மறுநாள் பானுமதி வந்தவர் மகனை முறைத்தபடி நிற்க, “ம்மா” என்று அவரின் தோளணைத்து கொண்டான் வில்வநாதன்.

“ச்சு போடா” என்று அம்மா விலக,

“அவரை போய் பார்த்துட்டு தானே வந்திருக்கீங்க. அப்புறம் என்ன? நான் ஏதும் கேட்டேனா?” என்றான் மகன்.

“அதான் இப்போ கேட்டுட்டியே. ம்மா. பசிக்குது” என்றார் கஜலக்ஷ்மியிடம்.

நால்வருமாக அமர்ந்து உணவுண்ண, வில்வநாதன் கண்கள் காலியான ஒற்றை இருக்கையில் எப்போதும் போல் படிந்து மீண்டது.

ஓய்வாக அமர்ந்த நேரம், “பிஸ்னஸ் பார்க்க ரெடியா?” என்று கேட்டார் பானுமதி.

“அவன் வேலை பார்த்ததும் நம்ம கம்பெனில தானே? அப்பறம் என்ன புதுசா கேட்கிற?” என்று கஜலக்ஷ்மி பேசினார்.

“ம்மா. உங்க ராஜாகிட்ட கொஞ்சம் பேச விடுங்களேன்” என்ற மகள், “எதை உன் கண்ட்ரோல்ல கொடுக்கட்டும்” என்று கேட்டார்.

“எதைன்னா? எல்லாத்தையும் தான்” கஜலக்ஷ்மி உடனே சொன்னார்.

“லட்சுமி. அவன் பேசட்டும். நீ அமைதியா இரு” என்று தனபாலன் சொல்ல,

“லக்ஷ்மி மேடம் சொல்றதுல பாயிண்ட் இருக்கு. எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் போகத்தான் வேணும்” என்றான் பேரன்.

“உனக்கு அசிஸ்டன்ட்”

“ஸ்ட்ராங் ரெக்கமண்டேஷன் வந்திருக்கு. அரவிந்தன்” என்றான் தோள் குலுக்கி.

“மருமகன் சொன்னாரா?” தனபாலன் கேட்க,

“ராஜா நீ என்னோட அசிஸ்டன்ட் எடுத்துக்கோ. அவருக்கு அனுபவம் ஜாஸ்தி” என்றார் பாட்டி வேகமாக.

“ம்மா” என்று மகள் முகம் சுருக்க, வில்வநாதன் சிரித்துவிட்டான்.

“அவனுக்கு வாய்ப்பு கொடுப்போம் பாட்டி. டேலண்ட் இல்லாம சொல்ல மாட்டார்” என,

“உன் இஷ்டம்” என்றவருக்கு கஷ்டம் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

தொடர்ந்த நாட்களில் போர்ட் மீட்டிங்கிற்கு நாள் குறித்தனர். பங்குதாரர்களுக்கு அழைப்பு சென்றது.

கஜலக்ஷ்மிக்கு வயது குறைந்தது போல் ஓட்டம். பூஜை, இனிப்பு என்று காலையில் இருந்து ஆர்ப்பரிப்பு.

வில்வநாதன் அன்று பொறுப்பெடுக்க தயாரானான்!

அலுவலகம் செல்லும் முன்பு தந்தையை பார்க்க சென்றான். கோர்ட், சூட்டில் மிகவும் நேர்த்தியாக வந்திறங்கிய மகனை ஆசை பொங்க பார்த்தார் தயாளன்.

“ஆல் தி பெஸ்ட். நல்லா பண்ணுடா” என்றார் கை குலுக்கி.

வில்வநாதன் விறைத்த தோள்களை இளக்கி அவரின் கால்களில் விழுந்தான்.

தயாளன் தலை மேல் கை வைத்து வாழ்த்தி, மகனுக்கு பேனாவை கொடுத்தார்.

“நன்றி” என்று வாங்கி கொண்ட வில்வநாதனிடம் அணைப்பை எதிர்பார்த்து ஏமாற்றம் கொண்டார்.

அரவிந்தனும் உடன் வர, அவன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்தான்.

மீட்டிங்கில் எல்லார் முன்பும் அதிகார பூர்வமாக பதவியேற்றான். தந்தை கொடுத்த பேனாவில் முதல் கையெழுத்திட்டான்.

முன்பே அவனுக்கான ஷேர் உண்டென்றாலும், பாட்டி அவரின் மூன்றில் இரண்டு பங்கை அன்பளிப்பாக பேரனுக்கு கொடுத்தார்.

அதனுடன் கூடுதல் அதிகாரங்களையும் அள்ளி வழங்கினார். தனபாலன் அவரின் ஷேர்ஸை கமுக்கமாக வைத்து கொண்டார்.

கஜலக்ஷ்மி கணவரை ஒரு மாதிரி பார்க்க, அவர் மனைவியை கவனிக்காதவர் போல் இருந்து கொண்டார்.

பானுமதி மகனை வரவேற்று, வெளியுலகத்திற்கும் அறிவிப்பு கொடுத்தார்.

அன்றில் இருந்து வில்வநாதனின் கடமை ஆரம்பமாகியது.

அரவிந்தன் திறமைசாலி என்பதை சில நாட்களிலே கண்டு கொண்டான். கொஞ்சம் முன்கோபத்தை தவிர வேறு குறைகள் இல்லை.

இவனின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடினான். சிறிது, பெரிதுமாக பல தொழில்கள். முதல் சில மாதங்கள் வெளியவே தான் சுற்றினர். நாட்கள் மின்னலாக ஓடி மறைந்தது.

இடையில், மூர்த்தி மகனுடன் வந்தார். அவனின் திருமண பத்திரிகையுடன்.

ஒரு வாரம் குடோனில் வைத்து பாடம் கத்து கொடுத்திருக்க, மீனலோக்ஷ்னி பக்கமே அவன் திரும்புவதில்லை.

“கட்டிக்கிற பொண்ணுக்கு உன் மகனை பத்தி தெரியுமா?” என்று விசாரித்தார் தனபாலன்.

“தங்கச்சி பொண்ணை தான் கஷ்டப்பட்டு பேசியிருக்கு அய்யா” என்றார் மூர்த்தி.

“நல்லா வைச்சுக்கணும்” என்றார் மோகனிடம்.

“அய்யா. அந்த டீலர்ஷிப்” என்று கேன்சல் செய்திருந்ததை திரும்ப கேட்க,

“என் பேரன் முடிவு. மறுபேச்சு இல்லை மூர்த்தி. வேற தொழிலை பார்த்துக்கோ” என்று முடித்துவிட்டார்.

வில்வநாதனை பார்க்கவும் அனுமதி இல்லை. தலை தொங்கி போய் சென்றார் மூர்த்தி.

தனபாலன் வீட்டிற்குள் வர, காலை உணவு நடந்தது. “ராஜா. ஈவினிங் ரிசப்ஷன் வர இல்லை” என்று பேரனிடம் கேட்டார் கஜலக்ஷ்மி

“செக் பண்றேன் பாட்டி” என்றவன், அரவிந்தனிடம் விசாரித்தான்.

“சார். அந்த மீட்டிங் கேன்சல் பண்ணிடவா?” என்று ஆர்வமாக கேட்டான் அரவிந்தன்.

“உனக்கு என்ன மேன் அவ்வளவு இன்டிரெஸ்ட்” வில்வநாதன் புருவம் சுருக்க,

“எங்க சொந்தம் சார். பெர்மிஷன் கேட்டிருந்தேனே” என்றான் அரவிந்தன்.

“ம்ம். போலாம்” என்று சொல்ல, பின் மாலை போல் மண்டபத்திற்கு சென்றனர்.

கஜலக்ஷ்மியும், வில்வநாதனும் ஒன்றாக வர வாசலிலே பலத்த வரவேற்பு கொடுத்து, மரியாதையுடன் மேடைக்கு அழைத்து சென்றனர்.

சொந்தம், ஒரே ஊர், தொழில் முறை பழக்கம் என்று கல்யாண பெண்ணின் தந்தை இவர்களுடனே இருக்க, “நீங்க மத்தவங்களை பாருங்க” என்று அனுப்பி வைத்தனர்.

“பெரியம்மா” என்று அறிவழகன் குடும்பத்துடன் வந்து பேசினார்.

மண்டபத்தில் கிட்டத்தட்ட எல்லார் கண்களும் இவர்கள் மேல் இருந்தது.  ஓர் வருடமே முடிந்திருந்த போதும் அந்த பேச்சு மறைந்திருக்கவில்லை என்பதை அது காட்டி கொடுத்தது.

“நல்ல ஜோடி பொருத்தம் தான்” என்று யாரோ சொல்வது கஜலக்ஷ்மி காதில் விழ,

இத்தனை நாள் தூரத்திலே பார்த்திருந்த மீனலோக்ஷ்னியை சற்று அருகில் பார்த்தபடி “அந்த பொண்ணு தானே?” என்று பேரனிடம் விசாரித்தார்.

மொபைல் பார்த்திருந்தவன், “யார் பாட்டி?” என்று புரியாமல் பார்க்க,

“அதான். உள்ளூர் அழகி. என் பேரன் ஜோடி” என, பேரனிடம் முறைப்பு.

“சும்மா கூட சொல்லாதீங்க பாட்டி” என்று முகம் சுருக்க,

“நல்லா தான் இருக்கா” என்றார்.

“பேசி பாருங்க. கடுப்பாகிடுவீங்க”

“பேசிடுவோம். அறிவழகா உன் பொண்ணை வர சொல்லு” என்றார்.

“என்னை ஏன் கூப்பிடுறாங்க” மீனலோக்ஷ்னி முணுமுணுத்து அவரருகே வர,

“பேர் என்ன, என்ன படிக்கிற?” என்று கேள்விகள்.

பெண் மெல்ல எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல, வினய், “சார்” என்று அண்ணனுடன் வந்து நின்றான்.

“ஓய் மேன். எப்படி இருக்க?” என்று கேட்டான் வில்வநாதன்.

“நல்லா இருக்கேன் சார்” என்றவன், மேற்படிப்பு படிக்க சென்னை போவதாக சொன்னான்.

“நீ என்ன பண்ண போற?” என்று பாட்டி மீனலோக்ஷ்னியிடம் கேட்க,

“நம்ம காலேஜ்ல தான் மாஸ்டர் படிக்க போறேன் பாட்டி” என்றாள் பெண்.

“ஆக்சுவலி நீங்க உங்க பொண்ணை தான் படிக்க வெளியூர் அனுப்பணும் அங்கிள்” என்று அறிவழகனிடம் சொன்னான் வில்வநாதன்.

பெண்ணின் முகம் அதிர்வை காட்ட, “ஏன் தம்பி. அங்க படிச்சா நல்லதுங்களா?” என்று விசாரித்தார் அறிவழகன். பெண் இன்று சுதந்திரமாக படிக்க அவன் தானே காரணம்.

“உங்க கைக்குள்ளே வைச்சு வளர்த்தா இப்படி தான் இருப்பாங்க அங்கிள். வெளியுலகம் பார்த்தா தான் தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் வரும்” என,

“அப்படி சொல்றீங்களா?” என்று அறிவழகன் யோசிக்க, பெண்ணுக்கு திகிலாகி போனது.

“நான் இங்கேயே தான் படிப்பேன்” என்றாள் சட்டென.

“எதுக்கு அப்பா, அம்மா கைக்குள்ளே பாப்பாவா இருக்கவா?” என்று அவன் கேலியாக கேட்க,

நான் பாப்பாவா இருந்தா இவருக்கென்ன? பெண்ணுக்கு ரோஷம். “வெளியூர் எல்லாம் போக மாட்டேன்” என்றாள்.

“இரண்டு வருஷம் வினய் கூட போய் படிக்க என்ன கஷ்டம் உனக்கு?” என்று வில்வநாதன் கேட்க,

“இங்க படிச்சா என்ன?” என்று கேட்டுவைத்தாள் பெண்.

“பாப்பா என்ன இது?” என்று தந்தை கண்டிக்க,

“சார் சொல்றதை கவனி. ஏன் எடுத்ததும் மறுக்கிற?” அரவிந்தனும் அவளை அதட்டினான்.

“நான் மறுக்கலை. எனக்கு பிடிக்கலை. அவ்வளவு தான்” என்றாள் பெண் விடாமல். அவளுக்கு பயம். எங்கு அவன் பேச்சை கேட்டு சென்னை அனுப்பிவிடுவார்களோ என்று.

“உனக்காக தானே சொல்றார் பாப்பா. அங்க போனா வெளியுலக அனுபவம் கிடைக்கும். படிப்பு, தைரியம்ன்னு” என்று தந்தை ஆரம்பிக்க,

“ஏன் எங்க காலேஜ்க்கு என்ன குறை? சூப்பர் காலேஜ். எங்கிருந்தோ எல்லாம் இங்க வராங்க. நான் வெளியூர் போகணுமா? இவர் சொன்ன தைரியம், தன்னம்பிக்கைக்கு எல்லாம் தனியா கிளாஸ் வேற வைக்கிறாங்க. நான் வினய் மாதிரி இல்லை. என் காலேஜ் தான் வேணும் எனக்கு” என்றாள் பெண் வேகமாக.

அடிப்பாவி என்னை மாட்ட வைக்கிறா? வினய் அதிர, மற்றவர்களுக்கு அவள் பேச்சை மறுக்க முடியாத சங்கட நிலை.

கஜலக்ஷ்மி சுவாரஸ்யமாக பார்த்திருந்தவர், “அவ சொல்றதும் சரி தானே?” என்று கேட்டார்.

பெண்ணுக்கு ஒரு ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி. அதிலே, “பாருங்க பாட்டியே சரி சொல்றாங்க. இங்க நம்ம காலேஜ்ல கிடைக்காத எதுவும் எனக்கு அங்க போய் கிடைச்சிட போறதில்லை” என்றாள்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி பூனை மாதிரி இருந்துட்டு, இப்போ பாயுற நீ? வில்வநாதன் புருவங்களை தூக்கினான்.