Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் 13:-
உனது விழியோரத்தில்
சிந்திடும் ஒற்றை
கண்ணீர் துளியை கூட
எனது கரமே தாங்கிட
வேண்டுமடி
தீர்த்தமாய் நான் அருந்த…
ஒரு மெல்லிய முறுவலையும் தாண்டி மனதின் ஓரத்தில் ஆறாத ரணமும், நீங்காத கஷ்டமும் நிரந்தரமாய் நெஞ்சில் குடிக்கொள்ள, குழந்தை நல மருத்துவராய் மட்டுமில்லாது, ஆதரவற்ற குழந்தைகளை பேணிகாக்கவும் செய்தாள்…
அதற்காக ஒரு கட்டிடத்தில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து,சிகிச்சை செய்ய துவங்கி இருந்தாள்…சிகிச்சை செய்வதினால் கிடைக்கும் பணத்தினை கொண்டு குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்யவும் துவங்கி இருந்தாள்…
இவளின் இச்செயலை கண்டு ,அவளின் சீனியர் டாக்டர்கள், உடன் பணிபுரிந்து இப்போது மேலைநாட்டில் வசிக்கும் ஒரு சில நண்பர்கள் நன்கொடை வழங்கி அவளுக்கு உதவி செய்ய துவங்கினர்…முதலில் மறுத்தாலும் தனி ஒருத்தியாய் அனைத்தையும் வர்த்தக ரீதியாய் கையாள்வது மிகுந்த சிரமமாய் இருந்தது…
பின்பு அவர்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதனை ஒரு மனதாய் ஏற்றுக்கொண்டு கடந்த இரு ஆண்டுகளாக உழைத்துக்கொண்டு இருந்தவளின் செயலில் சிறு சறுக்கல்…மனம் மிகவும் வலித்தது…
தான் மட்டும் பார்த்திரா விட்டால் தினமும் பச்சிளம் குழந்தைகள் அந்த கெட்டுப்போன பாலை அல்லவா குடித்து இருக்கும்… கடவுளே…!!! எண்ணியவளுக்கு இனி அனைத்தையும் தன் மேற்பார்வையில் வைத்திட வேண்டும்…ஒன்றையும் விட்டுவிட கூடாது ,யாரையும் நம்பிட கூடாது என எண்ணி மனதில் உறுதிக்கொண்டாள்…
மேலும் இச்சேவையை சிறக்க செய்ய சில நேரங்களில் மற்ற மருத்துவனையில் இரவு நேர வேலையை செய்து கொடுப்பதால் அவளால் சரிவர கவனிக்க முடியாமல் போனது…
இனி ஒருமுறை இதுபோல் நடக்கக்கூடாது என மீண்டும் மீண்டும் தனது மனதில் பதித்துக்கொண்டாள்…பின்பு உடை மாற்றிக்கொண்டு வருவதற்குள் ஆயா குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டுவந்துவிட அக்குழந்தையை பெற்று சக்தி உடை மாற்றிவிட்டாள்…
கைகள் வேலையை செய்துக்கொண்டு இருந்தாலும்,மனதில் உள்ள கேள்வியை ஆயாவிடம் கேட்க வேண்டும் என எண்ணி அறைவாசலை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு ‘ ஆயா இந்த கோதை எவ்ளோ நல்லா பேசி பழகினாங்க…கடைசியில இப்படி பண்ணிட்டு போயிடுச்சே ஆயா…’ என கேட்டது தான் தாமதம் மனதில் இருந்த குமுறல்களை எல்லாம் கொட்டத் துவங்கிவிட்டிருந்தார் அந்த பெரிய மனுஷி….
‘இவளை மாதிரி யாராவது செய்தது உண்டா சக்தி கண்ணு இந்த உலகத்துல…கை கால் எல்லாம் நல்லா தான இருக்கு, உழைச்சி சாப்பிட வேண்டியது தான,அதை கூட விடு கண்ணு குழலம்மா எவ்ளோ நம்பிக்கையா இவளை இங்க வேலைக்கு வச்சிருந்தாங்க, ஆனா பச்ச புள்ளைங்களுக்கு வைக்கிற பாலை படுபாவி எடுத்திட்டு, பழைய கெட்டு போனதை தண்ணியில கரைச்சி வடிகட்டி சக்கரை போட்டு கொடுத்து இருக்கான்ன்னா, அவ எல்லாம் விளங்குவாளா …’ சொல்லு கண்ணு…
இன்னைக்கு மட்டும் நம்ப குழலம்மா பார்க்கலன்னா குழந்தைங்க தினம் இதே பாலை தானே குடிச்சு இருக்கும்…’ என புலம்பியவரிடம்
‘அதெப்படி ஆயா இத்தனை நாள் கெட்டுப்போன பாலை குடிக்க வச்சிருந்தா குழந்தைகளுக்கு எப்பவோ உடம்புக்கு முடியாம போய் இருக்குமே…’என மனதில் அரித்த கேள்வியினை கேட்க…
‘ஹ்ம்ம்…நீ சொல்றது உண்மை தான்…வந்த புதுசுல இவ தன்னோட கைவரிசையை காட்டல, நல்ல பேரு வாங்கிட்ட பிறகு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் மட்டும் திருடி இருக்கா ,ஒரு வேளைக்கு 50 ஒரு நாளைக்கு 100 ,அப்போ மாசம் அதுவே 3000…குழலம்மா குடுக்குற சம்பளம் எஸ்ட்ரா…’
‘இந்த பணமெல்லாம் அவளோட ஆடம்பர செலவுக்கு போதல…ரெண்டு தெரு தள்ளி இருக்குற கடைக்காரங்ககிட்ட பாலை வேலைக்கு குடுக்குறதாக சொல்லி குழந்தைக்கு வாங்குற பால்ல கொஞ்சம் கொஞ்சமா திருடி…கடைசியில காலையில வாங்குற எல்லா பாலையும் கடைக்கு வித்துட்டு, பழைய பாலை சூடு பண்ணி ,குழந்தைக்கு குடுக்குறது..’
‘அதையும் மீறி கெட்டதுன்னா தண்ணி ஊத்தி வடிகட்டி ,சக்கரை போட்டு குடுக்க வேண்டியது தான்…ஒரு வாரமா தான் பால் கெட்டு போயிட்டு போல…’ என்றவரிடம் மேற்கொண்டு சக்தி தனது சந்தேகத்தை கேட்கும் முன் குழல் மொழி அங்கு வந்திருந்தாள்…
அவர்களின் பேச்சு அப்படியே தடைப்பட்டது…என்ன ஆயா குழந்தையை சுத்தம் படுத்தியாச்சா. ?? என்றப்படி வந்தவள் ,சக்தியிடம் இருந்து அக்குழந்தையை வாங்கினாள்…
பின்பு சக்தியிடம் சொல்லி பால் கொண்டு வரச் சொன்னவள் ,தானே அக்குழந்தைக்கு புகட்டினாள்…இருந்ததே மொத்தம் 7 குழந்தைகள் ,அதில் ஐந்து குழந்தைகளுக்கும் உடல்நிலை சரியில்லை எனும் போது மிகவும் பயந்து போனாள்…இரண்டு குழந்தைகளின் ஓர் அளவிற்க்கு உடல்நிலை தேறி இருந்ததால் மற்ற மூன்று குழந்தைகளையும் நன்றாக கவனிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டவள் கையில் இருந்த குழந்தையின் மீது பார்வையை பதித்து இருந்தாள்…
பின் சக்தியின் புறம் திரும்பி ‘ சக்தி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..’ என்க..
‘என்ன குழல் ஹெல்ப்ன்னு கேட்டுகிட்டு ,செய்யின்னு சொன்னா செய்ய போறேன்..பர்மிஸ்ஸன் என்கிட்ட கேட்காத..என்னன்னு சொல்லு ‘ என்றிருந்தாள் அவள்…
‘இங்க CCTV கேமரா பிக்ஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்,அப்புறம் ஆயா மட்டும் இங்க போதும்…ரெண்டு நர்ஸை வேலைக்கு போட்டுடலாம்ன்னு தோணுது.. நீ என்ன சொல்ற..’
‘நல்ல ஐடியா தான் குழல் ஆனா நம்மகிட்ட இருக்குற பணம் சரியா போகுமா…!!’ என்ற யோசனையுடன் நிறுத்தியவளை…
‘சமாளிச்சிக்கலாம் சக்தி, நான் ரெண்டு மூணு ஹாஷ்பிட்டல்ல வேலைக்கு சொல்லி இருக்கேன்…டாக்டர்ஸ் எங்காவது கேம்ப்,வெளியில போனா ,அப்போ போய் பார்க்கிற மாதிரி…மோஸ்டலி கூப்பிடுவாங்க.. இப்போ இருக்குற பணத்துல ஒரு நர்சை வேலைக்கு வச்சிட்டு ,கேமராவை பிக்ஸ் பண்ணிடலாம்..’ என்றவள் பின் ஆயாவிடம் திரும்பி…
“ஆயா உங்களால பகல்ல புல்லா பார்த்துக்க முடியும் தானே, நைட்க்கு மட்டும் இப்போதைக்கு நர்ஸை அப்பாயின்ட் பண்ணிடலாம், உங்களால நைட் எல்லாம் கண் முழிச்சு பார்க்க முடியாது, ஏற்க்கனவே உடம்பு முடியல, ஒரு மாசம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க ஆயா ,அடுத்த மாசம் காலைக்கும் ஒரு நர்ஸை சேர்த்து அப்பாயிண்ட் பண்ணிடலாம்” என்க…
“ என்ன கண்ணு இப்படி சொல்ற நான் பார்த்துக்க முடியாதுன்னு சொன்னேனா, எனக்கு இவங்களை பார்த்துக்குறத்தை விட வேறென்ன வேலை எனக்கு,எனக்குன்னு ஒரு சொந்தத்தை உருவாக்கி குடுத்து இருக்குற, என்னையும் சக மனுஷியா இந்த சமூகத்தில வாழ வச்சவ நீ..இந்த உசுரு மண்ணால மட்கும் வரை இந்த உடம்பும் உசுரும் உனகுத் தான் சேவை செய்யும் கண்ணு…’
‘கோதையை நல்லவன்னு நம்பி எதார்த்தமா விட்டது தான் தப்பா போச்சு..இனி நான் உஷாரா இருக்கேன் கண்ணு…நீ ஒண்ணும் கவலைப்படாத எல்லாம் நல்லபடியா நடக்கும்…’ என்றாள் ஆயா நாதழுக்க…
‘ஷ் ..ஆயா..பழசை எல்லாம் எதுக்கு இப்போ பேசிட்டு,அதெல்லாம் கெட்ட கனவா நினைச்சி மறந்திடுங்க, இனி நீங்க எக்காரணம் கொண்டும் இப்படி பேசக்கூடாது…’ என கண்டிப்புடன் மொழிந்துவிட்டு ‘இங்க இருக்குற இந்த பிஞ்சுகளை பாருங்க, உங்களோட கஷ்டம் எல்லாம் அதனோட சிரிப்பாலே சிதைஞ்சி போயிடும்…’ என்றவள் ஆதூரமாய் ஆயாவின் கைகளை அழுத்திக்கொடுத்தாள்…
குழலிடம் இருந்த குழந்தை பால் குடித்தப்படியே உறங்கிவிட்டு இருக்க,அந்த குழந்தையை உறங்க வைத்தார் ஆயா…பின்பு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்த குழந்தைகளை பார்த்துவிட்டு, அவர்களுக்கு வலிக்கா வண்ணம் ஒரு முத்தத்தை அளித்துவிட்டு,ஆயாவினை பார்த்துக்கொள்ளுமாறு கூறி சக்தியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்…
‘சக்தி எனக்கு டூயூட்டிக்கு டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்…நமக்கு தெரிஞ்ச ப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லி ஒரு நர்ஸை ஏற்பாடு பண்ணிடு.. அப்படியே கேமரா செட் பண்ண என்ன செய்யணுமோ செஞ்சிடு.. இந்தா ATM கார்டு எவ்ளோ அமௌண்ட் வேணுமோ DROP பண்ணிக்கோ..’ என்றவள் அவசர கதியுடன், ஸ்டெதஸ்கோப்பையும் ஹாண்ட் பேக்கையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்…
போகும் குழலை இமைக்காது சில நொடிகள் பார்த்திருந்த சக்தியின் கண்கள் குழலை எண்ணிய பெருமிதத்தில் விரிந்து இருந்தது…இவளுக்கு என்ன தலை எழுத்தா இப்படி வந்து பணத்திற்க்கு கஷ்டப்பட்டு சேவை செய்துக்கொண்டு இருக்க,ஓர் அளவிற்க்கு செல்வவளம் கொண்டவர் குழலின் அப்பா தமிழ்செல்வன்…
இருந்தும் அவரை ஒதுக்கி அனைத்தையும் தோள் மீது சுமந்துக்கொண்டு செல்லும் சுமையாளியாய் ஆன குழலினை நினைத்து அவளால் வருந்த மட்டுமே முடிந்தது..தன் பொறுப்பில் இருக்கும் வேலைகளை செவ்வனவே செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே அங்கிருந்து நகர்ந்தாள்…
——––——********—————
‘என்னடா ..இப்படியே அமைதியா இருந்தா நான் எதையும் கேட்க மாட்டேன்னு நினைச்சிட்டியோ ..ஒழுங்கு மரியாதையா விஷயத்தை சொல்ற இல்ல, உன்னை தூக்கிப் போட்டு மிதிக்க போறேன் பாரு…’ கோபமாய் மொழிந்தவன் ,அருகில் மற்றொரு கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த விக்ரமினை எட்டி உதைத்தான்…
‘ஐய்யோ அப்பா…நான் எந்த காசையும் எடுக்கல….’ என சொல்லிக்கொண்டே கீழே விழுந்தவனை மேலும் முறைத்துப் பார்த்தபடி இருந்தான் சேகர்…
‘டேய் ஏண்டா அவனை போய் உதைச்ச என்றப்படி நம்பி விக்ரமை தூக்கி கட்டிலின் மேல் அமர வைத்தான்…ஏற்கனவே சேகர் உதைத்ததில் உறக்கம் எல்லாம் பறந்து போய் இருக்க,நம்பிராஜனின் பேச்சு அவனின் காதில் நன்றாய் விழுந்தது…
‘என்னை எதுக்குடா உதைச்ச…’ என்றப்படி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சேகரிடம் சண்டைக்கு சென்றவனை நம்பிராஜன் தான் பிடித்து இழுத்து வைக்கும்படி ஆயிற்று…
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தப்படி இருக்க நம்பிராஜன் தனது கவலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இவர்களை கவனிக்கும்படி ஆயிற்று…
சேகருக்கு உள்ளுக்குள் உறுத்தல் இருந்துக்கொண்டே இருக்க எவருக்கும் பதில் சொல்லாது நம்பிராஜனை பார்த்துக்கொண்டே படுக்கையில் விழுந்தான்…’இவனுக்கு என்னடா ஆச்சு.. மந்திரிச்சு விட்டவன் மாதிரி இருக்கான்…பேய் அது பிடிச்சு இருக்குமோ…’ என மெல்லிய குரலில் நம்பிராஜனின் காதில் கிசுகிசுத்த விக்ரமை கண்டு சேகருக்கோ கொலைவெறி உண்டானது…
‘அடேய் உன்னை…’ என்றப்படி அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு அடிக்க ஓட ‘அய்யோ சத்தியமா இவனுக்கு என்னவோ ஆச்சு…என்னை ஆளை விடுடா சாமி..நான் பக்கத்து ரூம்ல படுத்துகிறேன்…’ என்று ஓடியவனின் பின்னே சேகர் வீசிய கிரிக்கெட் மட்டை ஒரு இன்ஜ் இடைவெளி விட்டு விழ “கொலைகார பாவி டா நீ…’ என்றப்படி விக்ரம் வெளியேறினான்…
ஜஸ்ட் மிஸ்…இல்லன்னா ரன்னிங்க்ல நான் வாங்க வேண்டிய தங்க பதக்கத்தை வேற நாட்டுகாரன் தட்டிட்டு போயிட்டு இருப்பான்…தேங்க் யூ முனியாண்டி…’ என கூறிக்கொண்டு அவனின் குலதெய்வத்திற்க்கு நன்றியை செலுத்தியப்படி போக அவனின் மனச்சாட்சி அவனை தகரம் வாங்கவே துப்பில்ல இதுல தங்கம் வாங்குற முகரைய பாரு என காரிதுப்பியப்படி..’ சென்றது…
தூசி போல் தட்டிவிட்டவன் பக்கத்து அறையின் உள்ளே சென்று உறங்கினான்…
‘எதுக்கு உனக்கு இவ்ளோ கோவம் சேகர்…பாவம் விக்ரம் உன்னை என்ன பண்ணான்…’ என்ற நம்பியை முறைத்தவன் ‘அவன் ஒண்ணும் பண்ணல, எல்லாம் நீ தான்…’என்றான் கோவமாய்…
‘சரி நான் தான் எல்லாத்துக்குமே காரணம்..பின்ன எதுக்கு அவன் மேல கோவத்தை காட்டின…’
‘ஏன்னா உன் மேல காட்ட முடியல போதுமா…சும்மா நொய் நொய்ன்னு, நான் கேட்டா எதுக்காவது ஒழுங்கா முகம் கொடுத்து பதில் சொல்லி இருக்கியா.. இல்லை இல்ல அப்புறம் எப்படி நீ கேட்டதுக்கு உடனே பதில் சொல்லனுமா …’ என கோவமாய் பொறிந்தவனை கண்கள் விரித்து தான் பார்த்திருந்தான் நம்பி…
‘இப்போ என்னடா உனக்கு தெரியனும் சொல்லு..’ என்றான் நம்பி…
ஹ்ம்ம்…அப்படி வா வழிக்கு…உன்கிட்ட இருந்து வார்த்தையை பிடிங்குறதுக்குள்ள என்னமா நடிக்க வேண்டி இருக்கு எப்பா…’ என மனத்திற்க்குள்ளே புலம்பியவன் ‘ எதையோ நீ மறைக்கிற ,விஷயத்தை சொல்லு…’ என்றான் நேரடியாக…
‘எதுவும் இல்ல …’ என்றான் எங்கோ பார்வையை பதித்தப்படி..
‘பொய் நீ சொல்றது எல்லாம் பொய்…’ என பொறிந்தவனை கண்டு ,இனி மறைப்பது பெரும் தவறு என எண்ணி தந்தை இறந்த விஷயத்தை மனதில் குடிக்கொண்ட பாரத்துடன் மொழிந்துக்கொண்டு இருந்த நம்பிராஜனின் கண்கள் கண்ணீரால் நிறைந்து கன்னத்தில் பட்டுத் தெரிந்தன….
‘என்னடா…என்ன சொல்ற…நீ சொல்றது எல்லாம்.நிஜமா…’என கேட்ட சேகருக்கு தனது தலை அசைப்புடன் ஆம் என்பதாய் பதில் கூறியவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்…
இவ்வளவு நாள் உள்ளுக்குள்ள வச்சி மறுகிட்டு இருந்தியா..ஏண்டா எங்ககிட்ட உன்னோட துக்கத்தை சொல்லும் அளவிற்க்கு கூட ,நாங்க தகுதி இல்லாம போயிட்டோமா…’ என காட்டமாக கேட்டவன் ,மேற்கொண்டு நொந்தவனை நோகடிக்க விரும்பாமல் அவனுக்கு ஆறுதலாக இருந்தான்…
காலையில் விஷயம் விக்ரமிற்கு மட்டும் தெரிவித்துவிட்டு, யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும்,அப்படி தெரிந்தால் நம்பியிடம் துக்கம் விசாரிக்கின்றோம் என்று நம்பியின் மனதினை மேலும் காயப்படுத்துவர் என எண்ணி எப்போதும் இருப்பது போலவே இருந்துக்கொண்டனர்…
தங்களால் முடிந்த ஆறுதல் வார்த்தைகளால் நம்பியை சமன்படவைக்க முயன்றனர்…ஓர் அளவிற்க்கு வெற்றியும் கண்டனர்…இருந்தும் சில நேர தனிமையில் தந்தையை நினைத்து உள்ளுக்குள்ளே உருகி போனான் அவன்…
முன்பு போல் தன் கூண்டுக்குள் சுருங்கிக்கொள்ளாமல் ,அளவாயேனும் சேகரிடமும்,விக்ரமிடமும் பழகினான்…தன்னுடைய கனவினால் ஏற்படும் தாக்கத்தை அதன் பின்பு எவரிடமும் பகிர்ந்திட முடியவில்லை அவனால்…
மாதத்திற்க்கு ஒரு முறை வீட்டிற்க்கு சென்று வருபவன்,இந்த மாதமும் ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்து நண்பர்களிடம் விடைபெற்று கொண்டு பள்ளிபாளையத்திற்கு சென்றான்…
முன்பை விட அன்னை சற்று சந்தோஷத்துடன் வலம் வருவதை கண்ணில் தோன்றிய ஆச்சர்யத்துடன் ,சந்தோசத்துடனும் இருப்பதை கண்டு தாத்தா எடுத்த முடிவு சரி தான் என எண்ணி நிம்மதி கொண்டான்…
அன்னையின் கையால் சமைத்த உணவினை உண்டு,அன்னையிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தாத்தாவின் வீட்டிற்க்கு சென்று அங்கு அவர்களின் நலம் விசாரித்தான்…
அப்போது அவனின் பாட்டி அன்னலட்சுமியின் மூலமே தெரிந்தது அன்னையின் சந்தோசத்திற்க்கு காரணம் குழல்மொழி என்று…
லீவிற்க்கு வருபவள் அவளின் தாத்தா வீட்டிற்கும்,நம்பிராஜனின் தாத்தா வீட்டிற்கும் வந்து செல்பவள் ஒரு முறை அவனின் அன்னையை கண்டு பாசமாய் பேசியதாகவும், இப்போது எல்லாம் அடிக்கடி அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறாள் என அறிந்ததும் அவனுக்கு மிகுந்த ஆச்சர்யமே…
நாம் கூட நம்மோட அம்மாக்கு போன் பண்ணி பேசுறது இல்லையே…இவளுக்கு என்ன அக்கறை…என்ற சந்தேகத்துடன் மனதில் எண்ணிக்கொண்டவன் தனது பாட்டியிடம் ஏதும் சொல்லாது,அவர் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டி கேட்டுக்கொண்டான்…
அவனுக்கு என்ன தெரியும் , திலகவதியின் தனிமையை போக்க முத்து, குழல்மொழியின் அன்னை வித்யா ,குழல்மொழி என அனைவரும் கான்பிரன்ஸ் காலில் பேசி ஓர் அளவிற்க்கு திலகவதிக்கு ஆறுதலை தர முயன்றனர் என்று…
ஊரிலும் ஒரு சிலரின் நல்ல நட்பு கிடைத்ததும் திலகவதியின் மாற்றத்திற்கும்,சந்தோஷத்திற்க்கும் காரணம்…ஆனால் நம்பிக்கு தெரியாதே இது அனைத்தும்….
குழல்மொழி தான் அன்னையின் சந்தோசத்திற்க்கு காரணம் என அன்னலட்சுமியின் வார்த்தை காதில் ஒலித்த மறுநொடி அவர் மேற்கொண்டு சொன்ன அனைத்து விஷயங்களும் அவனின் காதில் ஏறியதாய் தெரியவில்லை…
இருதயப் பூவின் மொழி தொடரும்….