“நீ ரொம்ப தெளிவா இருக்க. அண்ணா தான் பாவம்” என்று சிரித்தாள் சுகன்யா.
“அவரா பாவம்? வேணா என்னை பேச வைக்காத. சரியான காரியவாதி அவர்” என்று பொரிந்துவிட்டாள்.
“பாப்பா. என்ன பண்ற நீ?” என்று சுஜாதா உள்ளே வந்து மகளை கண்டித்தவர், தலையில் தாராளமாக பூ வைத்துவிட்டார்.
“என்ன என் பேரனோட அழகி முகம் சுருங்கி இருக்கு” என்று கேட்டபடி கஜலக்ஷ்மி வந்தவர், அவளுக்கு தன் கையால் இனிப்பு ஊட்டினார்.
பானுமதியும் புன்னகையுடன் பார்த்திருக்க, மீனலோக்ஷ்னி அவர்கள் காலில் விழுந்து ஆசீ வாங்கி கொண்டாள்.
இரு பெண்களும் மிகவும் உணர்ச்சிவச பட்டிருப்பது எல்லோருக்கும் புரிந்தது. இந்த நொடி அவர்களுக்கு அளவில்லா இன்பம். அதில் முக்கிய பங்கு மீனலோக்ஷ்னிக்கு உண்டு என்பதால் அந்த அன்பை அவளிடம் தாராளமாக பகிர்ந்து கொண்டனர்.
“நாங்க எல்லாம் தோட்டத்துல இருக்கோம்” என்று குறிப்பு காட்டிவிட்டு பெரியவர்கள் கிளம்பினர். சுஜாதா மகளின் உச்சியில் முத்தம் வைத்து சென்றார்.
சுகன்யா, இன்னும் சிலர் சேர்ந்து மீனலோக்ஷ்னியை வில்வநாதன் அறைக்கு அனுப்பிவிட்டனர்.
மீனலோக்ஷ்னி கதவு கூட சாற்றாமல், புது கணவனை தான் தேடினாள். மூடப்பட்ட ஜன்னல் கண்ணாடி கதவுகள் வழி தோட்டத்தை பார்த்து, போன் பேசி கொண்டிருந்தான்.
மீனலோக்ஷ்னி நேரே அவன் முன் சென்று நின்றாள். அதுவும் ஜன்னலுக்கும், அவனுக்கும் இடையில்.
வில்வநாதன் அவள் இப்படி வந்து நிற்கவும், பெருத்த ஆச்சரியம் கொண்டான்.
புதுப்பெண்! முதலிரவு அறைக்குள் வெட்கம் கொள்வாள், தயங்கி நிற்பாள் என்றெல்லாம் அவன் இவளிடம் எதிர்பார்த்திருக்க வில்லை என்றாலும், இதையும் அவன் எதிர்பார்க்க வில்லையே.
இருவரின் மூச்சு காற்றும் மற்றவரை தீண்டும் தூரத்தில் தான் நின்றனர். அவன் புருவம் உயர்த்தி, “என்ன?” என்று மென்குரலில் கேட்டான்.
“முதல்ல பேசி முடிங்க” என்று விரலசைக்க,
சுகன்யா தான் கதவு மூடியவள், “அண்ணாவை சீக்கிரம் முந்தானையில முடிஞ்சிடுவா போல” என்று மற்ற பெண்களுடன் கிண்டலடித்து செல்வது காதில் விழுந்தது.
அதில் இன்னமும் அவள் கடுப்பாக, வில்வநாதனுக்கு புன்னகை. போன் வைத்தவன், “அப்படியா?” என்று கேட்டான்.
“நான் ஏன் இப்படி இருக்கேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டாள்.
“எப்படி?” என்று வில்வநாதன் அவளிடம் இருந்து நகர,
சட்டென கை பிடித்து கொண்டவள், “எனக்கு பதில் சொல்லுங்க” என்றாள்.
வில்வநாதன் அவள் கை பார்த்து அவளை பார்க்க, “இப்போ என்ன கை தானே பிடிச்சேன். ஆனா நீங்க என்னையே பிடிச்சுக்கிட்டிங்க” என்றாள்.
“என்ன பேசுற நீ?” என்று அவன் புன்னகையுடன் கேட்க,
“இருக்கறதை தான் சொல்றேன். நீங்க அப்படி தானே பண்ணியிருக்கீங்க” என்றாள் மனைவி.
“சரி முதல்ல உட்காருவோம் வா” என்றழைக்க,
“இல்லை. பேசி முடிச்சுட்டு தான் எதுவும்” என்றாள் உறுதியாக.
“எதுவும்ன்னா என்ன மீன் பண்றீங்க மேடம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“ஆஹ்” என்று அவள் புரியாமல் விழிக்க,
“வளரணும் சொன்னா மட்டும் கோவம் வரும். சரி சொல்லு. என்ன பேசணும்?” என்றவன், அவளிடம் இருந்து கையை உருவி, மார்போடு அவன் கைகளை கட்டி கொண்டான்.
“ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டாள்.
“எப்படி?”
“புரியாத மாதிரி கேட்க கூடாது. நீங்க ஐடியா சொல்லி தானே நான் பாட்டிகிட்ட பேசினேன். ஆனா நமக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றாள் அவள்.
“ஓஹ் காட். நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு. நீ சரியா பேசுறியா? இல்லை எனக்கு தான் எல்லாம் வேற மீனிங் புரியுதான்னு தெரியலை” என்றான் வில்வநாதன்.
“நான் ரிலாக்ஸ் ஆகிட்டேன். இப்போ சொல்லுங்க. உங்க ஐடியா ஏன் ஒர்க்கவுட் ஆகலை?”
“அதை ஞாபகப்படுத்தாத. நான் கோவமாகிடுவேன்” என்றான் அவன்.
“ஏன், நீங்க ஏன் கோவமாகிடுவீங்க?”
“பின்ன, பெத்த மகன் நான் சொல்லி கேட்காம, நீ சொன்னதும் உன் மாமா வீட்டுக்கு வந்துட்டாரே? அது தப்பு தானே? அப்போ மகன் எனக்கென்ன மரியாதை, பாசம் இருக்கு நீயே சொல்லு” என்று அவளிடமே நியாயம் கேட்டான் வில்வநாதன்.
“ஆமா. சரி தான். நீங்க சொல்லி அவர் ஏன் கேட்கலை?” அவள் புருவம் சுருக்கி யோசிக்க, வில்வநாதனுக்கு உதட்டோரம் துடித்தது.
அதை கவனித்த பெண்ணவள், “கோவப்படாதீங்க. இருங்க” என்றாள்.
வில்வநாதன் மறுபக்கம் திரும்பி மௌனமாக சிரிக்க, “அச்சோ அழுகுறீங்களா?” என்று பதறினாள் அவன் மனைவி.
“இல்லை. ரொம்ப டீப்பா கவலைப்படுறேன்” என்றான் அவன்.
மீனலோக்ஷ்னி கணவன் பக்கம் வந்து அவன் முகம் பார்த்து சந்தேகம் கொண்டவள், “நான் ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா தயா மாமா வீட்டுக்கு வந்ததுக்காக, எல்லாம் என்னை புகழ்ந்து பேசும் போது எனக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா?” என்று கேட்க,
“இப்போ அதனால என்ன? காரணம் என்னவா இருந்தாலும் அவர் வீட்டுக்கு வந்துட்டார் இல்லை. க்ரெடிட் எடுத்துக்கோ தப்பில்லை” என்றான் கணவன்.
“அது உங்களுக்கு வர வேண்டிய கிரெடிட். நீங்க சொன்ன ஐடியா அது?” என,
வில்வநாதனுக்கு இவ புரிஞ்சு தான் பேசுறாளா என்று புன்னகை.
“சரி இப்போ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உன் பாஷையில சொல்லணும்ன்னா நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. சோ என் சார்புல நீயே அதை எடுத்துக்கலாம். தப்பில்லை” என்றான் அவன்.
“இல்லை எனக்கு வேணாம். ஆனா நீங்க ஏன் சரி சொன்னீங்க? பாட்டிகிட்ட வேணாம் சொல்லியிருக்கலாம் இல்லை” என்றாள்.