தீண்டல் - 6
“ஹாய் மாமா, நீங்க என்ன இந்த பக்கம்?...” என அவன் அவருக்கு அதே கேள்வியை திருப்பி கேட்டுவைக்க,
“அண்ணே தம்பி சொந்தக்கார தம்பி போல. நீங்க என்னன்னா கோவமா பேசுறீங்க?...” முனீஸ்வரனின் பக்கத்தில் நின்ற ஒருவர் கேட்க,
“இவன் வேற நேரங்காலம் இல்லாம. இவன் கூட இருக்கறதா மறந்துட்டு இந்த பயகிட்ட பேச்சுக்குடுத்துட்டேன்” என நொந்துகொண்டு உச்சந்தலையை சொரிந்தவர்,
“ஆமாய்யா, நீ போ, நான் பேசிட்டு வாரேன்...” என்று அவரை வழியனுப்பிவிட்டு வசீகரனை பார்த்தார். அவனோ இவரின் தவிப்பை கண்டுகொண்டவன் போல கண்கள் மின்ன அடுத்து என்ன பேச போகிறார் என்று எதிர்பார்த்து நின்றான்.
“ஏய் என்ன என்கிட்டையே லந்தை காட்டுறியா? நீ எதுக்குடா இங்க வந்த...”
“பொண்ணு பார்க்க வந்தேன். என்ன இப்ப?...” வசீகரனும் வம்பாய் பேச,
“டேய்...” என்று பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது முனீஸ்வரனால். பொது இடம், என்ன என்று விசாரிக்க ஆரம்பித்து இவன் உளறி வைத்தால் என்னாவது என்றே கோபத்தை அடக்கினார்.
“அதுக்கு இங்க ஏன்டா வந்த?...”
“இந்த வாடா போடா பேச்செல்லாம் வேண்டாம். பேசினா திரும்ப நானும் பேச யோசிக்க மாட்டேன்...” என எச்சரித்தவன்,
“இந்த கோவில் என்ன உங்க வீட்டுக்குள்ளையா இருக்குது? பேசும் போது யோசிச்சு பேசுங்க மாமனாரே. இல்லைன்னா இப்படித்தான் அடிக்கடி மீசையில மண்ணு ஓட்டும்...” என்றான் வசீகரன்.
“தியா அப்பா கூப்பிடறாரு. வா...” பார்கவி சொல்ல பயத்துடன் எழுந்து வந்தாள் சந்தியா உடன் சந்நிதி.
“என்னன்னு சொன்னாங்களா?...” சந்நிதி கேட்க,
“என்ன புதுசா கேட்க? என்னைக்கு அவர் விவரம் இன்னதுன்னு நம்மக்கிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கார்?...” என்ற தாயை இயலாமையுடன் பார்த்தாள் சந்நிதி.
“படிப்பு முடியவும் ஒரு வேலையை தேடிட்டு உங்களை எங்கையாச்சும் கடத்திட்டு போய்டறேன்மா...” சந்நிதி சொல்ல,
“என்ன பேச்சு இது நிதி? அப்பா கண்டிப்பானவர் தான். அதுக்குன்னு அப்பா இல்லைன்னு ஆகிடுமா? இதுவும் நம்ம நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ...”
“இந்த சப்போர்ட் உன்னை எங்க நிறுத்துமோ தியா?...” சந்நிதியும் விடாமல் சொல்ல,
“கூப்பிட்ட உடனே வர தெரியாதா? ஆடி அசஞ்சு தேர் மாதிரி வந்து நிக்கிறீங்க? அறிவில்ல. ஞானசூனியங்களா...” என்ற முனீஸ்வரனின் கோபக்குரலில் மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்த மூவரும் வேகமாய் ஒரே நொடிக்குள் அவரின் முன்னால் சென்று நின்றனர்.
“என்னம்மா இதெல்லாம்? என் மேல என்னைக்குமே அப்பாவுக்கு நம்பிக்கை வராதா? கடவுளை நம்பறவர் என்னை ஏன் நம்பலை. நானா யாரையுமே பார்க்கலை. என் கண் எதிர்க்க யாரும் கடந்து போனா கூட நான் நிமிர்ந்து பார்க்க கூடாதா?...” சந்தியாவின் அழுகை அந்த கோவிலின் பிரகாரத்தினுள்ளேயே பொதிந்துபோனது.
“என்னவோ சொன்ன நல்லதுக்கு பன்றாருன்னு நினைக்க சொல்லி. இதுவா நல்லது?...” சந்நிதி பேச,
“இதை உன்னால அப்பாக்கிட்ட சொல்ல முடியுமா நிதி?...” சந்தியாவின் கேள்வியில் தங்கையின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.
“தியா கிளம்புவோம்..."
"அடுத்த கோவிலுக்காம்மா?...” அவளின் வார்த்தைகளில் தான் எத்தனை வலி?
“உன்னை பெத்ததுக்கு என்னை மன்னிச்சிடும்மா. இத தவிர என்னால வேற என்ன முடியும்னு தெரியலை...” பார்கவி கைகூப்பிவிட மகள்கள் இருவரும் அவரை பதறி கட்டிக்கொண்டனர்.