மெதுவாக கண்விழித்த மதியழகிக்கு தலை பாரமாக கணக்க மீண்டும் கண்ணை மூடிக் கொள்ள அன்னையின் வசைப் பாடல்கள் தெளிவாக காதில் விழுந்தது.
"பொண்ணா அடக்க ஒடுக்கமா வீட்டுல இருக்காம, ராத்திரில என்ன டியூட்டி வேண்டி கிடக்கு. எப்போ பார்த்தாலும் பாண்ட் ஷர்ட்டுல துப்பாக்கியையும் இடுப்புல சொருகிக்கிட்டு குதுரவால் போல முடியையும் தூக்கி கட்டிக்கிட்டு தரையிலையே கால் படாம குதிச்சு குதிச்சு போக வேண்டியது. சின்ன வயசுல சீயக்கா, கருவேப்பிலை. வெந்தயம், மருதாணி, செவ்விளநீர்ல செஞ்ச எண்ணெய், இன்னும் என்னெல்லாமோ போட்டு தலைக்கு பூச எண்ணெய் செஞ்சு, நானே என் கையாள பூசி விட்டு. ரெட்டை ஜடையை இறுக பின்னி கூந்தல் முடிய நாலடிக்கு வளர்த்து விட்டா ஒண்ணுக்கும் உதவாத போலீஸ் வேலைக்காக நான் ஆசையாசையா, பார்த்து பார்த்து வளர்த்த முடிய வெட்டிட்டா. இவ இப்படியே சுத்திக்கு கிட்டு இருந்தா யார் இவள கல்யாணம் பண்ணிப்பா? நான் எப்படி நிம்மதியா கண்ண மூடுறது? எல்லாம் இவளோட அப்பாவை சொல்லணும். சின்ன வயசுல செல்லம் கொடுத்து கொடுத்தே கெடுத்து குட்டிசுவராக்கிட்டு நிம்மதியா மேல போய் சேர்ந்துட்டாரு. நான் இங்க தனியா புலம்பிக்கிட்டு நிக்குறேன்" அரைமணித்தியாலத்துக்கு மேலாக வீட்டு வேலைகளை செய்தவாறே புலம்பித தள்ளிக் கொண்டிருந்தாள் முத்து லட்சுமி.
பாதி விழித்திருந்த மதியழகிக்கு அன்னையின் புலம்பல்கள் காதில் விழுந்தாலும், வழமையான புலம்பல் என்பதால் கண்ணை இறுக மூடிக் கொள்ள நேற்று பாடசாலையில் கண்ட கோரமுகம் கண்ணுக்குள் வரவே பட்டென்று கண்ணை திறந்தவள் தான் வீட்டில் இருப்பதை உணரவே மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.
இத்தனை வருடங்களாக எத்தனையோ அநீதி இழைக்கப் பட்டு இறந்தவர்களின் ஆவிகளை சந்தித்து உதவி செய்திருக்கின்றாள். கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் முகங்களும், சாலை விபத்தில் இறந்தவர்களின் முகங்களும் கோரமாக இருக்க பல தடவை அஞ்சி நடுநடுங்கி போய் இருக்கின்றாள்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களுக்கேயான குணங்களாக இருக்க, மனிதர்களை கண்டு அஞ்சாதவள் ஆவிகளை கண்டாவது பெண் என்று உணர வேண்டாமா? ஆனால் அவளின் அச்சத்தின் உச்சமாக இருப்பவர்கள் துர் ஆத்மாக்கள் என்றால் மிகையில்லை.
மனதில் பயம் என்பது ஆட்கொண்டாலும் துர் ஆத்மாக்களோடு மோதுவது தனது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று அறிந்திருந்தாலும் மதியழகி துர் ஆத்மாக்களால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் நடக்காது காக்கவென களத்தில் இறங்குவாள். மதியழகிக்கு ஆபத்தென்றால் அவளைக் காக்க அழைத்த உடன் வர ருத்ரமகாதேவி இருக்க இன்னும் என்ன தயக்கம்?
அப்படித்தான் பாடசாலையின் கழிவறையில் இருக்கும் துர் ஆத்மாவை சந்தித்து, துவசம் செய்ய புறப்பட்டாள்.
ஐந்து வருடங்களுக்கு முன் அப்பாடசாலையில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஒருவர் பெண்கள் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும். பெண்கள் கழிவறையில் அவருக்கு என்ன வேலை? அவர் எதற்கு அங்கு சென்றார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருந்துக் கொண்டு இருக்கிறது என்பதே மதியழகி திரட்டிய தகவல்கள்.
கிடைத்த தகவல்களின் படி அவளுக்கு புரிந்தது பெண்கள் கழிவறையில் நுழைந்து பெண் பிள்ளைகளை தவறான வழியில் பயன் படுத்த நினைக்கும் பொழுது தான் அவர் இறந்திருப்பார் என்று. நடந்த சம்பவம் என்னவென்று தெரியாவிடினும் இதுதான் நடந்திருக்கக் கூடும் என்று தெளிவாக புரிந்தது.
நிர்மலை வழியனுப்பியவள் சுவரேறி குதித்து உள்ளே வந்து அங்கே எதிர்பாராத விதமாக அக்ஷையை சந்தித்து, அவனோடு கழிவறையில் நுழைந்தாள்.