Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம்:- 5
செங்கதிரோன்
தீண்டிடும் சிறு பனியோ
அவள்…
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் எனும் அழகான சிறு 2குக்கிராமம்….கிராமம் என்றாலே அழகு தானே.. விடியற்காலையில் கூவும் சேவலின் குரல் அழகு…வாசலில் தெளிக்கும் சாணத் தண்ணீரின் ஓசை அழகு…வாசலின் கோலத்தில் மையத்தில் சாணத்தால் ஆகி வீற்றிருக்கும் குட்டி பிள்ளையார் அழகு…அழகு எல்லாமே அழகு தான்…
நாம் பார்க்கும் பார்வையில் தானே அனைத்தும் இருக்கிறது…நம்பிராஜனுக்கும் அப்படியே…அவனின் ஊர் என்றால் அவனுக்கு மிகவும் பிடித்தம்…அப்பாவுடன் சேர்ந்து ஏர் உழுவது, மாடுகளை மேய்ப்பது, தண்ணீர் காட்டுவது, வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது ,என அனைத்தும் அவனுக்கு விருப்பமே…
கல்லூரியின் விடுமுறை நாட்களுக்கு வீட்டிற்கு வந்தால் ஏதேனும் உதவிகளை அவனின் அப்பாவிற்க்கு செய்வான்…அவன் தந்தை தடுத்தாலும் ,தன்னால் ஆன உதவியை செய்வான்…
என்ன தான் படித்தாலும், படிப்பின் மேல் தனி பிரியம் எனில் ,விவசாயத்தின் மீது அவனுக்கு ஆர்வம் அதிகமாய் இருந்தது.. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நிலங்கள் இல்லை எனினும் தன்னிடம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலங்களை மிகவும் அருமையாக, பருவத்து ஏற்றார் போல போகம் செய்யும் திறமை கனகசபைக்கு இருந்தது….
அவர்கள் வீடு தோட்டத்தில் இருந்தது…வீட்டின் கீழக்கே ,தென்னை மரம்,வீட்டின் இடது ஒரத்தில் மாமரமும், புன்னை மரமும்…முன்னே முல்லை,மல்லி,கனகாமரம், ரோஜா,சம்மங்கி என பூச்செடியின் அணிவகுப்புகளும்…ஓர் அழகான சோலை வனத்தையே நியாபகம் படுத்தும் அவனுக்கு..
ரம்மியனான காலை வேளை பொழுது…விடியற்காலையிலே எழுந்துவிட்ட கனகசபை மாடுகளுக்கு தீனி தொட்டியில் தண்ணீர் ஊற்றி தவிடு, தீவினம், காய்ச்சிய ராகி கூழை ஊற்றி ஒரு முறை தன்னுடைய கையால் நன்றாக கலக்கியவர் கறவை மாட்டினை அங்கிருந்த மாடு கட்டும் கூடத்தில் கட்டினார்…
திலகவதி வாசல் தெளித்து கோலம் போட…கனகசபை பால் கறந்து கொண்டிருந்தார்…கறந்த பாலை பால் கேனில் ஊற்றியவர்,கறந்த பாத்திரத்திலே சிறிது பாலை மிச்சப்படுத்தி தயிர் மற்றும் டீ க்கு என வைத்தவர்…
மாடு மற்றும் கன்றுகளை பிடித்து வெளியில் கட்டினார்…அவர் கட்டிவிட்டு வருவதற்குள் சூடான டீயுடன் அவரை எதிர்கொண்ட திலகவதி “இந்தாங்க டீ..”என்றபடி கையில் திணித்துவிட்டு அடுக்களைக்குள் வேகமாக உள் நுழைய…
“கையில ஒழுங்கா பிடிச்சு குடுத்துட்டு போறதுக்குள்ள அப்படி என்னடி உனக்கு அவசரம்…ஏதோ பிலைட் புடிக்க போறவ மாதிரி, அந்த பரப்ரபரக்குற…”என எரிச்சல் மண்டியிட்ட குரலுடன் கூறியவர்…
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவரின் வார்த்தைகளை கேட்ட திலகவதி “ஏன் சொல்ல மாட்டீங்க…இன்னும் அரை மணி நேரத்தில நடவுக்கு ஆள் வந்திடுவாங்க…அப்புறம் சாப்பாடு செய்ய முடியாது…பத்து மணிக்கெல்லாம் சாப்பாடு வேணும் பசிக்குதுன்னு கழனியை விட்டு வெளியே வந்துடுவாங்க…”
“அப்போ வந்து பத்து பேருக்கு என்னால சமைச்சி சோறு போட முடியுமா…பையனை பெத்ததுக்கு ஒரு பொட்டை பிள்ளையையை பெத்து இருந்தா ,நான் இப்போ அடுப்படியில கஷ்டப்பட்ரத்தை பார்த்து கொஞ்சம் எனக்கு ஒத்தாசை பண்ணும்…”
அரை குமரன் இன்னும் தூக்கத்துல இருக்கார்…அவருக்கு இன்னும் திருப்பள்ளி எழுச்சி பாடணும்…சாமானம் கழுவணும்.. வீடு கூட்டணும்… சாணி அள்ளனும்…எவ்ளோ வேலை இருக்கு….ம்ம்ம்…”என அவரது புலம்பல் பாடலை காலை வேளைக்கு தகுந்தாற்போல் ராகத்துடன் அவர் பாடிக்கொண்டு இருக்க…
டீ யை ஒரு மிருடு விடாமல் குடித்துவிட்டு டம்பளருடன் அடுக்களைக்குள் பிரவேசித்தவர் “அடி கிறுக்கி.. இதுக்கு தான் இவ்வளவு வேசனபட்றையா..பதினைஞ்சு வருஷம் முன்னாடி சொல்லி இருந்தா, அப்பவே நம்பிராஜனுக்கு ஒரு பாப்பாவை ரெடி பண்ணி இருக்கலாம்… இப்போ போய் சொல்றியே….மக்கு பொண்டாட்டி……” இருந்தாலும் பரவாயில்ல ,இப்போ கூட மாமா ரெடி தாண்டி பொண்டாட்டி…ரெடி பண்ணிடலாமா…” என்றபபடி நெருங்க…
மிரண்டுப்போய் கனகத்தை பார்த்த திலகவதி சூடான கரண்டியை அவரின் கையின் மேல் வைக்க…”ஸ்ஷ் ஹா….”என்றப்படி கனகசிவம் ஒரு அடி பின்னே விலக…
“பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடினானாம்…”அப்படி இல்ல இருக்கு உங்களோட செய்கை…தோலுக்கு மேல வளர்ந்த பிள்ளையை வச்சிட்டு ,இன்னொரு பிள்ளைக்கு ரெடி பண்ணுவீரோ ஓடி போயிடுங்க,அப்பறம் வாய்க்கு சூடு வச்சிடுவேன்…” என மிரட்ட…
“அடியேய் மாமனை பகைச்சிக்காத, அப்பறம் பின்னால வருத்தப்படுவ …”என்றப்படி அவர் நிற்க …”அது எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்…உங்க பொழப்பை போய் முதல்ல பாருங்க…கூறு கெட்ட மனுஷன்.. இன்னொரு பிள்ளைக்கு ரெடி பண்றாராம் இல்ல..பையன் உள்ள தூங்குறான், வெவஸ்த்தை கெட்டவரு…”என திட்டிக்கொண்டே அடுப்படியில் பம்பரமாய் சுற்றிக் கொண்டு இருந்தவரின் முகமோ சிவந்து தான் போய் இருந்தது…
அதனை தனது மனையாளனுக்கு காட்டாத வண்ணம் வேலை இருப்பது போல முகத்ததை திருப்பிக் கொண்டார்…
நடவு நடும் வேலை இருந்ததால், எருதுகளுக்கு தண்ணீர் வைத்து,வைக்கோல் போட்டார்…
ஏற்கனவே தளைகள் போட்டு நாற்றங்காலை ஓட்டிவிட்டதால், இன்று பரம்பு இழுத்து உரம் இடம் வேலை இருந்தது…ஆறு மணிக்கு வரும் வேலையாட்கள் நெற்பயிர்களை வேரோடு பிடுங்கி கத்தை கட்ட ஆரம்பித்துவிடுவர்…அதற்குள் மீண்டும் ஒரு முறை நாற்றங்காலை எருது கொண்டு உழுது,பின் உரமிட வேண்டும்…
அதாவது நெற் பயிர்கள் நடுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னரே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி எருதுகளை வைத்து ஒரு முறை உழுது விடுவர்…பின்னர் தழைகளை அதாவது வேப்ப மர இளம் கிளைகள், அவுரி, தக்கை பூண்டு போன்ற தழை சத்து உரங்கள் பயன்படுத்தி, இரண்டு நாட்கள் மண்ணில் மட்கி அதிலுள்ள சத்துக்கள் உரமாகிடும்...பின்னர் உழுது பயிர் நடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் DAP, யூரியா வை தெளித்து பிறகு பயிர் நடவு செய்ய துவங்குவர்…
வேலையாட்கள் வர துவங்கி விட…எருதுகளை கொண்டு நாற்றங்காளில் உழவு செய்ய துவங்கினார்….அப்போது தான் தாய் திலகவதியின் திருப்பள்ளி எழுச்சி உதவியுடன் துயில் களைந்து எழுந்த வந்த நம்பிராஜன் ,தந்தை உழுவதை பார்த்துவிட்டு வயிலின் அருகே சென்றான்…
“என்னப்பா எழுந்தாச்சா…”என மகனை கண்ட கனகம் விசாரிக்க…
“ஹ்ம்ம்…ஆமாம்ங்க பா…”என்றான் வயலின் ஓரத்தில் இருந்த கல்லில் மேல் அமர்ந்துக்கொண்டு…
“இங்க எதுக்கு உட்கார்ற நம்பி…துணியெல்லாம் சேர் படியும்.. நீ வீட்டுக்கு போ…” என்றவர் ..”ஹே…சோவ்…….சோ…சோ…”என்றப்படி எருதுகளை உழுதலுக்கு தக்கவாறு சாட்டையின் உதவியுடன் வழி நடத்தினார்…
“இல்ல பா…கொஞ்ச நேரம் இங்கவே இருக்கேன்…சும்மா வேடிக்கை பார்க்குறேனே..” என்றவன் அங்கு வேடிக்கை பார்க்க துவங்க…
“நம்பிராஜாஜா….”என்ற அவனின் அன்னையின் அழைப்பு அவனை திசை திருப்ப , அம்மா கூப்டறாங்க பா,போயிட்டு வந்துற்றேன்…என்றவன் அன்னையை நோக்கி செல்ல …
வழியில் அவனை கண்ட வேலை ஆட்கள் அவனிடம் நலம் விசாரிக்க அவர்களிடம் மரியாதையாகவும்,அதே நேரம் முகம் சுளிக்காமல் பதிலளித்தவன் மென்னகையுடன் அங்கிருந்து நகர….
அவர்களில் ஒரு பெரிய மனுஷி “அப்பாவை போல மகனும் மரியாதையா பேசுறாங்க…ரொம்ப தங்கமான பையன்…”என்றப்படி வேலைகளை செய்ய..அவர்களின் பேச்சுக்களை கேட்ட கனகசிவத்தின் முகம் பெருமையில் பூரிக்க துவங்கியது…
நல்ல புத்தகம் ஒருவனின் நல்ல நண்பன்,நல்ல நடத்தை ஒருவனின் சிறந்த நாலொழுக்கம்….சிறு வயது முதலே கனகசபை நம்பிராஜனுக்கு சொல்லியது…
இங்கு ஈன்ற பொழுதிலும் தன் மகனை சான்றோர் என கேட்ட தந்தை.. என கூறுவதே சால பொருந்தும்…தாய்க்கு மட்டும் பெருமையல்ல…தந்தைக்குமே மகனை மற்றவர் உயர்த்தி பேசுவது பெருமையையே உண்டாக்கும்…
ஒருவன் படிப்பினாலும், செல்வத்தினாலும் உயர்ந்து இருந்தாலும்,எவன் ஒருவன் ஒழுக்கத்தில் தாழ்ந்து இருக்கிறானோ அவனை உலகம் தாழ்ந்தவனாகவே கருதும்…
பெருமையில் விசிக்க தனது வேலையை தொடர்ந்தவர் ,எருதுகளை நாற்றங்காலில் இருந்து வெளியேற்றி, ஒரு மரத்தில் இரண்டையும் கட்டினார்…
அதற்குள் நம்பிராஜன் ஒரு சொம்பில் பழைய சாத கஞ்சியுடன் வர,அதனை பருகியவர்,”நீ குடிச்சியா நம்பி ..”என்க..
“இல்லீங்க அப்பா…நீங்க குடிங்க….” என்றவன் “எருதுகளை குளிப்பாட்ட தொட்டிக்கு ஒற்றை எருதுவை குளிப்பாட்ட இழுத்து செல்ல…
அதற்க்குள் பயிர்கள் எல்லாவற்றையும் ஓர் இடத்தில் வைக்க துவங்கி இருந்தனர்….உரம் போட வேண்டும் என்பதால் உரத்தை எடுத்துக்கொண்டு வயலுக்குள் இறங்கினார்…
காலையில் இருந்து சேற்றிலே இருந்ததினால் உடை எல்லாம் சேராகவே இருந்தது…உரத்தை கையில் அள்ளி வயலில் வீசிக்கொண்டே முன்னேறிக்கொண்டு இருந்தார்…
இருதயத்தின் மேலே இரும்பு குண்டை வைத்தது போல அழுத்த துவங்க ,அதனை பெரிதாக எண்ணாமல் உரத்தை அள்ளி வீசிக்கொண்டே வயலில் முன்னேற துவங்கினார்…
திலகவதி நாற்று பயிர்களை ஓர் இடத்தில் குவித்து வைத்துக்கொண்டும், கூடையில் அடிக்கிக்கொண்டும் இருந்தார்…நம்பிராஜன் எருதுகளை கழுவிக்கொண்டு இருந்தான்…கனகசிவம் உரத்தினை அள்ளி வீசிய படி சேற்றில் இருந்த கால்களை எடுத்து முன்னே வைத்த படி வேகமாய் நகர, இருதயத்தில் மீண்டும் மின்னல் போல ஒரு வலி நொடி நேரத்தில் சுண்டி இழுக்க.. ஒரு முறை நெஞ்சை இறுக்கி பிடித்தபடி நின்றார்…
“அய்யா…கனகம் சீக்கிரம் போடு…பொழுது போகுது ,வெரசா நடவு நட்டுட்டு ,வேற இடத்துக்கு போகனும்,அங்கையும் குத்தகைக்கு பேசி முடிச்சி பணம் கையால வாங்கியாச்சி…”என்று பின்னால் இருந்து ஒருவர் குரல் கொடுக்க…
“இதோதோ…இன்னும் கொஞ்சம் தான் மாரி…முடிஞ்சது…நீங்க பயிரெல்லாம் எடுத்திட்டு வாங்க…நட ஆரம்பிக்கலாம்….”என சத்தமாக மொழிந்தவர் ,சேற்றில் இருந்த ஒரு காலை எடுத்து அடுத்த அடி வைக்க,கைகள் எல்லாம் சில்லிட்டு போனது அவருக்கு…முகமெல்லாம் வேர்க்க,கைகள் நடுங்க…கையில் இருந்த பாத்திரத்தை இறுக பிடித்தும் அது நழுவி கீழே விழ, அவரும் அதனுடனே கீழே சரிந்தார்…
தண்ணீர் நிறைந்த வயலில் அவர் விழுந்த சத்தம் அனைவரின் காதிலும் விழ, ..”என்ன….ங்க…”என்ற திலகவதியின் அலறல் அந்த இடத்தின் மற்ற ஜீவராசிகளின் கூவலை விட பெரியதாய் இருந்தது…
சடுதியில் நிகழ்ந்த நிகழ்வில் இருந்து எவரும் வெளிவரவில்லை..சில நொடிகளில் தங்களை மீட்டெடுத்த வேலையாட்கள் அவரை நோக்கி ஓட,தாயின் குரலில் நம்பிராஜனும் விரைந்து அங்கு ஓட,திலகவதியும் அங்கு விரைந்தார்…
ஒற்றை ஆள் படுக்கும் கட்டிலில் ,மேலே வெள்ளை வேட்டி போர்த்திருக்க, மஞ்சளுடன் கூடிய ஒற்றை நாணயம் அவரின் நெற்றில் வெள்ளி கிண்ணமாய் வீற்றிருந்தது…காலின் பெருவிரல்கள் இரண்டும் மெல்லிய துணியால் கட்டப்பட்டு இருந்தது…தலையின் அருகே ஒரு படி நெல்லின் நடுவில் ஊதுபத்தி புகைந்துக்கொண்டு இருந்தது…தேங்காய் உடைத்து அதனின் அருகில் வைக்கப்பட்டு இருந்தது….
தலை மாட்டின் ஓர் ஓரத்தில் திலகவதி தலைவிரி கோலத்துடன் அமர்ந்து கண்ணில் கண்ணீரை சிந்திக்கொண்டு இருக்க,நடந்ததை எதையும் ஜீரணிக்க முடியாவண்ணம் வெற்று பார்வையுடன் அங்கு அமர்ந்து இருந்தான் நம்பிராஜன்…
முடிந்தது எல்லாம் முடிந்தது…அவனின் தந்தை இவ்வுலகை விட்டு நீங்கி ஒரு மணி நேரம் ஆயிற்று…அவனும்,திலகவதியும் அழுதும்,கத்தியும், கதறியும் அவனின் தந்தை இமியும் அசையவில்லை…உடல் சில்லிட்டு போனது…உயிரும் பிரிந்து காற்றில் கலந்துவிட்டது போலும்…
அக்கம் பக்கத்தினர் கூடி இருந்தனர்…ஓரிரு உறவுகள் வர துவங்கி இருந்தது…
கண்கள் மீண்டும் தந்தையின் முகத்தை காண,ரத்த ஓட்டம் நின்று வெளுத்து போன முகத்துடன் அவரை கண்டவனுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தது…
ஒரு மணி நேரம் முன்பு தன்னுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தவர் ,இப்போது உலகில் இல்லை,தன்னுடன் இல்லை,என்றும் இல்லை என நிதர்சனம் அவனின் முகத்தில் அடிகளாய் விழ, அடுத்தது என்னவென்று தெரியாத நிலையில் இருந்தான்…
அவன் மனதெல்லாம் கலங்கி போய் இருந்தது…தாய் திலகவதியினை காண அவர் கண்ணீர் சிந்திய வண்ணம் தந்தையின் மீது சாய்ந்து கதறிக்கொண்டு இருந்தார்…
சொந்தங்கள் எல்லாம் வர துவங்கினர்.. யார் சொன்னார்களா, எப்படி தெரிந்ததோ அதை எல்லாம் ஆராயும் நிலையில் அவனும் இல்லை..தனக்கு இருக்கும் மனநிலையில் எவரிடம் போன் செய்து சொல்லும் அளவிற்கு அவனின் மனோதிடம் இல்லை…
விஷயம் தெரிந்த எவரோ, சொல்லி இருக்க வேண்டும்..அவனின் தாயின் அம்மா கூட வந்திருந்தார்…புடவை முந்தானையை வாயில் பொத்திய வண்ணம் அழுகையுடனே உள்ளே வந்தவர் மகளை கட்டிக்கொண்டு அழுதார்….
கனகசிவத்தின் மேல் வெறுப்பு இருந்தாலும்,மகள் தாலி அறுந்து இருக்கும் நிலையில் ,வெறுப்பை காட்டும் அளவிற்க்கு அவரும் ஈன பிறவி அல்லவே…மகளின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்ள ஓடி வந்துவிட்டார்…
தாயை கட்டிக்கொண்டு அழுத திலகவதினை கண்ட அனைவருக்கும் கண்ணில் கண்ணீர் பெருகியது…இடையிடையே கணவனை பற்றியும்,அவர் தன் மேல் வைத்திருந்த பாசத்தினை பற்றியும் சொல்லிக்கொண்டே பெருங்குரல் எடுத்து அழ அங்கிருந்த அனைவருக்கும் கண்ணெல்லாம் கண்ணீரால் நிறைந்து போனது…
திலகவதியின் தந்தை சுப்பையாவும் வந்திருக்க,மற்ற உறவினர்களும் வர துவங்கி இருந்தனர்….அவரும் வந்து நம்பிராஜனை தனது நெஞ்சில் சாய்த்துக்கொள்ள “அப்பா…..அப்பா…..ப்பா……”என அவரின் தோள் சாய்ந்து அரட்ட துவங்கினான்…
அரற்றினால் மட்டும் வந்துவிட போகிறாரா…வர முடியாத இடத்திற்க்கு அல்லவா அவனின் தந்தை சென்றுவிட்டார்….அவனையும்,அவனின் அன்னையையும் தனியாய் தவிக்கவிட்டு விட்டு…
அடுத்தடுத்த காரியங்கள் மளமளவென ஆரங்கேறின…எல்லாவற்றையும் அவனின் தாத்தா சுப்பையாவே பார்த்துக்கொண்டார்….நம்பிராஜனுக்கு அதெல்லாம் நடத்த தெரியுமா என்ன..??..அந்த அளவிற்க்கு விவரம் பத்தாதே…
கனகசபையின் மீது சுப்பையாவிற்க்கு எப்போதும் தனி பாசம் உண்டு…மனைவி தெரியாத வண்ணம் ஏதாவது அவனுக்கு உதவுவார்…ஆனால் அதனை ஒரு போதும் கனகசபை ஏற்றது இல்லை…அவரின் இத்தகைய குணமே சுப்பையாவிற்க்கு கனகசபையின் மீது மதிப்பும், மரியாதையையும் கூட்டியது…
மருமகனின் மீது பாசம் உள்ளவர் தான்…ஆனால் எப்போது தனது மகளையே தனக்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டான் என அறிந்தாரோ அன்றே மனம் வெறுத்து போனார்…
அவனை பிடித்து இருந்தாலும்,தன்னுடைய மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஓர் செயல் அவனின் மூலமாய் நடந்தேறியது அவரால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை…
விரக்தி இருந்ததே ஒழிய,அவன் அழியட்டும் என்று எண்ணும் அளவிற்க்கு வெறுப்பு இல்லை…அதுவும் தன் மகளை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான் என அறிந்ததும் நாளடைவில் அந்த விரக்தி கூட கரைந்து போய் இருந்தது…
இருந்தும் அவர்களின் வீட்டு வாசப்படி ஏறி உறவு பாராட்டும் எண்ணம் மட்டும் ஏனோ அவருக்கு வரவில்லை…மகளாய் இருந்தாலும் கூட…
ஆகிற்று இன்றோடு கனகசிவம் இறந்து மூன்று நாட்கள் ஆகிற்று…இறந்து மூன்றாம் நாளே காரியத்திற்க்கு ஏற்பாடு செய்து இருந்தார் சுப்பையா…காரியம் முடிந்து மிக முக்கியமான உறவினர்கள் மட்டுமே இருந்தனர்…
“சுப்பையா…காரியமும் முடிஞ்சது…இனி என்னன்னு முடிவு எடுப்பா..”என்று பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க…
அவரை கண்ட சுப்பையா “ஹ்ம்ம்…”என்றார் முனங்கலுடன்..அவருக்கு மிகவும் யோசனையாய் இருந்தது…திலகவதியை எப்படி சம்மதிக்க வைப்பது என்று…அவருக்கு திலகவதியை இங்கே தனியே தங்க வைக்க சிறிதும் விருப்பமில்லை…
ஏற்க்கனவே மனைவி அன்னலட்சுமியிடம் பேசி முடிவு எடுத்து இருந்தார்…அன்னலட்சுமி அப்படியே செய்யலாம் “இனி என் மகள் கஷ்டப்படக்கூடாது…அவளை ஒத்துக்க வைங்க..” என்று சொல்லி இருக்க..
இப்போது திலகவதியிடம் பேச வேண்டிய சூழலில் இருந்தார்…எப்படியாவது சம்மதிக்க வைத்திட வேண்டும்…அதற்க்கான எல்லா ஏற்பாட்டையும் செய்தும் விட்டார்…இனி அவரின் மகள் சம்மதிப்பது மட்டுமே பாக்கி…
“அம்மாடி திலகா….” என சுப்பையா அழைக்க…
அன்னலட்சுமியுடன் வெளியே வந்தார் திலகவதி…வெள்ளை புடவை அணிந்து, நெற்றி,கழுத்து,கை என அனைத்தும் வெறுமனே இருக்க அமைதியாய் நின்றிந்தார்…கண்கள் சிவப்பு பழம் போல ரத்த நிறம் கொண்டு இருந்தது….
மகளை காண கண்கள் பனித்து போனது…மிஞ்சி போனால் இருபது வருட வாழ்க்கையை கனகசிவத்துடன் வாழ்ந்து இருப்பாள்…கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மகன்…கணவனிடம் மட்டுமே அதிகம் பேசுபவள்…
வேறு யாரிடமும் சிரித்தோ,சண்டையிட்டோ கூட பேசியது இல்லை எனலாம்..தேவைக்கு அதிகமாய் பேசவும் மாட்டாள் அவளின் பெற்றோரிடமே…ஆனால் வீட்டை விட்டு சென்று கனகசபையை திருமணம் செய்து கொண்டாள் என்றதே அவளின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி….
ஓர் இருவர் சொல்லும் போது கூட அவர்கள் நம்பவில்லை….கண்ணால் கண்ட பின்பு தான் நம்பினர்…
“சொல்லுங்க பா…கூப்டீங்களா…”
“ஆமா மா….உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்…கொஞ்சம் இப்படி வந்து உட்காரு..”என்றபடி ஒரு இருக்கையை காட்ட..
“பரவாயில்ல சொல்லுங்க….நான் நின்னே கேட்டுக்குறேன்…”என்றவர் இடத்தைவிட்டு அசையாமல் அங்கே நிற்க..
ஒரு நிமிடம் அவளை நோக்கியவர் ,தயங்காது,சுற்றி வலைக்காமல் நேரடியாக விஷயத்திற்க்கு வந்தார்…”நீ இங்க தனியா இருந்து என்ன பண்ண போற…எங்களோடவே வந்திடு….ராஜனும் காலேஜ் போயிட்டா… நீ மட்டும் தனியா இந்த தோட்டத்துல எப்படி இருப்ப…” என்க..
“பரவாயில்ல பா…அப்போ இல்லாத அக்கறை இப்போ வந்து இருக்கே…ரொம்ப சந்தோசம்…இருந்தாலும் வேண்டாம் பா…நான் இங்கவே இருக்கேன்…” என்க
“இங்க தோட்டத்துல நீ மட்டும் தனியா எப்படி இருப்ப,காலையில கூட பரவாயில்லை.. ராத்திரி நேரத்துல எப்படி மா தனியா இருப்ப..வேண்டாம் மா,சொன்னா கேளு..இங்க தனியா வேண்டாம்…” என கூற
“முடியாது..”என்று திட்டவட்டமாய் மறுப்பு கூறிட ,சுப்பையாவால் எப்படி பேசி சம்மதிக்க வைப்பது என குழப்பமாகியது…
அவர் சோர்வுடன் நம்பிராஜனை பார்க்க”இருங்க நான் பேசி பார்க்கிறேன்…” என்பது போல் சைகையால் கூறியவன் “அம்மா…தாத்தா சொல்றதும் சரியா தான் இருக்கு…ஒரு முறை யோசிச்சு பாருங்களேன்…” என தாத்தாவிற்க்கு பரிந்து பேசியப்படி அன்னையை நோக்க
அவனை திலகவதி பார்த்த பார்வையில் மேற்க்கொண்டு எதுவும் பேசாது வாயை மூடிக்கொண்டான்..பாவமாய் தனது தாத்தாவை பார்த்தான்…
முதலில் தாத்தா அவனிடம் கூறிய போது அவனுக்கு அவர் சொன்னதில் துளியும் விருப்பமில்லை…ஏன் இத்தனை நாள் இங்க தானே இருந்தாங்க.. அப்புறம் என்ன…இப்போ மட்டும் இங்க வேண்டாம்ன்னு சொல்றது…”என மனதில் ஓட
அதற்க்கு பதிலாய் இருந்தது தாத்தாவின் பேச்சு…
“இத்தனை நாள் இங்க இருந்து இருக்கலாம், அப்போ எல்லாம் இல்லாதது இப்போ என்னன்னு தோணலாம்..”என அவனின் மனதை படித்தது போல சொல்லியவரை திகைப்புடன் நோக்க அவனின் தோளை தட்டிக்கொடுத்தவர் மேலும் தொடர்ந்தார்…
“அப்போ நாங்க உன்னோட அம்மா கூட இல்லாம இருந்து இருக்கலாம் ராஜா, ஆனா உன்னோட அப்பா இருந்தார்…அவரு எங்க வெளிய போய் இருந்தாலும் கடைசியில துணையா உன்னோட அம்மாக்கூட இருந்தார்…எங்களுக்கு அப்போ எல்லாம் எதுவும் தோணாது…ரெண்டு பேர் மேலையும் இருந்த கோவம் தான் எங்களுக்கு பெருஷா தெரிஞ்சது..”
“அதுனால நாங்க எதுவுமே கண்டுக்கல…உன்னோட அப்பாவும் அம்மாவை நல்லபடியா பார்த்துக்கிட்டார்..எங்களுக்கு எந்த கவலையும் இல்லாம இருந்தது..”
“ஆனா இப்போ அப்படி இல்லையே…நீயும் எத்தனை நாளைக்கு இங்க இருக்க முடியும்,லீவ் முடிஞ்சி காலேஜ் போய்டுவ..உன்னோட அம்மா மட்டும் தனியா எப்படி இருப்பா…கிட்டவே வீடு இருந்தாலும் பரவாயில்ல…வீடுகளும் தூரமா இருக்கு …அவசரம் அப்படின்னா ,சட்டுன்னு உதவிக்கு வர யார் இருக்கா…இதே ஊருக்குள்ளே நாங்க இருக்கோம்…அம்மாக்கும் கொஞ்சம் இடம் மாறினா மனசுக்கு நல்லா இருக்கும் ராஜா…”
“நான் சொன்னா அம்மா கேட்கமாட்டா…நான் சொல்றேன்…நீயும் கொஞ்சம் எடுத்து சொல்லு,” என்க
சரி என்பது போல தலையசைத்தான்…தாத்தா சொல்வதும் அவனுக்கு சரி எனவே பட்டது…இரவில் தோட்டத்தை சுற்றியும் காணும்போது சில சமயங்களில் அவனுக்கே பயமாய் இருக்கும்..அந்த அளவிற்கு இருள் சூழ்ந்து கொள்ளும்.. காரிருளாய் இருக்கும்…
கல்லூரி சென்ற பிறகு அம்மா மட்டும் தனியாய் இந்த வீட்டில் இருந்தால், தேவையில்லாம அப்பாவையே நினைச்சி அழுவாங்க, ஒழுங்கா சாப்பிட மாட்டாங்க…தாத்தா சொல்ற மாதிரி பேசி பார்க்கலாம், நாம பேசினா அம்மா ஓர் அளவிற்க்கு ஒத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தான்…
ஆனால் ஒற்றை பார்வையில் அவனை அடக்கிவிட்டு இருந்தார் திலகவதி…கண்கள் ரத்தமென சிவந்து போய் இருந்தது…
தாயின் வார்த்தைகள் காதில் ரிங்காரமிட்டுக்கொண்டு இருக்க,கண்களில் கண்ணீர் வழிந்தது…அனைவரும் கணவனை நினைத்து அழுவதாய் எண்ணி “அழாத மா…”என ஆறுதல் சொல்ல துவங்கினர்…
எண்ணி அழுதது என்னவோ கணவனை நினைத்து தான் ,ஆனால் அதில் தொன்னூறு சதவீதம் தாயின் வார்த்தையையும் எண்ணி அழ துவங்கினார்….
வாழ்ந்தாலும்
மடிந்தாலும்
ஏனோ
செந்தீயாய்
வீசும் உன் ஏச்சுக்கள் மட்டும்
எப்பொழுதும் என் கண்ணனை நோக்கி..!!
இருதயப் பூவின் மொழி தொடரும்..