அதில் என்னவோ போல் அவருக்கு ஆகிவிட, அமைதியாக தலையை குனிந்துக்கொண்டார்… ஏனென்றால் அவருக்கு தெரிந்து காயத்ரி, சைந்தவியுடன் பூங்குழலி சண்டையிட்ட நாட்களே அதிகம், உள்ளே இருக்கும் அன்பு நட்பை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை…
கவி, ” இந்த வீட்டுக்குகுழலி வந்து இத்தனை மாசத்துல ஒருநாளும் சொத்தை பற்றி பேசுனது கிடையாது… யார் பேருல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைச்சதும் இல்ல அதற்கு முயற்சி பண்ணதும் இல்ல… ஏன் இவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததுல இருந்து இவளுக்குன்னு தான் எதுவும் வாங்கி குடுத்ததும் இல்ல அவ வாங்கி கேட்டதும் இல்ல…
நகை, அலகாரம்னு எதுவும் போட்டு அலட்டிக்கணும்னு அவ நினைச்சதும் இல்ல… நான் இந்த வீட்டுக்கு மருமகன்னு பெரும காட்டிக்க இந்த வீட்டை விட்டு ஒருநாளும் வெளிய போனதில்ல… காலேஜுக்கு போன இதுவரை வீட்டுக்கு தான் வந்திருக்கா…. உங்க கிட்ட வேணும்னே வம்பு பண்ணாலும் அதுல உண்மை கொஞ்சம் கூட இருந்தது இல்ல…
நீங்க அவளையும் அத்தையையும் கைவிட்டதால அவங்க அனுபவிச்ச வலிய உங்கள சீண்டி பழிதீர்த்துக்குறா… அவ்வளவுதான்… ஒருவேல நீங்க சொல்லுற மாதிரி அவ இந்த சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சு இருந்தா, இங்க வந்த அடுத்த நாளே சொத்த அவ பேருக்கு மாத்த சொல்லி பிரச்சன பண்ணியிருப்பா இல்லாட்டி என்ன ஏதுன்னுட்டு விவரமாச்சும் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்கணும்…
ஆனா பண்ணல… எனக்கு இது வேண்ணும் அது வேண்ணும்னு கேட்டு சண்ட பண்ணல… இதுவர அவளுக்குனு எதுவும் கேட்டது இல்ல, நாணும் வாங்கி குடுத்ததில்ல… அதுக்காக அவ சண்ட போட்டதும் இல்ல… இதெல்லாம் ஏன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க….” என்றவன், அவரை முறைத்துக் கொண்டே ஓரடி எடுத்து வைக்க போகும் முன்,இறுகிய குரலில்
“இந்த சொத்துக்காக தானே இப்படியெல்லாம் பண்ணுறீங்க… ஆனா யாருக்காக பண்ணுறீங்க… உங்க பிள்ளைங்களுக்காகவ…? ம்ம்ம்….” என்றவன் அவரை பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு,
“இதை தொடக்க கூட கூசுது நீங்க பெத்த பிள்ளைங்களுக்கு இதுதான் உண்மை… சைந்தவி எப்பவோ விலகிட்டா நான் இங்க வந்து நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்ட பின்னாடி ஒத்த பைசா கூட நீங்க சேர்த்து வச்ச பாவத்திலும், வயித்தெறிச்சலிலும் தொட்டது கிடையாது…
இப்ப நான் மில்லு கட்டுனது நான் சம்பாதிச்ச காசுல அத என் மனைவி பெயருக்கு ரெஜிஸ்டர் பண்ணுறேன் அதை யாராலும் தடுக்கவும் முடியாது ஏன்னு கேள்வி கேட்கவும் முடியாது… வர வர இந்த வீட்டுல இருக்க கூட ஒருமாதிரி இருக்கு… எப்ப வெளிய போற நிலம வரும்னு எனக்கு தெரியாது… வெளிய போனாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல…“என்றவன் விடுவிடுவென வீட்டை விட்டு வெளியேற, அவனது வார்த்தையில் முருகவேல் அதிர்ந்து போக,
காயத்ரிக்கு பயம் பிடித்துக்கொண்டது, மகன் போய் விடுவானோ என பயத்தில், பதறியவர் ” ஐயா… ராசா…” என அவன் பின் கண்கள் கலங்க ஓட, அவனுக்கோ உள்ளம் அத்தனை கொதி நிலையில் இருக்க, காதில் எதையும் வாங்காது தன் புல்லட்டில் ஏறி வேகமாக சென்றுவிட, பெற்றவளுக்கோ பயம் உள்ளுக்குள்…
‘கடவுளே… அம்புட்டும் செரியாவணும் சாமி… இன்னும் எம்புட்டுத்தேன் சோதிப்ப… நாங் உசுரோட இருக்கும் போதே அம்புட்டு பேரும் சமாதானம் ஆகணும்யா…’ என மனதிற்குள் வேண்டியவர், வெளியே கண்களை துடைத்துக் கொண்டு உள்ளே செல்ல, முருகவேல் நின்ற இடத்தில் ஆணி அடித்து பேயரைந்தார் போல் நிற்க, அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் பூங்குழலி…
காயத்ரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… கட்டிய கணவனை பார்ப்பதா, அன்புக் கொண்ட மருமகளை பார்ப்பதா என்று… சைந்தவி குழலியை பார்த்திருந்தவள் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க,
குழலி ஒரு பெருமூச்சுடன் குனிந்து கணவன் குடுத்தபத்திரங்களை எடுத்துக்கொண்டு முருகவேல் பக்கம் சென்றாள் இமைக்காத பார்வையோட…
முருகவேலுக்கு முன்னமே தாம் செய்த தவறை மகன்சுட்டிக்காட்டிய போது அதை உணர இருந்தவர், குழலி அப்போது பார்த்து அவரை வம்பிலுக்கவும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாய் போயிற்று…
இப்பொழுது குழலி அருகில் வரவும் அவருக்கு என்னவோ போல் ஆகியது… மகன் பேசிய அத்தனை வார்த்தைகளும் அவருள் பூகங்பத்தை உருவாக்கி வைத்திருந்ததே காரணம்…
அருகில் வந்தவள், “இம்புட்டு வருஷம் நீரு என்னையும் எங் ஆத்தாளையும் தண்ணீ தெளிச்சு விட்டுப்புட்டீகளேன்னுத்தேன் வருந்துனோம்… நீரு சொத்து முழுக்க எடுத்துக்கிட்டீகனுட்டு இல்ல… வருத்தம் இருந்துச்சுத்தேன் நெலத்த குடுக்காம கராரா பணத்த வாங்கிபுட்டு எழுதி கொடுத்ததுல…
ஆனா அதுங்கூட நாளப்போக்குல செரியா போச்சு ஆத்தா ஒழைக்கவும்… ஆனா பொம்பள புள்ளைங்களுக்கு அரணா இருக்க வேண்டிய அண்ணே, தாய் மாமேன் எங்கள தனியா தவிக்கவுட்டுபுட்டு போயிட்டாகளேன்னுத்தேன் அம்புட்டு கோபமும்…
அதைய கூட ஜெயசீலன் மாமா செரிக்கட்டினாலும் சொந்த தாய்மாமன் அதைய செய்யலையேன்னு கோபம் எப்பவும் எங்குள்ள இருக்கும்…“என்றவள் கையில் இருந்த காகிதத்தை பெருமூச்சுடன் தூக்கி காட்டியவள்,
“எமக்கு இது எதுவும் வேண்ணாம்… நான் உசுரா நேசிக்குற எம்புருஷன் மட்டும் போதும்… அவீகள நாங் ஏமாத்தி கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் மனசு முழுக்க நேசத்தோடத்தேன் கட்டிகிட்டேன்… எமக்கோ உம்ம மவனுக்கோ இது மேல நாட்டம் இல்ல… எங்களுக்கு நாங்க போதும்… சொத்துத்தேனே முக்கியம்? நீரே அதைய வச்சுக்கோங்க… எம்புருஷன மட்டும் எமக்கு கொடுத்துபுடுங்க… ” எனஅழுங்காமல் அவர் தலையில் இடியை இறக்கியவள்அருகில் இருந்த டீபாயில் அந்த காகிதங்களை வைத்துவிட்டு திரும்பிஅறைக்கு செல்கையில் காயத்ரி, சைந்தவியை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டியவள் மீண்டும் முகத்தை பாவமாக்கி கொண்டு முகத்தை ஒன்றும் அறியாதவள் போல் மாற்றியபடி அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்…
குழலியின் வார்த்தையில் ஆடி போயிருந்த பெண்கள் இருவரும், அவளது செயலில் ‘அடிப்பாவி…’என வாயை பிளந்தனர் அதிர்ச்சியில்…
“எம்புட்டு நடந்தாலும் இவ அடங்க மாட்டா ஆத்தா… ” என சைந்தவி பல்லை கடிக்க, காயத்ரி, “நெசமாலுமே எம்பையன பிரிச்சு கூட்டிட்டு போயிருவளா….?” என முகம் கசங்க கேட்க, சைந்தவி
“லூசு, பண்ணாலும் பண்ணும்….” என்றதும் மேலும் அதிர்ந்த காயத்ரி, பின் தெளிந்து “அப்படி மட்டும் பண்ண நெனைக்கட்டும் திமிர் பிடிச்சவ, அவ கால ஒடைச்சு வூட்டுல படுக்க போட்டுருவேன்…” என்று பல்லை கடித்துக்கொண்டு சபதம் எடுக்க,சைந்தவிக்கு சிரிப்பு வரும் போல் இருந்தது… ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து அமைதியாக பல்லை கடித்துக் கொண்டு நின்றாள் வேறு வழியின்றி…
கணவனை திரும்பி பார்த்த காயத்ரி, “இந்த மனுஷனுக்கு இது தேவத்தேன்… இப்பாவச்சும் புத்தி வரட்டும்…” என முகத்தை தோள் பட்டையில் இடித்துக்கொண்டவர், தன் வேலையை பார்க்க செல்ல, சைந்தவியும் அவரையே வால் பிடித்துக்கொண்டு சென்றாள் அமைதியாக…
ஹாலில் தனித்துவிட பட்ட முருகவேலுக்கு உள்ளும் முழுவதும் பூங்குழலியின் வார்த்தையே நிறைந்திருந்தது… மகன் கூறியது போல் வாய் வார்த்தைக்காக பேசியிருக்காளே தவிர இதுவரை அவள் செய்கையில் எதுவும் செய்தது இல்லை… அதுவும் சொத்தை தரவில்லை என்பதை விட அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தாம் அதில் தவறியதே அவர்களது கோபத்திற்கான காரணம் என்று புரியும் போது மனம் சோர்ந்து விட்டது அவருக்கு…
மனம் கனக்க, சோபாவில் அமர்ந்தவரின் கண்முன் ஆடிய பத்திரங்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் இருந்தது… அன்று பஞ்சாயத்தில் தன்னை விடுத்து ஜெயசீலனுக்கு அளித்த மரியாதை அவரை இன்று அத்தனை கூனிகுறுகி தலை தாழ செய்தது உள்ளுக்குள்…
அவர்கள் தன்னிடம் எதிர்ப்பார்த்தது என்னவோ பாசம் அன்பு அரவணைப்பு ஆனால் தாம் எண்ணியது என்னவோ பணம் சொத்து நிலம்… இவை அனைத்தும் குழலி கூற கேட்கையில் அவரது மனம் வலியில் தாளவில்லை...
அதற்கும் மேல் மகன்கடைசியில் கூறி சென்ற வார்த்தைகள், வீட்டில் இருக்க வெறுப்பாக உள்ளது என்றதும், குழலி சொத்துக்கள் வேண்டாம் கவி மட்டும் போதும் என்ற வார்த்தையும் பயத்தை உண்டாகியது அவருள்… எங்கு மகன் தன்னை விட்டு போய் விடுவானோ என்று… நடந்த நிகழ்வுகள் அத்தனையும் யோசித்துக்கொண்டிருந்தவர் அப்படியே தலையை பின்னால் சாய்த்து செய்த தவறை எண்ணி கலங்கியபடி இருந்தார்…
உள்ளே காயத்ரிக்கு மகன் கோபமாக சென்றதே மனதை போட்டு பிசைந்துக்கொண்டிருந்தது… ‘சே.... வூட்டுக்கு வந்தவனுக்கு ஒருவா தண்ணீ கூட குடுக்கலையே… எங்குட்டு போனானோ…’ என்று கலங்கியவர் அவனது எண்ணிற்கு அழைக்க, அவனோ அதை ஏற்பதாகவே தெரியவில்லை…
சைந்தவி, ஹாலில் எட்டி பார்க்க முருகவேல் இருந்த நிலையை கண்டு, இனி எல்லாம் சரியாக நடக்கும் என்ற ஏதோ ஒரு எண்ணம் அவளுள் பின் அன்னையிடம் வந்தவள் அவரை சமாதானம் செய்ய விளைந்தாள்…
இங்குஅறைக்கு வந்த பூங்குழலிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது… ஆனால் அழுது விட கூடாது என்ற உறுதி அவளிடம்… வர துடிக்கும் அழுகை முருகவேல் பேசிய வார்த்தையின் வீரியத்திற்கா அல்லது கணவன் தன்னை புரிந்திருக்கும் காதலுக்கா என்று அவளால் பகுத்தறிய முடியவில்லை…
முருகவேலிடம் அவள் கூறிய வார்த்தைகள் அத்தனையும் உணர்ந்து மனதில் இருந்து கூறியவை ஆனால் அவளது பார்வை காயத்ரி சைந்தவி மீது விழுந்ததும் தான் தனது வார்த்தை அத்தையை எந்த அளவிற்கு வதைத்து பயத்தை கிளப்பி இருக்கும் என்று நொடியில் புரிந்துக் கொண்டவள் விளையாட்டாய் கூறியது போல் ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்…
படுக்கையில் விழுந்தவளுக்கு எண்ணங்கள் முழுவதும் மன்னவனே சூழ்ந்திருக்க, அத்தனையும் அசைப்போட்டபடி இருக்கவும்அது சில மணி நேரமாக கடந்து சென்றது…
இன்னும் மகன் வீடு திரும்பவில்லையே என பதறியவர் மீண்டும் மீண்டும் கவிக்கு அழைப்பு விடுக்க அது முழு அழைப்பும் சென்று ஓய்ந்தது… ஏதோ மனதிற்கு சரியில்லை என்று படவும் காயத்ரிக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது நேரம் செல்ல செல்ல…
மேலும் சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தவர் இதற்கு மேல் முடியாது என்று புரிய, வேகமாக முருகவேலின் அருகில் சென்று,
“அம்புட்டும் உம்மாளத்தேன்… சொத்து சொத்துன்னுட்டு அலைஞ்சீகளே கடைசியா என்னத்த கண்டீக… பெத்தவள ஆரோ போல பார்க்குறதும் கூட பொறந்த பொறப்ப பணத்துக்காக வெட்டி விட்டதுன்னு அம்புட்டையும் பண்ணியேரே இப்ப பெத்த புள்ளைய வூட்டு விட்டு தொறத்தி புட்டீக சந்தோஷந்தேனே…” என்று கத்தவும், குற்றணர்வில் உள்ளம் கலங்க அமர்ந்திருந்தவர், மனைவி முதலில் கூறியதை முகம் சுருங்க கேட்டுக்கொண்டிருந்தவர், கடைசியாக கவியை பற்றி கூறியதை கேட்டு, அதிர்ந்து எழுந்து நின்றிவிட்டார்…
“என்னடி சொல்லுத…?” என புரிந்தும் புரியாமலும் கேட்க, காயத்ரி
“உம்மனால அப்ப வூட்டு விட்டு போனவன் எத்தன நேரமாச்சு இன்னும் வூடு திரும்பல… ஃபோன் போட்டா எடுக்க மாட்டீங்கான்… அம்புட்டும் உம்மாளத்தேன்…” என தலையில் அடித்துக்கொண்டு கதற, அவரை சைந்தவி தடுக்க முயல, முருகவேலுக்கு அத்தனை வேதனையாக இருந்தது…
அவரை சமாதானம் செய்ய வாய் திறக்கும் முன், குழலி “வெசன படாதீக மாமியாரே… அவீக ஜோலியா இருந்திருப்பாக… அத்தேன் ஃபோன எடுத்திருக்க மாட்டாக…” மன்னவன் வருவான் வருவான் என பைங்கிளியவள் காத்திருக்க, நேரம் போனதே ஒழிய கவியழகன் வீடு திரும்பிய பாடில்லை என்றதும் அறையை வீட்டு வெளியேறவும், காயத்ரி கணவனிடம் கோபமாக பேசிக்கொண்டிருக்கவும் சரியாக இருந்தது…
“இல்ல என்ற மவன் இப்படியெல்லாம் பண்ண மாட்டான்… அவனைய இப்படியெல்லாம் பண்ண விட்டுபுட்டாக…” என்று புலம்பியவரை பார்த்து வேதனை கொண்ட முருகவேல், ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்து நிற்க….
குழலிக்கு ஏனோ பாவமாக இருந்தது இருவரையும் பார்க்க, அதற்காக முருகவேலை மன்னித்தாளா என்று கேட்டாள் நிச்சயம் இல்லை இருந்தும் ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்க, அவளுக்கு பாவமாகதான் இருந்தது… காயத்ரியை பற்றி சொல்லவே வேண்டாம்… அநியாயத்திற்கு பாசம் கொண்டவள் அவர் மீது… அவர் கதறுவதை பார்க்க குழலியால் தாங்கிக்கொள்ள முடியவில்லைஉண்மையில்…
ஒரு பெருமூச்சுடன் தன் அலைபேசியை எடுத்து அழைக்க போக, காய்த்ரி “நாங் எத்தன மொற பண்ணியும் தம்பி எடுக்கவே இல்ல… எமக்கு ஏதோ செரியா படல…” என்றபடி அழுதவரை பார்த்தவளின் கைதானாக கீழ் இறங்கியது கவிக்கு அழைப்பை விடுக்காமல்.…
ஒருவேலை காயத்ரி குழலியை தடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் சிறிது நேரத்தில், நடக்கவிருக்கும் பெரும் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம் ஆனால் விதி காயத்ரியின் மூலம் விளையாட்டை தொடங்கியது அங்கு…
“ம்பச்ச்… சும்மா கண்ண கசக்காதீக மாமியாரே… அவீக மீல்லுக்குத்தேன் போயிருக்கோணும்… நான் போய் கூட்டியாரேன்… வெசன படாதீக…” என்றவள் உடனே கிளம்பிவிட, காயத்ரி கண்களை துடைத்துக்கொண்டு அவள் பின்னே ஓடியவர்,
“ஒத்தையிலையா… பொழுது சாஞ்சு போச்சு தாயி… வேணாம்… குமாரு கிட்ட சொல்லிவுடலாம்… ” என்று தடுக்க,
“இல்ல மாமியாரே… நாங் போய் சமாதானம் பேசி அழைச்சுட்டு வாரேன்… நாங் ஒத்தைல போகல… காருல, குமார் அண்ணனத்தேன் ஓட்ட சொல்ல போத்தேன்…” என்றதும் காயத்ரி சற்று அமைதியாகிவிட, பூங்குழலி குமாரை அழைத்து மீல்லுக்கு வண்டியை விட சொல்ல அவனும் வண்டியை எடுக்க, காயத்ரிக்கு தான் என்னவோ போல் இருந்தது…