தனஞ்செயன் தன் பெற்றோருடன் பொன்னுசாமி வீட்டிற்கு சூர்யாவை பெண் கேட்பதற்காகச் சென்றிருந்தான்.
பொன்னுசாமியும் மரகதமும் அவர்களை வரவேற்று உபசரித்து கொண்டிருக்க சித்திரைசெல்வி நடந்ததை சுருக்கமாக கூறி முடித்து சூர்யாவை தயங்கி தயங்கி பெண் கேட்டார். மலரின் விழிகளோ சிவாவை தேடியது.
அதைக் கண்டு கொண்ட வேலுத்தம்பியோ பேச்சுவாக்கில் “அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வாடா ன்னு சொன்னதுக்கு உன் சின்ன மாமன் ஏதோ வாய்க்காலை தூர் வாரப் போறேன் னு போயிருக்கான் தினகரா !!!”என்றார் மலரை பார்த்தபடியே.
தினகரனோ புரியாது விழித்தவன் ., “என்ன தாத்தா ஒண்ணும் புரியலை “என்றிட .,”அட அதெல்லாம் புரிய வேண்டியவங்களுக்கு புரியும் டா பேராண்டி “என்றவர் மூக்குப் பொடியை நாசியில் இழுத்து கொண்டார். மலரோ புன்னகையுடன் உள்ளே சென்றாள்.
“நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன் மரகதம் நீ உன் மகளையும் ஒரு வார்த்தை கேளு… என் மவன் வாயைத் திறந்து நேராகவே சொல்லிட்டான் கட்டுனா சூர்யாவை தான் கட்டுவேன் னு… இதுக்கு மேற்பட்டு நீங்க தான் சொல்லணும்… இன்னும் ஒரு வாரத்தில் அவன் துபாய்க்கு கிளம்பணும் அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடனும் கல்யாணம் முடிஞ்சதும் சூரியா படிக்கட்டும்.. தம்பியும் ரெண்டு வருஷத்துல திரும்பிடுவான்… அப்புறம் இங்கனக்குள்ளேயே ஒரு பொட்டிக்கடை வச்சு பொழைச்சாலும் சரி… இல்லையா மறுபடியும் ரெண்டு பேரும் துபாய்க்கு போனாலும் சரி…. நீங்க சொல்றது தான் முடிவு”என்றார் சித்திரை செல்வி.
கருப்பசாமியும் , பொன்னுசாமியிடம் அதையே தான் கூறிக் கொண்டிருக்க
பொன்னுசாமி யோசனையாக,“எனக்கு புரியுது மாமோய். ஆனா என் தம்பி காரன் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு ஒண்ணு கட்டி வச்சிருக்கோமே அதுவும் அது மகளும் வந்து பிரச்னை பண்ணா என்ன பண்றதுனு தான் யோசனையா இருக்கு…”என்றார் பொன்னுசாமி.
“எனக்கும் புரியுது பொன்னு… இந்த பய இத்தனை நாளும் நம்ம சூரியாவை மனசுல வச்சுக்கிட்டு தான் அந்த கல்யாணத்தை வேணாம் னு சொல்லி இருக்கான். அது தெரியாம நாங்க கெடந்து அல்லாடிகிட்டு இருந்திருக்கோம்… “என்று பேசும் போதே மலர் காபியை கொண்டு வந்து கொடுத்தாள்.
“ஆயா நல்லா இருக்கியா டா… இந்நேரம் என் வூட்ல மருமவளா இருந்திருக்க வேண்டிய பொண்ணு இப்படி தவிக்க விட்டுட்டேனேன்னு நெனைக்காத நாளில்லை… “என்றார் கவலையாக
மலர் தலை குனிந்து நின்றிருந்தாள்.
பொன்னுசாமி தான் அவளை உள்ளே அனுப்பி சமையலை கவனிக்கும்படி சொல்ல எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.
கருப்பசாமியோ.,” நீ சொல்லு பொன்னு…. உனக்கு உன் மகளை என் பையனுக்கு கட்டி கொடுக்க சம்மதமா… முழு மனசோட சொல்லிட்டா இந்த வாரத்துல பயலுவ துபாய்க்கு கிளம்பறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம் என்ன சொல்ற உன் மக கிட்டயும் தனாவை கட்டிக்க சம்மதமான்னு கேளு “என்றார்.
தினகரன் அடுத்த நிமிடம் சூரியாவின் கைபேசிக்கு அழைக்க அவளும் உடனே எடுத்தாள்.
“சொல்லுண்ணே என்ன இந்த நேரத்தில் கூப்பிடுற… கேண்டினுக்கு வந்தேன் க்ளாஸ் ஆரம்பிக்க போகுது சீக்கிரம் சொல்லுண்ணே “என படபடத்தவளை .,”அட இரு பொருவே பேசி முடிக்கங்காட்டியும்… தொணதொணன்னுட்டு “என்றவன் தனஞ்செயன் வீட்டில் இருந்து பொண்ணு கேட்டு வந்த விடயத்தை கூறி முடித்தான்.
எதிர் முனையில் பேசியவளுக்கோ செவ்வானமாய் முகம் சிவந்து போனது.
“அப்பா பார்த்து என்ன முடிவு எடுத்தாலும் சரி ண்ணே அப்பா என்ன சொன்னாரு…. ??”என்று ஆவலாக கேட்டிட ., அவளை வம்பு செய்ய நினைத்த தினகரனோ “அப்பாவுக்கு இதுல பிடித்தமில்ல அதான் யோசிக்கிறேன்”என்றான்.
“அண்ணே !!”என்று சற்று உரக்க அழைத்து விட்டாள் சூரியா.
“ராஸ்கல் உன்னை பத்தி எனக்கு தெரியாது.வீட்டுல எல்லோருக்கும் சம்மதம், உன் கிட்ட தான் கேட்க சொன்னாங்க நீ ரெண்டு நாளில் கிளம்பி வா… கல்யாணத்தை முடிச்சிட்டு இங்க இருந்தே காலேஜுக்கு போவ… சரியா..!! இல்லாட்டி நான் வந்து காலேஜ் ல சொல்லி கூட்டியாரவா ??”என்று கேட்டான்.
“நீயே வந்து கூட்டிட்டு போண்ணே உடனே ஹாஸ்டலை விட்டு வர ஒத்துக்க மாட்டாங்க அதனால சொல்லி தான் கூட்டிட்டு வரனும் “என்றாள் சூர்யா.
“சரி சரி நான் அப்பா கிட்ட சொல்லிக்கிறேன் நீங்க கிளாஸுக்கு போ”என்றான். உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தனஞ்செயனுக்கு அடுத்த நிமிடம் குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள். கைபேசிக்குள் மூழ்கி இருந்தவன், ஹாஸ்யமாக புன்னகை சிந்திட, இருவீட்டாரின் சம்மதம் தெரிவிக்கப்பட மணமகள் இல்லாமலேயே நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.
“அப்புறம் என்னய்யா பேசி முடிச்சாச்சு… ஏ பேத்தி பொருவே எலையை போடு… பந்தியை முடிச்சிட்டு கிளம்புவோம் கல்யாண சோலி ( வேலை ) ஏகப்பட்டது கெடக்கு…. இந்தாடா மாப்ள நீ தான் போய் சமையல் ஆளு கோவில்ல பணம் கட்ட எல்லா வேலையும் பண்ணிக்கிடனும்…” என்றார் வேலுத்தம்பி.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் பாட்டா அப்புறம் மாமா இன்னொரு விஷயம்…. அதென்னன்னா ??”என்று தயங்கியவன்…
“எப்படியாவது சங்கரன் மாமன் கிட்ட பேசி மலருக்கும் சிவாவுக்கும் கல்யாணத்தை முடிக்கணும்… அவனுக்கு வேலை வாங்கி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது… கொஞ்சம் நீங்க முயற்சி எடுத்தா நல்லபடியாக முடிக்கலாம்… யோசிங்க “என்றான் தனஞ்செயன்.
“எங்களுக்கு மட்டும் ஆசை இல்லையாய்யா, அந்த முத்துலெட்சுமி விட்டா தானே.?பார்ப்போம்… நேரங்காலம் கூடி வந்தா உடனே இதோ இப்ப சுருக்குனு முடிச்சா மாதிரி பண்ணிடலாம்”என்றார் பொன்னுசாமி.
“மலரு அந்த பொரியலை எடுத்து வை… “என்று செண்பகவல்லி வேலை ஏவிக் கொண்டிருந்தார் .
மலர் எல்லோரும் பொறுமையாக சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவள், சாப்பாட்டை டிபன் பாக்ஸ் ஒன்றில் எடுத்து வைத்தாள்.
மரகதமோ .,”பெரிய புள்ள நீயும் வா சாப்பிடலாம்… சாப்பிட்டதும் மத்த வேலை சாயங்காலமா பார்ப்போம் “என்று சொல்ல.,” பெரியம்மா இந்தா கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன் நீங்க சாப்பிடுங்க”என்று கூறி விட
“அட இன்னும் என்ன வேலை பாக்கி கெடக்கு நீ வா சாப்பிட்டு பார்க்கலாம்”என்றழைக்க அவளோ அவஸ்தையாக நின்றிருந்தாள்.
செண்பகவல்லி மலரை பார்த்து சிரித்துக் கொண்டே “மரகதம் அவ போயிட்டு வந்திடுவா… நீ நமக்கு எடுத்து வை…. நீ போயிட்டு வெரசா வாட்டி… எல்லோரும் சாப்புட்டியளே அவளுக்கு வேண்டப்பட்டவன் சாப்பிடலையே எப்படி அவளுக்கு சோறு எறங்கும், நீ வந்து உட்காரு வா “என்றதும் மலர் அந்த இடத்திலேயே இல்லை ஓடி விட்டாள்.
**********
காட்டாற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களோ மதிய உணவை சாப்பிட வீட்டுக்கு கிளம்ப சிவா எல்லோரிடமும் .,”ஏலேய் போயிட்டு சீக்கிரம் வந்திடனும் டா தூக்கத்தை போடலாம்னு படுக்கக் கூடாது அப்புறம் வீடு வீட்டுக்கு நான் வந்து இழுத்துட்டு வருவேன் பார்த்துக்கங்க.. .. ஏன் டா சின்னச்சாமி மவனே சாப்பாட்டை கையோட கொண்டு வந்துட்டியா !!!”என்று சிரித்தான் சிவா.
“அட பாதி பயலுவ கையோட கொண்டு வந்துட்டானுக மாப்ள… அந்த பொருவுகளும் ( பொண்ணுகளும்) கொண்டு வந்திடுச்சு… நமக்கு குஸ்கா வாங்கிட்டு வந்திடுறேன் நீ வந்து உட்காரு… இங்கனயே சாப்பிட்ருவோம்”என்று வீரமலையும் வெற்றியும் கிளம்பினர்.
“அதுவும் சரிதான் இவனுக ஓடுனாலும் ஓடிடுவானுக… “என்று மரத்தடி நிழலில் சாய்ந்தமர்ந்தான். முருகனும் தன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிட சிறுவர்கள் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அங்கிருந்த சில சிறுமிகளோ மலர் வருவதைக் கண்டு.,”ஏய் டீச்சர் வர்றாங்கடி வா வா… நாம போய் குட் ஆப்டர் நூன் சொல்லலாம்”என்று பனிமலரை நோக்கி ஓடினர்.
ஆளாளுக்கு மதிய வணக்கத்தை சொல்லிட அனைவரிடமும் பேசியபடி சிவாவைத் தேடினாள்.
பேச்சு சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்ததும் மலர் நிற்பதை கண்டு விட்டு திரும்பி கொண்டான்.
அவனைக் கண்டு கொண்டவளோ சிறுமிகளிடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சிவாவை நோக்கி சென்றாள்.
“சமூக சேவை எல்லாம் படு பயங்கரமா நடக்குது போல “என்று கேட்க
அவளைப் பார்க்காமல் அந்தப் புறம் திரும்பியவன் ” ம்ம்ம் ம்ம்ம் ஏதோ நம்மளால முடிஞ்சது டீச்சரம்மா… ஆமா என்ன இந்த பக்கம் காத்து வீசுது, எதுவும் முக்கியமான வேலையா ??”என்றான்.
“ம்ம்ம்…. சாப்பாடு கொண்டு வந்தேன்… “
“யாருக்கு…. ??”
“யாருக்கு கொண்டு வருவேன்… !?”
“அதை தான் நானும் கேட்கிறேன் யாருக்கு கொண்டு வந்தியாம்? “என்று கிண்டல் செய்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.
“அதை என் மூஞ்சியை பார்த்து கேளு சொல்றேன் “என்றாள் அவளும் விடாமல்
“சரி சரி அங்க வை எடுத்துக்கிறேன்… நாங்க தான் ஏற்கனவே சொன்னோம் இல்ல… பொண்டாட்டி பேச்சை மீற மாட்டோம் னு… “என்று சிலுப்பி கொண்டான்.
உள்ளூர சிரித்தவள்… “சூரியாவுக்கும், உங்க அண்ணனுக்கும் பேசி முடிச்சாச்சு… “என்றவள் அடுத்த வார்த்தை சொல்லாமல் நின்றிருக்க…. “சீக்கிரம் நானும் பொண்ணு கேட்க வருவேன்… “என்றான் டிபன் பாக்ஸை ஒவ்வொன்றாக திறந்தபடி…
“சரி நான் கிளம்புறேன்”என்க
“நீ சாப்டியா… ??”
“சாப்பிடுவோம் “என்று விட்டு அங்கிருந்து சென்றாள்.
கொலுசொலி மெல்ல மெல்ல குறைந்து கேட்டதும் அவள் சென்றதை உறுதி படுத்தி கொண்டவன் ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு சாம்பாரின் வாசனையை முகர்ந்து விட்டு, சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
இடையே வெற்றிக்கு அழைத்து உணவகத்திலேயே உணவருந்தி விட்டு வரும்படி கூறி விட்டான்.
கொலுசொலி கேட்காத வண்ணம் மீண்டும் வந்து நின்றவள் சிவா சாப்பிடுவதை கை கட்டி பார்த்து கொண்டிருந்தாள்.
“இவ கையில ஏதோ இருக்கு ப்பா…. எங்க கத்துக்கிட்டா இந்த சமையலை…. அது சரி கெழவி எல்லாம் சொல்லி குடுத்து தான் வளர்த்திருக்கும் போல… இது நிரந்தரமாக எப்ப கிடைக்குமோ ???”என்று சிலாகித்தபடியே சாப்பிட்டு முடித்தான்.
“நெறய போட்டு கொண்டு வந்தாளோ… இதுக்கு மேல சாப்பிட முடியலையே பேசாம வீட்டுக்கு பார்சல் பண்ணிடலாம் ராத்திரிக்கும் என் பொண்டாட்டி சமைச்சது தான்” என பேசிக் கொண்டே டிபன் பாக்ஸை மூடி வைக்க….” ராத்திரிக்கு நானே கொடுத்து விடுறேன்… இப்போ டிபன் பாக்ஸை குடு “என்ற மலரின் குரல் கேட்டதும்….” நீ இன்னும் போகலையா பனி…. “என்றான் திரும்பாமலேயே
“போகணும் நீ டிபன் பாக்ஸ் கொடுத்தா போவேன் பசிக்குது சாப்பிடனும்” என்று சொல்ல, அதன் அர்த்தம் புரிந்தவன் அழகாய் புன்னகைத்தான்.
“இத்தனை நாளும் டீல் ல விட்டுட்டு இப்ப முகத்தை பார்க்காதன்னு சொல்லிட்டு மூஞ்சிக்கு முன்னாடியே வந்து நில்லுடி…. ராட்சசி… “என்று பொய் கோபம் கொண்டான்.
“சரி போ இனிமே வரலை… நாளைக்கு தில்லைநகர் ல ஒரு கம்பெனி சொல்றேன் அங்க போயிட்டு வா… இன்டர்வியூ எடுக்கிறாங்க அட்டன்ட் பண்ணிட்டு சொல்லு”என ஒரு துண்டு சீட்டை அவன் அருகில் வைத்து விட்டு டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு சென்றாள்.
மலர் அங்கிருந்து செல்லவும் சங்கரன் கோபத்துடன் அங்கே வரவும் சரியாக இருந்தது.