நதியின் ஜதி ஒன்றே! 17 1 12677 நதியின் ஜதி ஒன்றே 17 பெண் பார்க்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது. அஜய்யிடம் பேசிவிட்டு கீழிறங்கி வந்த ஜீவிதா ஓர் இடமாக பார்த்து அமர்ந்து கொண்டாள். கல்யாண் அவளிடம் பேச முனைய, மறுப்பாக தலையசைத்தாள் பெண். அவளின் முகமும் சொல்லி கொள்ளும் படி இல்லாததால் கல்யாண் விலகி நின்றுவிட்டான். அவளை வேறொருவரும் கவனித்து கொண்டே தான் இருந்தார். அவரின் பார்வையில் ஆராய்ச்சி. தாரணி தங்கையிடம் வந்து மகளை கொடுக்க, கல்யாண் “என்கிட்ட கொடு” என்று வாங்கி கொண்டு சென்றுவிட்டான். “ஹேய் பியூட்டி எங்க என் நண்பன்?” ஆனந்தன் கேட்டபடி வர, ஜீவிதா மாடியை நோக்கி விரல் நீட்டினாள். “ஏன் மேடம் வாய் திறந்து சொல்ல மாட்டிங்களா?” ஆனந்தன் கேட்டபடி மேலேறினான். “பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட வந்துட்டாங்க” என்று யாரோ சொல்ல, எல்லாமே அவர்களை வரவேற்க வாசலுக்கு சென்றனர். ஜீவிதாவிற்கு அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. பின் வாசல் வழியே முந்திரி காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அஜய் மொட்டை மாடியிலே இருக்க, “டேய் இன்னும் கிளம்பாம இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று ஆனந்தன் கேட்டு கொண்டிருந்தான். “பாரு பொண்ணு வீட்ல இருந்து வந்துட்டாங்க” என்று கீழே காரை காட்ட, அஜய் கண்களுக்கு அவர்கள் தெரியவில்லை. மற்றொரு பாதையில் சென்று கொண்டிருந்த ஜீவிதா தான் தெரிந்தாள். யாரோ இல்லையே அவள். ஜீவிதா. விட்டுவிட முடியாது. மனம் மாற்றி கொள்வாளா? சந்தேகமே. வாய்ப்பில்லை. அடம் தான் அவளின் அடையாளம். அதுவும் சில வருடங்களே இந்த எண்ணம் எனும் பொழுது, நான் தான் மாற வேண்டுமா? ஆனால் ஏன்? நாங்கள் எப்படி திருமண வாழ்க்கைக்கு சரிப்பட்டு வருவோம்? திருமணம் என்றால் அதில் என்னவெல்லாம் அடங்கும் என்பது நினைவிற்கு வர, தலையை உலுக்கி கொண்டான். ஜீவிதா என்பவளின் வட்டத்துக்குள் மாட்டி கொண்டு சிக்கி தவித்தான்! “என்ன அஜய்” ஆனந்தன் அவன் தோள் தொட்டான். அஜய் தலை கோதி கொண்டான். “அஜய். அஜய்” என்று அவனை தேடி குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. “வா கீழே போலாம், உன்னை கூப்பிடுறாங்க பாரு” ஆனந்தன் அழைக்க, நொடிகளில் எடுத்துவிட்டு முடிவுடனே கீழிறங்கினான். பெண் வீட்டில் எல்லாம் அமர்ந்திருக்க, உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. “இதோ அஜய் வந்துட்டான்” என்றனர் யாரோ. பெண் வீட்டில் எழுந்து நின்றனர். பெண்ணை பெற்றவர் இவனை நோக்கி கை நீட்ட, அஜய் கை குலுக்காமல் பிடித்து கொண்டவன், “ஸாரி அங்கிள்” என்றான். அவர் புரியாமல் பார்க்க, பேச்சு சத்தமும் அடங்கி போனது. “என்ன அஜய்? எதுக்கு ஸாரி?” சங்கர் கேட்டார் மகனிடம். “அப்பா” அஜய் அவரை பார்க்க முடியாமல் திணறினான். “என்னாச்சுங்க” பெண்ணை பெற்றவர் கேட்க, அஜய் உதவிக்கு பெரியப்பாவை தான் பார்த்தான். அவர் கோவமாக முகம் திருப்பினார். அவரின் ஊகம் சரியாகி போனதே. நடந்ததை அவதானித்திருந்தவர் மகனுக்கு முகம் கொடுக்கவில்லை. அஜய்க்கு இப்போது வேறு யாரும் இல்லை. எல்லோரையும் சமாளித்தாக வேண்டும். தவித்து போனான். “மாமா” என்று சகுந்தலா அஜயின் பெரியப்பாவை அழைத்தார். அவர் தம்பி மனைவியை பார்க்க, கெஞ்சுதலாக பார்த்தார். ‘அப்போ உனக்கு முதல்லே எல்லாம் தெரியுமா?’ அவரின் கண்கள் கோவமாக சகுந்தலாவிடம் கேள்வி கேட்டது. சகுந்தலா “ப்ளீஸ் மாமா” என்றார். அஜய்க்கு அம்மாவின் சடன் ஆதரவு மகிழ்ச்சி என்றாலும், அவருக்கு என்ன தெரியும், எப்படி தெரியும் என்ற கேள்வியும் தோன்றியது. “சகுந்தலா என்ன நடக்குது இங்க?” சங்கர் நடப்பதை புரியாமல் கேட்டார். “அஜய் என்னாச்சுடா?” ஆனந்தன் நண்பனிடம் கேட்டான். “எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. இதுக்கு எந்த பதில் சொன்னாலும் சரியா இருக்காது. மன்னிப்பை தவிர. ப்ளீஸ்” என்று இரு கைகளையும் கூப்பியவன், மணப்பெண்ணாக நின்றிருந்தவளிடமும் தனியே மன்னிப்பை வேண்டி, வேகமாக வெளியே சென்றான். அங்கிருந்த அத்தனை பேரும் பிரம்மை பிடித்தது போல அஜயையவே பார்வையால் தொடர, அவன் ஓடி சென்று ஜீவிதாவை பிடித்தான். சற்று தொலைவே சென்று விட்டிருந்தாள் பெண். உரிமையாக அவளின் கை பற்றி நடந்த அஜய் செயலாலே இவர்களுக்கு செய்தி சொல்லிவிட்டான். அவர்கள் கட்டிடத்தில் இருந்து நேர்சாலை என்பதால் தூரத்தில் நடப்பதை எல்லோராலும் தெளிவாக பார்க்க முடிந்தது. “அது ஜீவிதா தானே?” யாரோ கேட்க, “ஆமா” என்றனர் மற்றவர் யாரோ. “என்னங்க நடக்குது இங்க?” பெண்ணை பெற்றவர் கோவத்துடன் கேட்டார். சங்கர் முகம் கறுத்து போனது. தன் மகனா இப்படி? நம்ப முடியாமல் அமர்ந்துவிட்டார். சகுந்தலா கணவனையே கவனித்திருந்தவர், உடனே அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தார். பெரியப்பா பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசி கொண்டிருக்க, சங்கர் தண்ணீர் வாங்காமல் மனைவியை பார்த்தார். “எங்களை மன்னிச்சிடுங்க. தண்ணீர் குடிங்க, ப்ளீஸ்ங்க” என்றார் அவர். சங்கருக்கு தண்ணீர் நிச்சயம் தேவைப்பட்டது. வாங்கி மடமடவென குடித்தார். சகுந்தலா திரும்பி கல்பனா வீட்டினரை பார்க்க, அவர்களும் பேஸ்தடித்து தான் இருந்தனர். பலராம் பற்றிய அச்சம் அவர்கள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. “அடிச்சக்கை” என்று சேனாதிபதி தான் உற்சாகம் கொண்ட ஒரே ஆள். “மாமா” என்று காமாட்சி அவரை அடக்க, “கண்ணு நல்ல விஷயம் தானே நடக்குது. ஸ்வீட் கொடு எல்லோருக்கும்” என்றார் அவர் சத்தமாக. “எதுங்க நல்ல விஷயம். நாங்க அவமானப்படுறதா?” பெண்ணின் தந்தை கொதித்து போனார். பெரியப்பா அப்படி ஒரு முறைப்பு. ‘யோவ் நீ ஏயா? நானே அவரை சமாதானம் பண்ண பல்டி அடிச்சுட்டு இருக்கேன். ஸ்வீட் கொடுக்க சொல்லி கேட்கிற? மனுஷனா நீ‘ என்று பார்த்தார். சேனாதிபதிக்கு புரிந்தாலும் கண்டு கொள்ள வேண்டுமே. “அட இதுல என்னங்க அவமானம்? உங்க பொண்ணுக்கு என்ன குறைன்னு கோவப்படுறீங்க? அஜய் இல்லன்னா வேற பையனே இல்லையா என்ன?” என்று கேட்டார். “வேற பையன் கதை எல்லாம் எங்களுக்கும் தெரியும். மாப்பிள்ளை பார்க்க வாங்க என்று வீட்டுக்கு கூப்பிட்டு வைச்சு அவமான படுத்தினது தான் கேள்வி” என்றார் அவர். “இது பாயிண்ட். இதை பண்ணியிருக்க கூடாது தான். சரி விடுங்க. இங்கேயே உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை உறுதி பண்ணிட்டா கணக்கு சரியாகிடும் இல்லை” என்று கேட்டார் சேனாதிபதி. “மாமா இவர் என்ன புரியாம பேசிட்டிருக்கார். என் பொண்ணு வாழ்க்கை விஷயம் பேசிட்டிருக்கேன். இவர் மாப்பிள்ளை, உறுதின்னுட்டு இருக்கார்” பெண்ணை பெற்றவர் பெரியப்பாவிடம் கேட்டார். “நான் சரியா தான் பேசுறேன். உறுதி பண்ண வந்துட்டு வெறுங்கையோட போனாத்தானே உங்களுக்கு அவமானம். இங்கேயே வேறொரு பையனை பிடிச்சு போட்டுடுவோம் என்ன சொல்றீங்க?” என்று விடாமல் கேட்டார். “டேய்ண்ணா இந்த அப்பா யாரை போட்டு தள்ள பிளான் பண்ணி இந்த கூவு கூவிட்டு இருக்கார்?” ஆனந்தன் அண்ணனிடம் கேட்டான். “இப்போ சொல்வார் இரு” என்ற கல்யாணுக்கு அடக்கப்பட்ட புன்னகை. “என்ன பேசுறீங்க நீங்க? எங்க சொந்தத்துக்குள்ள இங்க மாப்பிள்ளை யாரும் இல்லையே?” பெரியப்பா சுற்றி பார்த்து கேட்டார். “இந்த சூழ்நிலையிலும் உங்காளுங்க தான் உங்களுக்கு வேணுமா? கொஞ்சமாவது வளருங்கப்பா” என்றார் சேனாதிபதி. பெண்ணை பெற்றவருக்கு இதென்னடா என்றிருந்தது. “யாரை சொல்ற சேனாதிபதி?” பெரியப்பா சந்தேகத்துடன் கேட்டார். “என் சின்ன மகனை தான்” என்றார் ஆனந்தன் பக்கம் கைநீட்டி. “ஆத்தாடி” ஆனந்தன் வேகமாக அண்ணன் பின்னால் மறைந்தான். “அட என் மகனுக்கு வெக்கத்தை பாரேன்” சேனாதிபதி அட்டகாசமாக சிரித்தார். “இதென்னங்க வம்பா இருக்கு? என் பொண்ணு வாழ்க்கையை என்னன்னு நினைச்சு பேசிட்டு இருக்கார் இவர்” பெண்ணை பெற்றவர் எகிறினார். “ஏங்க என் பையன் டாக்டர். இப்போ மேற்படிப்பு படிச்சிட்டு இருக்கான்” என்றார் பெருமையாய் மீசையை முறுக்கி. பெண் வீட்டினர், அப்படியா என்ற ஆனந்தனை பார்த்தனர். “டேய்ண்ணா உன் அப்பாவுக்கு நான் என்னடா பண்ணேன்? எங்க போனாலும் எனக்கு பொண்ணு பிடிச்சு போடவே பார்க்கிறார். அப்பாவா எனக்கு பொண்ணு தேடி கட்டி வைக்க மாட்டாரா?” ஆனந்தன் அண்ணனிடம் கடுப்படித்தான். “இந்த பொண்ணுக்கு என்னடா குறை?” கல்யாண் சிரிப்புடன் கேட்க, “உன்னை கொன்னுடுவேன். அஜய்க்கு பார்த்த பொண்ணுடா. எனக்கு தங்கச்சி அவங்க” ஆனந்தன் அதை சத்தமாக சொல்லி வைத்தான். மணபெண்ணாக வந்தவள் முகத்தில் தாராள புன்னகை. “அப்பா” என்று தன் அப்பாவை அழைத்த பெண், “விடுங்கப்பா” என்றாள்.