்சியப் பார்த்தா கவலை மாதிரி இல்லையே.. கலையா தானே இருக்க..”

“போங்கடி.”
மூவரும் சிறிது நேரம் இப்படியே பேசிக் கொண்டிருந்தனர்.. நான்கு மணி ஆனா சமயம் ரோகிணியை அலங்கரிக்க அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வரவும் மூவரும் அரட்டையை நிறுத்தினர்..

“அகல் நீயும் இப்பவே கிளம்ப ஆரம்பி.. அப்போ தான் ஆறு மணிக்கு முன்ன கிளம்புவ..” குகா சிரித்துக் கொண்டே கூற

“உனக்கு என்ன எப்பப்பார்த்தாலும் என்னையே வம்பிழுத்துட்டு இருக்க.. போ”
மாலை ஆறு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைப்பெற ஆரம்பித்தது.. ரோகிணி மேடையில் மணமகனுடன் இருக்க, தோழிகள் இருவரும் லெஹங்கா அணிந்து முதல் வரிசையில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்..

“குகா..” அகல் அவளின் கையைச் சுரண்ட

“என்னடி..”

“என்னை சோலோ பிக் ஒன்னு எடுத்துக் கொடேன்..”

“எதுக்கு?” என்றாள் புருவங்கள் இடுங்க.

“டிபி வைக்கடி..”

“நம்ம மூணு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவை டிபில வை..”

“அடியே ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று கெஞ்ச

“சென்னை போனதும் ஒரு நாள் லஞ்ச் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கணும்.. டீலா?”

“ஒரு போட்டோக்கு இருநூறு ருபாய் செலவு பண்ணனுமா? ஏன்டி இப்படி அநியாயம் பண்ற?” அகல்யா அலுத்துக் கொள்ள

“முடியாதுனா போ..”

“சரி வாங்கித் தரேன்.. இந்தா” போனை அவள் கையில் கொடுத்தாள்..
குகாவும் தோழியை வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தாள்..

இரவு உணவை முடித்துக் கொண்டு தோழிகள் மூவரும் பன்னிரெண்டு மணி வரை பேசிக் கொண்டிருக்க, ரோகிணியின் தாய் தான் அதட்டல் போட்டு மூவரையும் உறங்க வைத்தார்..

மறுநாள் காலை புடவையில் குகாவும் அகல்யாவும் அங்கும் இங்கும் சுற்றியபடி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.. பெண் வீட்டின் சார்பாக ரிஷப்ஷனில் ரோகிணியின் சொந்தத்தில் ஒரு பெண் நிற்க, அவளிற்கு துணையாக குகாவை நிற்க சொல்லியிருந்தார் ரோகிணியின் தாய்..

அகல்யா ரோகிணியின் தாயுடன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்..
திருமணம் இனிதே முடிய, குகாவையே வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ரோகிணியின் தாயின் தோழிக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிருந்தது..
தன் தோழியிடம் குகாவைப் பற்றி அவர் விசாரிக்க

“நம்ம ரோகிணி கூட படிச்சப் பொண்ணு.. இப்போ சென்னைல வேலைப் பார்க்குறா..” என்றார்

“ரோகிணி வேலை பார்க்கிற ஆபிசா?” அவர் கேட்க

“இல்ல இவ வேற கம்பெனில இருக்கா..”

“நம்ம மாறனுக்கு பார்க்கலாம்ன்னு யோசிக்கிறேன்.. நீ என்ன சொல்ற?”

“தாராளமா கேக்கலாம்.. ரொம்ப நல்லப் பொண்ணு..”

“நீ ப்ரீ ஆனதும் அவங்க வீட்ல இதைப் பத்தி பேசிட்டு, என்ன சொன்னாங்கன்னு சொல்லு..”

“ஒரு வாரம் டைம் கொடு.. நான் அவங்க வீட்ல பேசுறேன்..”

“அந்த பொண்ணு லவ் எதுவும் பண்ணுதா?” ரோகிணி காதல் திருமணம் என்பதால் அவர் அவ்வாறு கேட்க

“அப்படி எதுவும் இல்லை.. எதுக்கும் ரோகிணி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுறேன்..”

“சரி.. நல்லது நடந்த சந்தோஷம்..”
அகல்யா குகா இருவருக்கும் அன்று இரவு தூத்துக்குடியில் இருந்து ரயில் என்பதால் ஒன்பது மணிவரை மண்டபத்தில் தோழியுடன் இருந்தனர்..

மணமக்கள் இருவரையும் கலாய்த்துக் கொண்டே பொழுதைக் கழித்தனர்.. கிளம்பும் தருவாயில் குகா

“ஹேப்பி மேரீட் லைப்டி செல்லம்..” என்று ரோகிணியை அணைத்து வாழ்த்துக் கூறிவிட்டு அவள் கணவனிடம் “சென்னை வந்ததும் ட்ரீட் வெச்சுடுங்க..” என்றாள்

“கண்டிப்பா.. உங்க ரெண்டு பேரை பத்தியும் நிறையா சொல்லிருக்கா.. ப்ரீயா இருக்கப்ப வீட்டுக்கு வாங்க..”

“கண்டிப்பா அண்ணா..” என்றவர்கள், விடைபெற்று ஸ்டேஷனிற்கு சென்றனர்.
 

Harini Madhuravalli

Writers Team
Tamil Novel Writer
Hi friends..

இந்த சைட்டுல நான் போடுற முதல் கதை.. கேட்டவுடன் திரெட் கிரியேட் செஞ்சு கொடுத்த மல்லி அக்காக்கு ரொம்ப நன்றி..
முதல் எபி போட்டுட்டேன்.. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க மக்களே..

நன்றி
ஹரிணி மதுரவல்லி
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''காதல் செய்வேன்
கட்டளைப்படி-ங்கிற, அழகான
அருமையான, புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஹரிணி மதுரவல்லி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top