காண்டானவன், “ஓய்… நக்கலா..? நான் கிளம்பறேன் எனக்கு வேலை இருக்கு!”
கையை பிடித்து இழுத்து, “ஆத்தா வையாது வாங்க! உக்காஆஆருங்க பாஸ். என்னமோ உங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்க மாதரி ரொம்ப அலட்டிக்கறீங்க? நாங்க மட்டும் என்னவாம்? நானும் பிஸி தான். கழுத்து முங்கர அளவு வேலை. எல்லாத்தையும் விட்டுட்டு உங்க பின்னாடி சுத்திட்டு இருகேன்..”
“பச்!”
“என்ன பச்? நீங்க இப்படியே சிடுமூஞ்சி மாதரி எரிஞ்சு விழுந்துட்டே இருங்க… நல்ல வேள இந்த ஆள்கிட்ட இருந்து தப்பிசேன்னு நினைக்க ஆரம்பிச்சுடுவேன்!”
“..” குழப்பமாக அவளை அஷோக் பார்க்க
சிரித்துக்கொண்டே சுதா புருவம் உயர்த்தி, “என்ன பாக்கறீங்க?” என
“..” ஆர்வமாய் பார்த்ததோடு சரி… வாய் திறந்தானில்லை. புருவ வளைவில் ஏறிக் கொண்டிருந்தான். மயங்கத் தான் முடியாது. பார்த்துக் கொள்ளட்டுமே..
“நான் கார்த்தியை லவ் பண்ணினனால இங்க வரல. உங்கள லவ் பண்ணின தால தான் இங்க வந்தேன். இப்படியே முசுடு மாதரி முகத்தை வச்சுக்காம, ரிலாக்ஸ்சா இருங்க. நீங்க என்ன ட்ரை பண்ணினாலும் மீட்டிங் எல்லாம் போக முடியாது.” அசால்டாய் சொல்லிக்கொண்டே காபி கப்போடு அமர்ந்து கொண்டாள்.
ஏறிய வேகத்திலும் அதிக வேகத்தில் சருக்கி விழுந்தான்.
கொஞ்சம் திணறித் தான் போனான். உள்ளுக்குள் ஏதோ படு வேகமாக குதித்து எழுந்து நின்றது. அவளின் அடுத்த வார்த்தைக்காக.
“என்ன சொன்ன… என்ன? என்னை நீ லவ் பண்ணினியா?” முகத்தில் ஏகப்பட்ட உணர்வலைகள்.
மூடிய உதட்டுக்குள் எழுந்த நமுட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே, “என்ன அதிர்ச்சியாகரீங்க..? இப்படி சூப்பர் பெர்சனாலிட்டி எல்லாம் உங்கள திரும்பிப் பார்த்ததை நினைச்சு ஷாக் ஆகிட்டீங்களா?” எனவும்,
புருவம் உயர்த்தி மேலிருந்து கீழ் வரை அவளைப் பார்த்தவன், ஏதோ கேட்க வாய் திறக்க..
விரலை வாயில் வைத்தவள், “சுப்! நீங்க என் டீலுக்கு ஒத்துக்காம… ‘எனக்கு ஒன்னும் தெரியவேண்டாம். உன் வேலையை பாரு’னு விறைப்பா சொல்லிட்டு ஏர்போர்ட் கிளம்பின ஆசாமி நீங்க. சோ நானா சொல்றதை மட்டும் கேட்டுக்கோங்க!
உங்க இஷ்டத்துக்குக் குறுக்குக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.” என்றுவிட்டு காபிக்குள் மூழ்கினாள்.
அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருந்தும் ஒன்றும் கேட்க இயலவில்லை. அவள் போட்ட டீலுக்கு ஒழுங்கு மரியாதையாக ஒத்துக் கொண்டிருக்கலாம்! ஒத்து கொள்வதில் அவனுக்கு என்ன சிக்கலோ?!
அவன் இருக்கையின் நுணியில் அமர்ந்திருக்க.. அவளோ ஒய்யாரமாக மஃபினை(muffin) கொறித்துகொண்டே காபியை ருசித்துக் கொண்டிருந்தாள்.. கூடவே அவன் தவிப்பையும் ரசித்துகொண்டு!
அவனிடம் வம்பு செய்யப் பிடித்தது. ஒரு நாள் ஆசை தீர வம்பு செய்து கொள்ளட்டுமே.
அசந்து தான் போனான், அவள் நீச்சல் சொல்லிக் கொடுக்கும் பிள்ளைகளை பார்த்து. ஆறு மாத குழந்தை முதல் இரண்டு வயதுக் குழந்தை வரை! ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பெற்றோர் கையில். இவள் சொல்லச் சொல்ல அவர்கள் பாடிக்கொண்டே குழந்தை கை காலை தண்ணீரில் ஆட்டுவார்கள்.
“இவங்களா?” அவன் சிரித்துவிட.. அவள் முறைக்க… அவன் கஷ்டபட்டு வாயை மூடிக்கொண்டான்.
அது ஜோ இருக்கும் டே-கேர். அங்கு தான் வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு தண்ணீரிலிருந்து பயம் நீங்க வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறாள். நாற்பது நிமிட வகுப்பு.
எட்டு பெற்றோர்… எட்டு குழந்தைகளுடன் வந்திருந்தனர். சுதா சென்று ஜோ-வை தூக்கி வர, அவன் அஷோக்கைப் பார்த்த மாத்திரத்தில் ‘ஆ..ஊ..’ என்று ஆர்ப்பரித்துக்கொண்டே துள்ளிக் குதித்தான் அஷோக் கரங்களுக்குள்.
“என்ன தான் சொக்குப் பொடி வச்சிருக்கீங்களோ? புது ஆள் கிட்ட போகவே மாட்டான்.”
“நாங்க நேத்தே ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.. இல்லடா செல்லம்?” அவன் உச்சிமுகர.. குழந்தை ‘ஆ..ஊ’ என்று கையில் துள்ளி குதித்தான்.
ஜோவிற்கு படு குஷி… கை காலை ஆட்டி, தலையை அவன் கழுத்தில் மோதி அன்பை வெளிப்படுத்த, அஷோக்கிற்கு அலாதி இன்பம்.. அந்த ஸ்பரிசத்தில். ஆசையாய் அணைத்து கொண்டான்.
ஆசையோடு கட்டிக்கொண்ட இருவரையும் பார்க்கச் சுதா கண்ணில் தேன் சொட்டியது.
ஆண் பெண் பாகு பாடி இல்லாமல் வந்த பெற்றோர் சுதாவைத் தோழமையோடு அணைத்து ‘ஹலோ’ சொல்லிவிட்டு தண்ணீரில் இறங்கினர்.
வெதுவெதுப்பான நீர். குழந்தையோடு அஷோக் சிறிது நேரம் சுதா கூறியதைச் செய்து கொண்டிருந்தவன்.. ஜோவோடு தனி உலகிற்குச் சென்றான்.
குழந்தை இவனைக் கட்டிக் கொள்ள நீரில் இருவரும் ஓரே ஆட்டம். இவனுக்கும் எங்கோ மிதப்பது போன்று உள்ளம் லேசானது. மனதை அழுத்திய பாரம் சென்ற இடம் தெரியவில்லை. குழந்தைகளின் மழலை மனதை ஆக்கிரமித்தது. ஜோவின் பிஞ்சு கை அவன் முகத்தை வருட… பவள உதடு அவன் தோளை தொட… ஒரு குட்டி உயிர் அவன் கையில் புரள.. ஒரு வித புது உணர்வு. மனதில் குதுகலம் வந்து ஒட்டிக்கொண்டது.
சுதா அவள் வேலையில் கவனமாக இருந்தாலும் கண்ணும் காதும் அவர்கள் இருவரிடமும் தான். இதழ் ஓரம் புன்னகை பூத்தது.
மற்றவர்கள் எல்லாம் சென்றபின்னும் இவர்கள் இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டு வர போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு.
கையோடு ஜோ-வையும் வெளியே கூட்டிச் சென்றனர். உணவு உண்டனர். அஷோக்கும் சலிக்காமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டே சுற்றினான். ஸ்டாலர் (stroller) வேண்டாம் என்றுவிட்டான்.
பனிக் கூழ் உள்ளே இறங்கிக் கொண்டிருக்க.. ஓர் காதல் ஜோடி அவள் கண்ணில் பட்டது. அவர்களுக்கு அது பொது இடம் என்றெல்லாம் இல்லை. தோன்றியதும் அவர்கள் அன்பை வெளி படுத்திவிட்டனர்.
அவள் பார்வை போன இடத்தை அவனும் திரும்பி பார்க்க… அவர்களை பார்த்துக்கொண்டே எதிரில் அமர்ந்திருந்தவனிடம் சுதா சொன்னாள்..
“நாம கூட இப்படி தான்… இவங்கள மாதரி ரொம்ப க்ளோஸ். அப்போவே நீங்க ரொம்ப ரூல்ஸ் பேசுவீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி கட்டி பிடிக்கரது முத்தம் தரது எல்லம் கூடாதுனு. ஆனா நான் அப்படி எல்லாம் இல்ல. நான் தான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் கிஸ் கொடுத்தேன். உங்க வீட்டு கிச்சன் பக்கத்தில வச்சு! அப்பறம் தான் நீங்க எனக்கு கொடுக்க ஆரம்பிச்சீங்க. பாக்கும் போதெல்லாம்! அந்த தோட்டம்.. பெட் ரூம் பால்கனி… அங்க தான் பாதி நேரம் இருப்போம்.” என்றாள்.
‘ஓ… அது தான் அதிரச தருணமா?’ எண்ணிக்கொண்டான். கேட்க ஆர்வம்.. கூடவே கொஞ்சம் தயக்கமும். ஆனால் அவளுக்குத் தயக்கம் எல்லாம் இல்லைப் போலும். கொஞ்சம் வலி மட்டும்! குரலில் காட்டிக் கொள்ளவில்லை. இன்று முழுவதும் அவளுக்கு இன்பமான நாள்… கண்ணீர் விட்டுக் கெடுத்துக்கொள்ள அவள் தயாராயில்லை.
“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். பார்த்ததும் ஒரு ஈர்ப்பு! நீங்க அநியாயத்துக்கு ஸ்மார்ட்.. கேக்கணுமா? கவுந்துட்டேன். நீங்க எங்கிட்ட என்ன கண்டீங்கனு இப்போ யோசிச்சா கூட தெரியால. இப்போ உங்கட்ட கேக்கரது அபத்தம்.” சிரித்தாள்… பனிக் கூழை தேக்கரண்டியால் கிண்டிக்கொண்டே.
“உன் கண்ணா இருக்கும்” என்றான்
அவள் அவனிமிருந்து பதிலை எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சி.
அவள் நிமிர்ந்து பார்க்க… “உன் கண் தான் ஈர்த்திருக்கும். அப்புறம் உன் முகம் காட்டுர அபிநயம்.. கண்டிப்பா அதுவா தான் இருக்கும். அது எல்லாம் வெறும் உன்னைப் பார்க்க வச்சிருக்கும். உன் மனசு தான் என்னை உன் கிட்ட இழுத்திருக்கும்.”
“என் மனசு?” அவனுக்கு அவளைப் பற்றி என்ன தெரியும் என்று பார்த்தாள்.
“இன்னைக்கு க்ளாஸ் உன்னது இல்ல. வேற ஒருத்தங்கள்து. நீ அவங்கட்ட பேசி க்ளாஸ்-அ மாத்திகிட்ட. என்னை அங்க கூட்டி போகரதுக்காக… என்னை ரிலாக்ஸ் பண்ண வைக்க…”
“…” அவள் அவனை விழி விரித்துப் பார்க்க… அவன் அழகாய் சிரித்தான்.
‘சிரித்தால் இவன் எத்தனை அழகு? சிரித்துக்கொண்டே இருக்க மாட்டானா?’ ஆசை படலாம். இது பேராசை!
மௌனமாக பனிக்கூழ் உள்ளே சென்றது. அவனுக்கு இதில் எல்லாம் நாட்டமில்லை. நால்வருக்கான மேசையில் இருவரும் எதிர் எதிரே இருக்க, இடையே குழந்தைகளுக்கான பெரிய நாற்காலியில் அமர்ந்திருந்த ஜோவை கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“அப்பவும் இப்படி தான்… உங்களுக்கு என் மனசைப் படிக்கத் தெரியும். என் தேவை எல்லாம் பார்த்துப் பார்த்து செய்வீங்க!”
“ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பினோம். என் சந்தோஷத்துக்காக பெரிய விஷயம் எல்லாம் செஞ்சிருக்கீங்க… உங்க அம்மா பத்தி கூட யோசிக்காம! அப்படி பட்ட உங்க கூட, காலம் பூரா உங்க கை பிடிச்சிட்டே உங்க மனைவியா வாழ்ந்து முடிப்பேன்னு கனவு கண்டேன். கனவாவே முடிஞ்சு போச்சு.
என்னுடைய இத்தன வருஷ வாழ்க்கை காணாத நிறைவை அந்த ஆறு மாசம் எனக்கு கொடுத்துச்சு! நான் என் வாழ்க்கைய அழுச்சிருந்தா.. அந்த ஆறு மாசம், என் சந்தோஷம் மட்டுமே முக்கியம்னு நினைச்சவர் மனசு பாடு படாதா? நான் அந்த தப்ப செய்யல.. நான் சந்தோஷமா இருக்கேன் கண்ணன்.”
மீண்டும் ஒரு புன்னகையை அவனை நோக்கி வீசினாள். இதயம் தொடாத காதை தொட்ட புன்னகை.
தன் கையிலிருந்த தேக்கரண்டியால் பனிக் கூழை ஜோ அடிக்க… அது அவன் முகத்திலும் சுதா மேலும் தெறித்தது.
அவள் அலட்டிக்கொள்ளவில்லை. “தெரியுதா எதுக்கு உனக்கு எப்பவும் ஏன் வெண்ணிலா ஐஸ் க்ரீம் வாங்கி தரேன்னு…. இதுக்குத் தான். இல்ல என் சட்டை எல்லாம் கரை ஆகி இருக்கும்!”
குழந்தை முகத்தைத் துடைத்துவிட்டு, அவள் சட்டையில் சிந்தியிருந்ததை எடுத்து நக்கிக் கொண்டாள். “நல்லா தான் இருக்கு குட்டி..” என அவன் நாவிலும் தடவி விட, அவன் பல்லைக் காட்டி சிரித்தான். குஷியாகிப் பனிக் கூழை அடிக்க மீண்டும் கை ஓங்க… அதை நகர்த்தி வைத்தவள், மீண்டும் ஒரு சொட்டு பனிக்கூழை அவன் நாவில் தடவ.. குழந்தை வாயிலிருந்து நீர் சுரந்து வழிந்தது.
“என் பட்டு செல்லம்.. என் ஜொள்ளு பையா..” என் அவன் மினுமினுத்த உதட்டில் குட்டி முத்தம் வைத்தாள்.
அடுத்த இரண்டு நிமிடம் இருவரும் ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டனர். அவன் பேசியது அவளுக்கு என்ன புரிந்ததோ… அஷோக்கிற்கு அது வெறும் ‘ஆஆ.. ஊ…’ என்று தான் கேட்டது.
குழந்தையை அவன் கையில் ஏந்திக்கொள்ள, அவள் அவனோடு நடக்க ஆரம்பித்தாள். பரந்த மார்பும்.. நசுக்காமல் பக்குமாகக் குழந்தையை அவன் தூக்கவும், ஜோ கண்ணனோடு ஒன்றிக்கொண்டான். அவனிடமும் தன் அழகிய பல் தெரியக் கன்னம் வருடி, “அ..உ..” என்று அவன் பாஷையில் பேசிக் கொண்டே வந்தான்.
இவனும் ஏதேதோ காட்டி பேச.. இருவரும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாகினர். குழந்தை உச்சந்தலையில் ஆழமான முத்தம் பதிக்க… அவனுக்குத் தான் அந்த கரடி முகத்தில் எங்கு முத்தம் வைப்பதென்று தெரியவில்லை. அம்மா போலவே அவனும் அஷோக் உதட்டில் ஈர உதட்டை ஒற்றி எடுத்தான். கண் பனிக்க நெஞ்சோடு குழந்தையைக் கட்டிக் கொண்டான்.
‘அம்மாவும் மகனும் என்னைப் பாடா படுத்தரீங்க டா!’ நீண்ட பெருமூச்சு!
“உங்களுக்கு ட்வின்ஸ்.. இதே மாதரி இரட்டை சந்தோஷம். அனுபவீங்க. உங்க ஏமாற்றத்தை, கோபமா உங்க மனைவி மேல உங்க குழந்தை மேல காட்டாதீங்க. காட்ட மாட்டீங்கன்னு தெரியும். ஆனா தள்ளி நிக்காதீங்க. எப்படி இருந்த நீங்க? என்னால எப்படி ஆகிட்டீங்க? என்னால ஒத்துக்கவே முடியல.
அவன் கவனிக்கின்றானா? காதில் விழத்தான் செய்தது. உவப்பாக இல்லை. இருந்தும் வாய் திறந்தான் இல்லை. சொல்லட்டும்… எல்லாவற்றையும் கேட்டு கொள்ளும் முடிவோடு குழந்தையை கொஞ்சி கொண்டே கூடவே நடந்தான்.
“நான் சென்னை வந்த நேரம் என் வாழ்க்கையில நிறையப் பிரச்சினை. எனக்குன்னு யாருமே இல்ல அப்போ. நீங்க இருந்தீங்க.. எனக்கு எல்லாமா! அதுவே எனக்கு போதுமானதா இருந்துது. உங்க மேல ஒரு நம்பிக்கை.. வாழ்க்கையில ஒரு பிடிப்பு வந்துது. எல்லாத்துக்கும் மேல நீங்க கொடுத்த அந்த உயிர்ப்பு இன்னும் என்னை ஜீவனோட நிமிர்ந்து நிக்க வைச்சிருக்கு.
ஆனா நான் உங்கள சாச்சுட்டேன். இந்த தண்டனை எனக்கு ரொம்ப ஜாஸ்தி!”