சின்ன மருமகள் உண்டானதில் சுனிதாவுக்குச் சந்தோஷம். அதே சமயம் ஸ்ருதி இன்னும் உண்டாகவில்லை என எப்போதுமே முனங்கிக் கொண்டே இருந்தார்.
கீர்த்தியின் பிறந்த வீட்டினரின் செல்வ செழிப்பை பார்த்ததும், சுனிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்குத் தர்மா மனது வைத்தால் தான் உண்டு என்பதால்.. அவனுக்கு ஐஸ் வைப்பதாக எண்ணி,
கீர்த்திக்கு வளையல் அடுக்கி முடித்ததும், “கீர்த்தி, நீ ஸ்ருதிக்கு வளையல் போட்டு விடு…. ரெட்டை குழந்தையைச் சுமக்கிற உன் கையாள வளையல் போட்டா, இனியாவது குழந்தை உண்டாகிறாளா பார்ப்போம்.” என்றார். அதைக் கேட்ட ஸ்ருதியின் முகம் வாடிவிட்டது.
“சித்தி, இங்க எங்க வீட்ல வச்சு… ஒருத்தரை காயப்படுத்திறதை நான் எப்பவும் அனுமதிக்க மாட்டேன்.” எனத் தர்மா கோபப்பட….
“அத்தை, அவங்க இப்பதான் குழந்தை பெத்துக்கப் பிளானே பண்ணி இருக்காங்க. உங்களுக்கு ஏன் அவசரம்? இப்படியெல்லாம் பண்ணி நீங்களே அவங்க மனசுல ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீங்க.” என்றால் கீர்த்தியும்.
“சபையில வச்சு இப்படித்தான் பேசுவியா…” என மருமகளைக் கண்டித்த நாயகி,
“நீ எதுவும் மனசுல நினைக்காத ஸ்ருதி. உனக்கும் சீக்கிரமே குழந்தை உண்டாகும். நாங்க உனக்கும் இப்படி வளையல் அடுக்குவோம்.” என்றார்.
அதன் பிறகு மதிய விருந்து ஆரம்பிக்க… தர்மா அவனே சென்று சுபாவுக்கு உணவு கொடுத்துவிட்டு வந்தான். சாயந்திரமா வீட்டுக்கு வரேன் என்றார் சுபா. தர்மா வாரத்தில் இரண்டு நாட்களாவது சென்று சுபாவை பார்த்துவிட்டு வருவான். சில நேரம் கீர்த்தியும் உடன் செல்வாள்.
அன்று வார தினம் என்பதால்… சூரியாவும் வசீகரனும் மதியம் உண்ணும் நேரதிற்குதான் வந்தனர். ஸ்ருதி அப்போதே சுனிதா இன்று செய்ததைச் சூரியாவிடம் சொல்லிவிட்டாள்.
“வீட்டுக்கு வரட்டும்.” என்றான் சூரியா.
சொத்துக்கள் எல்லாம் உரிய ஆவணம் பார்த்து, அன்று பேசியது போல யாருக்கு என்ன எனத் தனியாக அவரவர் பெயரில் பதிந்தாகிவிட்டது. இன்னும் தொழிலில் தான் கணக்கு முடிக்காமல் இருக்க…. அதனால் இன்னும் பொதுவில் தான் இருந்தனர்.
சூரியாவும் வசீகரனும் விஷாலோடு முகம் கொடுத்து பேசுவது இல்லை. இன்றும் விஷால் சந்துருவோடுதான் இருந்தான். சந்துரு இப்போது எல்லாம் அடங்கி இருந்தான். அருணா தான் அவனை இங்கே இருக்க விடுவதே இல்லையே… அதோடு தர்மாவும் அருணாவுக்கு அவள் அப்பா கொடுப்பதாகச் சொன்ன சொத்துக்களோடு, அவன் பங்குக்கு எனச் சேர்த்து பெரிய சொத்து ஒன்றை அருணாவின் பேரில் கொடுத்திருந்தான்.
தர்மா கொடுக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் அவன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான். ஆனால் அருணா இன்னும் அந்தப் பத்திரங்களை வாங்கிக்கொள்ளவில்லை. தர்மாவிடமே இருக்கட்டும் என்று விட்டாள்.
வளைகாப்பிற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் உண்டு முடித்துக் கிளம்பியிருக்க… வீட்டினர் மட்டுமே இருந்தனர்.
“கீர்த்தியை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு நினைக்கிறோம். நாங்களே அங்க வச்சுப் பிரசவம் பார்க்கிறோம்.” என நவீனா ஜமுனாவிடம் கேட்க,
அதுதான் முறை.. அதோடு கீர்த்திக்கும் செல்ல ஆசை இருக்கும் என்ற எண்ணத்தில் ஜமுனா சரியென்றார்.
தர்மா சோமசேகரின் எதிரில் சென்று உட்கார்ந்தவன், “மாமா, பிரசவத்திற்கு நாள் ரொம்பச் சுருக்கமா இருக்கு. கீர்த்தியை நாங்க இங்க பக்கத்தில் நல்ல ஹாஸ்பிடல்ல தான் காட்டிட்டு இருக்கோம். இப்போ புதுசா இன்னொரு டாக்டர் பார்க்கிறது எல்லாம் ரிஸ்க்.” என எடுத்து சொல்ல… அவரும் புரிந்து கொண்டார். ஆனால் நவீனா “நாங்க இதை விடப் பெரிய ஹாஸ்பிடல்ல வச்சு எங்க பெண்ணை இன்னும் நல்லா பார்ப்போம். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.” என்றார்.
என் மனைவி மீது எனக்குக் கவலையோ அக்கறையோ இல்லாமல் எப்படி இருக்கும். அதை இவர் எப்படிச் சொல்லலாம் என்ற கோபத்தில்…
“அவ உங்க பொண்ணு மட்டும் இல்லை… எனக்குப் பொண்டாட்டியும் கூட அதையும் நினைவு வச்சுக்கோங்க. நீங்க கூப்பிட்டதும் எல்லாம் அனுப்ப முடியாது.” என்றான் தர்மாவும் சூடாக.
“தர்மா, அவங்களுக்கு அவங்க பெண்ணை வச்சு பார்க்க ஆசை இருக்கும் தானே …” என ஜமுனா சொல்ல…
தன் அம்மாவும் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில், “ஏன் உங்களுக்கு அவளை வச்சுப் பார்க்க கஷ்டமா இருக்கா? என அவன் திருப்பிக் கேட்க,
“உங்க அம்மா கீர்த்திக்காகச் சொல்றா. ஆனா கீர்த்தி அம்மா, நாங்க இங்க இத்தனை பேர் இருக்கோம். ரெட்டை குழந்தை வேற… நீங்க தனியா அவளை எப்படிப் பார்பீங்க. குழந்தை பிறந்து கொஞ்ச நாள் ஆகட்டும். அதுக்குப் பிறகு நீங்க அழைச்சிட்டு போய் மூன்னு மாசம் கூட வச்சுக்கோங்க.” என நாயகி எடுத்து சொல்ல….
“என் பெண்ணை என்னைவிட யார் பார்த்துப்பா… என்னை நம்பி என் பெண்ணை அனுப்ப மாட்டீங்களா?” என நவீனா அதிலேயே நிற்க…. தனது பாட்டி சொல்லியும் கேட்கவில்லை என்றதும் தர்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“உங்க பொண்ணு வந்தா தாராளமா கூட்டிட்டு போங்க.” என்றான்.
கீர்த்திக் கீழே அறையில்தான் படுத்திருந்தாள். ஏசி அறை என்பதால் வெளியே என்ன பேசினார்கள் எனக் கேட்கவில்லை. அவளுடன் அவள் தம்பி வினோத் உட்கார்ந்திருந்தான்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் பேசாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அது எல்லாம் பார்த்த நொடியில் மாறிவிட்டது. இருவரும் கதைப் பேசிக் கொண்டிருந்தனர். என்ன இருந்தாலும் உடன்பிறந்த சொந்தம் அல்லவா… அபி அவள் அம்மாவின் அருகில் கட்டிலில் படுத்திருந்தாள்.
“வெளிய என்ன பண்றாங்க பார்க்கலாம்.” எனக் கீர்த்தி எழுந்து வெளியே செல்ல, அவளுடன் வினோத்தும் அபியை தூக்கிக் கொண்டு வந்தான்.
“உங்க அம்மா உனக்கு அவங்க வீட்ல வச்சுப் பிரசவம் பார்த்துகிறேன்னு சொல்றாங்க. இன்னைக்கே உன்னைக் கூடிட்டுப் போகக் கேட்கிறாங்க, நீ என்ன சொல்ற கீர்த்தி?” என ஜமுனா கேட்க, மனைவி செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில் தர்மா இருக்க… எங்கே வர மாட்டேன் என இத்தனை பேர் முன்னிலையில் சொல்லிவிடுவாளோ என்ற பதட்டத்தில் நவீனா இருந்தார்.
கீர்த்தி ஒரு நொடி யோசித்தவள், “நான் அவங்களோட போறேன் அத்தை.” என்றதும் தர்மா அவளை நம்பாமல் பார்க்க… நவீனாவுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. எல்லோரும் இப்போது தர்மாவைத் தான் பார்த்தனர்.
“அது தானே அவங்க அம்மா கூப்பிட்டு எப்படிப் போகாம இருப்பா…அவங்க வீட்ல இல்லாத வசதியா இங்க இருக்கு.” எனச் சுனிதா நினைக்க…
“அம்மா, நான் உங்களோட வரேன். ஆனா இன்னைக்கே திரும்ப இங்க வந்திடுவேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது தர்மாவோடதான் இருக்கணும். அவர் இல்லாம என்னால அந்த நேரத்தை நினைக்கக் கூட முடியாது. நானே அவர் இருக்கத் தைரியத்துல தான் இருக்கேன்.” என்றபோது, இதுதான் எங்க கீர்த்தி என்பது போல ஜமுனாவும், நாயகியும் பார்க்க… தர்மா அப்போதுமே கொஞ்சம் விறைப்பாகத்தான் இருந்தான்.
“அவ சொல்றதுதான் சரி. கீர்த்தி அம்மா, நீங்க இப்ப முறையா அழைச்சிட்டு போங்க. நாங்க சாயங்காலமா வந்து கூப்பிட்டுக்கிறோம். பிரசவம் முடிஞ்சதும், நீங்க எத்தனை நாள் வேணாலும் உங்களோட உங்க பெண்ணை வச்சுக்கோங்க.” என்ற நாயகியைப் பார்த்து தர்மா முறைக்க,
“ஒரு ரெண்டு மாசம்.” என அவர் இழுக்க… போதும் என்பது போலத் தர்மா கையசைத்தான்.
“ஒரு ரெண்டு மாசம்.” என அவர் இழுக்க… போதும் என்பது போலத் தர்மா கையசைத்தான்.