Then Paandi Meenaal 24 1 8209 தென் பாண்டி மீனாள் 24 வில்வநாதன் காரை வேகமாக கேட்டிற்குள் நிறுத்த, உள்ளிருந்த அறிவழகன் வெளியே வந்தார். மருமகனின் கார் நின்ற வேகத்தில், கோவமாக இருக்கிறாரோ என்று அவருக்கு யோசனை, கண்டுகொள்ள முடியவில்லை. சில நாட்களாக இவன் சாதாரணமாக இருந்தாலும் அவருக்கு வேறு மாதிரி தான் தோன்றி வைப்பது. எனவே, “வாங்க மாப்பிள்ளை” என்றார் புன்னகை முகமாக. “எங்க மாமா உங்க பொண்ணு” என்று அவன் கேட்க, “உள்ள தான் இருக்கா மாப்பிள்ளை” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் மருமகன் உள்ளே சென்றிருந்தார். ‘என்ன இவ்வளவு வேகம்? அப்போ கோவம் தான்’ மாமனார் வீட்டிற்குள் செல்ல, அங்கு வில்வநாதன் அவரின் மகளின் காதை பற்றி கொண்டிருந்தான். மீனலோக்ஷ்னிக்கு அதிர்ச்சியே. வலி எல்லாம் இல்லை. கணவன் கோவத்திலே புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் ஒரு நாள் கூட ஆகலையேடா! “என்னடி இது? என்ன பண்ணி வைச்சிருக்க நீ?” என்று மனைவியின் காதை திருகி கேட்க, “ஸ்ஸ்ஸ் வலிக்குதுங்க” என்று குதித்தாள் மனைவி. “கொன்னுடுவேன் உன்னை” என்று அவன் மிரட்ட, “மாப்பிள்ளை. மாப்பிள்ளை. அவளுக்கு வலிக்குது சொல்றா பாருங்க விடுங்க” என்று அறிவழகன் மருமகனின் மறுபக்கம் வந்து நின்றார். “மாமா. இவ என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியாது” என்று சொல்ல, “நான் தப்பா எதுவும் பண்ணலை” என்றாள் மனைவி. “வாயை திறக்காதடி” என்று கணவன் அதட்ட, “மாப்பிள்ளை. பொண்ணு பாவம். என்னவா இருந்தாலும் காதை விட்டுட்டு கேளுங்க” என்று மருமகனின் கையை பிடித்து கொண்டார் மகளுக்கு வலிக்காது இருக்க. “மாமா. சின்னத்துல இருந்தே நீங்க இவளுக்கு நாலு போட்டு வளர்த்திருக்கணும். சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறா” என்று மாமனாருக்கு இப்போது வந்து கிளாஸ் எடுத்தான் மருமகன். “மாப்பிள்ளை. என் பொண்ணை அடிக்க எல்லாம் வேண்டியதில்லை. சமத்து சொல் பேச்சு கேட்டுப்பா” என்று தந்தை விளக்கம் கொடுத்தார். “அப்படின்னு நீங்க தான் சொல்லணும். நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறாளே“ “பாப்பா. என்ன பாப்பா இது. மாப்பிள்ளை சொல்றதை நீ கேட்கணும் இல்லை” என்று மகளுக்கு புத்தி சொல்ல, “ப்பா. முதல்ல காதை விட சொல்லுங்கப்பா. வலிக்குது” என்றாள் மகள். “சும்மா பிடிச்சிருக்கேன்டி. வலிக்குதா உனக்கு” என்று அழுத்தம் கொடுக்க, “ஆஹ்ன். இப்போ வலிக்குது” என்று அலறினாள் மனைவி. “மாப்பிள்ளை. நாம பேசலாம். அவளை விட்டு வாங்க. பொறுமையா உட்கார்ந்து பேசலாம்” என்று மாமனார் வேகமாக இருக்கையை இழுத்து போட்டார். “இல்லை. உட்கார்ந்து பேச எனக்கு முடியாது. நான் இவளை கூட்டிட்டு கிளம்புறேன்” என்று காதை விட்டு கை பிடித்தான் நல்லவன். “கிளம்புறீங்களா? மாப்பிள்ளை காலையில தான் பொண்ணு வந்தா” என்று அறிவழகன் பாவமாக சொல்ல, “திரும்ப உங்க நல்ல மகளை நான் கூட்டிட்டு வரேன் மாமா” என்று மனைவியுடன் கிளம்பியேவிட்டான் மருமகன். சுஜாதா வெளியே சென்றிருக்க, “அம்மாக்கு சொல்லிடுங்கப்பா” என்றாள் மகள். அறிவழகன் வேகமாக தயாளனுக்கு அழைத்தார். “மாப்பிள்ளை கோவமா, பாப்பாவை இழுத்துட்டு வரார். என்னன்னு பாருப்பா” என்று. “நான் பார்த்துகிறேன் அறிவழகா. அவங்களுக்கு வேற வேலை இல்லை. காலையிலே பாரு இரண்டும் யார் நீங்கன்னு நம்மளை கேட்கும்” என்று சலித்தார் தயாளன். அறிவழகனுக்கும் அவர் சொன்னது நன்றாகவே புரிந்தது. இந்த சில மாதங்களில் அவரும் பார்த்து கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும் பயம் மட்டும் போவேனா என்றது. “எதுக்கும் பார்த்துக்கோப்பா. கொஞ்சம் உன் மகனை கோபத்தையும் குறைக்க சொல்லு” என்றார் தந்தை. சம்மந்தி வீட்டில் வேறு யாரிடமும் இந்தளவு உரிமையாக பேச முடியாதே! “நான் சொல்லுவேன். ஆனா உன் பொண்ணு என்கிட்ட சண்டைக்கு வந்திடுவாளே? அவர் என்ன கோவப்படுறார்ன்னு” என்று தயாளன் சிரிக்க, “அதென்னமோ சரிதான். மாப்பிள்ளை பத்தி அப்படி இல்லை, இப்படின்னாலே ராசாத்திக்கு முகம் வாடி போயிடுது” என்று சிரிக்க, மேலும் சில நொடிகள் பேசி வைத்தனர். “திரும்பவும் வம்பிழுத்துட்டானா உங்க மகன்?” என்று பானுமதி கேட்டார். அவரும் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தவர், தயாளன் தோட்டத்தில் இருக்கவும், நேரே கணவர் இருக்குமிடம் வந்துவிட்டார். “என்னமோ இரண்டு பேருக்கும் சண்டையாம். மருமக பொண்ணை கூட்டிட்டு கிளம்பிட்டான் போல” என்று சொல்ல, மகன் கார் சர்ரென பிரேக் அடித்து நின்றது. பெற்றவர்கள் பார்க்க, வில்வநாதன் கதவை இழுத்து அடித்துவிட்டு மனைவி கை பற்றி வீட்டிற்குள் அழைத்து சென்று கொண்டிருந்தான். உடன் அப்பாம்மாவையும் பார்த்து தான். “உங்க மகனுக்கு மட்டும் செல்லம் கொடுக்க எப்படி தான் சிக்குறாங்களோ? உங்க மருமக எல்லோருக்கும் மேல” என்று ஆயாசம் கொண்டார் பானுமதி. தயாளனுக்கு மகனை நினைத்து எப்போதும் போல் பெருமையே. “என் மகன் அப்படி பானு. யாராலும் அவனை வெறுக்க முடியாது” என்றார். “ரொம்பதான்” என்று பானு நொடித்து கொண்டாலும் முகத்தில் புன்னகை சாயல். அப்பாம்மா நாங்கள் தவறி விட்டாலும் மகனுக்கான அன்பு குறையாமல் கிடைத்து கொண்டிருக்கிறதே! ஆனாலும் எங்க பாசத்துக்கு முன்னாடி அவனுக்கு அதெல்லாம் ஒன்னும் இல்லையே? “பானு என்னம்மா” என்று தயாளன் மனைவியின் வாடிய முகத்தில் கேட்டார். “என் ஒருத்தியால எவ்வளவு கஷ்டம் இல்லை” என்றார் வேதனையுடன். “ம்ப்ச் பானு. எத்தனை முறை தான் நீயும் வருத்தப்படுவ. எல்லோராலும், எல்லா நேரமும் சரியா நடந்துக்க முடியாதும்மா” என்றார். “நானும் நீயும் தவறி போயிட்டோம். நம்மளை யோசிச்ச, ம்ஹூம் என்னை நான் யோசிச்ச அளவு உங்களை யோசிச்சிருந்தாலே, இத்தனை வருஷம் நாம பிரிஞ்சிருந்திருக்க வேண்டியதில்லையே!” “அதுவும் வில்வா. ம்ஹ்ம். அவன் என் நெஞ்சிலே வளர்ந்தவன். அவனை நான் யோசிக்காம விட்டது, என் மகனுக்கு நான் செஞ்ச உட்சபட்ச கொடுமை” என்று தந்தை லட்சம் முறையாக தன்னை தானே நிந்தித்து கொண்டார். “ஏங்க என்னை சொல்லிட்டு நீங்க வருத்தப்படுறீங்க” என்று பானுமதி அவரின் கை பற்றி தட்டி கொடுத்தார். “நான் இவ்வளவு படிச்சு, தொழில் எடுத்து நடத்தி கோடி, கோடியாய் சம்பாதிச்சு கொட்டி என்னங்க பிரயோஜனம்? பெரியவங்க எப்போவோ, என்னவோ சொல்லி வைச்சதை நான் வைராக்கியமா எடுத்து, என் குடும்பத்தையே உடைச்சு விட்டுட்டேனே?” “நம்ம படிப்புக்கும், அறிவுக்கும் நான் வேலை கொடுக்கலை. எதையும் ஆராயலை. நமக்கு தேவையானதை நாம தானே செஞ்சுக்கணும். உங்களை விட, உங்க ஆசையை விட என்னோட வைராக்கியம் முக்கியமில்லைங்கிற அறிவு எனக்கு அப்போ இருந்திருக்கணும்” “ஏதோ யோசிச்சு என்னமோ பண்ணிட்டு, எல்லாத்துக்கும் அடித்தளம் போட்டது நான். நீங்க இல்லை. ப்ளீஸ்” என்று பானுமதி கணவனிடம் சொல்ல, “பானு. நீ என்னதான் எனக்காக சொன்னாலும், உண்மை எனக்கு தெரியும்மா. காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கோம். நம்பிக்கை பத்தி மட்டுமே தெரிஞ்ச எனக்கு, விட்டு கொடுத்து போகணுங்கிறது தெரியலை தானே? அப்புறம் என்னோடது மட்டும் என்ன காதல்? என் பானு தானேன்னு நான் துளி கூட நினைக்கலையே?” “என் மகன், அவனை விடவா என் கோவம், கர்வம் எல்லாம் எனக்கு பெருசு. என் ரத்தம் அவனுக்கு தெரியும் எது முக்கியம், யார் முக்கியம்ன்னு எனக்கு தெரியலை. அவனை அப்படியே விட்டுட்டு நான் கிளம்பிட்டேன். இப்போ அதுக்கான தண்டனையை அனுபவிக்கிறேன்“ “ஏங்க“ “இல்லை பானு. நான் இதை தான் டிசர்வ் பண்றேன். என் மகன் கோவத்தை நிச்சயம் நான் ஏத்துப்பேன்” என்றார் தந்தை உறுதியாக. “அவன் கோவத்துக்கு பயந்தே நான் கஷ்ட படக்கூட மாட்டேன். எதுடா வாய்ப்புன்னு இருப்பான் உங்ககிட்ட குதிக்க?” என்றார் பானு ஆயாசமாக. “அவன் செய்வான். அவன் பாசம் கோவத்துல தான் இருக்கு பானு” என்று தயாளன் மகனை நினைத்து புன்முறுவல் பூத்தார். அதுவரை இவர்களையே கவனித்திருந்த வில்வநாதனுக்கு அப்பாவின் புன்னகையில் தான் முகம் தெளிந்தது. ஆம் மேலிருந்து பெற்றவர்களை தான் கவனித்திருந்தான். என்னமோ இருவரின் முகமும் வாடியிருக்க, பேச்சும் சீரியசாக இருப்பது போல் இருக்க, நின்றுவிட்டான். மனைவியை கோவமாக இழுத்து வந்தது எங்கோ சென்றுவிட்டது. இன்னமும் அந்த ஆண்மகனுக்கு பயம் நீங்கவில்லை போல!. மீனலோக்ஷ்னி சில நிமிடங்களில் அதை புரிந்து கொண்டு விட, நெஞ்சம் நொறுங்கி நின்றாள் பெண். கண்களில் கண்ணீர் சூழ்ந்துவிட்டது. சுண்டி விட்டு கொண்டவள் கணவனின் நெஞ்சில் முகம் வைத்து கொண்டாள். வில்வநாதன் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான். “உன் மாமனார், மாமியார்க்கு இளமை திரும்புதா என்ன?” என்று வில்வநாதன் சொல்ல, நிமிர்ந்து பார்த்த மருமகளுக்கு புன்னகை. பானுவின் மனம் மாற்ற அவரை ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டிவிட்டு கொண்டிருந்தார் தயாளன். “என் பொண்டாட்டி ஊஞ்சலை உன் மாமனார் அடிக்கடி எடுத்துகிறார். சொல்லி வை அவர்கிட்ட” என்றான் மகன். “அது அவங்க பொண்டாட்டி ஊஞ்சலாம். உங்க பொண்டாட்டி இப்போ தான் வந்திருக்காளாம்” என்று மீனலோக்ஷ்னி சொன்னாள். “வந்திடுவியே உன் மாமனார் சப்போர்ட்டுக்கு” என்று உதட்டை சுளித்தான். “வராம. அவங்க கொஞ்சூண்டு பாவம் தான்” என்று மனதை உள்ளதை சொல்லிவிட்டாள். “அவங்க பாவமா உனக்கு?” என்று கணவன் அவள் முகம் பார்த்து அதட்டி கேட்டான். இப்போ இது பேசணுமா? மீனலோக்ஷ்னிக்கு அவ்வளவு யோசனை. வார்த்தை விட்டுவிட்டாள் இனி கணவன் விட மாட்டான். “சொல்லுடி” என்று நிற்க, “நாம வேற ஒரு நாள் பேசுவோமா?” என்று நல்ல பிள்ளையாக கேட்டாள். “இல்லை. இப்போவே தான் பேசணும். முன்ன ஒருமுறை கூட ஏதோ அவங்க நியாயம்ன்னு சொன்ன இல்லை” என்று கேட்க, “ஒண்ணையும் மறந்திடாதீங்க” என்று நொந்து போனாள் அழகி. வில்வநாதன், முழு வில்லனாக அவளை பார்த்திருக்க, மூச்சு இழுத்து விட்டு கொண்டாள் மீனலோக்ஷ்னி. என்றோ பேசத்தான் வேண்டும். அது இன்றாக இருக்கட்டுமே என்று நிமிர்ந்து நின்றாள். “அப்பாம்மா ஆகிட்டா அவங்களுக்கு தனியா வாழ்க்கை இருக்க கூடாதுன்னு நினைக்கிறது தப்பு தானே?” என்று கேட்டாள். வில்வநாதன் உடல் இறுக்கம் காண ஆரம்பிக்க, “ப்ளீஸ்ங்க. நாம பொறுமையா பேசணும்” என்று அவன் நெஞ்சில் தன் குளிர்ந்த விரலை வைத்து வருடிவிட்டாள்.