சில நாவல்கள் தொடர் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பர்கள். ஆனால் வந்தே தீரவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் சூர்யோதயம் நாவல் படிக்கும் அனைவருக்கும் இந்த நாவலின் தொடர்ச்சி வரவேண்டும், சூர்யாவை, படைத்தவன் கை விட்டாலும் படைப்பாளி {கீதாஞ்சலி சகோதரி} கைவிடகூடாது என்று விரும்பியோர் பலர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்விதமாக வந்த தன்னொளியாளின் தலைவனிவன் நாவலை பற்றி சில வரிகள் சகோதரியிடம்.
சகோதரி, நான் படித்த நாவல்களில், இரு வேறு உணர்வுகளுடன் படித்தது இந்த நாவல் என்று நினைக்கிறேன் சகோதரி. முதலில் எப்படி நல்வாழ்வு வாழபோகிறாள் சூர்யா என ஒருவித எதிர்பார்புடனும் படித்துகொண்டு இருந்தேன். நாவல் இறுதியை நெருங்க, நெருங்க ஒரு கமர்ஷியல் சினிமா போல் பார்த்துக்கொண்டு {படித்துக்கொண்டு} இருந்தேன் சகோதரி. கோர்ட், கடத்தல், சண்டைகள் என உங்களின் மாற்றுயோசி மூலம் நாவலின் வேறு தன்மையும் காட்டியிருக்கிறீர் சகோதரி.
மறுமணம் செய்த பெண்ணின் உணர்வு, உள்ளம், மட்டும் முக்கியமில்லை, அவளுக்கு தீங்கு செய்தவர்களுக்கு தண்டனையும் முக்கியம் என்று நினைத்து அதனை ஒரு சில வரிகளில் முடித்து விடாமல், ஒரு வெற்றி நண்பனையும், அவனுக்கு ஒரு புனைகதையும், அந்த கதையையும் ஒருவித எதிர்பார்ப்புடன் கொண்டு சென்றவிதம் அருமை சகோதரி. இடையில் ஹீரோவுக்கு என்று ஒரு பிளாஷ்பேக், அதற்கு என்று ஒரு நெஞ்சை தொடும் முடிவு என்று வைத்ததுவும் அருமை சகோதரி. அன்பா இரு ஆனால் அடிமையா இருக்காதே என்று எங்களால் {வாசகர்கள்} வசவு வாங்கி கொண்டு இருந்த சூர்யாவுக்கு, ராம்குமார் போல் கணவன் கிடைத்தால், அடிமையாக இருந்தாலும் தப்பு இல்லை போல் தெரிகிறது உதயா, இனி உன் வாழ்வில் என்றும் உதயமே என்று எங்களையே சொல்லவைத்த விதம் அருமை சகோதரி.
ராம்குமாரா :-
கண் இமைப்போல் காக்கவே..
அவளது கண்கள் உன்னை ஈர்த்தது..
ஆணாய் உன்னை பார்க்கும் வரை
உன்னை உணருவது கடினம்..
உணர இயங்க வேண்டும் இதயம்..
துடிக்க மறந்ததை
துடிக்க செய்துவிடு.
{ கவிதை பாத்திமா சகோதரி }
இதயத்தையும், அவளின் இயல்பையும் மீட்டான், தன்னொளியாளின் தலைவன்.
நாவலின் ஆரம்பத்தில் வரும் சகோதரி ராசியின் கவிதை, சகோதரி ச.பு.நிவேதா அவர்களின் சில பதிவுகள் வெகு அருமை.{ இவரின் நாவலை படிக்க தவறியிருக்கிறேன் }.
நாவலில் மாமனரை அப்பா என்று அழைக்கும் ராம், உதயாவிடம் அடி வாங்கி ரத்தகாயத்துடன் இருக்கும் ராம், உதயாவிடம் சரி, சரி என்று பின் பிளேட்டையே திருப்பி போடும் ராம், தாய்க்கு பின் தாரம் மட்டுமா, தந்தைக்கு பின்னும் தன்னவன் என்று நிற்கும் ராம், குருவிடம் நட்பு பாராட்டும், நட்பு போராடுமான ராம், மச்சானிடம் சீறும் ராம், எதிரிகளிடம் விஸ்வரூப ராம், ஊர் மக்கள், பணியாளிடம், உறவுகளிடம் ஸ்ரீராமனாக நிற்கும் ராம் என்று இன்னும் இன்னும் சொல்லலாம் ராமை பற்றி.
தன்னொளியாக எழுதும் கட்டுரை மூலம் வீழ்ந்தால் விதையாவோம், தற்கொலையை கொலை செய், ஜல்லிக்கட்டு பற்றிய நினைவு என்று நிற்கும் சூர்யா, இல்லை இனி என்றும் உதயா. விதவை பெண்ணின் உணர்வை, சான்றிதழின் குலறுபடி என கலங்கும் உதயா. அப்பாவுக்காக மனம் மாறும் உதயா. வலியை அனுபவித்த இதயத்துக்கு தான் வலி தெரியும் என்று உரைத்து, குருவிடம் மல்லு கட்டி அவனுக்கே தந்தையாகும் உதயா. கணவனுக்காக கோர்ட்டில் கண்ணீருடன் தடம் மாறும் உதயா. கணவன் காப்பற்றபட்டான் என்று தெரிந்தவுடன் விறுவிறுப்பான உதயா. அன்புக்கு அடிமையாகும் உதயா என இன்னும் இன்னும் சொல்லலாம் உதயாவை பற்றி.
தாயால் ஏற்பட்ட மனகாயத்தால் பெண்களை எட்டி நிறுத்தும் குரு, நண்பனின் காதலை கண்டபடி கடுப்படிக்கும் குரு, ராமின் நட்புக்கு மல்லு கட்டும் குரு, வில்லன்களுக்கு கிலி ஏற்படுத்தும் குரு, உதயாவிடம் மல்லுகட்டி பின் அவளிடமே தன் தந்தையை கண்டு தயா என உருகும் குரு, நண்பனுக்கு தீங்கு என்றவுடன் பொங்கும் குரு என குருவை பற்றி குரு,குரு என்று சொல்லி கொண்டேபோகலாம்.
மாப்பிளை சரியானவரா என சோதிக்கும் ராமன், ஆனாதை குழந்தைகள் தன் பிள்ளை போல் வளர்க்கும் முதிர் கன்னி கெளரி அம்மா, தம்பிக்கு உயிர் பிச்சை கேட்கும் ஸ்ரீஜா, சொத்துக்கு ஆசைபட்டு சோரம் போன குணசீலன், பெரியவர் பிள்ளைகள் தன் பிள்ளை போல் நினைத்து, கணவனை கண்டித்து திருத்தும் சித்தி சந்திரா, தன் தவறை ராமின் மூலம் உணரும் செல்வம், பணம் வந்ததே என பிலகனம் பாடும் ஷேண்பா, என இன்னும் பலரை பற்றி கூறி கொண்டே போகவேண்டும் என்று ஆசை வருகிறது, ஆனால் கடிதத்தின் நீளம் கருதி பயம் வருகிறது.
அன்பானஉறவுக்கும், உணர்வுக்கும், கட்டுபட்டு மறுமணம் செய்ய நினைக்கும் பெண்கள், குழந்தை இருந்தால், அதன் உணர்வையும் கவனியுங்கள், என்பதை குரு, அவன் தாயார் சுதா மூலமாக மென்மையாக சொன்ன விதமும் அருமை சகோதரி. சில பதிவுகள் சினிமா தன்மையில் இருந்தாலும், இறுதி பதிவு நெஞ்சை நிறைந்தது சகோதரி. அருமை நாவலுக்கு என் வாழ்த்துகள் சகோதரி.