சுகம் – 22
உன்னோடு வாழும் காலமெல்லாம்
அன்பும் நேசமும் புரிதலும் காதலும்
செல்ல சீண்டலாய், மென் வருடலாய்
ஆலத்தின் விழுதாய் தேனூறும் பலாவாய்
தெவிட்ட தெவிட்ட வாழ்ந்திட ஆசை
“ஏய் சோபி, என்ன முழிச்சிட்டு நிக்கிற, போ சீக்கிரம் மாப்பிள்ளைக்கு எண்ணெய் போடு.. நாலு மணிக்கு எழ சொன்னா ஆடி அசைஞ்சு வந்து நின்னு இப்போ என்ன முழிக்கிற போ சோபி..” என்று விரட்டும் அன்னையை பாவமாய் பார்த்தாள் சௌபர்ணிகா..
“அம்மா இதெல்லாம் ஓவரா இல்லையா…. அவருக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க தெரியாதா என்ன ??”
“என்ன டி வழக்கம்னு ஒன்னு இல்லையா.. போ போ.. சீக்கிரம்.” என்று அவளை விரட்டிய அன்னையை திட்டியபடி எண்ணெய் கிண்ணத்தோடு அறைக்குள் நுழைந்த சோபியை இடுப்பில் கட்டிய துண்டோடு, முப்பத்திரண்டு பற்களும் தெரிய வரவேற்றான் சர்வேஷ்..
இதில் கமான் கமான் என்று பாட்டு வேறு.. அவனது செயலே உணர்த்தியது அனைத்தும் அவனது கைங்கரியம் என்று.. அவனை ஒரு பார்வை பார்த்தபடியே வந்தவள், அவன் இருந்த கோலம் கண்டு தலையில் அடித்துக்கொண்டாள்..
“சீக்கிரம் வா சுபி, எண்ணெய் வைச்சு விடு வா வா…”
“இவன் சிடுமூஞ்சியா இருந்தப்போக்கூட ஈசியா சமாளிச்சேன், ரொமான்ஸ் பண்றப்ப முடியலையே..” என்று நொந்தவள் மெல்ல நடந்து போக,
“என்ன யோசனை வா சுபி.. சீக்கிரம் ம்ம் ஆரம்பி….” என்றான் அவனோ விடாது..
“முதல்ல ஆடாம உட்காருங்க… இதெல்லாம் நீங்களா பண்ண கூடாதா???” என்றவளின் குரலில் அப்பட்டமாய் அத்தனை சலிப்பு.
“ஹேய் சுபி, எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லைம்மா…”
“அடடா நான் மாட்டும் கோல்ட் மெடலா வாங்கிட்டு வந்தேன் எண்ணெய் வைக்கிறதுல… நீங்களா எடுத்து தலைக்கு வைக்க கூடாது..” என்று முனங்கியபடி அவன் தலைக்கு எண்ணெய் வைத்தவளை முன்னிருந்த குளியலறை கண்ணாடி வழியாக ரசித்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ்..
சௌபர்ணிகாவின் இத்தனை சலிப்பிற்கும் எரிச்சலுக்கும் காரணம் அவளுள்ளிருந்த வெட்கமே.. ஏனோ அவளுக்கு கூச்சமாய் இருந்தது கணவனின் வெற்றுடம்பில் தேய்த்து விட.. அதை அறிந்ததினால் தான் சர்வேஷ் இத்தனை ஆர்ப்பாட்டமும்..
“ஏய் சுபி என்கிட்ட உனக்கு என்ன வெட்கம்??”
அவளிடம் பதிலே இல்லை…. மீண்டும் அதே கேள்வியை கேட்டான், ஆனால் அவளோ அவன் முகம்கூட பார்க்காது செய்யும் வேலையில் கருத்தாய் இருந்தாள்.. பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவளது கைகளை பிடித்து முன்னே இழுத்து தன் மீதே சரிதான்..
“எ.. என்.. என்னங்க இது???” என்று திக்கி திமிறியவளுக்கு அவனது மாய புன்னகையே பதிலாய் வந்தது..
இதற்குமேல் நமக்கு இங்கே என்னவேலை என்று காற்றும் கூட கண்கள் மூடி கொண்டது போல.. ஒருவழியாய் அவனுக்கு எண்ணெய் வைத்து பின் அவளும் குளித்து முடித்து வர, எத்தனை நேரம் கடந்ததோ வெளியே இருந்து சோபி என்று அழைப்பு வந்த பிறகே அவசர அவசரமாய் புது புடவையின் மடிப்பை நீவியபடி கதவை திறந்தாள் சௌபர்ணிகா..
மகளின் முகத்தில் தெரிந்த செம்மையும், மகிழ்வும் புனிதாவிற்கு இன்னும் சந்தோசத்தை கொடுத்தது..
“என்னமா அப்படியே பிரீஸ் ஆகிட்ட??”
“ஹா !! இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி நிக்கிறது சோபிகண்ணு” என்றபடி வந்தான் கார்த்திக்..
“டேய்……!!!! ”
“சரி சரி ஹேப்பி திவாளி… எங்க மாமா அவருக்கு வாழ்த்துவோம்..” என்றவன் வேண்டுமென்றே “மாமா மாமா… ” சத்தமாய் அழைத்தான்..
“என்ன கார்த்திக் ” என்று சர்வேஷும் வர அதே நேரம் “என்ன கார்த்திக்..” என்று பரந்தாமனும் வந்தார்..
இதற்குமேல் கார்த்திக் வாய் திறப்பானா இல்லை அங்கு தான் நிற்பானா என்ன?? மெதுவாய் “வாங்க மாமா வெடி போடலாம்” என்று சர்வேஷையும் இழுத்தபடி நகர்ந்துவிட்டான்.
சிறிது நேரத்தில் சர்வேஷின் குடுபத்தினரும் வர அங்கே கலகலப்பிற்கும் சந்தோசத்திற்கும் பஞ்சம் இல்லை.. அனைவரும் ஒன்றாய் கோவிலுக்கு சென்று வந்து, மதிய விருந்தும் முடிந்து மாலை நேரம் வெடிகள் வெடித்து, இப்படியாக சர்வேஷ் சௌபர்ணிகா இருவரின் தலை தீபாவளி கொண்டாட்டமும் அழகாய் அரங்கேறியது..
மாமியார் வீட்டு விருந்தென்றால் உடனே முடிந்து விடுமா என்ன ?? அடுத்து வந்த இரண்டு நாட்களும் அங்கே தான் தங்கினர் இருவரும்.. இதுவரை சௌபர்ணிகாவை பற்றி தெரியாத சில விசயங்களை எல்லாம் தெரிந்துகொண்டான் சர்வேஷ் இந்த நாட்களில்.. அதில் ஒன்று அவள் தன்னை எத்தனை ஆழமாய் காதலிக்கிறாள் என்று..
தீபாவளி முடிந்து மறுநாள் சர்வேஷ் அவர்கள் அறையில் இருக்க வெளியே சௌபர்ணிகா தன் அன்னையோடு சண்டையிட்டு கொண்டிருந்தாள்..
“அம்மா சொன்னா கேளும்மா, இதெல்லாம் இங்கவே இருக்கட்டும்.. ஏன்மா இப்படி பண்ற.,.” என்று கெஞ்ச,
“ஆமாடி நீ வருஷ கணக்கா குப்பை சேர்த்து வைப்ப அதெல்லாம் நான் பொக்கிஷம் மாதிரி தூசி தட்டி சுத்தம் செஞ்சு வைக்கணுமா.. ஒழுங்கா உங்க வீட்டுகே தூக்கிட்டு போ, இங்க இருந்தா நான் குப்பைல தான் போடுவேன்..” என்றார் அவர் மிஞ்சலாய்.
“அதெல்லாம் முடியாது, இதெல்லாம் என் ரூம்ல தான இருக்கு உனக்கு என்ன கஷ்டம்.. நான் வேணா வரும்போது எல்லாம் சுத்தம் பண்ணி வைக்கிறேன்…” என்றவள் அன்னையின் பதிலை காதில் வாங்காமலே அவர் கையில் இருந்த டப்பாக்களை பிடுங்கி கொண்டு சென்றாள்..
“நீ எல்லாம் திருந்தவே மாட்ட சோபி…. அங்க போயி எங்க பேரை கெடுக்காம இருந்தா சரி தான்…” என்று புலம்பியபடி நகர்ந்தார் புனிதா..
“என்ன புனிதா வீட்டுக்கு வந்த பொண்ணுக்கிட்ட என்ன சண்டை போடுற, விடு அவ விருப்பப்படி இருக்கட்டும்” என்று கூறியது வேறு யாருமில்லை பரந்தாமன் தான்..
அவர் பேசியதை கேட்டு கார்த்திக் நெஞ்சில் கை வைத்து சாய்ந்துவிட்டான்.. மனதிற்குள் நீயா பேசியது என்று பாடல் ஓடியது… புனிதாவுமே அதே பாவனையில் தான் கணவரை பார்த்தார்..
“என்ன புனிதா ???!!”
“இல்ல நிஜமாவே நீங்க தானான்னு பார்த்தேன்.. எப்படிங்க மாப்பிள்ள தான் மாறிட்டார்னு பார்த்தா நீங்களுமா??” என்று முகவாயில் கை வைக்க,
கார்த்திக்கோ “அம்மா நான் முடிவு பண்ணிட்டேன், நான் வீட்டோட மாப்பிள்ளையா போக போறேன்..” என்று சத்தமில்லாமல் அடுத்த குண்டை வீசினான்.. அன்னை தந்தை இருவருக்குமே ஏன் என்ற கேள்வி முகத்தில் தொக்கி நின்றது..
“அப்போ தான்மா நானும் இப்படி வந்து போறப்ப அப்பா எனக்கும் சப்போர்ட் பண்ணுவாரு..” என்று சிரித்தப்படி கூறவும் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு தன் அறைக்கு சென்ற பரந்தாமனுக்குமே உள்ளுக்குள்ளே சிரிப்பு தான்..
“படவா ராஸ்கல் பேச்சை பாரு…” என்று புனிதாவும் அவன் முதுகில் இரண்டு போட்டுவிட்டு சென்றார்..
ஆனால் இதையெல்லாம் அறியாத சௌபர்ணிகாவோ மிக மும்முரமாய் தன் கப்போர்டில் எதையோ உருட்டிக்கொண்டு இருந்தாள்.. சர்வேஷ் கூட சுபி என்று இரு முறை அழைத்துவிட்டான்.. ம்ம்ஹும் அவளிடம் பதிலே இல்லை தானாய் பேசுவதுமே உள்ளே தலையை விட்டு எதையோ தேடுவதுமாய் தான் இருந்தாள்..
“சுபி என்ன பண்ற..” என்று அவளது தோளை தொடவும் தான் திடுக்கிட்டு விழித்தாள்..
“என்னங்க, எதுவும் வேணுமா?? ”
“எனக்கு எதுவும் வேண்டாம், ஆமா நீ என்ன தேடுற ??”
“அது… அது நத்திங்…..” என்றிட, அவளது முகமே அழகாய் காட்டிக்கொடுத்தது எதையோ மறைக்கிறாள் என்று..
“என்னன்னு சொல்லு..” என்றபடி ஒரு கையால் கப்போர்ட்டை மூடியவன் இன்னொரு கையால் அவளை அதன் மீதே சாய்த்து நிறுத்தினான்..
‘இவன் வேற அப்பபோ இப்படி விசாரணைக்கு வந்திடுவான்..’
“ஓய் என்னை பாரு சுபி…” என்றவனின் மூச்சு காற்று அவள் தேகம் தீண்ட சிலிர்த்துத்தான் போனாள் சௌபர்ணிகா.
“என்.. என்னங்க.,… ”
“என்ன தேடுன ???”
‘சத்தியமா உன்னை இல்ல டா…’
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும்”
‘சொல்லாட்டி, சொல்ல இஷ்டமில்லைன்னு அர்த்தம்..’
“ம்ம்ஹும் இதெல்லாம் சரி பட்டு வராது, நான் கேட்கிற விதத்துல கேட்டா தான் வழிக்கு வருவ…”
‘வாத்தியார்ல இருந்து போலீசா மாறிட்டானே… ‘
“சுபி…” என்று அவளை இன்னும் நெருங்கி ஒட்டி நிற்க அவளோ அவஸ்தையாய் என்னங்க என்றாள்..
“என்ன தேடுன?? ”
‘ஐயோ முதல்ல இருந்து வர்றானே… கேள்விய மாத்தி கேளுடா பதில் வருதான்னு பாப்போம்…’
அவன் நெருங்கி வர வர சௌபர்ணிகாவின் இதய துடிப்பு அதிகரித்தது..
“அப்போ நீ சொல்லமாட்ட??? ”
சர்வேஷிற்கு அப்படி என்ன அவள் தன் அழைப்பை கூட கவனிக்காமல் தேடினாள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம், அவளது தயக்கமே அவனை இன்னும் தூண்டியது.. அவன் கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் தன் கையை நீட்டினாள்.. என்னவென்று பார்த்தவனுக்கு பொசுக்கேன்றானது, ஏனெனில் அவள் கையில் இருந்தது ஒரு பழைய பொத்தான்..
“ஷ் இதைதான் தேடுனியா?? யாரோடது கார்த்திக்கா இல்ல உங்கப்பாவா ??? ரொம்ப பழசா இருக்கே..??” என்று கேலி வேறு செய்யவும் அது உன்னுடையது என்பது போல விரலை அவன் புறம் நீட்டினாள்.. நீட்டிய விரலை பற்றியபடி கேள்வியாய் புருவம் உயர்த்தினான்..
“இது உங்க பட்டன் தான்.. ஒருநாள் சென்டர்ல திங்க்ஸ் எல்லாம் சேஞ் பண்ணும் போது தெரியாம கம்பி உங்க சர்ட்ட இழுத்துடுச்சு.. அந்த ஷர்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்போ தெரிச்சு விழுந்த பட்டன் தான் இது.. மொத்தம் மூணு இருந்தது இப்போ ஒண்ணு தான் இருக்கு அதான் தேடுனேன்…” என்று அவள் கூறவும் அவளை ஆச்சரியமாய் பார்த்தவன் அதே வியப்போடு அந்த பொத்தானை எடுத்து பார்த்தான்.
அவன் மனதில் அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் வந்து போனது.. இத்தனை கூர்மையாய் தன்னை கவனித்தாளா..??
ஆனால் அதற்கு மேல் அவனை யோசிக்க விடாது வேறு சிலதையும் காட்டினாள் சௌபர்ணிகா.. அதாவது சற்று நேரத்திற்கு முன்னே புனிதா குப்பை என்று சொன்னதைதான் காட்டினாள். அழகாய் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருந்தாள்.. சில காகிதங்கள் தான், பிரித்து பார்த்தால் அவன் திருத்திய பரீட்சை பேப்பர்கள் அனைத்தும்..
“ஒரு நாள் ஓவரால் டெஸ்ட்க்கு நீங்க தான் கரக்ட் பண்ணீங்க.. என் பிரண்ட்ஸ் கிட்ட இருந்தும் அந்த பேப்பர் எல்லாம் பிடுங்கி வச்சுகிட்டேன்.” என்று கூறியவளை இறுக அணைத்துக்கொண்டான்..
“என்.. என்னங்க…. ???”
“ஷ்… கொஞ்ச நேரம் எதுவும் பேசாத சுபி…” என்றவனின் மனம் அமைதியாய் இல்லை..
எதனால் இவளுக்கு தன் மீது இத்தனை காதல்?? எந்த நம்பிக்கையில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு காதலோடு காத்திருந்தாள் ?? இத்தனை விசயங்களையும் மனதில் சுமந்து மௌனமாய் இருக்கவேண்டுமென்றால் எத்தனை திடம் இவளுக்கு இருந்திருக்க வேண்டும் மனதில்..
அல்ல அவளது காதல் மீது தான் எத்தனை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.. இப்படி பட்டவளுக்கு நான் என்ன செய்தேன் ??
‘எதுவுமே இல்லை… எவ்வளோ ஈஸியா என்கிட்ட வேற எந்த காரணமும் இல்லன்னு சொன்னேன்.. ஆனா இவ ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்தையும் இப்படி சேர்த்து வச்சிருக்காளே.. ஆனா நான் கண் முன்னே இருந்தும் கூட ச்சே… நான் எவ்வளோ சுயநலமா இருந்துட்டேன்..’ என்று எண்ணியவனின் அணைப்பு இறுகியதே தவிர தளரவில்லை..
“என்னங்க… என்ன ??? ” என்றவளுக்கு குரலே வெளி வரவில்லை..
அவனோ வேறு எதுவும் கூறாமல் சௌபர்ணிகாவை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.. இப்படியெல்லாம் செய்பவன் அல்ல சர்வேஷ் என்று அவளுக்கு முன்னமே தெரியும்.. அன்பானவன் தான் ஆனால் அதற்காக ஒரேடியாய் உருகி வழிய மாட்டான்..
கண்ணே மணியே என்றெல்லாம் கொஞ்ச தெரியாது.. ஆனாலும் தன் அன்பை சில செயல்களில் வெளிபடுத்திவிடுவான்.. ஆனால் இன்று இப்படி தன்னை மறந்து அணைக்கிறான் என்றால் அவன் மனதை எதுவோ பாதித்து இருக்கிறது என்று புரிந்துகொண்டாள்..
மெல்ல அவன் முதுகை தடவியபடி “என்னங்க என்னாச்சு?? ” என்றாள்.. அவள் குரலே அவனுக்கு அமிர்தமாய் இருந்தது..
“சுபி…. ”
“ம்ம்… ”
“ஐம் ரியலி சாரி சுபி..” அவனது குரலே உணர்த்தியது, மனதார ஆழ் மனதிலிருந்து அவன் மன்னிப்பு கேட்கிறான் என்று.. தலையை நிமிர்த்தி மட்டும் பார்த்தாள்..
“ஆமா சுபி.. நீ காட்டுனது எல்லாம் சின்ன சின்ன பொருள்தான்.. ஆனா எல்லாத்திலையுமே என் நினைவுகளை நீ பூட்டி வச்சிருக்க.. ஆனா இது போல எல்லாம் நான் இல்லையே சுபி.. இதுவரைக்கும் உனக்குன்னு நான் எதுவுமே பண்ணது இல்லை.. இதையெல்லாம் நினைக்கிறப்ப என்.. எனக்கு….” என்றவனது குரல் பேச முடியாமல் உடைந்து போனது..
அவள் என்னவோ சாதரணமாய் தான் காட்டினாள், ஆனால் சர்வேஷ் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பான் என்று நினைக்கவில்லை.
“என்னங்க இது… ம்ம்ச் வாங்க முதல் உட்காருங்க… என்ன சர்வா இது சின்ன பசங்க போல..” என்று கணவனை கட்டிலில் அமர வைக்க, அவனோ அமர்ந்தபடி அவளை அணைத்து அவளின் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான்
“என் சர்வா எப்பவுமே தாட்டியமா இருந்தா தான் எனக்கு பிடிக்கும். அதை விட்டு இப்படி தளர்ந்து போகலாமா ???” என்றவள் அவன் கேசத்தை ஆதரவாய் வருட,
“இல்ல சுபி, உன் காதலுக்கு முன்ன என் காதல் எல்லாம் ஒண்ணுமே இல்லை. நினைச்சு பார்த்தா நான் பண்ணது லவ்வே இல்லை.. ஆனா நானுமே வேணும்னு எதுவும் செய்யல சுபி, அப்போ இருந்த சூழ்நிலை அப்படி..” என்றவன் தயங்கி பேச்சை நிறுத்த, கணவன் எதையோ கூற வருகிறான் என்று புரிந்துபோனது சௌபர்ணிகாவிற்கு..
“என்ன சூழ்நிலை… ??”
“அப்போ வீட்டுல கொஞ்சம் கஷ்டம் சுபி, அப்பாக்கு சம்பளம் பத்தல.. நானும் படிக்கணும் ஸ்ரீக்கும் படிப்பு செலவு எல்லாமே.. அப்போ அம்மாக்கு மெடிக்கல் எக்ஸ்பென்ஸ் நிறைய ஆகிடுச்சு.. கையில லேண்ட் இருந்தது ஆனா உடனே விக்கவும் முடியல.. அதுனால தான் பார்ட் டைம்ஜாப்புக் அங்க வந்தேன்.. வந்த இடத்தில நிஜமா சொல்றேன் சுபி என் மனசு இப்படி தடுமாறும்னு நான் நினைக்கல..
ஆனாலும் என் நிலைமை எதையும் வெளிய சொல்ல முடியலை அதான் நானே எனக்கு முகமுடி போட்டுகிட்டேன்.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேமிலி பர்டன நான் சேர் பண்ணவும் நிலைமை சீரானது. என்னோட சின்ன சின்ன ஆசைகளை கூட வெளிப்படுத்த தயங்கி எனக்குள்ள நானே போட்டு பூட்டிப்பேன்.. அம்மாக்கு ஒருப்பக்கம் ஹெல்த் நல்லாகிட்டு வந்தது. எனக்கான படிப்பு செலவு எல்லாம் நானே பார்த்துக்க ஆரம்பிச்சேன்.. ஒருவழியா படிப்பு முடியவும் தான் எனக்கு பாரின் போற எண்ணம்..
ஆனா அப்பவும் கூட நீ என் மனசுல வந்து நின்ன.. போறதுக்கு முன்ன உன்கிட்ட கொஞ்சம் பேசிடலாமான்னு நினைச்சேன்.. ஆனா அதுவும் எனக்கு சரின்னு தோனல.. நீயும் அப்போ படிச்சிட்டு இருந்த. தேவையில்லாம உன் மனசுல நம்பிக்கை கொடுத்துட்டு பின்ன அது நடக்கலைன்னா என்ன பண்றதுன்னு ஒரு பயம்..
சரி உன் படிப்பும் முடியட்டும்னு நான் வெளிநாடு போயிட்டேன்.. அங்க போயும் பார்ட் டைம் ஜாப் வேற பார்த்தேன்.. சைட்ல மெயின் வேலை.. ஓரளவு எல்லாமே சரியாகுற நிலை வந்தது.. கையில மொத்த பணம் சேரவும் எனக்கு டெபுடேசன் டைமும் முடிஞ்சது..
ஆனாலும் இன்னும் கொஞ்சம் சம்பாரிக்கணும்னு மேல ஒரு சிக்ஸ் மன்த்ஸ் அங்கதான் இருந்தேன்.. அப்பாதான் பாத்துக்கலாம் வந்திடுன்னு சொல்லிட்டே இருந்தார்.. எனக்குமே அப்பபோ சலிப்பா இருக்கும் என்னடா இது பணத்துக்காக இத்தனை ஓடணுமான்னு.. என்னை தொலைச்சிட்டு நான் எது பின்னாடி ஓட்டிட்டு இருக்கேன்னு..
அப்பவே திரும்பிப் போனா என்ன செய்யனும்னு ஒரு ப்ளான் இருந்தது.. அப்பப்போ அப்பாக்கிட்ட இதைப் பத்தி பேசுவேன்.. அப்பாவும் இப்போ லேண்ட் நல்ல ரேட்ல கேட்கிறாங்க சர்வான்னு சொல்லவும், போதும்டா சாமி ஓடினதுன்னு இங்க வந்து லேன்ட வித்து, கையில இருந்ததும் போட்டு தான் இந்த மால் வாங்கினேன்.
சத்தியமா சொல்றேன் சுபி எனக்கு அப்போ நம்ம காதலை பத்தி யோசிக்க கூட முடியாத நிலை.. ஆனாலும் எதுவோ மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை உன்ன மறுபடியும் பார்ப்பேன்னு., அப்படியே இல்லைன்னாலும் கண்டிப்பா உன்னை தேடி வந்திருப்பேன்… ஆனா நானே எதிர்பார்க்காத விஷயம் நீயே நம்ம மாலுக்கு வந்தது..
அப்புறமும் கூட எனக்கு ஒரு எண்ணம் அப்போ இருந்த அதே இன்ட்ரஸ்ட் என்மேல உனக்கு இருக்கான்னு.. உன் பார்வைல வச்சு என்னால எதுவும் ஜட்ஜ் பண்ண முடியலை.. சரி உன்கிட்ட பேசலாம்னு பார்த்தா நமக்காக சூழல் அப்படி அமையவேயில்லை..” என்று சொன்னவன் இவ்வளவு தான் என்பதுபோல் பேசி முடிக்க,
அவன் பேசட்டும் என்று அமைதியாய் கேட்டவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. வாழ்வில் இத்தனை கஷ்டங்கள் தாண்டிதான் வந்தானா என்று இருந்தது.. பேசாமல் அவனைக் காண, மேலும் அவனே தொடர்ந்தான்
“நீ வந்ததும் எனக்கு அவ்வளோ சந்தோசமா இருந்தது சுபி. ஆனா உடனே உன்னை நெருங்கவும் முடியல.. ஆனா அன்னிக்கு மாமா வீட்டு விசேசத்துல நீ என்னை பார்த்த பாரு ஒரு பார்வை ஹப்பா!!!!” என்று மயக்கம் வருவது போல் தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்..
அவன் மனதில் இத்தனை வேதனையை சுமந்திருக்கிறான் என்று நினைக்கும் போதே சௌபர்ணிகாவிற்கு மிகவும் கஷ்டமாய் போனது.. ஆனால் அவன் செய்த பாவனை அவளுக்கு சிரிப்பை கொடுத்தது.. வெளியே எதையும் காட்டாமல் இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள்..
“என்ன சுபி அதான் எல்லாம் சொல்லிட்டேனே.. இன்னும் ஏன் முறைக்கிற..??”
“எத்தனை நாள் நான் கரடியா கத்திருப்பேன்… வாய் திறந்தீங்களா ?? இப்போ மட்டும் என்னவாம் சாருக்கு?? போதி மரம் எதுவும் இங்க இல்லையே..” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“இல்ல சுபி, அது அது கொஞ்சம் லேசா ஆம்பிளைங்களுக்கே இருக்க ஈகோ தான்.. நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்னு சொல்ல அவ்வளோ ஈசியா வராது இல்லையா.. அதான் என்னால சொல்ல முடியல…” என்று மறைக்காமல் உண்மையை சொன்னான்..
“ஓ !! அந்த ஈகோ இப்போ எங்க போச்சு… ??” என்றால் கடுப்பாய்..
“ஹா !! ஈ ஓட்ட போச்சு… ”
“வர வர நீங்க என்னை மாதிரி பேசுறீங்க..”
“எல்லாம் பழக்க தோஷம் தான் சுபி..” என்றபடி அவளது இடையை வளைத்து தன் மீது சாய்த்தான்..
“அப்போ என் கூட பழகுறதை தோஷம்னு நினைக்கிறீங்களா??” என்றாள் வேண்டுமென்றே..
“அம்மா தாயே உன் அளவுக்கு என்னால பேசவும் முடியாது யோசிக்கவும் முடியாது.. நீ நத்திங் சொல்லியே கரெக்ட் பண்ணிடுவ என்னை..” என்று கை கூப்பினான்..
“ம்ம் அது!!! ” என்று கூறி அவளும் சிரித்தாள்…
சிறிது நாட்கள் களித்து….
“என்னங்க விடுங்க, ஏங்க இப்போகூட இப்படி பண்றீங்க ?? கோவிலுக்கு போகணும். எல்லாம் ரெடி ஆகியிருப்பாங்க..” என்று சினுங்கியவளை முறைத்து பார்த்தான் சர்வேஷ்..
“ப்ளீஸ் சர்… நான் போகணும்..” என்றாள் இன்னும் கெஞ்சலாய்..
“நான் சொன்னதை செஞ்சுட்டு போ… ”
“ஹா !! அதல்லாம் முடியாது”
“அப்போ இனிமே உனக்கு இங்க வேலையும் கிடையாது..”
“ரொம்ப சந்தோசம்.. வேலை இல்லைன்னா என்ன, நான் தினமும் உங்கக்கூட வருவேன்.. என்னை வர வேண்டாம்னு சொல்ற உரிமை உங்களுக்கே இல்லை புரியுதா..” என்று வாயடித்தாள்..
“வர வர உனக்கு ரொம்ப குளிர் விட்டு போச்சு.”
‘ஆமாமா வந்து ஏ சி போட்டு விடுங்க..’
“எல்லாம் யார் கொடுக்கிற இடம்னு தெரியல.. ஒரு வார்த்தை சொல்றதை செய்றது இல்லை…”
‘நைட்டு வருவல அப்போ இருக்கு உனக்கு..’
“சௌபர்ணிகா!!!!!” என்று அழைத்தவன் அதற்குமேல் முடியாமல் சிரித்துவிட்டான்..
“ஹா ஹா!! இன்னிக்கும் பெட்ல நீங்க தான் தோத்து போயிட்டீங்க.. ஒருநாளாவது பழைய மாதிரி முழுசா இருக்க முடியுதா உங்களுக்கு..” என்று கணவனை கிண்டல் செய்தாள்..
“நீ பேசுவ டி.. இதுவும் பேசுவ இன்னும் பேசுவ.. என்னை மாத்துனதே நீ தான்..”
“நான் என்ன பண்ணேன்… நான் எதுவும் பண்ணல..” என்று கூறும் பொழுதே மோகனா மருமகளுக்கு செல்லில் அழைக்கவும் எடுத்து பேசியவள் “இதோ கிளம்பிட்டோம் அத்தை ” என்று கூறி கணவனை பார்க்கவும் அவனும் அவளோடு கிளம்பி சென்றான்..
பாண்டிமுனி கோவில் அன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது.. சர்வேஷ், சௌபர்ணிகா இருவரின் குடும்பமும், மற்றும் சில நெருங்கிய சொந்தங்களும் அங்கிருந்த மண்டபத்தில் குழுமியிருக்க, இவர்களின் வருகைக்கு தான் அனைவரும் காத்திருந்தனர்..
சௌபர்ணிகா வரவும் புனிதா “ஏன் சோபி மாப்பிள்ளைய கூப்பிட போறேன்னு போய் உன்னை கூப்பிட ஆள் அனுப்பனும் போல…” என்று லேசாய் கடிந்தார்..
கணவனை ஒரு பார்வை பார்த்தவள் “இல்லமா அவருக்கு கொஞ்சம் வேலை அதான்… ” என்றாள்
“சரி சரி பூஜை நேரமாச்சு வாங்க போலாம்..” என்று விஸ்வநாதன் அழைக்க அனைவரும் சன்னிதானம் சென்றனர்..
இதையெல்லாம் காணும் பொழுது நம் நாயகன் நாயகிக்கு பழைய நியாபகங்கள் அலைமோத அவர்கள் இவ்வுலகிலேயே இல்லை.. அக்கூட்டத்திலும் சர்வேஷ் தன் மனைவியின் கையை விடவே இல்லை.. இருவரின் மனமும் ஒரே வேண்டுதலை தான் பிரார்த்தித்து.. அது, இந்த உறவு காலம் முழுமைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்று…
கார்த்திக் “ஸ்ரீ பாரேன், எவ்வளோ பெரிய கொசு வர்த்தி சுருள் அங்க ஓடுதுன்னு…” என்று கிண்டல் செய்ய , ஸ்ரீயும் அதை ஆமோதித்து சிரித்தாள்..
“சாமி கும்பிட வந்த இடத்துல என்ன சிரிப்பு…” என்று கார்த்திக்கின் அருகே குரல் கேட்க, அந்த குரலே அவனுக்கு சொல்லியாவது அவனது அப்பா என்று..
“ஸ்… எங்க போனாலும் என்னை தான் பார்ப்பாரு…” என்று முனுமுனுத்தவன், ஈ என்று இளித்து, “சாமிய பாருங்கப்பா.. என்னை ஏன் பார்க்கிறீங்க…” என்று சொல்ல,
“இப்படி மறைச்சு நின்னுட்டு என்னடா பேச்சு..” என்றார் அவரும் பதிலுக்கு..
“போங்க.. முன்னாடி போய் நல்லா சாமி கும்பிடுங்க… முடிஞ்சா பாண்டி முனிய கையோட வீட்டுக்கு கூட கூட்டிட்டு போங்க…” என்று கார்த்திக்கால் சொல்ல முடியுமா என்ன??? நினைக்க மட்டுமே முடிந்தது..
அவருக்கு வழி விட்டு நிற்க, அவரோ ஸ்ரீயை பார்த்து “எப்படிம்மா இவனோட எல்லாம் பிரண்டா இருக்க..” என்று கேட்டுவிட்டு போனார்..
ஸ்ரீ, கார்த்திக்கை பார்த்து நக்கலாய் சிரிக்க, “அவருக்கு பொறாமை ஸ்ரீ..” என்றவன் சாமி கும்பிட்டும் சாக்கில் அங்கே வந்திருக்கும் மற்ற வயது பெண்களை ரசிக்க, அவன் மண்டையில் தட்டிய ஸ்ரீயோ,
“போதும் வழிஞ்சது, சாமி கும்பிட்டு வா.. அங்க இலை போட்டாங்க..’ என,
“ஓ… அப்போ வா வா.. நமக்கு சாப்பாடு தான் முக்கியம்” என்று அவன் கிளம்ப,
சுவாமியின் முன்பு மகிழ்வான மனநிலையில் நின்றிருந்த சர்வேஷ் சௌபர்ணிகா இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
“சிரிச்சது போதும்.. சாப்பாடு வேணுமா இல்லையா..” என்று கார்த்திக் வந்து தன் அக்காவின் முதுகில் தட்ட, சௌபர்ணிகா சர்வேஷும் அவர்களோடு சேர்ந்து உண்ணும் இடம் நோக்கி நகர்ந்து சென்றனர்..
இறைவன் சந்நிதானத்தில் அனைவரின் மனதும் நிறைந்திருக்க, ஒருவர் மனதில் மற்றொருவரின் நினைவு கொடுத்த சுகத்தில் இத்தனை நாள் வாழ்ந்தவர்கள் இனியும் அதே சுகத்தோடு மகிழ்வோடு நினைவு மட்டுமல்லாது நிஜத்திலும் வாழ்வர் என்று நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்…