சிறு விஷயத்திற்கு இத்தனை களேபரமா? என அயர்ந்து வந்தாலும் இந்த விஷயத்தை அக்கா மாமாவிடம் எப்படி திரித்து சொல்வாளோ, மாமா என்ன நினைப்பாரோ, அதற்குள் அக்காவை சமாதானம் செய்து விடுவோம் என நினைத்து சேரனும் வெளியே வந்தான்.
மதுரா தூக்கி வைத்திருந்த அனுவை வெடுக் என பிடுங்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்ட பூங்கொடி, தன்னோடு வர மாட்டேன் என்ற அமுதனின் முதுகில் சுள் என ஒரு அடி வைத்து இழுத்துக் கொண்டு அவளது வீடு நோக்கி நடந்தாள். வழியில் மோகன் வர அவன் பைக்கில் ஏறி அமர்ந்து அங்கிருந்து சென்றே விட்டாள்.
நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டே சலிப்பாக அக்கா சென்ற திசையை பார்த்திருந்தவனிடம், “உங்கம்மா செய்றதுக்கெல்லாம் நீங்க கேள்வி கேட்கணும்னா தினம் சண்டைதான் வரும். உங்கள யாரு கேட்க சொன்னது இப்போ?” எனக் கேட்டாள் மதுரா.
“பொம்பளைங்களாடி நீங்கல்லாம்? பூ இருக்குமாம், கைல தராதாம் என் அம்மா, அதான் அப்படின்னா போற வழில வாங்கிக்கலாம்னு பொறுமையா இல்லாம வேணும்னே வீட்டடியிலேயே ஒரு பந்து பூ வாங்கி வச்சுகிட்டு என்னை சூடு ஏத்தி வுடுற நீ, சொல்றத புரிஞ்சுக்காம அத பேசிப்புட்டேன்னு வீம்பு பண்ணிக்கிட்டு போவுது அக்கா” எரிச்சலாக சொன்னான் சேரன்.
மாமியாரும் நாத்தனாரும் நடந்து கொண்ட விதம் கூட மதுராவை அத்தனை பாதிக்கவில்லை, தன்னிடம் என்ன ஏதென்று கேளாமல் தன்னையே குற்றம் சொல்லி விட்ட கணவனின் வார்த்தைகள் கலங்க வைத்து விட்டன.