அத்தியாயம் 10
கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன் அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல… சென்னையில் இருக்கும் அவர் வீட்டிற்கு வர சொன்னார்.
தர்மா அன்றே சென்று அவருக்குப் பத்திரிகை வைத்தவன், வேறு யாருக்கும் வைக்க வேண்டுமா எனக் கேட்க, கீர்த்தியின் பாட்டி தங்களுடன் இருப்பதால், அவருக்கு மட்டும் சொல்லிவிடச் சொல்லி, அறையில் இருந்த தன் அம்மாவை வாசன் அழைத்தார்.
தர்மா அவரை நலம் விசாரித்துவிட்டு, அவருக்கும் பத்திரிகை கொடுத்து, அவர்கள் திருமணத்திற்கு வந்தால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அதோடு கீர்த்திக்கும் ஆறுதலாக இருக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தான்.
விஷால் வெள்ளி மாலை கொடைக்கானலில் இருந்து திரும்பிவிட்டான். அதற்கு மேல்அண்ணனின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் கிளம்பி வந்திருந்தான்.
“ஒருத்தர் என் மேல கொலை காண்டுல இருப்பாரே… என்னை நல்லா திட்டினாரா?” என விஷால் விசாரிக்க…
“உன்னை எங்கன்னு கேட்டான். கீர்த்திதான் இங்கயும் அவருக்கு ஒன்னும் பெரிசா வேலை இல்லைன்னு சொன்னதும் விட்டுட்டான்.” என அருணா சொல்ல… விஷால் நம்பவில்லை.
“அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லையே…” என நினைத்துக் கொண்டான். முதல் நாள் தர்மா அழைத்ததுதான். விஷால் அழைப்பை எடுக்கவில்லை. பிறகு அவனும் அழைக்கவில்லை.
மறுநாள் அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாகத் தர்மாவின் குரல் காதில் விழ…. இவருதான் கடைசியில வருவாருன்னு நினைச்சேன், எப்படி அதுக்குள்ள வந்தார்? நல்லவேளை நேத்து வந்தோம். இல்லைனா அதுக்கும் ஒரு பாட்டு வாங்கி இருக்கணும் என நினைத்தவன், எழுந்து கீழே வர… தர்மா திண்ணையில் உட்கார்ந்து வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்தான்.
“காலையிலேயே வந்திருக்கீங்க எதுல வந்தீங்க?” எனக் கேட்டபடி விஷால் எதிரில் அமர…
“நான் மதுரை வர ஸ்லீப்பர் பஸ்ல வந்தேன். பிறகு டவுன் பஸ் மாறி… இங்க பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நடந்து வந்துட்டேன்.” என்றான்.
ப்ளைட்ல வந்திருக்கலாம், இல்லை கார்ல வந்திருக்கலாம், அட்லீஸ்ட் ட்ரைன்லையாவது வந்திருக்கலாம். எவ்வளவு பெரிய பிசினஸ் நடத்துறார். பஸ்ல வந்து நடந்து வந்தாராம். இவரை வச்சிகிட்டு என விஷால் மனதிற்குள் நொந்து கொண்டான்.
“கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு.” என நாயகி சொன்னதற்கு,
“இல்லை பாட்டி பஸ்ல நல்லா தூங்கிட்டு தான் வந்தேன்.” என்றவன், தனது பையை ஜமுனாவிடம் கொடுத்து, “உள்ளே நகை இருக்குமா.” என்றான்.
செலவு செய்வதற்குக் கூடச் செலவு செய்யாமல் இருப்பவனின் கார்டை எடுத்து இஷ்டத்துக்குப் பணத்தைக் காலி செய்து விட்டோமே என ஒரு எண்ணம் விஷாலுக்குத் தோன்றத்தான் செய்தது. பிறகு அவனே, “இவருதான் செலவு பண்ண மாட்டேங்கிறார். நாமாவது பண்ணுவோம்.” என எப்போதும் போல அலட்சியப்படுத்தவும் செய்தான்.
கீர்த்திக்கு இன்னும் தர்மா வந்தது தெரியாது. இன்று காலையில் இருந்து ஒவ்வொருவராக வருவார்கள். அதனால் நல்ல உடையில் தயாராகும்படி அருணா சொல்லி இருந்ததால்…. குளித்து விட்டு டிஸைனர் புடவை கட்டிகொண்டு வந்தாள்.
சிறிது கூந்தலை மட்டும் எடுத்து அவள் கிளிப் போட்டிருக்க… நடுமுதுகு வரை விரித்திருந்த கூந்தலில் இரண்டு பக்கமும் வழியும்படி அருணா மல்லிகை பூவை வைத்துவிட்டாள். முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து, சின்னப் பொட்டு வைக்க… அழகில் ரதியே தான்.
கீர்த்திக் கண்ணாடியில் தன்னைச் சரிபார்க்க, “தர்மா வந்திருக்கான்.” என அருணா சொன்ன நொடி… எங்கே என கேட்டுக்கொண்டு, வாசலுக்கு விரைந்தவள், தர்மாவின் எதிரே சென்றுதான் நின்றாள்.
வந்ததுமே கீர்த்திக் குளித்துக் கொண்டிருக்கிறாள் என ஜமுனா சொல்லி இருந்தார். அவள் வரட்டும் என்றுதான் பல் கூடத் துலக்காமல் வாசலிலேயே உட்கார்ந்து இருந்தான்.
கீர்த்தி அவன் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து அவனின் நலம் விசாரிக்க… மற்றவர்கள் உள்ளே செல்ல, விஷால் மட்டும் அங்கேயே உட்கார்ந்து இருந்தான். அருணா கண்ணைக் காட்டியும் அங்கிருந்து நகரவில்லை.
“உனக்கு இங்க பொழுது போச்சா? எப்படி இருந்தது?” எனத் தர்மா கீர்த்தியை விசாரிக்க… கீர்த்தித் தான் என்ன செய்தேன் என அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாள் இல்லாத மலர்ச்சி அவள் முகத்தில். அதைப் பார்த்தபடி விஷால் எழுந்து உள்ளே சென்றான்.
தீபக்கும், திவ்யாவும் உறக்கத்தில் இருந்து எழுந்து வர… அவர்களைக் தன் அருகில் அழைத்தவள், “இவங்க இல்லைனா ரொம்பக் கஷ்டம். இவங்க இருந்ததுனால எனக்கு டைம் போனதே தெரியலை.” என்றாள்.
“அத்தையை ரெண்டு பேரும் நல்லா பார்த்துகிடீங்களா?” எனத் தர்மா அவர்களிடம் கேட்க, திவி வெட்கப்பட்டுக் கீர்த்தியை ஒட்டிக்கொள்ள… தீபக் ஏறி தன் மாமனின் மடியில் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் அவர்களுடன் பேசிய தர்மா, “இருங்க ரெடி ஆகிட்டு வரேன்.” என எழுந்து உள்ளே சென்றான்.
உள்ளே வந்த தர்மா விஷாலைப் பார்த்து, “சீக்கிரம் ரெடி ஆகு. வேலையைப் பார்ப்போம்.” எனச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றான். அண்ணனும் தம்பியும் கிளம்பி வர… அருணா அவர்களுக்குக் காலை உணவை பரிமாற… கீர்த்தியும் அவர்களுடன் உண்டாள். பிறகு நாயகியிடம் என்னென வேலைகள் இருக்கு எனக் கேட்டுக் கொண்டு இருவரும் பைக்கில் கிளம்பி மண்டபம் சென்றனர்.