Ramadan 2020- life of prophet Idris day 5

Advertisement

fathima.ar

Well-Known Member
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இயற்பெயர் எக்னூஹ் என்றும் குனூஹ் என்றும் சொல்லப்படுகிறது. அரபியில் இவர்கள் பெயர் ஹெர்மிஸ் இத்ரீஸ் அல்முதுல்லுத் பின் பினாத் என்பதாகும். இதன் பொருள் மூன்று பேரருளைப் பெற்றவர் என்பதாகும். தங்களது மூதாதையரின் போதனைகளையும், வழிமுறைகளையும், ஆன்மீக மேம்பாடுகளையும் மக்களுக்கு போதித்து வந்ததால் இத்ரீஸ் என்ற பெயர் வந்தது. இவர்களின் மொழி சுர்யானி ஆகும். இவர்கள் ரஸூலாகவும், நபியாகவும் இருந்தார்கள். இவர்கள் துவக்கத்தில் எகிப்துக்கும், கிரீஸுக்கும் அனுப்பப்பட்ட நபியாகிய காஸீமுன் என்பவர்களின் ஆன்மீக மாணவர் ஆவார்..

இவர்கள் மீது 30 ஷுஹ்புகள் இறக்கப்பட்டன. நட்சத்திரக் கணக்கை முதன்முதலில் உலகிற்கு கொண்டு வந்தவர்கள் இவர்கள்தான். அதேபோல் மக்களுக்கு எழுதுகோலை கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். ஆடைகளை தைத்து உடுக்கும் முறையை கற்பித்தார்கள். யுத்தத்தில் உபயோகப்படுத்துவதற்கான ஆயுதங்களை புழக்கத்தில் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் பாதை போராடியவர்களுள் முதலாமானவர்கள் இவர்கள்தான்.

அல்லாஹ் வழிதவறிய காபீலுடைய சந்ததியினரை நேர்வழிப்படுத்துமாறு கூறி அவர்களுக்கு நபித்துவத்ததைக் கொடுத்தான்.
இத்ரீஸ் நபி காலத்து மக்கள் வானம், பூமி, இதர படைப்புகளை சக்தி மிக்கவை என்று நம்பி செயல்பட்டு வந்தனர்.
தமது சமுதாய மக்களில் 7 பேர்களைத் தேர்ந்தெடுத்து அல்லாஹ்வைப் பற்றி அச்சுறுத்தியும், அவனிடம் எப்படி விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதித்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்று அதன்படி செயல்பட ஆரம்பித்தனர். பிறகு இவர்களின் எண்ணிக்கை 1000 ஆக பெருகியது.
அவர்களின் 100 பேரை தேர்ந்தெடுத்தார்கள். அதிலிருந்து 70 பேரை தெரிவு செய்து அதிலிருந்து 10 நபர்களை பொறுக்கி எடுத்துக் கொண்டார்கள்.இத்ரீஸ் நபி அல்லாஹ்விடம் துஆ கேட்க அந்த 10 பேரும் அமீன் சொன்னார்கள். அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொண்டு 3 வஹீயை இறக்கினான்


தொழக் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் நோன்பு நோற்கவும் கற்றுக் கொடுத்தார்கள். ஜகாத்தும் கொடுத்து வருமாறு வற்புறுத்தினார்கள். கழுதை, பன்றி ஆகியவற்றின் இறைச்சியை உண்ணக் கூடாதென்று தடுத்தனர். பொழுதுபட்டு தலைப்பிறையைக் கண்டபின் இறைவனுக்குப் பலிகொடுக்குமாறு இவர்கள் போதித்தார்கள்.

முப்பது தடவை வானுலகம் சென்று மறைவான பல இரகசியங்களை அறிந்து வந்தார்கள்.நூஹ் நபி காலத்தில் வரக்கூடிய பிரளயம் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

மக்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதைக் கண்ட வானவர்கள் யா அல்லாஹ் நீ இந்த மனிதர்கள் மீது மாபெரும் கிருபை செய்தும் அவர்கள் உனக்கு மாறு செய்கிறார்களே! நாங்கள் மட்டும் புவியில் இருந்தால் எக்காலமும் உனக்கு மாறு செய்யாமல் இருப்போமே என்று கூறினார்கள்..

அதற்கு நான் மனிதர்களிடத்தில் காம இச்சையையும், மன இச்சையையும் ஏற்படுத்தியுள்ளேன். இந்த இரண்டு குணங்களினால்தான் அவர்கள் பாவங்களை அதிகம் செய்கிறார்கள். இந்த இரண்டு குணங்களை உங்களிடம் ஏற்படுத்தி விடுவேனாயின் நீங்களும் அவர்களைப் போலவே தீமைகள் அதிகம் செய்ய முற்பட்டு விடுவீர்கள் என்று அல்லாஹ் சொன்னான். அதற்கு கண்டிப்பாக நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். அவர்களை சோதிப்பதற்காக வானவர்களிலேயே விசேசமாக இருந்த ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மனித உருவத்தையும், குணங்களையும் கொடுத்து பூமியில் வாழ அனுமதித்து சில நிபந்தனைகளையும் விதித்தான். அதாவது அவர்கள் பூமியில் வாழும்வரை இறைநிராகரிப்பு, மது அருந்துதல், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல் போன்ற தீய காரியங்களை செய்யக் கூடாது என்று நிபந்தனை விதித்தான்.


அந்த இருவானவர்களும் பூமியில் பகலெல்லாம் தங்கிவிட்டு இரவு வந்ததும் இஸ்முல் அஃலம் ஓதியவாறு வானத்திற்குச் சென்று இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது.

ஒரு நாள் இவர்கள் இருவரும் பூமியில் தங்கியிருந்தபோது, ஜொஹ்ரா என்ற அழகிய பெண் இவர்களிடம் வந்து தன் கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்துவிட்டதாகவும், தன்னை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். அவளின் அழகு அவர்களை வசீகரித்து விட்டது. அந்தப் பெண் அடிக்கடி வந்து மனித ரூபத்திலுள்ள இந்த வானவர்களிடம் பழக ஆரம்பித்தாள்...

அவளுடன் உறவு கொள்ள அவ்விருவரும் ஆசைப்பட்டனர். அதற்கு அவள் மது அருந்த வேண்டும், ஒருவரை கொல்ல வேண்டும், விக்கிரகத்தின் முன்னால் தலை வணங்க வேண்டும். பிறகுதான் என்னோடு உறவு கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தாள். அதற்கு அல்லாஹ் நமக்கு தடை விதித்திருப்பதால் இதை செய்ய முடியாது என்று சொன்னார்கள். அவள் போய்விட்டாள். ஆனால் அவளின் பிரிவு இவர்களிருவரையும் வாட்டி எடுத்தது. பிறகு இரண்டு, மூன்று முறை அப்பேரழகியை கண்டு தங்கள் இச்சையை தெரிவித்தனர். அவளும் அந்த நிபந்தனைகளை விதித்தாள். இவர்களும் மறுத்ததால் அவள் திரும்பிக் கொண்டிருந்தாள்..

ஒருநாள் அந்தப் பேரழகி மீண்டும் வந்தாள். இச்சமயம் அவளது கையில் ஒரு மதுப்பாட்டில் இருந்தது. அவ்விரு வானவர்களும் அவளை நெருங்கினர். இதையாவது குடியுங்கள் என்று மதுபாட்டிலை அவர்கள் முன் நீட்டினாள். மது அருந்துவது பெரிய குற்றமில்லையே என்று கருதிய அவர்கள் அதை அருந்தத் துவங்கினர். போதை தலைக்கேறியதும், அவளை கட்டிப்பிடிக்க முயற்சிக்கும்போது அந்த அழகி எனக்கு இஸ்முல் அஃலத்தை கற்றுத் தாருங்கள். நானும் வானம் செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறினாள். அவர்களும் அந்த அற்புதமான இஸ்முல் அஃலத்தை அவளுக்கு கற்றுக் கொடுத்து உடலுறவு கொண்டனர். இதை ஒருவன் பார்த்து விட்டான். எங்கு அவன் யாரிடமும்சொல்லி விடுவானோ என்று பயந்து அவனை கொல்லவும் செய்தனர். மக்கள் இதைத் தெரிந்து அவர்களை விரட்டி செல்லவே ஒரு கோயிலுக்குள் புகுந்து விக்கிரக ஆராதனை செய்பவர்களோடு சேர்ந்து விக்கிரகத்தின் முன் ஸஜ்தா செய்தனர்..

அந்த ஜொஹ்ரா இஸ்முல் அஃலத்தைக் கொண்டு மூன்றாம் வானம் வரை சென்று விட்டாள். அவளை அல்லாஹ் ஒரு நட்சத்திரமாக்கிவிட்டான். அவளைத் தொடர்ந்து வானவர்கள் இருவரும் வானத்தில் பறக்க முற்பட்டனர். ஆனால் அல்லாஹ் அவர்களின் பறக்கும் சக்தியைப் பிடுங்கிக் கொண்டதால் அவர்களால் பறக்க முடியவில்லை. அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த குற்றங்கள் புரிய ஆரம்பித்தது..
அவ்விருவரும் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து விபரங்களை சொல்லி அல்லாஹ்விடம் தங்களை மன்னித்து அருளும்படி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அல்லாஹ்விடம் இத்ரீஸ் நபியும் துஆ கேட்டனர்.
அதற்கு அல்லாஹ் அவர்கள் செய்த குற்றத்திற்கு தண்டனையை இவ்வுலகில் பெற்றுக்கொள்கிறார்களா? மறுமையில் பெற்றுக் கொள்கிறார்களா? என்று கேட்கச் சொன்னான். நபி அவர்களும் கேட்டார்கள். மறுமையில் தண்டனையை எங்களால் பொறுக்க இயலாது. எனவே இம்மையிலேயே தண்டனையை பெற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்..

ஒருநாள் ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது வெயிலின் உஷ்ணத்தால் மிகவும் அவதிப்பட்டார்கள்.
சூரியன் இவ்வளவு தூரத்திலிருக்கும்போதே நாம் அதன் உஷ்ணத்தை தாங்க முடியவில்லையே! அதனை சுமந்து கொண்டிருக்கும் வானவர் எப்படி தாங்குவார் என்று மனதிற்குள் எண்ணி, யா அல்லாஹ் சூரியனைச் சுமக்கும் வானவருக்கு அதன் உஷ்ணத்தால் சிரமம் ஏற்படாதவாறு அருள் புரிவாயாக! என்று துஆ செய்தார்கள்.


அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொண்டு சூரியனைத் தாங்கும் வானவர் மீது கிருபை செய்தான். அந்த வானவர் அல்லாஹ்விடம் இதுபற்றி கேட்டதற்கு இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உம்மீது இரக்கம் கொண்டதால் இது நடந்தது என்று சொன்னான். உடனே அந்நபி மீது அந்த வானவருக்கு அன்பு சுரந்தது. அவர்களைப் பார்க்க வேண்டுமென்று ஆவலும் ஏற்பட்டது.
அந்த வானவரும் பலமுறை முயன்று ஒரு தடவை சந்தித்தார்கள். இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் தாங்கள் சொல்லி எனது மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போட சொல்லுங்கள். நான் இன்னும் பூமியில் இருந்து அல்லாஹ்வை அதிகம் வணங்க விரும்புகிறேன் என்று இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் உத்திரவு பெற்று அந்த வானவர் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுமந்து சூரியனுக்கருகில் விட்டுவிட்டு, மலக்குல் மவ்த்திடம் வந்து, இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மவ்த்தை தள்ளிப் போட வேண்டினார்கள்.
அதற்கு மலக்குல் மவ்த் அது என்னால் ஆகக் கூடியது அல்ல. ஆனால் அவர் இன்னும் எத்தனை நாள் வாழ முடியும் என்று கணக்குப் பார்க்க முடியும் என்று சொன்னார். அவரது மரணம் சூரியனருகில் நிகழும் என்று சொன்னார்.
அவரை நான் சூரியனருகில் விட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னதும், இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்படியானால் அவர் இந்நேரம் மறைந்திருக்க வேண்டுமே! நீங்கள் அவரைப் போய் பாருங்கள் என்று சொன்னார்.
அங்கு போய் பார்த்ததும் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறந்துவிட்டிருந்தார்கள்.


ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணத்தின் போது ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 100. அதன்பிறகு 200 வருடங்கள் கழித்துதான் அல்லாஹ் அவர்களுக்கு நுபுவ்வத் வழங்கினான். 150 வருடங்கள் நபியாக மக்களுக்கு சேவை செய்தார்கள். வானத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படும்போது அவர்களது வயது 450.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
ரஸூல்- நபிமார்களில் சிலரே ரஸுல் என்னும் அந்தஸ்தை பெறுவர்..
இறைவேதங்கள் இவர்களுக்கு ஜிப்ரீல் அலைவஸல்லம் மூலம் அனுப்பப்படும்..

ஷுஹ்பு - மார்க்க சட்டங்கள் கட்டளைகள்

ஜகாத் - செல்வத்தில் உயந்தவர் ஏழைகளுக்கு கொடுப்பது

இஸ்முல் அஃலம் அல்லாஹின் திரு பெயர்கள்

ஸஜ்தா --தலைவணங்குதல்
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Sure...
நன்றி...தெளிவாகவே உள்ளது....
மீண்டும் ஒரு முறை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது....
Very nice...you are taking sincere effort to post this...
வாழ்த்துக்கள்....
என்றும் உலக நன்மைக்காக பிரார்த்தனை கள் செய்வோம்....
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top