நதியின் ஜதி ஒன்றே! 15 2 12977 நிமிடம் தான். “அஜு எப்படி இருந்தாலும் அவர் என் அஜு தான். அவர் இதை எல்லாம் யோசிக்க கூட மாட்டார்” என்று மனதை தெளிய வைத்து கொண்டாள். காலை உணவு பரிமாற ஆரம்பித்தனர். சகுந்தலாவிற்கு சிறு சிறு உதவிகளை செய்தாள். சேனாதிபதி, “சின்ன மருமகளே. இங்க வாம்மா” என்று ஜீவிதாவை சத்தமாக அழைத்தார். காமாட்சி, “என்னங்க” என்றார் கண்டிப்புடன். சங்கர் அப்போது அவருடன் இருக்க ஜீவிதா மனது தெரிந்தவருக்கு கணவரின் செயல் சஞ்சலம் தான். “அப்படியே பழகிடுச்சு கண்ணு” என்றவர், “மாமாக்கு கொஞ்சம் காபி எடுத்துட்டு வாம்மா” என்றார். ஜீவிதா இருவருக்கும் எடுத்து வந்து கொடுக்க, சங்கர் மறுத்துவிட்டார். “நான் காபி குடிக்க கூடாதும்மா. நீங்க பாருங்க” என்று எழுந்து சென்றார். “உட்கார்ந்து நீ குடிம்மா” என்று தன் பக்கத்தில் ஜீவிதாவை அமர வைத்து கொண்டார் சேனாதிபதி. ஜீவிதா, “வேணும்ன்னு தானே அப்படி கூப்பிட்டீங்க மாமா?” என்று நேரடியாக கேட்டாள். “ஹாஹா கண்டுபிடிச்சுட்டியா. உன் அப்பாவை கடுப்பேத்த கூப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு, சட்டுன்னு மாத்திக்க முடியலை” என்றார் சேனாதிபதி சிரித்தபடி. “இங்க தான் என் அப்பாவே இல்லையே” பெண் சந்தேகமாக கேட்க, “இல்லை தான். ஆனா உன் மாமன் இருக்கானே. பாரு எப்படி என்னை முறைக்கிறான்னு” என்று கல்யாணை கை காட்டினார். “சீனியர் மேல என்ன கோவம் உங்களுக்கு” ஜீவிதா புரியாமல் கேட்டாள். “என்னை உன்கிட்ட பேச விட மாட்டேங்கிறானே” என்றார். ஜீவிதா புருவம் சுருக்கி பார்க்க, “ஆனந்தனை உனக்கு பேச தான். உன் அக்காவை கேட்க வரும் போதே நான் உன்னையும் தானே பொண்ணு கேட்டேன். இப்போ வந்து நடக்காது. உன்கிட்ட பேச கூடாதுன்னு சொன்னா எப்படி? நம்ம ஜீவி பொண்ணுக்கிட்ட நான் பேச என்ன இருக்கு நீயே சொல்லு” என்றார் சேனாதிபதி. ஜீவிதா அவர் சாமர்த்தியதில் நன்றாகவே சிரித்தாள். “இப்போ நீங்க என்கிட்ட இதை பத்தி பேசலை அதானே” என்றாள். “ஆமா. அவங்க என்னை உன்கிட்ட பேச விடலை தான்” என்றார் அவரும் சிரிப்புடன். “சரி சரி நீங்க பேசலை. நானும் உங்களுக்கு பதில் சொல்லலை” என்றாள் பெண் குறும்பாக. “பேசுனேன்னு நினைச்சு பதில் சொல்லு பொண்ணே” சேனாதிபதி கேட்க, “நான் யாரை கட்டினாலும் அவர் உங்களுக்கு மகன் தானே, சோ நீங்க சின்ன மருமகளேன்னே தாராளமா கூப்பிட்டுக்கோங்க” என்று விலகி சென்றுவிட்டாள். சேனாதிபதி அவள் பதிலில் அசந்து தான் போய்விட்டார். அவரை மறுக்கவில்லை. உங்க பையன் எனக்கு வேணாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் பதில் சொல்லிவிட்டாள். நோ என்று சொல்லிவிட்டாள். மெச்சுதலாக பார்த்து கொண்டார். மதியம் வரை கூட்டம் நிறைந்து அதன் பின்னே குறைய ஆரம்பித்தது. சங்கருக்கு மதிய உணவு கொடுத்து ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர். அஜய் தான் எல்லாம் பார்த்தாக வேண்டும். உதவி செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டு ஆளாய் அவன் தான் முன்னிற்க வேண்டியிருந்தது. ஒருவர் விடாமல் வரவேற்று, உணவுக்கு அனுப்பி, குடிக்க கொடுத்து என்று ஓட்டம் தான். ஜீவிதா எங்கு இருந்தாலும் கண்கள் என்னமோ முழுக்க முழுக்க அஜய் மேல் தான். வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு அவன் இங்கும், அங்கும் போக வர, பெண்ணுக்கு அவனிடம் இருந்து பார்வையை திருப்ப தோன்றவில்லை. வேர்த்த அவன் முகம், கலைந்த அவன் முடி, சிரிக்கும் அவன் உதடுகள் என்று எதுவும் பார்வைக்கு தப்பவில்லை. அழகு, ரசனை எல்லாம் கடந்து அஜு என்பவனே அவளின் கண்களுக்கு, அவளுக்கு நிறைவு தான். மதிய உணவை முடித்து கொண்டவர்கள், முந்திரி காட்டை பார்க்க கிளம்பினர். ஜீவிதாவிற்கு மிகவும் பிடித்த இடம். ஜியாவும், அவளும் சேர்ந்து தோப்பை சுற்றி வந்தனர். அஜயால் உடன் வர முடியவில்லை. சகுந்தலா தான் வந்தார். எல்லாம் சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர, குடிக்க டீ வந்தது. பொதுவான பேச்சுக்களுடன் அஜய் திருமண பேச்சும் வந்தது. “அதான் தொழில்ல நிலை நின்னுட்டான் இல்லை. வயசு கூடுறதுக்குள்ள கல்யாணம் பண்ணிடு சகுந்தலா” என்றார் கல்பனா. ‘உங்களை கேட்டாங்களா இப்போ‘ ஜீவிதா அம்மாவை உர்ரென்று பார்த்தாள். “நாங்களும் அந்த முடிவுல தான் இருக்கோம் கல்பனா. பொண்ணு பார்க்கவும் ஆரம்பிச்சாச்சு” சகுந்தலா சொல்ல, “ஹேய் சூப்பர். அஜய்க்கு கல்யாணம். அப்போ அடுத்து கல்யாண விருந்து தான்” ஆனந்தன் மகிழ்ச்சி கொள்ள, “விருந்து சாப்பிடுறது தான் உங்க குடும்பத்துக்கு முக்கியம். அதிலே இருங்க” என்றாள் ஜீவிதா கடுப்புடன் அண்ணன், தம்பியை முறைத்து. “ஜீவிம்மா நான் விருந்தையே என் அகராதியில் இருந்து அழிச்சிட்டேன். என்னை இழுக்காத. அவனை எவ்வளவு வேணும்ன்னாலும் பேசு” என்றான் கல்யாண். “விருந்து சாப்பிடுறது குத்தமா?” ஆனந்தன் புரியாமல் கேட்க, “நீங்க சாப்பிட்டா குத்தம் தான்” என்றாள் பெண். ஆனந்தன் சண்டைக்கு நிற்க, “டேய் விடுடா. என் ஜுனியர் ஏதோ அப்செட்ல இருக்கா. அங்க பெரியவங்க பேச்சை கேட்கலாம்” என்று கல்யாண் சமாதானம் செய்து வைத்தான். சகுந்தலா அப்போது தான், பின் மாலை போல பெண் வீட்டு ஆட்கள் வருவதாக சொல்லி கொண்டிருந்தார். ஜீவிதா முகம் மாறிப்போக, “என்ன சித்தி சொல்றீங்க? எப்போ. யார் வரா?” கல்யாண் வேகமாக கேட்டான். “அஜய்க்கு பார்த்திருக்கிற பொண்ணு வீட்ல தான்” என்றார் சகுந்தலா. “சொல்லவே இல்லை நீ. நல்ல விஷயம்” கல்பனா சொல்ல, “இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணி சொன்னாங்க” என்றார் சகுந்தலா. “பொண்ணு யாரு? எப்படி, சொந்தமா? முடிவே பண்ணிட்டிங்களா?” என்று காமாட்சி கேட்டார். “இன்னும் முடிவாகலை. ஆனா பிள்ளைங்களுக்கு பிடிச்சா உறுதியாகிடும். பொண்ணு பெங்களூரில் இருந்தா. இன்னைக்கு தான் நேர்ல பார்க்க போறாங்க. அஜய் பெரியப்பா கொண்டு வந்த சம்மந்தம் தான்” என்று தகவல் சொல்லி கொண்டிருந்தார். கல்யாண் ஆதரவாக ஜீவிதா கை பிடித்து தட்டி கொடுத்தவன், “அஜய்கிட்ட நானாவது பேசட்டுமா ஜீவிம்மா?” என்று கேட்டான். பெண் சில நொடி மௌனமாக இருந்தவள், நன்றாக நிமிர்ந்தமர்ந்தாள். “இல்லை சீனியர். நானே அஜுகிட்ட பேசுறேன்” என்றாள் தெளிவாக. அவளிடம் கலக்கம் நிச்சயம் இருந்தது. ஆனால் பின் வாங்கும் எண்ணமில்லை. “ஷூரா சொல்றியா?” “ம்ம். என் இடத்துல அஜு இருந்தா என்னளவு யோசிச்சே இருந்திருக்க மாட்டாங்க. நான்.. நானும் அஜுகிட்ட இவ்வளவு யோசிக்க கூடாது இல்லை” என்றாள். “சரி நாம கிளம்புவோம். அஜய்கிட்ட பேசு. நமக்கு டைம் இல்லை” என்றவன், எல்லோருக்கும் ஏதோ சொல்லிவிட்டு ஜீவிதாவை காரில் அழைத்து கொண்டு புது கட்டிடத்திற்கு வந்துவிட்டான். அஜய் அங்கு யாரிடமோ பேசி கொண்டிருக்க, ஜீவிதா வேர்த்த உள்ளங்கைகளை துடைத்து கொண்டாள். “ஜீவிம்மா. இந்தா தண்ணீர் குடி. அவன்கிட்ட போய் தைரியமா பேசு. உன் மனசை சொல்லு. வேற ஏதாவதுன்னா நான் இருக்கேன். அவனை தூக்கிடுவோம் சரியா” என்றான் கல்யாண். “என் அஜுவை யாரும் தூக்க முடியாது. அவர் ஷார்ப். போல்ட்” என்றாள் பெண் ரோஷமாக. “ரைட்டு தான். கிளம்பு போ” என்றான் கல்யாண். ஜீவிதா கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அஜய் அவளை பார்க்க, பெண்ணும் அவனையே பார்த்தாள். அஜய் கண்கள் சுருங்கியது. எல்லாம் அங்கிருக்க இவ இங்க என்ன பண்றா? கல்யாண் கார் கிளம்புவதை பார்த்தான். ஜீவிதா அங்கேயே, அவனையே பார்த்தபடி நிற்க, என்கிட்ட பேச வந்திருக்காளா? அசதியான முகத்தில் ஒர் மலர்வு. “டூ மினிட்ஸ்” என்று விரல் காட்டினான். ஜீவிதா தலையசைத்து கட்டிடத்தின் உள்பக்கம் சென்றாள். இரண்டு மாடி கட்டிடம். தனி பிரியம் அதன் மேல். சுவற்றை தடவி கொண்டே சென்றவளின் கால்களில் ஏதோ தட்டுப்பட குனிந்து எடுத்தாள். அஜயின் விசிட்டிங் கார்ட். மண் பட்டிருக்க, தன் முந்தானை எடுத்து துடைத்தாள். அவன் பெயரை முதலில் துடைத்து, பின் முழு கார்டையும் நன்றாக துடைத்தாள். விரல்களால் கார்ட் முழுதும் வருடினாள். கூடுதலாக அவன் பெயருக்கு. அஜய் பார்வையால் அவளை தொடர்ந்திருந்தவன் அவளின் செயலில் அதிர்ந்து பேச்சை நிறுத்தியிருந்தான். கண்கள் பார்த்ததை மூளை ஏற்கவில்லை. ஜீவிதாவின் முகம், அதில் ஜொலித்த பாவனை! அஜய் இதயம் வேகமாக அடித்து கொள்ள ஆரம்பித்தது. “அஜய்” என்று உடன் இருந்தோர் அவன் தோள் தொட, “ஆஹ்ன்” என்றானே தவிர பார்வையை அவளை விட்டு விலக்கவில்லை. விலக்க முடியவில்லை. ஜீவிதா அந்த கார்டை தன் இடுப்பில் சொருகி கொண்டு முன்னேற, இவன் நின்ற இடத்தில் சிலையானான்.