அத்தியாயம் 7:
சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு.
“உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா…!” என்று மனசாட்சி சொல்ல….
“அவ செய்தது மட்டும் சரியா…?” என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.
அங்கே அபியின் நிலைமையும் அது தான்….தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தன்னையே நினைத்து…..வெறுத்துக் கொண்டாள்.
அவன் அடித்தது கூட வலிக்கவில்லை அவளுக்கு.ஆனால் அவனின் பார முகம் தான் அவளால் தாங்க முடியவில்லை.
நடந்த சம்பவங்களில் உடலும் மனமும் சோர்ந்து போக…..தன்னையும் மீறி கண்ணயர்ந்தாள் அபி.
அதிகாலை ஏழு மணியளவில்…..தொலைபேசி சத்தம் வீட்டையே உலுக்கியது.அனைவரும் அசதியில் உறங்கிக் கொண்டிருக்க….ரிஷியும் தன் இயல்பை மீறி தூங்கிக் கொண்டிருந்தான்.
இப்பொழுது ரிஷியின் செல்போன் விடாமல் குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. செல்போனின் ஓசையில் கண்களைத் திறக்க முடியாமல் திறந்தான் ரிஷி.
“யாரு இவ்வளவு காலையில்….அதுவும் விடாம கால் பண்றது..?” என்று யோசித்தவனாய்….போனை எடுக்க….அதில் தந்தையின் எண்ணைப் பார்த்து வேகமாக அட்டென் செய்தான்.
“சொல்லுங்கப்பா..!என்ன இவ்வளவு காலையில்….?எதுவும் பிரச்சனையா…?” என்றான் விடாமல்.
“அதை நீதான் சொல்லணும் ரிஷி..!” என்றார் நிதானமாய்.
“அப்பா…! என்ன சொல்ல வரிங்க..? எனக்கு எதுவும் புரியலை…இங்க எனக்கென்ன பிரச்சனை இருக்க போகுது…?” என்று அவன் போக்கில் பேச…
“ஒன்னுமேயில்லையா ரிஷி…!” என்றார் மீண்டும்.
“அப்பா…!நேர விஷயத்துக்கு வாங்க..!” என்றான் பொறுமை குறைந்தவனாய்.
“இன்னும் நீ எழுந்திருக்கலையா….? எப்பவும் இவ்வளவு நேரம் தூங்க மாட்டியே..!” என்றார்.
“கொஞ்சம் டயர்டா இருந்ததுப்பா….அதான்…!” என்று அவன் சொல்ல…
“சரி….எழுந்து போய் இன்னைக்கு பேப்பரைப் படி…!” என்றபடி பட்டென்று வைத்து விட்டார்.
சுரேஷ் போனை வைக்கவும்….சிதாராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்தது.
“இப்ப எதுக்கு சித்ரா கண்ணீர் விடுற..?” என்றார்.
“என் பிள்ளைக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்…?” என்று தேம்ப…
“ஷ்..நடந்தது என்னன்னு நமக்குத் தெரியாது.கொஞ்ச நேரத்துல அவனே நமக்கு கால் பண்ணுவான்…எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத…!” என்று தன் மனைவிக்கு ஆறுதல் சொன்னவரால்…..தனக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.
“காவல் துறையில் இப்படி ஒரு பெயரை வாங்கினால்…அடுத்து என்ன நடக்கும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரியும்….”
“வருண்…!” என்றார்.
“சொல்லுங்கப்பா…” என்றபடி அவர் அருகில் வந்தான் வருண்.அவனுக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர வழி தெரியவில்லை.
“உடனே டிரைவரை காரை எடுக்க சொல்லு….இப்பவே ஊட்டி கிளம்புறோம்..!” என்றவர்…சித்ராவை பார்த்து தலையசைக்க…அவரின் மனம் புரிந்தவராய் தீபிகாவை எழுப்ப சென்றார்.
அவள் தாமதமாக எழும் வழக்கம் கொண்டதால்…அவளுக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லை.
பொள்ளாச்சியில்…..
காலையில் எப்பொழுதும் போல்….காலைக் கடன்களை முடித்துவிட்டு…. அன்றைய நாளிதழை எடுத்தார் கோவிந்தன்.
“இந்தாங்க மோர்…!” என்றபடி அமிர்தவள்ளி கொடுக்க…..ஒரு செம்பு மோரையும் ஒரே நிமிடத்தில் குடித்து முடித்தார் கோவிந்தன்.
அவருக்கு காலையில் வெறும் வயிற்றில்…காபி,டி குடிப்பது பிடிக்காது. அதனால் தானோ என்னவோ….அவ்வளவு வயதிலும் எந்த நோய் நொடியும் தாக்காமல் இருந்தார்.
பிறகு வழக்கம் போல் நாளிதழைப் படிக்க போக…..முதல் பக்கத்திலேயே இருந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்தார்.
“சிவ..சிவா…” என்று வேகமாக பேப்பரைப் போட்டு விட்டு….”அமிர்தவள்ளி..” என்று கத்த….
“என்னாச்சு…ஏன் இப்படி கத்துறிங்க…..?” என்றபடி வந்தார் வள்ளி.
“என்னப்பா…? என்னாச்சு,…? உடம்புக்கு ஏதும் முடியலையா…?” என்று பதட்டத்துடன் அருகில் வந்தார் கணபதி.
ஆனால் அவரோ எதுவும் பேசாமல்….அந்த கயிற்றுக் கட்டிலின் மேல் இருந்த நாளிதலையே வெறித்துக் கொண்டிருந்தார்.
அவர் பார்வை போன திசையில் பார்த்த கணபதி குழம்பினார்.
“இப்ப எதுக்காக….பேப்பரையே பார்க்கிறார்…? அப்படி என்ன இருக்கு அதில்…?” என்று யோசனை பட….அந்த பேப்பரை எடுத்தார் கணபதி.
“அப்பா நான் படிச்சுட்டு தரேன்…! அப்பறம் படிங்க…!” என்றபடி அங்கு வந்து சரண்யா பேப்பரைப் பிடுங்கி…முதல் பக்கத்தை பிரித்தவளின் கண்கள்….அதிர்ச்சியில் கோழி முட்டை அளவிற்கு பெரியதானது.
“பாட்டி இங்க பாருங்க பாட்டி…!” என்று வள்ளியிடம் காட்ட….அதைப் பார்த்த அமர்தவள்ளி…நெஞ்சில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்.
“பாவி மக..! இப்படி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டாளே…! நான் தான் படிச்சு படிச்சு சொன்னேனா….யாராவது கேட்டிங்களா….? ஐயோ…நம்ம குடும்பம் என்ன…கவுரம் என்ன….எல்லாத்தையும் பாதகத்தி மண்ணைத் தோண்டி புதைசுட்டாளே…! எய்யா கணபதி…!” என்று அவரைப் பிடித்துக் கொண்டு கத்த…
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.வேகமாக அவரும் அதை வாங்கிப் பார்க்க……பெற்ற தந்தை என்ற உணர்வு அப்பொழுதுதான் அவருக்கு வந்தது.
“இப்ப எதுக்கு கத்தி கூப்பாடு போடுறிங்க…! எனக்கு ஒரு மக தான்…அது சரண்யா தான்…..அவ ஏற்கனவே செத்துட்டா…” என்று விரக்தியாய் மொழிந்தவர்….அவ்விடத்தை விட்டு அகன்றார்.
ஊட்டியில்….
தலையை கைகளால் தாங்கியபடி…..தன் முன்னால் இருந்த நாளிதழை வெறித்துக் கொண்டிருந்தான் ரிஷி வர்மா.
அனைவரையும் அடித்து நொறுக்கி விட வேண்டும் என்ற துவேசம் அவன் மனதில் எழுந்தது.
இரும்பாய் அவன் உடல் இறுக….”ரிஷி…காபி…” என்றபடி வந்தாள் தைலா.
ரிஷி அமர்ந்திருந்த விதம்…ஏதோ சரியில்லை என்று அவளுக்கு உணர்த்த…
“என்னாச்சு ரிஷி…!” என்று அவனின் தோளைத் தொட்டாள் தைலா.
ஆத்திரத்தில் இருந்தவன் பட்டென்று அவளின் கைகளைத் தட்டிவிட…அவளின் கையில் இருந்த காபிக் கோப்பை…இருந்த இடம் தெரியாமல் சிதறியது.
“ஊட்டியில் உல்லாசம்….காவல் துறை உயர் அதிகாரி….இளம்பெண்ணுடன் உல்லாசம்……!” என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பு காணப்பட…
அபி நீருக்குள் செல்ல…..துரத்தி செல்லும் ரிஷி….அவளைத் தண்ணீரில் இருந்து தூக்கும் ரிஷி……அபியை அணைத்தபடி தூக்கி வந்த ரிஷி….காவல் துறை அறைக்குள் தூக்கி செல்லும் ரிஷி….
இப்படி ஒவ்வொரு புகைப்படமும்….அவனுக்கு பாதகமாகப் போடப்பட்டிருந்தது.
தவறி விழுந்தவளைக் காக்க சென்றேன்…என்று அவன் சத்தியம் செய்தாலும்….அந்த புகைப்படம் யாரையும் நம்ப விடாது. அந்த அளவிற்கு சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த தைலாவிற்கு முகத்தில் ஈயாடவில்லை.”என்ன ரிஷி இது…? யார் பார்த்த வேலை இது…?” என்றாள்.
ஆனால் ரிஷி அசைந்தானில்லை.அவனின் செல்போன் விடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்க…..ஒவ்வொருத்தராய் போன் செய்து கொண்டிருந்தனர்.
அந்த செய்தியைப் பார்த்த தைலாவிற்கே இவ்வளவு அதிர்ச்சி என்றாள்….ரிஷிக்கு சொல்லவா வேண்டும்.
ஒழுக்கத்தை தன் வாழ்வின் ஒரு அங்கமாய் கருதுபவன்…தனது வேலையை உயிராய் மதிப்பவன்….பொய் என்றால் பொங்கி விடுபவன்…இன்று இரும்பாய் போன உடலுடன் அமர்ந்திருந்தான்.
என்ன செய்வதென்று புரியாமல் தைலாவும் விழித்திருக்க…அவனின் கோபம் முழுவதும் அபிராமியின் மேல் திரும்பியது.
வேகமாய் எழுந்து கீழே சென்றான் ரிஷி.அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல் தைலா அவன் பின்னே செல்ல…
அபிராமி இருந்த அறைக் கதவை பலமாய் தட்ட….இரவும் சாப்பிடாததால் உடலில் தெம்பின்றி எழுந்து வந்து கதவைத் திறந்தாள் அபி.
அவனுக்கு வந்த ஆத்திரத்தில் வேகமாய் அவளை வெளியே பிடித்து இழுத்தவன்….ஓங்கி அவள் கன்னங்களில் மாறி மாறி அறையத் துவங்கினான்.
“எல்லாம் உன்னால் வந்தது….என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ… அன்னைக்கு பிடிச்சது எனக்கு அனர்த்தம்….! இன்னைக்கு…இன்னைக்கு எல்லாமே…எல்லாமே …போடி முதலில் இங்கிருந்து…” என்று வெறி கொண்ட வேங்கையாய் அவளைத் தள்ள….சுருண்டு விழுந்தாள் அபி.
“உனக்கென்ன பைத்தியமா…?இப்ப எதுக்காக அவளை இப்படி தள்ளி விடுற…?” என்று தைலா அவளை சென்று தாங்க….
அதற்குள் நினைவு தப்பியிருந்தாள் அபி.”அபி இங்க பாரு..! இங்க பாரு அபி..!” என்று தைலா அவளை உலுக்க….அபியிடம் எந்த அசைவுமில்லை.
பயத்தில் ஒரு நிமிடம் உறைந்து நின்றாள் தைலா….அடுத்த நிமிடம்…தான் ஒரு மருத்துவர்…!” என்ற நியாபகம் அவளுக்கு வர…அபி சோர்வினால் மயங்கியிருக்கிறாள் என்று அறிவுக்கு எட்ட…துரிதமாக செயல்பட்டாள் தைலா.
அவளை அங்கிருந்த சோபாவில் இழுத்து படுக்க வைத்தவள்…..தனது அறைக்குள் சென்று…மயக்கம் தெளிவதற்கான ஒரு இன்ஜெக்சனை போட்டாள்.ஈரத்துணியை வைத்து அவள் முகத்தைத் துடைத்தாள்.
“இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை ரிஷி…! நீயும் ஒரு சராசரி ஆண்பிள்ளை தான் இல்லையா…?” என்றாள் தைலா இடக்காக.
அதுவரை அபியையே வெறித்திருந்த ரிஷிக்கு வேறு எதுவும் கண்ணிலும் படவில்லை…கருத்திலும் பதியவில்லை.
“உன்னோட கோபத்தை….இயலாமை ஒரு பொண்ணுகிட்ட காட்டிகிட்டு இருக்க….இவ்வளவு தானா நீ…?” என்று தைலா வார்த்தைகளால் சாட…
தனது கை விரல்களை இறுக மடக்கியவன்…அங்கிருந்த சுவற்றில் குத்தி…தனது ஆத்திரத்தைக் காட்ட….
“என்ன பண்ற ரிஷி….!” என்று அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தாள் தைலா.
“கோபம் வந்தா என்ன பண்றேன்னு உனக்கே தெரியலை….முதல்ல இந்த நியூஸ் எப்படி வந்தது…இந்த போட்டோஸ் யாரு எடுத்தது….இதுக்கு யார் காரணம் அப்படின்னு யோசி….
அதை விட்டுட்டு உனக்கும் தண்டனை குடுத்து, அவளுக்கும் தண்டனை குடுத்து….இது தேவையா…?” என்று தைலா நிதானமாய் எடுத்து சொன்னாள்.
“நீ என்ன சொன்னாலும் தப்பு இவ மேலதான்.இவ யாரு…எந்த ஊருன்னு நாம கேட்டப்பவே சொல்லியிருந்தா…இப்போ இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. இனி நான் எப்படி பேஸ் பண்ண போறேன்னே தெரியலை…” என்று அவனும் ஆதங்கம் குறையாமல் கத்த….
“உனக்கு மட்டும் தான் பிரச்சனையா…? எப்படி இருந்தாலும் நீ ஒரு ஆண்பிள்ளை… ஆனா அபியை பத்தி நினைச்சுப் பார்த்தியா…? ஒரு பொண்ணா அவ எவ்வளவு அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும் தெரியுமா…?
இப்ப கூட நீ உன்னைப் பத்தி தான் கவலைப்படுறியே தவிர…அவளைப் பத்தி கொஞ்சமாவது யோசனை பண்ணி பார்த்தியா….ஒரு பொண்ணா நாளைக்கு எப்படி அவள் வெளியில் தலை காட்டுவா….இதுக்கு அன்னைக்கே நீ அவளைக் காப்பாத்தாம இருந்திருக்கலாம்…..இவ்வளவு அவமானம் அவளுக்கும் வந்திருக்காது….” என்று மூச்சு வாங்க பேசியவள்….ரிஷியின் வேதனையான முகத்தைக் கண்டவுடன் சற்று நிதானித்தாள்.
துவண்ட கொடியாய் சோபாவில் இருந்த அபியைக் கண்டவனின் முகம் சொல்லொண்ணா துயரத்தை வெளிப்படுத்தியது.
அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டான்.பிரச்னையை எப்படி கையாள வேண்டும் என்று அவன் சிந்திக்க ஆரம்பித்தான்.
அபிராமி தனக்கு போடப்பட்ட ஊசியின் உதவியுடன் உறக்கத்தின் பிடியில் இருக்க….
அதற்கு பிறகு அனைத்து செய்திகளும் அவனையே மாற்றி மாற்றி ஒளிபரப்ப….நொந்து போனான் ரிஷி.
“தனக்கே இப்படி இருக்கிறது என்றால்….இவள் கண் விழித்து இது தான் விஷயம் என்று அறிந்து கொண்டாள்…அவளின் மனம் எவ்வளவு பாடு படும்…” என்று முதன் முறையாக அவள் பக்க நியாயத்தையும் சிந்தித்தான்.
அவனின் முகத்தைப் பார்த்த தைலாவிற்கு நிம்மதி பிறந்தது.ரிஷி நிதனாமாய் சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்றால்..எப்படியும் அந்த பிரச்னையை முடித்து விடுவான் என்று அவளுக்குத் தெரியும்.
கோபத்தில் இருப்பவனை மலையிறங்க செய்வது தான் கடினமே தவிர…அவன் நிதனாமே இருந்தால் அவனைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.
முதலில் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தான்.”யார் செய்த வேலை இது…? நேற்று அந்த காவலரைத் தவிர அங்கு யாருமில்லை. அப்படியிருக்கையில் இத்தனை போட்டோக்களை எடுத்தது யார்..? அதை ஏன் மீடியாவிடம் கொடுக்க வேண்டும்.
இதில் யாருக்கு என்ன லாபம்….? என்று அவன் மனம் சிந்திக்க….
“இதனால் என்ன நடக்கும்…? என் பெயர் கெடும்….என்னை சஸ்பென்ட் செய்வார்கள்…!”
எனக்கு வேண்டாதவங்க யாரும் இதைச் செய்தாங்களா…? என்று ஒவ்வொரு பாயிண்ட்டாக யோசித்துக் கொண்டிருந்தான்.
நேரம் பதினொன்றைத் தொட்டது.அபிக்கு லேசாக உறக்கம் கலைய…கண்களைப் பிரிக்க முடியாமல் தவித்தாள்.
அவன் அறைந்த இடம் தீயாய் தகிக்க…..வலி பொருக்க முடியாமல் முனங்கினாள்.கன்னம் இரண்டும் உப்பி வீங்கிப் போயிருக்க….அவளைப் பார்த்த தைலாவிற்கு கழிவிரக்கம் தோன்றியது.
“என்ன பெண் இவள்….? அவன் இவ்வளவு பேச்சு பேசுகிறான்….எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையே…! அவன் அறைந்த போதும் கூட அமைதியாகத்தானே இருந்தாள்…இவளுக்கு கோபமே வராதா…?” என்று எண்ணினாள்.
வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்க…..ஒரு வித யோசனையுடன் கதவை நோக்கினான் ரிஷி.
தைலா அவனைப் பார்க்க….அவன் தலையை அசைக்கவும்…சென்று கதவைத் திறந்தாள்.சுரேஷ்,சித்ரா,வருண், தீபிகா என்று குடும்பமே நின்றிருந்தது.
அவர்களைக் கண்ட ரிஷி திகைத்தான்.தன் குடும்பத்தினர் எப்படியும் வருவார்கள் என்று தெரியும்….ஆனால் இவ்வளவு விரைவாக வருவார்கள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.
“அப்பா…” என்று அதற்கு மேல் வாரத்தை வராமல் தவித்தான் ரிஷி.
மெதுவாக அவன் அருகில் சென்று அவனைத் தோளோடு அணைத்தவர்… ”என் பையனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்….அவனால் எந்த தப்பையும் செய்ய முடியாது…!” என்றார்.
தனது தந்தையின் நம்பிக்கையில் அவன் உள்ளம் பெருமையாய் உணர்ந்தது.
“அண்ணா…” என்ற கேவலுடன் அவனை வந்து அணைத்துக் கொண்டாள் தீபிகா.
“ஹேய் தீபிக் குட்டி…ஏன் அழுகுறிங்க…? இதெல்லாம் ஒரு பிரச்சனையா…? அண்ணா சும்மா அசால்ட்டா ஹேண்டில் பண்ணிட மாட்டேன்…!” என்று காலரைத் தூக்கி விட….அப்பொழுது தான் நிம்மதி வந்தது தீபியின் முகத்தில்.
“ரிஷி..!” என்று அவனை அணைத்துக் கொண்டான் வருண்.வருண் எளிதில் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல.ஆனால் நிதானம் அதிகமாய் இருக்கும். ரிஷியைப் போன்ற முன்கோபம் இவனிடம் அறவே கிடையாது.
சித்ரா ரிஷியின் தலையை வருடி விட….”சாரி மாம்…” என்ற குற்ற உணர்வுடன் தலை குனிந்தான் ரிஷி.
“என் பிள்ளை எப்பவும் தலை நீமிர்ந்து தான் இருக்கணும்…!” என்று சொல்லிக் கொண்டு திரும்ப….அப்பொழுது தான் கவனித்தனர் அபிராமியை.
வாடிய மலரைப் போல் இருந்தவளைப் பார்த்து சித்ராவிற்கு மனம் பதைபதைத்து.தைலா ஏற்கனவே வருணிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லியிருந்த படியால்….அனைவருக்கும் அபியைத் தெரிந்து இருந்தது.
ஏனோ அபியைப் பார்த்த மாத்திரத்தில் அனைவருக்கும் பிடித்து போய்விட்டது.அவள் மிரள மிரள விழித்துக் கொண்டிருக்க….ரிஷியைச் சுற்றி அவன் குடும்பமே நின்றிருக்க….தான் மட்டும் யாரும் இல்லாத அநாதையைப் போல் உணர்ந்தாள்.
தன் மீது தனக்கே கழிவிரக்கம் தோன்ற கலங்கிய கண்களை அவர்கள் அறியாதவாறு மறைக்க…தலையைக் கீழே குனிந்து கொண்டாள்.
அவளின் அந்த நிலையைப் பார்த்த ரிஷி….”அவளை கட்டி அனைத்து… உனக்கு நானிருக்கிறேன்….!” என்று சொல்லத் துடித்த கைகளை கஷ்ட்டப் பட்டு அடக்கினான்.
மகனின் பார்வையை வைத்தே அவனின் மன ஓட்டத்தை கணித்த சித்ரா….அபியின் அருகில் சென்று அமர்ந்தார்.ஆறுதலாய் அவளை அணைத்தவர்….”உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்மா….எதை நினைத்தும் மனசைப் போட்டு குழப்பிக்காத….” என்று அணைத்துக் கொண்டார்.
சிறு வயதில் இருந்து தாய்ப் பாசம் இன்றி வளர்ந்தவளுக்கு…அவரின் அருகாமை மிகுந்த பாதுகாப்பைத் தர….அவரை ஒன்டியே அமர்ந்து கொண்டாள்.
இன்னமும் நடந்த பிரச்னையை அவள் அறியவில்லை.அறிந்தால்…?
ரிஷியின் முகத்தையும்,அபியின் முகத்தையும் மாறி மாறி பார்த்த சுரேஷ்…சில நிமிடங்களுக்குப் பிறகு தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார்.
“சித்ரா….” என்று தன் மனைவியை அழைத்தவர்…ஏற்கனவே தாங்கள் எடுத்த முடிவை நினைவூட்ட….
“எழுந்திரும்மா….!” என்றபடி அவளை அறைக்குள் அழைத்துச் சென்றார்.
“ரிஷி…அந்த பெண்ணை அடித்தாயா…?” என்றார் சுரேஷ்.
எதுவும் தன தந்தையின் பார்வையில் இருந்து தப்பாது போல…என்று எண்ணிய ரிஷி…”சாரிப்பா…கோபத்தில்….” என்று இழுக்க…
“கோபத்தில் அடிக்க அவள் யார் உனக்கு..? அவள் திருப்பி அடிக்க மாட்டாள் என்ற ஆண் திமிரா..?” என்றார் கடுமையாக.
ரிஷி எதுவும் பேசாமல் தவறு செய்தவனாய் தலையைக் குனிந்து கொண்டான்.
வருண் அண்ணனைப் பாவமாய்ப் பார்க்க….தீபிகா…தன் அண்ணனை விடாமல் அவன் கைகளைப் பிடித்தவாறு அவன் அருகிலேயே நின்றாள்.
“இதுல இருக்க டிரசைப் போட்டுட்டு வா ரிஷி…!” என்றார் கட்டளையாய் சுரேஷ்.
காரணம் புரியாத போதும்…தந்தை சொல்லுக்கு மறுப்பின்றி சென்றான் ரிஷி.
தந்தை குடுத்த கவரில் இருந்த வேஷ்டி,சட்டையைப் பார்த்துக் குழம்பியவன்…..அந்த குழப்பத்துடனே அதை அணிந்து கொண்டு வந்தான்.
வந்தவனின் கண்களில் அபிராமி பட…..அதிர்ந்து அப்படியே நின்றான்.இளம் ரோஜா வண்ண நிறத்தில்….சிறிய கரையிட்ட….ஒரு எளிமையான பட்டுப் புடவையில்…அவளைக் கண்டவன் இமைக்கவும் மறந்தான்.
இத்தனை நாள் சிறு பெண்ணாய் தெரிந்த அவள்…இன்று தேவதையைப் போல் இருந்தாள்.கழுத்தில் ஒரு பெரிய செயினும்…..ஒரு சிறிய முத்து மாலையும் இருக்க….காதில் அவள் ஏற்கனவே அணிந்திருந்த ஜிமிக்கி நடனமாடிக் கொண்டிருந்தது.
அவன் அடித்ததால் வீங்கிய கன்னங்கள் சிவப்பாய் தெரிய….சோர்வுடன் இருந்தாள்.என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.காலையில் ஏன் அவன் தன்னை அடித்தான்…?இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்..? ஏன் தன்னை புடவைக்கு மாற்றுகிறார்கள்..” என்று எதுவும் புரியாமல் குழம்பிய மனதுடன் இருந்தாள் அபிராமி.
ரிஷிக்கு ஏதோ புரிவது போல் இருக்க….”அப்பா…! இப்ப இதுக்கென்ன அவசியம்…நான் எப்படி…அபியை…!” என்று அவன் திணற…
“உனக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லையா…?” என்று அவன் கண்களைப் பார்த்து சுரேஷ் கேட்க…
பொய் சொல்லி அறியாதவன்…அவர் கண்களை சந்திக்க மறுத்தான்.
“அவ யாரு என்னன்னு தெரியாது….பார்க்க சின்ன பொண்ணு மாதிரி தெரியிறா…அதான்…!” என்று சமாளிக்க…
“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்…!இனியாவது நாங்க சொல்வதை நீ கேள்..!” என்று முடித்துக் கொண்டார்.
“வருண்…! பவானி அம்மன் கோவிலுக்கு வண்டியை எடு…!” என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் சுரேஷ்.
நடப்பதைப் பார்த்தால்….. காரில் வரும் போதே…எல்லாவற்றையும் திட்டமிட்டு விட்டார்கள் போலவே…! என்று ரிஷி எண்ண…
இதெற்கெல்லாம் காரணகர்த்தவாய் இருந்த தைலா…ரிஷியின் கண்களில் படாதவாறு….வருணின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவசரத்திற்கு ரெடிமேடாக எடுத்த பிளவுஸ்….அபிக்கு லூசாக இருக்க….அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
“நாம எங்க போறோம்ம்மா….!” என்றாள் சித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு.
சித்ரா அவளை ஆச்சர்யமாய்ப் பார்க்க….”நான் ஒன்னும் சொல்லவில்லை அவகிட்ட….” என்றாள் தைலா.
“ஹோ…” என்று மனதில் நினைத்த சித்ரா…”கோவிலுக்கு போறோம் அபிராமி…” என்றார்.
அவளைப் பொறுத்தவரை ரிஷியின் கோபத்தில் இருந்து தன்னைக் காக்க வந்த கடவுளாகவே தெரிந்தார் சித்ரா.மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
ஆனால் ரிஷியோ அவள் மீது வைத்த கண்ணை எடுக்கவேயில்லை.உள் மனம் ஏதோ முரண்டு பண்ணியது அவனிடம்.
“இது சரியாய் வருமா…? இவள் பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியாது எனக்கு….! இவள் யார்..? எப்படிப்பட்டவள்…? இப்படி எதுவும் தெரியாமல்…. வாழ்க்கையை இணைத்துக் கொள்வது சரியாய் வருமா..?” போன்ற கேள்விகள் வண்டாய் மனதை குடைந்தாலும்….ஏதோ ஒரு வகையில் அவன் மனம் நிம்மதியாய் உணர்ந்தது.
பவானி அம்மன் கோவில் முன் வண்டி நிற்க…..மனதில் சிறு சலனத்துடன் இறங்கினான் ரிஷி.சித்ராவைத் தொடர்ந்து இறங்கிய அபி…அந்த இடத்தின் அழகில் மெய்மறந்தாள்.
இந்த இடத்தில் இப்படி ஒரு கோவிலா…? என்று தன்னை மறந்தாள்.
“அபி இங்க வாம்மா…!” என்று சித்ரா அழைக்க…அவரின் அருகில் சென்று நின்றாள்.
வருண் அந்த பையை எடுத்துட்டு வா…! என்று மகனிடம் மொழிந்த சுரேஷ்…….அங்கிருந்த பூசாரியிடம் விவரம் சொன்னார்.
அபியைத் தவிர அங்கு அனைவருக்கும் விசயம் தெரிந்திருக்க…. அப்பொழுது தான் ரிஷியை கவனித்தாள் அபி.
வேஷ்டி சட்டையில் இருந்தவனைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. அவன் முகம் இறுகியிருக்க வேகமாக தனது பார்வையை அகற்றிக் கொண்டவள்…அவனைப் பார்க்கவே அஞ்சினாள்.
அவளின் கண்களில் முதலில் சுவாரசியம்…உடனே பயமும் வந்ததைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ரிஷி.
“என்ன ரிஷி ஓவரா சைட் அடிக்கிற போலவே…!” என்று காதைக் கடித்தாள் தைலா.
ரிஷி அவளை முறைக்க…..”தைலா கொஞ்சம் சும்மா இரு…நேரம் காலம் தெரியாமல்…!” என்று அமைதியாய் கண்டித்தான் வருண்.
அனைவரும் பதட்டத்துடன் இருக்க…தைலா மட்டும் மகிழ்ச்சியாய் இருந்தாள்.அவள் ஆசைப்பட்டதும் இது தானே…! அது நிறைவேறியதில் வந்த மகிழ்ச்சி தான் இது…!
“அண்ணா…உனக்கு இந்த பெண்ணைப் பிடிச்சிருக்கா…!” என்றாள் தீபி.
“ஏன்டாம்மா…!” என்றான் கனிவாய்.
“இல்லை நீ இன்னும் நடந்ததை மறக்காம…!” என்று தீபி இழுக்க….
“போனதைப் பத்தி பேச வேண்டாம் தீபி….இப்ப நடப்பதைப் பார்ப்போம்…ஏன் உனக்கு இவளை பிடிக்கலையா…?” என்றான் சிரிப்புடன்.
“ஐயோ அண்ணா…எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.அதான் கேட்டேன்…” என்றாள் அசடு வழிய.
பூசாரி இருவர் கழுத்திலும் மாலைப் போட சொல்ல…அதிர்ந்தாள் அபி.
”என்ன மாலை…எதுக்காக…?” என்று குழம்பியவளுக்கு..அப்பொழுது தான் சுற்றுப் புறம் உரைத்தது.
வேகமாய் ரிஷியைப் பார்க்க…அவன் முகம் கல்லாய் சமைந்து இருந்தது.அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க இயலவில்லை.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே….அபியின் கழுத்தில் மாலையிட்டான் ரிஷி.
சட்டென்று அவன் கண்களைப் பார்க்க….”நீயும் போடுமா….!” என்று ஒவ்வொருத்தராய் சொல்ல…அவளின் கை தன்னையும் மறந்து அவனின் கழுத்தில் மாலையிட்டது.
“இந்த தாலியைக் கட்டுங்க தம்பி…இந்த அம்மன் கோவில் ரொம்ப சக்தி வாய்ந்தது.இனி நடக்குறது எல்லாமே நல்ல படியாதான் நடக்கும்…” என்று பூசாரி சொல்ல…
இயந்திர கதியில் அந்த தாலியைக் கட்டி முடித்தான் ரிஷி. முடிந்தது….எல்லாம் முடிந்தது.செல்வி அபிராமி…திருமதி அபிராமி ஆகிப் போனாள்…சில நிமிடங்களில்.
சாமி கொடுத்த வரம்…..இதை தடுப்பதற்கு யார் இருக்கா…!
மூணு முடிச்சில் ஏதும்….அவன் இல்லாம முடிஞ்சிருக்கா…!
யார் யார்க்கு யாரு அதை சொல்வது யாரம்மா…!
விதி சொல்லாமல் ஆடும்…அதை வெல்வது யாரம்மா…!
எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம்….
கேட்காமல் வந்ததிங்கு பூவிலங்கு…
பூ மாலையிட்டு வந்த சொந்தம் ஆனாள் இன்று…
வருண் அவர்களை கல்யாணக் கோலத்தில் போட்டோக்களை எடுத்துத் தள்ள…..தைலா தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க….சுரேஷ்–சித்ரா தம்பதியினராய் ஆசீர்வாதம் செய்தனர்.
தாலியைக் கட்டும் போது அவன் விரல் பட்ட இடம்….சில்லிட்டு நிற்க…நடந்த எதையும் அபியால் நம்ப முடியவில்லை.இது கனவோ…! என்று தன்னைத் தானே கிள்ள….நிஜம் தான் என்று உணர்த்தியது நிஜம்.
அடுத்து செய்ய வேண்டியதை வருணிடம் விளக்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்.தன் மகன் மீது எந்த பழியும் விழுவதை அவர் விரும்பவில்லை.
அதே சமயம் அபியின் வாழ்க்கை கெட்டுப் போவதையும் அவர் விரும்பவில்லை.அனைவருக்கும் சாதகமான முடிவாய் இந்த திருமணத்தைக் கருதினார்.
மாலையிட்டவன் அவள் கைகளைப் பிடிக்க….பயத்தில் வெளிறியவலாய் அவனின் முகம் பார்த்தாள் அபி.
வந்தாளே வண்ணக்கிளி உனக்காகவே….!
உனக்கென்று போட்டு வைத்த கணக்காகவே…!
உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ….
நடந்ததெல்லாம் நன்மை தானம்மா..!