'நாளைக்கு அதிகாலையிலேயே எழுந்து நடைப்பயிற்சி செய்யணும். 5.30 மணிக்கு ஆலாரம் வைப்போம். அப்பொழுது தான் ஆறு மணிக்காவது எழுந்திரிப்போம்' என நினைத்தவள் ஆலாரம் வைத்துவிட்டு உறங்கினாள். காலையில் 'கத்திரிக்காய் கத்திரிக்காய் குண்டு கத்திரிக்காய் ' என்ற பாடல் ஒலிக்கவும் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தவள் அந்த கைப்பேசியை முறைத்தாள். 'இன்றைக்கு கண்டிப்பா நடைப்பயிற்சி செய்யணுமா. இன்னைக்கு செஞ்ச உடனே உடல் எடை குறையப்போகுதா என்ன. உடல் எடை குறையாது தான் ஆனால் அதிகம் ஆகாமல் தடுக்கலாமே. அதுவும் இல்லாமல் இன்றைக்கு ஒரு பிறந்தநாள் விழா வேறு இருக்கிறது. அங்கே போய் நல்ல சாப்பிடுவோம். அதனால இன்னைக்கு நடைப்பயிற்சி செய்வோம். ஆனா தூக்கம் வருதே. சரி இன்றைக்கு ஒரு நாள் செல்வோம்' என முடிவெடுத்தவள் எழுந்து காலைக்கடனை முடித்துவிட்டு வந்தாள். பிறகு தண்ணீரைப் பருகினாள். சமையல் செய்துகொண்டிருந்த அன்னையிடம் "அம்மா நான் நடைப்பயிற்சிக்குப் போய்விட்டு வர்றேன்" என்க இவளது அன்னை அவள் அருகில் வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்துவிட்டு "உடம்பு சரியில்லையா. நல்லாதானே இருந்த என்ன திடீர்னு நடைப்பயிற்சி செய்கிறேன்ங்கிற" "அம்மா நான் உடல் எடையை குறைக்க போகிறேன்." என்று உரைத்தவள் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தூய்மையான குளிர்ந்த காற்று உடலைத் தீண்டிச் செல்லவும் அதை இரசித்தவள் பறவைகளின் 'கீச்சு...கீச்சு....' என்ற ஒலியை கேட்டுக்கொண்டே நடந்தாள். எதிரில் பக்கத்து வீட்டு ஆன்ட்டி வரவும் சிரித்தாள். அவர் பூங்குழலியிடம் "என்ன புதுசா இருக்கே. இன்னைக்கு நீ நடைப்பயிற்சிக்கு வந்திருக்க" எனவும் "சும்மாதானுங்க ஆன்ட்டி இந்த நேரத்துல நம்ம மேல படுற காத்தும் விழுகிற சூரிய கதிர்களும் உடம்புக்கு ரொம்ப நல்லதுனு படிச்சேன். அதான் நடைப்பயிற்சி செய்யலாம்னு வந்தேன். அப்புறம் பார்க்கலாம்ங்க ஆன்ட்டி. நடைப்பயிற்சி செஞ்சிட்டு போய் கல்லூரிக்கு கிளம்ப சரியாகயிருக்கும்" என்று விடைப்பெற்றவள் நடக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து மூச்சு வாங்க ஆரம்பித்ததும் 'என்ன இப்படி மூச்சு வாங்குது. நமக்கு முன்னாடியிருந்து நடக்கிற அந்த ஆன்ட்டி எவ்வளவு நல்லா நடக்குறாங்க. நாம அவங்களுக்கு அப்புறம் வந்து நடக்க ஆரம்பிச்சோம். அதுக்கே இப்படி மூச்சு வாங்குது அவ்வளவு வீக்காவா இருக்கோம்' என யோசித்துக்கொண்டே மணியைப் .பார்த்தவள். அரைமணி நேரம் ஆகியிருந்தது. கல்லூரிக்கு கிளம்ப சரியாக இருக்கும் என வீட்டிற்குள் வந்தவள் குளிக்கச் சென்றாள். கிளம்பி வந்தவள் அப்பா படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளில் கண்களை பதித்தப்படியே "அம்மா சாப்பாடு தயாரா" எனக் கேட்டாள். "பட்டணரவை உப்புமாவா"என்றவள் 'இத சாப்பிட்ட வயிறு கும்முனு ஆகிடும். அப்புறம் பிறந்தநாள் விழாவுல நிறைய சாப்பிட முடியாது. அதனால குறைவா சாப்பிடுவோம்' என நினைத்தவள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினாள். "அம்மா அப்பா கல்லூரிக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன்" என கூறிவிட்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றாள். அங்கே தமிழ் "அங்க எங்க பராக்கு பார்த்துட்டு இருக்க சப்ப மூக்கி" எனக் கூறிக்கொண்டே வந்து நின்றான். "என் கண்ணு. நான் எங்கவேணா பார்ப்பேன் உங்களுக்கென்ன" என முறைத்தாள் இவள்.