Then Paandi Meenaal 23 1 8134 தென் பாண்டி மீனாள் 23 தம்பதிகளின் அந்த இரவு, அவர்களுக்கான நீண்ட இரவாகி போனது. தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. அசதியில் அலுத்த உடல் ஓய்வை மட்டுமே கேட்டது. பேச வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாமல், மற்றவர் கையணைப்பிலே, இணையின் வருடலிலே, அவர்களின் மென் முத்தத்தின் சத்தத்திலே அந்த இரவு முடிந்து சூரியனும் உதயமாகி விட்டார். காலை அவர்கள் இறங்கி வந்த அழகிலே, கை கோர்த்திருந்த பாங்கிலே பெரியவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம். காரணத்தை அவர்கள் ஆராய நினைக்கவில்லை. தங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அது போதும். பூஜையறைக்கு சென்று வந்தவர்களுக்கு பாட்டி தன் கையாலே உணவு பரிமாறினார். மீனலோக்ஷ்னி மருமகளாக வந்த நாளில் இருந்து தினமும் இருக்கும் இனிப்பு அன்றும் இருந்தது. பாட்டி பேத்திக்கு ஊட்டிவிட, பேரன் வாய் திறந்தான். “இதோ, இதோ ராஜா” என்று பரபரப்புடன் அவர் வேறு எடுக்க போக, “இது போதும் பாட்டி” என்று மனைவிக்கு ஊட்டிவிட்டதிலே அவன் சாப்பிட்டான். பசியில் நன்றாக சாப்பிட்டவர்களுக்கு தயாளன் மனைவி மூலம் வைத்து கொண்டே இருந்தார். வில்வநாதன் வயிறு நிரம்பிய பின்னே நிமிர்ந்தவன், “மாம். போதும் நீங்க சாப்பிடுங்க” என்று நிறுத்தினான். புருவத்தையும் அழுத்தமாக நீவி விட்டு கொண்டவன், மனைவியை பார்க்க, அவள் வெட்கத்தில் சிவந்து போயிருந்தாள். என்னமோ சொல்ல தெரியா தடுமாற்றம் தம்பதிக்கு. அவர்களுக்கு மட்டுமே! வீட்டினருக்கு மகிழ்ச்சி என்பது அவர்களின் மலர்ந்த முகத்திலும், உற்சாக பேச்சிலும் புரிந்தது. உணவு முடிந்த பின், “ராஜா. ஒரு பத்து நாள் எங்கேயாவது போய்ட்டு வாங்கப்பா” என்றார் பாட்டி. “ஆமா, ஆமா ராசா. நான் மேனேஜர்கிட்ட சொல்லி டிக்கெட் போட சொல்றேன். நம்ம நாட்டில, இல்லை வெளிநாட்டுல எதுன்னு மட்டும் சொல்லு” என்றார் தனபாலன். வில்வநாதன் மனைவியை பார்க்க, அவளுக்கு அதில் பெரிதான விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. ஹனிமூன் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வருகிறது? இதுவும் ஒரு சடங்காக மாற்றி விட்டார்களா என்ன? வில்வநாதன் தோள் குலுக்கி கொண்டவன், “தாத்தா எங்களுக்கு எங்கேயும் போக வேண்டாம். இங்க என்ன குறை எங்களுக்கு? நம்ம வீட்டை விடவா வெளியே எனக்கு சந்தோசம் கிடைச்சிட போகுது?” என்றான் பேரன். “வில்வநாதா. இனி நீ மீனா பொண்ணுகிட்டேயும் கேட்டுட்டு தான்” என்று பானுமதி சொல்ல வர, “அத்தை. அவர் சொன்னது தான் நானும். அவருக்கும் அது தெரியும்” என்று இடையிட்டாள் மீனலோக்ஷ்னி. வில்வநாதன் அம்மாவை பார்த்து புருவம் உயர்த்த, “போடா. ரொம்பத்தான்” என்று நொடித்தாலும், அம்மாவுக்கு மகிழ்ச்சியே. “இனி இவங்க விஷயத்துல நீ தலையிடாது பானு. நம்மளை தான் வைச்சு செஞ்சிடுவாங்க” என்றார் தயாளன் மனைவியிடம். “பார்த்துட்டேன் இல்லை. இனி பேசவே மாட்டேன்” என்றார் பானுமதி. வில்வநாதன் அப்பாவை கண்கள் இடுங்கி பார்க்க, “என்னடா?” என்றார் தந்தை கொஞ்சம் அதிகாரமாக. ‘என்ன திடீர் மாற்றம்?’ மகனுக்கு கேள்வி. “என்ன மாம் உங்க காதல் கணவர் என்னை மிரட்டுறார். பார்த்துட்டு சும்மா இருக்கீங்க?” என்றான் மகன் அம்மாவிடம். “உங்க இரண்டு பேர் விஷயத்தில கூட நான் பேச மாட்டேன் மகனே. என்னை ஜோக்கர் ஆக்கிடுவீங்க” என்றார் பானுமதி உஷாராக. “லக்ஷ்மி மேடம்” என்று பாட்டியை அழைக்க, “அவர் என்னோட மருமகன் ராஜா. அப்படி எல்லாம் மிரட்ட முடியாது” என்று அவர் பாவமாக சொல்ல, “மாமா” என்று தயாளன் தான் தாங்க முடியாமல் குரல் எழுப்பினார். “ம்மா. இது ஓவர். உங்களுக்கு அவரை மிரட்ட முடியாதா?” என்று பானுமதி கணவருக்காக கேட்டார். “மிரட்ட முடிஞ்சிருந்தா உன் வீட்டுக்காரர் இன்னைக்கு நம்ம ஆபிஸ்ல இல்லை இருந்திருப்பார்” என்றார் கஜலக்ஷ்மியும். “அது ஒன்னு தான் குறை. அதையும் செய்ய சொல்லு பானு” என்று தயாளன் சொல்ல, மாமியார் பேரனுக்கு பார்த்து அமைதியாக இருந்தார். இல்லை என்றால் மருமகனை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். அவரின் ராஜா இவரின் மேல் அல்லவா கோவம் கொள்வான். அதை பாட்டியால் தாங்க முடியாதே? அதை தயாளன் எப்போதே புரிந்து கொண்டிருக்க, “என் மகன்” என்ற பெருமை. “என்னதான் நாம உசுரை கொடுத்து வளர்த்தாலும், ரத்தம் சேர வேண்டிய இடத்துல தானே சேரும்” என்று பாட்டி முனங்க, “அதனால தான் என் பாட்டிகிட்ட இருக்கேன் நான்” என்று பேரன் பாட்டியின் கழுத்தோடு கட்டி கொண்டான். “ராஜா. இந்த சால்சாப்பு எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேன். என் கொள்ளு பேரன் வரட்டும், அன்னைக்கு இருக்கு உங்களுக்கு” என்றார் பூரிப்பாக. மீனலோக்ஷ்னியின் புன்னகைத்த முகம் அப்படியே வெட்கத்தில் தாழ்ந்து போனது. வில்வநாதன் மனைவியை ரசிக்க, மற்றவர்கள் தம்பதியை ரசித்திருந்தனர். தொடர்ந்த நாட்கள் இப்படியே செல்ல, அந்த வார இறுதியில் அறிவழகன் தம்பதிக்கு திருமண நாள் வந்தது. மீனலோக்ஷ்னி குடும்பத்துடன் அப்பா வீட்டிற்கு சென்றாள். வீட்டில் பல மாற்றங்கள். தந்தை மகளுக்கு மேல் மாடியில் தனி அறை எடுத்து கொண்டிருந்தார். வில்வநாதன் அன்றய நாளிற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான். சுஜாதா முழு ஓய்வில் மகள் குடும்பத்துடன் நேரம் கழித்தார். அரவிந்தனின் குடும்பமும் இருக்க, மதிய உணவு விருந்தாக களைகட்டியது. அதை தொடர்ந்து எல்லாம் ஓரிடத்தில் கூடியிருக்க, மீனலோக்ஷ்னி அப்பாவின் கை பிடித்து அமர்ந்திருந்தாள். சுஜாதா அவளுக்கு மறு பக்கம் இருக்க, வில்வநாதனுக்கு மனைவியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும் பிடித்தது. அப்பாம்மாவிடம் செல்லம் கொஞ்சும் அவள் அழகு அவனை நிறைத்தது. அடிக்கடி அவன் கண்கள் அவளிடம் செல்ல, மனைவி முதல்லே கண்டு கொண்டவள், “ப்ளீஸ்ங்க” என்றாள் உதட்டசைத்து. “நான் என்ன பண்ணட்டும்” என்பதாய் அவன் தோள் குலுக்க, “போயா” என்று அவள் தான் தடுமாறி முகம் திருப்பி கொண்டாள். தயாளன் ஏதோ கேட்க, அறிவழகனுக்கு நினைவு இங்கில்லை. மருமகனிடம் தனியே மாட்டுவதை விட, பெரியவர்கள் முன் வைத்து அவரிடம் பேசலாமா என்று யோசனை. “சம்மந்தி, சம்மந்திங்க” என்று தயாளன் விளையாட்டாய் அவர் தோள் தட்ட, “என்னப்பா நீ?” என்று அவர் மெலிதாக சங்கடப்பட்டார். “என்ன அறிவழகா, என்ன அப்படி ஒரு யோசனை?” என்று கஜலக்ஷ்மி கேட்க, அதற்காகவே காத்திருந்தது போல், “பெரியம்மா. பாப்பா சொன்னா. ஷேர்ஸ் பத்தி” என்று ஆரம்பித்தார். மீனலோக்ஷ்னி அதிர்ந்து கணவனை பார்க்க, அவனிடமோ இன்னமும் ரசனை தான். மாமனார் ஏதோ பேசுகிறார் என்ற எண்ணம். “ஆமா. மருமகளுக்கு ஷேர்ஸ் கொடுத்திருக்கோம்ண்ணா” என்றார் பானுமதி. “இல்லை தங்கச்சி. சின்ன பொண்ணு, அவ பேர்ல இவ்வளவு மதிப்புள்ள பங்கை கொடுத்தா அவளுக்கு“ “அவளுக்கென்ன மாமா” என்று வில்வநாதன் இடையிட்டு கேட்டான். ‘இவ்வளவு நேரம் என்னை தானேயா பார்த்துட்டு இருந்த? டக்குன்னு ஒரு அலர்ட். என்னோட வில்லன் ரொம்ப மோசம்‘ என்று அவனின் அழகி நொந்து போனாள். “மாப்பிள்ளை. அவளுக்கென்ன தெரியும் சின்ன பொண்ணு. இப்போதான் படிப்பை முடிச்சா?” என்று அறிவழகன் பேச, “புரியலை மாமா. என்ன சொன்னீங்க? சின்ன பொண்ணுன்னா” என்று வில்வநாதன் பேச தொடங்க, “வில்வா” என்று தந்தை மகனை அறிந்தவராக அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பி கண்களால் வேண்டாம் என்றார். அவன் எங்கே கேட்க போகிறான்? “இருந்தாலும் நீங்க இவ்வளவு அநியாயமா பேச கூடாது மாமா” என்றான் மருமகன். “அப்படி என்ன மாப்பிள்ளை நான் பேசிட்டேன்” மாமனாருக்கு தான் பக்கென்றானது. “கல்யாணங்கிற பெரிய பொறுப்பையே அவ தலையில அசால்ட்டா தூக்கி வைச்சாச்சு. இதுல சாதாரண பங்கை போய் பேசுறீங்க” என்றான். “ஆஹ். அதுவும் இதுவும் ஒண்ணா மாப்பிள்ளை?” “என்னை சமாளிக்கிறது பத்து தொழிலை எடுத்து நடத்துகிறது சமம் மாமா” என்றான் மருமகன் கிண்டலாக. “ஏங்க” என்று மீனலோக்ஷ்னி இடையிட, “நோ பொண்டாட்டி. இது எனக்கும், என் மாமனாருக்கும் உள்ளது” என்றான் கணவன் கண்டிப்புடன். “மாப்பிள்ளை. பங்கோட மதிப்பு அதிகங்கிறதுக்காக தான் நான் சொல்றேன்” என்று அறிவழகன் விடாமல் பேச, “சரி மாமா. நீங்க இரும்பு கடை வைச்சிருக்கீங்க. நிலம் வைச்சிருக்கீங்க. கார் வைச்சிருக்கீங்க, பேங்க்ல பணமும் வைச்சிருப்பீங்க இல்லை” “வைச்சிருக்கேன் மாப்பிள்ளை. நகை கூட இருக்கு. இடமும் கொஞ்சம் டவுன்ல வாங்கி போட்டிருக்கேன்” என்றார் வேகமாக மருமகனுக்கு ஒப்பித்து. “எல்லாம் மொத்தமா சேர்த்தா எவ்வளவு பணம் வரும்?” “இத்தனை வரும் மாப்பிள்ளை” என்று தோராய தொகையை சொன்னார். “நல்ல அமவுண்ட் மாமா” என்று மருமகன் மெச்சிக்கொள்ள, மாமனாருக்கு மகிழ்ச்சி. “சரி மாமா. இதுக்கெல்லாம் நாமினியா யாரை போட்டிருக்கீங்க?” என்று நிதானமாக கேட்டான் மருமகன். “சுஜாதாவை தான் மாப்பிள்ளை. உங்க அத்தை” என்று முடித்தவரின் குரல் கொஞ்சம் உள்ளே போனது. “என்ன மாமா. அநியாயம் பண்ணிட்டீங்க நீங்க?” என்றான் மருமகன் உச்சு கொட்டி. “அத்தைக்கு என்ன தெரியும்ன்னு அவங்களை நாமினியா போட்டிருக்கீங்க. அதுவும் இவ்வளவு பணத்துக்கு? பாவம் தானே அவங்க” என்று மருமகன் மேலும் பேச, மாமனாருக்கு தான் வாய் திறக்க முடியவில்லை. “நம்மளோடது எல்லாம் அவங்களுக்கு உரிமைப்பட்டதுன்னு தானே மாமா நீங்களும் அத்தையை நாமினியா போட்டிருக்கீங்க. அதுபோல தான் நானும் என் பொண்டாட்டியை என்னோட சரிபாதியா நினைச்சு பங்கு கொடுத்தேன்“ “இதோ அடுத்த மாசம் எங்க குரூப்ஸ்ல அவளுக்கு டைரக்டர் போஸ்ட் கொடுக்கணும்ன்னு நினைச்சிருக்கேன்“ “ஆறு மாசத்துல அவ பேர்ல ஒரு நூறு ஏக்கர் நிலமும் வாங்கணும்“ “அடுத்த வருஷம் அவ பேர்ல ஒரு தொழில் கூட தொடங்கலாம்ன்னு இருக்கேன்“ “ஏங்க போதும் ப்ளீஸ்” என்று மனைவி தான் அதிர்ந்து போய் இடையிட்டாள்.