மலர் 23:
பழைய நினைவுகளுடன் அமர்ந்திருந்தாள் கவி பாரதி.தன் முன்னால் ஒரு உருவம் நிற்பது கூட தெரியாமல்….ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.
சந்திராவிற்கு ஏனோ பாரதியை பிடிக்கவில்லை.முதலில் பிடித்திருந்தாலும்…அவள் எப்பொழுது சாரதியை வேண்டாம் என்று சொன்னாளோ…அந்த நிமிடமே அவளை முழுமையாக வெறுத்தார்.
“இன்னும் எத்தனை குடும்பத்தை கெடுக்க…திட்டம் போட்டுட்டு இருக்க..?” என்றார் வெடுக்கென்று.
திடீரென்று கேட்ட குரலில்…அதிர்ந்து விழித்தாள் பாரதி.
“என்ன சொல்றிங்க..? எனக்கு புரியலை..” என்றாள்.
“அதானே..? உனக்கு எப்படி புரியும்……நீதான் பெரிய கைகாரி ஆச்சே..என் பையனுக்கு என்ன சொக்கு பொடி போட்டியோ….உன் பின்னாடியே சுத்துறான்…!” என்றார்.
“தப்பா பேசாதிங்க…எனக்கு அப்படி எந்த அவசியமும் கிடையாது..!நான் சாரதியை வேற எந்த நோக்கத்தோடும் கல்யாணம் பண்ணலை..!” என்றாள்.
அவள் பேச்சைக் கேட்ட சந்திராவிற்கு ஏனோ எரிச்சல் தான் வந்தது.பின்னே வெற்றியை பிடித்திருக்கிறது என்று சொன்னாள்…பிறகு பார்த்தாள் செல்வாவின் கதை தெரிய வர…அவருக்கு எரிச்சல் தான் வந்தது.
பாரதி திட்டமிட்டு தன் பையனை திருமணம் செய்ததாக எண்ணினார்.
“நீ பெரிய கலெக்டரா இருக்கலாம்..அதுக்காக…நான் உனக்கு அடங்கி நடப்பேன்னு எதிர்பார்க்காத….” என்றார்.
“இவங்க என்ன லூசா..?” என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் கவி. பின்னே அவர்களாய் வந்து எதையாவது பேசிக் கொண்டிருந்தால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வது…?
“எல்லாம் எங்க நேரம்…அந்த வெற்றி சொன்னப்பவே வேண்டாம்ன்னு நான் ஒரே அடியாய் தடுத்திருக்கணும்…!” என்று வாய்க்குள் முனங்கியபடி செல்ல..
அந்த புலம்பல்கள்…கவியின் காதில் அச்சு பிசகாமல் ஒலித்தது.”வெற்றி சொன்னாரா..?” என்ற கேள்வி மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க…
“ஒரு நிமிஷம் நில்லுங்க…!” என்றாள்.
“என்ன..?” என்றார் சந்திரா.
“வெற்றி என்ன சொன்னார்..?” என்றாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்த சந்திரா அதை வெளியே காட்டாது… ”ம்ம்..சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னான்..!” என்று சொல்லியபடி நகர பார்க்க…அவரை வழி மறித்து நின்றாள் கவி.
“இப்போ சொல்ல போறிங்களா இல்லையா..?” என்றாள் தீவிரமான முகத்துடன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை…!” என்று அவர் சற்று திணற…
“நான் வெற்றி கிட்டவே நேரா கேட்பேன்..” என்று அடுத்த அஸ்திரத்தைப் போட்டாள்.
“இல்ல..அது வந்து…!” என்று அவர் திணற..
“பிளீஸ் சொல்லுங்க அத்தை..” என்றாள் உரிமையுடன்.
அந்த “அத்தை” என்ற உரிமை உணர்வு அவருக்குள் ஏதோ செய்ய..
“அது….உன்னை சாரதிக்கு பெண் பார்க்க சொல்லி வெற்றி தான் சொன்னான்..!” என்றார்.
“என்ன…?” என்று அதிர்ந்தாள் கவி.
“வெற்றியே தன்னை பெண் பார்க்க சொன்னாரா..? ஆனால் அன்னைக்கு என்னைப் பார்த்த உடனே…அதிர்ச்சியானாரே..அது ஏன்..?” என்று யோசித்தாள்.
“நீங்க சொல்றது எனக்கு புரியலை அத்தை…அவரே சொல்லிட்டு..அப்பறம் ஏன் என்னை தெரியாத மாதிரி இருந்தார்…!” என்றாள்.
“அது வந்து….வந்துமா…நான் சொல்ல போற விஷயம் சாரதிக்கு கூட தெரியாது..அதனால…” என்று அவர் இழுக்க…
விஷயம் ஏதோ பெரியது என்று அவள் மூளைக்கு உணர்த்தியது.
“நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன்…சொல்லுங்க..!” என்றாள் கொஞ்சம் பிசிறு தட்டிய குரலில்.
“கொஞ்ச வருஷத்துக்கு முன்ன..சாரதிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது..!” என்றார் மென்று விழுங்கி.
“என்ன..???” என்று அதிர்ந்தாள் கவி.
“இது எப்படி சாரதிக்கு தெரியாமல் இருக்கும்..?” என்றாள் சந்தேகமாய்.
“அது சாரதிக்கும் தெரியும் பாரதி.ஆனால் அவனுக்கு வைக்கப்பட்ட இதயம்…யாரோடதுன்னு அவனுக்கு தெரியாது..!” என்றார் அமைதியாய்.
பாரதிக்கு தலையை சுற்றுவது போல் இருந்தது.சாரதிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்து குணமாகியது ஒரு அதிர்ச்சி என்றால்..அடுத்து அவர் சொன்ன விஷயம்.
“இதுல..நீங்க தயங்குறதுக்கும்…வெற்றிக்கும் என்ன சம்பந்தம்..?” என்றாள் அதிர்ச்சி விலகாமல்.
“அது வந்து சாரதிக்கு பொருத்தப்பட்ட இதயம் செல்வாவோடது..!” என்றார் வேதனையுடன்.
அவர் சொன்ன வார்த்தைகள் பாரதியின் காதில் விழுந்ததா..இல்லையா என்று தெரியாத அளவிற்கு பிரம்மை பிடித்தார் போல் இருந்தாள்.
“நீங்க..நீங்க..என்ன சொல்றிங்க..?” என்றாள் தவிப்புடன்.
“ஆமாம் பாரதி.இதயம் குடுத்த பையனோட பேரு செல்வான்னு தெரியும்..ஆனா..அந்த பையன் தான் இந்த பையன்னு எனக்கு இப்ப தான் தெரியும்..” என்றார்.
“ஏன் ஹாஸ்பிட்டல்ல…அவங்க அம்மா,அப்பா,மலரைப் பார்த்திருப்பிங்க தானே..?” என்றாள்.
“இல்லம்மா…நாங்க யாரையும் பார்க்கலை…வெற்றி தான் எல்லாத்தையும் ஏற்பாடு செஞ்சான்….நான் கூட கேட்டு பார்த்தேன்…அந்த பையனோட பெத்தவங்களைப் பார்த்து ஒரு நன்றி சொல்லனும்ன்னு…ஆனா..அவங்க பார்க்க மறுத்துட்டதா சொன்னான்..!” என்றார் சந்திரா.
“அப்பறம்..?” என்றாள்.
“திடீர்ன்னு ஒரு நாள் வந்து…சாரதிக்கு இப்போ பூரண குணம் ஆகிடுச்சு..அவனுக்கு ஒரு பெண்ணைப் பாருங்கன்னு சொன்னான்..!” என்றார்.
“அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க..?” என்றாள்.
“நான் முதல்ல வேண்டாம்ன்னு தான் சொன்னேன்..! இப்படி ஒரு பிரச்சனை இருந்து சரியாயிருக்கு… யார் பொண்ணு தருவாங்கன்னு கூட கேட்டேன்..!” என்றார்.
“அதற்கு அவர் என்ன சொன்னார்..?” என்றாள்.
“அந்த கவலையை விடுங்க..! இங்க ஒரு பொண்ணு இருக்குன்னு சொல்லி உன்னைப் பத்தின தகவல் எல்லாம் கொடுத்தான்…அதுமட்டுமில்லாம சாரதிக்கு அந்த பொண்ணை பிடிக்கும்ன்னு கூட சொன்னான்..!”
“ம்ம்ம்..”
“வெற்றி பேச்சை நம்பி …நானும் என் பையனைக் கூட்டிகிட்டு வந்தேன்..ஆனா எல்லாமே நல்லாத்தான் போனது…நீ வெற்றியை பிடிச்சிருக்குன்னு சொல்லும் வரை..” என்றார்.
“அதுக்கு அப்பறம்…?” என்றாள் விடாமல்..
“அதுக்கு அப்பறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே..! வெற்றியை பிடிச்சிருக்குன்னு நீ சொன்ன உடனே..எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை…எல்லா கோபமும் சேர்ந்து வெற்றி மேலையும் திரும்புச்சு…ஆனா என்ன பண்ண…வெற்றி சொன்ன மாதிரி என் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போய்டுச்சு…..அதுக்கான காரணம் அப்ப எனக்குத் தெரியலை..ஆனா இப்ப தெரியுது…” என்றார் விரக்தியாய்.
“இதில் நீங்க விரக்தி அடையிற அளவுக்கு என்ன இருக்கு..விரக்தி அடைய வேண்டிய நானே சும்மா இருக்கும் போது..?” என்றாள் நக்கலாய்.
“எனக்கு உன்னை பிடிக்கலைங்கறது உண்மைதான்..அதுக்காக நான் இப்ப சொன்னதை எல்லாம் சாரதிகிட்ட மட்டும் சொல்லிடாத…! அவன் தாங்க மாட்டான்..!” என்றார் சற்றே பயத்துடன்.
“இன்னும் கேட்க என்ன பாக்கியிருக்கும்மா…?” என்றான் சாரதி கண்கள் சிவந்தவனாய்.
அவனின் குரலில் இருவரும் திடுக்கிட்டு திரும்ப….மெதுவாய் நடந்து வந்தான்.
கவி பாரதிக்கு கனவைப் போல இருந்தது.கடைசியில் சாரதியின் உடலிற்கு செல்வாவின் இதயமா..?செல்வாவின் இதயத்தை என்னிடம் சேர்க்கத்தான் வெற்றி நினைத்தாரா…?” என்ற எண்ணங்கள் மனதிற்குள் ஓட…
சாரதியின் முகத்தைப் பார்த்தவளுக்கு…உள்ளுக்குள் குளிர் எடுத்தது.
“சாரதி..!” என்று அவன் அம்மா அதிர..
“போதும்மா…தயவு செஞ்சு கிளம்புங்க…நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்..” என்று சொல்ல…அவனை பார்த்துக் கொண்டே… பாரதியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போனார் சந்திரா.
கவிபாரதி கணவனையே இமைக்காமல் பார்க்க….
“நான் கூட அப்ப அப்ப நினைச்சிருக்கேன்….ஏன் உன்னை இந்த அளவுக்கு எனக்கு பிடிக்குதுன்னு…ஏன் இவ்வளவு காதல் உன் மேலன்னு…இப்ப தான் புரியுது…” என்று விரக்தி சிரிப்பு சிரித்தான் சாரதி.
“சாரதி..” கவி ஏதோ சொல்ல வர…
“நான் இல்லை..எனக்குள் இருக்கும் இதயம் தான் உன்னை விரும்பியிருக்கு இல்லையா..? செல்வாவின் இதயத்திற்கும்..அவனுடைய காதலை கொண்டு செலுத்துவதற்கும் கிடைத்த சாரதி தான் நானா..?” என்றவனின் விழிகள் கலங்க…
“சாரதி..” என்றவள் பாய்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“அப்படியெல்லாம் பேசாதிங்க..பிளீஸ்..எனக்கு இது எதுவுமே தெரியாது..!” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே அவள் அழுக…
“வெறும் உடல் மட்டும் தான் நான்…ஆனா எனக்குள் இருக்கும் இதயம் எனக்கு சொந்தமே இல்லை என்பதை நான் எப்படி மறந்தேன்..!” என்று அவன் தன் போக்கில் புலம்ப..
“பிளீஸ் சாரதி….இப்படி எல்லாம் பேசாதிங்க..! நான் சாரதியா தான் உங்களைப் பார்த்தேன்..சாரதியா தான் உங்களை கல்யாணமும் செய்துகிட்டேன்..ஆனா இப்படி ஒரு விஷயம் நடந்தது எனக்கே தெரியாது…?..எது எப்படி இருந்தாலும்…நீங்க தான் எனக்கு கணவர்..எனக்கு சாரதி தான் வேணும்…” என்று அழுக…
“எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் கவி..!” என்று அவன் சொல்ல..அவனை பயந்த விழிகளுடன் பார்த்தாள்.
அவள் பார்வையை வைத்தே..அவள் மனதை உணர்ந்தவன்…”தப்பா எல்லாம் யோசிக்க மாட்டேன்…ஆனா நடந்த விஷயம் தெரியாம..நான் வெற்றிகிட்ட..வெற்றிட்ட..” என்று அவன் தயங்க..
“வெற்றிகிட்ட..” என்று அவள் எடுத்துக் கொடுத்தாள்.
“அவன்கிட்ட சண்டையெல்லாம் போட்டேன்….உன்னை அடைந்தே தீருவேன்னு சபதம் கூட போட்டேன்..ஆனா அப்ப கூட அவன் என்னை ஒன்னும் சொல்லலை…ஆனா கண்ணில் வலியோட என்னை ஒரு பார்வை பார்த்தான்…அந்த பார்வையை இப்போது வரை என்னால் மறக்க முடியாது..ஒரு நண்பனுக்கு உரிய எல்லா தகுதியிலும் வெற்றி ஜெயிச்சுட்டான்..ஆனா நான் ஒரு நல்ல நண்பனாவும் ஜெயிக்கலை..ஒரு மனுஷனாவும் ஜெயிக்கலை…ஒரு காதலனாவும் ஜெயிக்க முடியலை…” என்றவனின் விழிகளும் கலங்க…அவளுள் புதைந்தான்.
“கண்டிப்பா ஒரு கணவனா நீங்க ஜெயிப்பிங்க..!” என்றாள் பாரதி.
அவளின் வார்த்தைகளைக் கேட்டவன் சிறு மின்னலுடன் அவளைப் பார்க்க…அவன் பார்வையின் பொருள் புரிந்தவளாய்..
என்ன பார்க்குறிங்க..? நீங்க தான் சொன்னிங்க….”நான் நேசித்த நீ…யார் முன்னாலும் தோற்க கூடாது என்று எண்ணித்தான் தாலியை கட்டினேன் என்று..” அதை வச்சு தான் சொல்றேன்…நீங்க ஒரு நல்ல கணவனா இருப்பிங்கன்னு.
“என்னை நம்புறியா கவி..?” என்றான் சிறு எதிர்பார்ப்புடன்.
“நூறு சதவிகிதம்..” என்றாள் கண்களில் காதலுடன்.
“கவி…” என்றவன்…அவளை இறுக அணைத்துக் கொண்டான்.தன்னுடைய இதயத்தை சேர்ந்து விட்டோம் என்று உள்ளிருக்கும் இதயம் எண்ணியதோ என்னவோ…?
நண்பன் தான் உயிருடன் இல்லை..அவனுடைய இதயமாவது விரும்பியவளுடன் சேரட்டும் என்று தான் வெற்றி இதை செய்தானோ..?இதை பற்றி எதுவும் அறியாமல்…மலரின் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தான் வெற்றி.
“இன்னும் என்ன யோசனை வெற்றி…சட்டுன்னு போய்..பட்டுன்னு கால்ல விழுந்திடு..!” என்று உள் மனம் கூவிக் கொண்டிருக்க..
“சரியா வருமா..? வராதா..?” என்று பேசிக்கொண்டே செல்ல..அவன் செல்வதைப் பார்த்த அவனுடைய மூத்த அண்ணி கலா….
“என்னாச்சு வெற்றிக்கு..? இப்படி புலம்பிட்டு போறார்…!” என்று தாரணியிடம் கேட்க…விஷயம் தெரிந்த தாரணியோ..விஷம சிரிப்பு சிரித்தாள்.
“சொல்லிட்டு சிரி தாரணி..” என்று கலா சொல்ல..தாரணி ஒன்னுவிடாமல் சொல்லி முடித்தாள்.
“இவ்வளவு நடந்து முடுஞ்சிருக்கா…? எப்படியோ ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரிதான்…கால்ல விழுறது எப்படின்னு அவங்க அண்ணனுங்க கிட்ட கேட்க சொல்ல வேண்டியது தானே..?” என்று கலா வார
“என்ன அண்ணி…காலு..வார..” என்றபடி கண்ணன் வர…
“அது ஒண்ணுமில்லை…கொழுந்தனாரே…கால் வாரி விழுந்துட்டேன்ன்னு சொல்ல வந்தேன் ..” இல்லையா தாரணி…என்று இழுக்க..
“ஆமா..ஆமா..” என்று தாரணி ஏகத்துக்கும் ஆமா போட…அவளை மார்க்கமாய் பார்த்துக் கொண்டே சென்றான் கண்ணன்.
அறைக்குள் மலரைத் தேடி போக..அவளோ மொட்டை மாடியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தாள்.
“எங்க போனா..?” என்று தேடிக் கொண்டே அவனும் மொட்டை மாடியைச் சேர்ந்தான்.
கூந்தல் கலைந்து காற்றில் அலை பாய…விழிகள் இலக்கின்றி வெறிக்க….முந்தானை சேலை பின்னால் பறக்க….பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.
“இங்க என்ன பண்ற..?” என்றான்.
“இங்க என்ன பண்ணுவாங்க..?” என்றாள் அவளும் திரும்பாமல்.
“இவளும் லேசுபட்டவ இல்லை.பயந்த சுபாவம்ன்னு நினைச்சா…என்னா போடு போடுறா..?” என்று நினைத்துக் கொண்டான்.
ஏதோ சொல்ல வாயெடுத்து அவள் முகத்தைப் பார்த்தவன்..அவன் விழிகளில் தெரிந்த வெறுமையைக் கண்டு சற்றே திகைத்தான்.
“இப்ப எதுக்கு இப்படி இருக்கா..?” என்று யோசித்தவன்…
“ஏதாவது பிரச்சனையா..?” என்றான்.
“இல்லை…சும்மாதான்..செல்வா நியாபகம்..” என்றாள் அமைதியாய்.
“என்ன திடீர்ன்னு..” என்றான்.
பட்டென்று திரும்பியவள்….”திடீர்ன்னு நினைக்க அவன் ஒன்னும் ரயில் சிநேகிதன் இல்லை…ஒரு காலத்தில் எனக்கு தாலி கட்டியவன்…” என்றாள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
அவள் முகத்தை வைத்தே அவள் உணர்வைப் படித்தான் வெற்றி.
“நான் இல்லைன்னு சொல்லலையே..! ஒரு காலத்தில்ன்னு சொல்லி..நீயே அவனை இறந்த காலம் ஆக்கிட்ட….இதில் நான் சொல்ல என்ன இருக்கு..உன்னோட எதிர்காலம் உனக்கு தெளிவா தெரிய போய் தானே..அவன் இறந்த காலமா தெரியறான்…” என்றான் விடாமல்.
“ச்ச்ச..இவன் ஒரு வாத்தியார்ன்னு நிருபிக்கிறான்…தெரியாம வாயைக் கொடுத்தது என் தப்பு..” என்று நினைத்துக் கொண்டாள்.
“தெரிஞ்சா சரி..” என்றான்.
அதற்கும் அவள் முட்டை கண்ணை முழித்துப் பார்க்க…”அடுத்து என்ன செய்வதா உத்தேசம்..?” என்றான்.
“நான் வேலைக்கு போகணும்..?” என்றாள்.
“எதுக்கு..?” என்றான்.
அவனுடைய கேள்வியில் அவள் பத்திரகாளி ஆனாள்.
“எதுக்கா..? நான் என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சிங்களா…? என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு..!” என்றாள்.
“ஏன் தெரியாது….நீ ஒரு பேங்கில் மேனேஜர் என்றும் தெரியும்….அதுக்காக எவ்வளவு கஷ்ட்டபட்ட என்றும் தெரியும்..” என்று அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
“என்ன சொல்றிங்க..?”
“உண்மையைத்தான் சொல்றேன்..!” என்றான்.
“அப்படி தெரிஞ்சும் நீங்க இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமா..?” என்றாள்.
“தாராளமாய் கேட்பேன்..ஏன்னா நான் உன் புருஷன்..இது உனக்கு நியாபகம் இருக்கோ இல்லையோ..எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு..” என்றான்.
“ஏன் புருஷன்னா உங்களுக்கு அடங்கி ஒடுங்கி வீட்டுக்குள்ளயே இருக்கனுமா..?” என்றாள்.
“நான் அப்படி சொல்லலை..?” என்றான்.
“நீங்க சொன்னதுக்கு வேற அர்த்தம் இருக்கா என்ன..?” என்றாள் கிண்டலாய்.
“கண்டிப்பாய்..! நீ மறுபடியும் வேலைக்கு போகணும்ன்னா சென்னை போகணும்…ஆனா என்னால் அங்க வர முடியாது…என்னுடைய உயிர்ப்பு இங்க தான் இருக்கு..அதனால் தான் சொன்னேன்..” என்றான்.
“உங்களால் வர முடியாதுங்கறதுக்காக நான் என் லட்சியத்தை விடணுமா..?” என்றாள்.
“நான் அப்படி சொல்லலை…ஆனா சில வருஷத்துக்கு முன்னாடி…நான் முதல் நாள் வகுப்பில் கேட்ட கேள்விக்கு….நான் எவ்வளவு படிச்சாலும்….எவ்வளவு பெரிய பதவிக்கு போனாலும்…விவசாயம் செய்றவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்…அவருக்கு உறுதுணையா நானும் கூட இருப்பேன்னு…நீ சொன்னதா எனக்கு நியாபகம்…. ஒரு வேளை நீ மறந்துட்டியோ என்னவோ…?” என்றவன்….சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
ஆனால் அவன் வாய் வழி வந்த வார்த்தைகளைக் கேட்டு சிலையாய் நின்றிருந்தாள் மலர்….
“நான் சொன்னதை..நானே மறந்துட்டேன்..இவர் எப்படி சரியா நியாபகம் வச்சிருக்கார்..?” என்று அதிர்ந்தவளாய் நின்றாள்.