தென் பாண்டி மீனாள் 2

அந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக, மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவு கோவம்.

விட்டால் பறந்துவிடுவான். முடியாததால் இந்தளவு வேகம்.

அந்த காருக்கு பின்னால் வந்த மூர்த்திக்கு மகனின் காரை தொடர்வது பெரும் சவாலாக இருந்தது.

“அண்ணா. தம்பி ரொம்ப வேகமா போகுது. நம்மால பிடிக்க முடியலை” என்றார் ஓட்டுநர்.

“இவனோட எனக்கு பெருத்த இம்சையா இருக்கு. பெத்துட்டேன்னு பார்க்கிறேன்” என்று திட்டி கொண்டே மகனுக்கு அழைத்தார்.

மூன்றாம் முறைக்கு அழைப்பை எடுத்தவன், “இப்போ எதுக்கு போன் பண்ணிட்டே இருக்க?” என்று கத்தினான்.

“டேய். மோகன். மெதுவா போ. இந்த வேகம் ஆகாதுடா” என்று தந்தை சொல்ல,

“உன்னால தான், எல்லாம் உன்னால தான். நீ பேசாத” என்று வெடித்தான் மகன்.

“இப்போ அந்த பங்கஷனுக்கு எல்லாம் போகலைன்னா யார் அழுதா? பாரு அந்த ஆளு எவ்வளவு கமுக்கமா கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்கான்”

“டேய் அதான் கல்யாணம் நின்னு போச்சு இல்லை. வேகத்தை குறைடா”

“அந்த அரவிந்தன் தப்பிச்சிட்டான். அவனுக்கு ஆயிசு கெட்டி. ஆனால் நான் இதை விடுறதா இல்லை”

“என்னடா பண்ண போற”

“நான் அவளை தூக்க போறேன். ஊர் எல்லையில வைச்சு தாலி கட்டி தான் ஊருக்குள்ளே போக போறேன்” என்றான் சபதமாக.

மூர்த்திக்கு அவனை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. சரி நானே பார்க்கிறேன் என்றவர், ஆட்களை அழைத்து பெண் எங்கிருக்கிறாள் என்று விசாரித்தார்.

“பொண்ணு மாளிகைக்குள்ள போயிடுச்சு. நாங்க கிளம்பிக்கிறோம்” என்றனர் ஆட்கள்.

“அறிவழகன் தங்கச்சி மகனுக்கு கேட்க போயிருப்பார்டா. நீங்க மாளிகையில இருந்து வெளியே வந்ததும் பொண்ணை தூக்குங்க” என்று மூர்த்தி சொல்ல,

“ஆகாதுண்ணா. அதுவும் ரிஸ்க் தான். அவங்க இதுக்குள்ள வந்திருந்தா? வேண்டாம்ண்ணா. நீங்களும் பார்த்துக்கோங்க” என்றனர்.

மூர்த்திக்கு அவர்கள் சொல்வது சரியென்று தோன்றியது. அவர்களை பகைத்து கொண்டு எல்லாம் வாழ முடியாது. வாழவும் விடமாட்டார்கள்.

மூர்த்தி இந்த எதார்த்தை மகனுக்கு சொன்னால், அவன் புரிந்து கொள்ளாமல் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தான்.

“நான் தூக்கத்தான் போறேன். பார்க்கிறேன் எந்த கொம்பன் வந்து நிறுத்திரான்னு” மோகன் அவர் பேச்சை மீறி வெளியூர் ஆட்களை வரவைத்தான்.

“பொண்ணு எனக்கு வேணும். எத்தனை லட்சம் வேணும்ன்னாலும் வாங்கிக்கோங்க” என்றான்.

அவர்களும் பேராசையில், ஏதோ வேலை போல் மாளிகைக்குள் நுழைந்தனர்.

****************************

வில்வநாதனின் கேள்வியான பார்வையில்,  “ராசா. அறிவழகன், ஞாபகம் இருக்கு இல்லை” என்று பேரனிடம் கேட்டார் பெரியவர்.

“இருக்கு தாத்தா. உங்க ப்ரெண்டோட மகன் தானே” என்றவன், “வணக்கம் அங்கிள்” என்று கை குவித்தான்.

அறிவழகன், “வணக்கம் தம்பி” என்றவர், “எங்க சூழ்நிலை கொஞ்சம் சரியில்லை. என் தங்கச்சி மகன் பேசினதை பெருசா எடுத்துக்காதீங்க” என்றார்.

தாத்தாவும் பேரனை பார்க்க, “எல்லோரும் உட்காருங்க. காபி எடுத்து வர சொல்றேன்” என்றவன், திரும்ப குடிக்க கொண்டு வர செய்தான்.

இந்த முறை மறுக்காமல் அனைவரும் பருக, அறிவழகனின் மனைவி கையில் காபியுடன் வெளியே சென்று வந்தார்.

சில நிமிட அமைதிக்கு பிறகு, தனபாலன் பேரனிடம் விஷயத்தை சொன்னார்.

“அரவிந்தன் ரைட். அவரை உடனே வெளியே எடுக்க முடியாது. ட்ரைவர்க்கு நல்ல அடி. ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு. பார்த்துட்டு தான் சொல்ல முடியும்” என்றான் வில்வநாதன்.

“தம்பி. அரவிந்தன் கொஞ்சம் முன்கோபக்காரன் தான். ஆனால் விஷயம் இல்லாம அப்படி நடந்துகிற ஆள் கிடையாது” அறிவழகன் சொல்ல,

“காரணம் என்னவா இருந்தாலும், எங்க இடத்துல வைச்சு நடந்ததை ஏத்துக்க முடியாது அங்கிள். எங்ககிட்ட பேசியிருக்கணும்” என்றான் வில்வநாதன்.

அவன் கூற்றை மறுக்க முடியாமல் நிற்க, “இன்னமும் அரவிந்தன் வெளியே வந்தா,  கல்யாணம் பண்ற எண்ணத்துல இருக்கியா அறிவழகா?” என்று பெரியவர் கேட்க,

“கண்டிப்பா பெரியப்பா. அந்த மூர்த்தி ஊர்ல இல்லை. அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு பார்க்கிறேன்” என்றார் அவர்.

“யாருக்கோ பயந்துகிட்டு, படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்றீங்களா?” வில்வநாதன் ஏற்றுக்கொள்ள முடியாமல் கேட்டான்.

“எனக்கு மட்டும் ஆசையா தம்பி. அந்த மூர்த்தி சரியில்லை. என் பொண்ணோட பாதுகாப்பை பார்க்கணும்” என்று அறிவழகன் வேதனையுடன் சொன்னார்.

“அவங்க வீட்டு மூத்த மருமகளை கூட இப்படி தூக்கிட்டு வந்து தான் கல்யாணம் பண்ணாங்க தம்பி. அந்தாளுக்கு இதெல்லாம் புதுசில்லை” என்றனர் மற்றவர்கள்.

“உங்க பொண்ணோட பாதுகாப்பு தான் பிரச்சனைன்னா இனி அது எங்க பொறுப்பு. படிக்கிற வயசுல படிக்க வைங்க. அதுவும் அவசியம் தான்” என்றான் வில்வநாதன்.

“இனி நான் பார்த்துகிறேன் அறிவழகா. நீ கவலைப்படாத” என்றார் தனபாலன் உறுதியாக.

எல்லார் முகமும் தெளிய, “தாத்தா எல்லோரையும் சாப்பிட கூட்டிட்டு போங்க” என்றான் பேரன்.

“இல்லை வேண்டாம் தம்பி” என்று மறுக்க,

“எப்படியும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. வாங்க” என்று பெரியவர் சொல்ல, அரவிந்தனின் குடும்பம் சோர்ந்து போய் நின்றது.

“சாப்பிட போங்க. பார்த்துக்கலாம்” என்றான் வில்வநாதன்.

அதில் கொஞ்சம் தெளிந்தவர்களாக சாப்பிட சென்றனர்.

சுஜாதா வாசலுக்கு போக, “என்னாச்சு ஆன்ட்டி?” என்று கேட்டான் வில்வநாதன்.

“என் பொண்ணு கார்ல இருக்கா தம்பி” என்றார் அவர்.

“வீட்டுக்குள்ள வர வேண்டியது தானே?” அவன் புரியாமல் கேட்க,

“அது, தூங்கிட்டிருக்கா தம்பி” என்றார் சங்கடத்துடன்.

வில்வநாதன் உதடுகளில் மெல்லிய புன்னகை. இந்த பிரச்சனையில தூக்கமா?

தலையாட்டி கொண்டவன், போனில் அழைப்பு வர, பேச செய்தான்.

சுஜாதா வாசலுக்கு சென்ற வேகத்தில் திரும்ப உள்ளே ஓடிவந்தவர், “தம்பி. தம்பி என் பொண்ணை காணோம்” என்றார் பதட்டத்துடன்.

“நான் கூப்பிடுறேன்” என்று போனை வைத்தவன், “என்ன சொல்றீங்க” அவருடன் வாசலுக்கு செல்ல, அங்கிருந்த காரும் இல்லை, காரில் இருந்த பெண்ணும் இல்லை.

அரவிந்தனின் தம்பி வினய், சாப்பிட பிடிக்காமல் வாசலுக்கு வந்தவன், “என்னாச்சு அத்தை?” என்று விசாரித்தான்.

“பாப்பாவை காணோம்” என்றவருக்கு கண்ணீர் இறங்க ஆரம்பித்தது.

“மாமா, அப்பாகிட்ட சொல்லலாம்” என்று வினய் உள்ளே செல்ல போக,

“வேண்டாம்” என்று தடுத்தான் வில்வநாதன்.

“எல்லோரையும் பதட்டப்படுத்த வேண்டாம். உங்க பொண்ணு வந்திடுவாங்க. பொறுங்க” என்றவன் கேட்டில் உள்ளவர்களை விசாரித்தான்.

இருவர் உள்ளே வந்தவர்கள், காரை எடுத்து செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. சுஜாதா நடுங்கி போய்விட்டார்.

வினய்க்கும் வேர்த்து போக, “இவங்க நம்ம ஊர் இல்லை. வெளியூர் ஆளுங்க போல” என்றான்.

நேரத்தை பார்த்துக்கொண்ட வில்வநாதன், “நம்ம எல்லைக்குள்ள தான் இருப்பாங்க” என்றவன், போன் எடுத்து பேசினான்.

சுஜாதா நிற்க முடியாமல் அமர்ந்து விட, வினய் அத்தை கை பிடித்து நின்றான்.

“எங்க வீட்டு பொண்ணுன்னு தானே இவ்வளவு அமைதியா நிக்கிறார். நாம இவரை நம்ப வேண்டாம் அத்தை. ஆளுங்களுக்கு பேசலாம்” என்று வினய் சொல்லி போன் எடுக்க,

வில்வநாதன் திரும்பி ஒரு பார்வை. “ஸ்டே காம்” என்றான் அதட்டலாக.

“இல்லை. எல்லையில் இருக்கிற ஆளுங்ககிட்ட சொல்லி” என்றவன், வில்வநாதனின் பார்வையில் மொபைலை வைத்துவிட்டான்.

“இவங்களை விட வேறு யாரும் பாப்பாவை பத்திரமா கொண்டு வர முடியாது வினய்” என்றார் சுஜாதாவும்.

அடுத்த ஐந்தாம் நிமிடம் அதே கார் அலுங்காமல், குலுங்காமல் கேட்டிற்குள் வந்தது. பெண் அதிலிருக்க, சுஜாதாவின் மூச்சு சீரானது.

நடுக்கத்தோடு இருவரும் காரை நிறுத்தி இறங்க, பெண் அப்போது தான் தூக்கம் கலைந்து, கண்களை தேய்த்து விட்டு கொண்டிருந்தாள்.

இருக்குமிடம் விட்டு அசையாமல் நின்றிருந்த வில்வநாதன் முன் இருவரும் நின்ற நொடி, இருவரின் கன்னமும் பழுத்து போனது.

அந்த சத்தத்தில் பெண்ணின் தூக்கம் முற்றிலும் பறந்து போக, கண்களை விரித்து வில்வநாதனை  பார்த்தாள்.

அந்த இருவரையும் அங்கேயே கட்டி வைக்க, சுஜாதா மகளை கீழிறங்க சொன்னார்.

மீனலோக்ஷ்னி அச்சத்துடன் கீழிறங்க, வில்வநாதனின் அசையா பார்வை அவளை தடுமாற வைத்தது.

தன் முன் நின்ற பெண்ணவளிடம், “தூக்கம் போதுமா?” என்று கேட்டான்.

அவள் ஆமா, இல்லை என்று இருபக்கமும் தலையசைக்க, “இப்போ என்ன நடந்ததுன்னாவது தெரியுமா?” என்று மேலும் கேட்டான்.

அவளுக்கு எதுவும் புரியவில்லை. விழித்து நின்றவளை கைகட்டி பார்த்தான்.

மணமகள் அலங்காரத்தில் நின்றவளின் அசரடிக்கும் அழகு அவன் கண்ணுக்கு தெரியவில்லை. மாறாக அவளின் பொறுப்பற்ற தன்மை தான் அவன் கண்களை இடுங்க வைத்தது.

குழந்தை தனம் மிச்சமிருந்த முகம், பெற்றவளின் கை பிடித்து நிற்க வில்வநாதன் நிதானத்திற்கு வந்தான்.

“தண்ணீர் கொண்டு வா” என்று வினய்க்கு சொல்ல,

அவன் பிரமிப்போடே சென்று எடுத்து வந்தான். நின்ன இடத்துல இருந்தே அஞ்சு நிமிஷத்துல வர வைச்சுட்டாரே! யோசித்தபடி வந்த வினயிடம், சுஜாதாவிற்கு கொடுக்க சொன்னான். அவர் நன்றியுடன் வேகமாக குடித்தார்.

“மாமா கேட்கிறார் அத்தை” என்றான் வினய்.

“நீங்க உள்ள போங்க” என்று இருவரிடமும் சொன்னவன், “போய் முகம் கழுவிட்டு வா” என்று மீனலோக்ஷனிக்கு தோட்டத்தின் பக்கம் காட்டினான்.

சுஜாதா தயங்கி நிற்க, “நான் கூட்டிட்டு வரேன்” என்றான் வில்வநாதன்.

அவரும் ஏற்று போக, பெண் ஈர முகத்துடன் அவன் முன் வந்து நின்றாள். விழுந்த அறையின் சத்தம் இன்னும் அவள் காதுக்குள் ஒலித்து கொண்டே இருக்கிறதே!

“முகம் துடைக்க ஆள் வைக்கணுமா?” என்று கேட்க.

“இல்லை, இல்லை நானே” என்றவள், கையில் கர்சீப் இல்லை. புடவையும் பட்டு.

முழித்து எதிரில் நின்றவளை பார்க்க, வில்வநாதனின் உதடுகள் விரிந்தது.

பக்கத்தில் இருந்த காருக்கு செல்ல, ட்ரைவர் வேகமாக லாக் எடுத்தார். அதில் இருந்து அவன் சிறிய டவலை கொண்டு வந்து கொடுத்தான்.

பெண் தயங்கியபடி வாங்கி முகம் துடைத்து கொள்ள, நெற்றியில் இருந்த பொட்டு டவலுடன் வந்தது.

வில்வநாதனிடம் டவலை நீட்டி, பின் இழுத்து கொள்ள, வில்வநாதன் புருவம் சுருங்கியது.

“அதுல என் ஸ்டிக்கர் இருக்கு” என்று வேகமாக சொன்னவள், எடுத்து காட்டினாள்.

“ம்ம். வைச்சுக்கோ” என, நெற்றியில் சரியாக வைத்து கொண்டவள், “டவலை வாஷ் பண்ணிடுறேன்” என்று அவன் மறுக்க வருவதை கூட கேட்காமல் ஓடி சென்று அலசி கொண்டு வந்தாள்.

“இதை ஈரத்தோட உள்ள வைக்கணுமா?” வில்வநாதன் கேட்க,

“காய வைச்சு தரணுமா?” என்று அவனிடமே கேட்டாள் பெண்.

“அப்புறம் ஐயன் யார் பண்ணுவா?” என்று கேட்க,

“நான், நானே பண்னடுறேன்” என்று பெண் அவசரமாக சொன்னாள்.

“ஐயன் பாக்ஸ் வேணுமா?” அவன் சீரியசாக கேட்க,

“ஆ. ஆமா” என்றவளுக்கு, இவர் கேலி பண்றாரா என்ற சந்தேகம் வந்தது.

“தூக்கம் தெளிஞ்சிடுச்சா” என்று கேட்க,

“நீங்க அவங்களை அடிச்சதுலே தெளிஞ்சிடுச்சு” என்றாள் பெண் கண்களை விரித்து.

“ரைட். தூக்கம் முக்கியம் தான். ஆனா இந்தளவு தூங்கணும்ன்னு இல்லை. உஷாரா இருக்கணும்” என்றான்.

என்ன நடந்தது என்று புரியாவிட்டாலும், சுஜாதாவின் கலங்கிய முகம் அவளை தலையாட்ட வைத்தது.

“உள்ள போலாம்” என்று இருவரும் வீட்டுக்குள் வந்தனர்.

இருவரும் ஒரே நேரத்தில் காலடி எடுத்து வைத்து வந்ததை கவனித்திருந்த தனபாலனின் ஆசை இன்னும் கூட தான் செய்தது. ஆனால் அதை எப்போதும் போல உள்ளேயே அமுக்கி கொண்டார்.

இந்த வயதில் விவாகரத்து வாங்கும் தெம்பு இல்லை அவருக்கு.

“நல்ல ஜோடி பொருத்தம்” என்று பெருமூச்சுடன் மெல்ல முணுமுணுத்தார்.

அதை அருகிலே இருந்தவர் கேட்டுவிட்டதை தனபாலன் கவனித்திருக்கவில்லை.

சுஜாதா மூலம் விஷயம் தெரிந்திருந்த அறிவழகன் மகள் வரவும் ஓடி வந்து அவளின் கை பிடித்து கொண்டவர், “ரொம்ப நன்றி தம்பி” என்றார்.

மற்றவர்களும் பெண்ணின் நலனை பார்த்து, ஆசுவாசம் கொண்டவர்கள், “இங்கங்கிறதால தப்பிச்சோம். இதுவே வெளியேன்னா என்ன பண்ணியிருப்போம்” என்று பதட்டமும் கொண்டனர்.

“நம்ம வீட்டுக்குள்ளே வந்து பொண்ணை தூக்குற அளவு தைரியம் வந்துடுச்சா. இதை விட கூடாது ராசா” என்று தனபாலன் சொல்ல,

“இனிமே இது என் பிரச்சனை தாத்தா. அவங்களை நான் பார்த்துகிறேன்” என்றான் வில்வநாதன் நிதானமாகவே.