Advertisement

மின்னல் – 9

       கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்தும் துவாரகாவை அங்கிருந்து ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை. பத்மினி பேசி பேசியே களைத்து ஓய்ந்து போனார்.

அவருக்கு தன் மகனின் எதிர்காலம் இப்பொழுது மிக கவலையாக தான் தெரிந்தது. வீட்டிற்கே வரமாட்டேன் என்பவள் அவனோடும், தங்களோடும் எப்படி ஒருமித்து வாழப்போகிறாள் என எண்ணி கலக்கம் கொண்டார்.

துவாரகாவையே பார்த்துக்கொண்டிருந்தான் அதிரூபன். அதை உணர்ந்தாலும் அவள் நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை. அவனை மட்டுமல்ல யாரையுமே பார்க்க முற்படவில்லை.

அவளுக்கு தெரியும் அவனை பார்த்துவிட்டால் ஏதேனும் சொல்லி தன் மனதை கரைத்து இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததை போல அவன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவான் என்று.

அதற்கு பயந்தே அவனை பார்ப்பதை தவிர்த்தாள். அவளின் எண்ணங்களை சரியாக கண்டுபிடிக்கும் அவள் கணவனுக்கா ஏன் எதற்கு என்று தெரியாமல் போகும்.

அஷ்மிதாவை அழைத்தவன் அவள் காதில் எதுவோ கூற அவளோ முடியாது என மறுக்க அவளை முறைத்து சம்மதிக்க வைத்தான்.

‘யார்க்கிட்ட’ என கெத்தாய் மனைவியை பார்த்தவனின் இதழ்கள் அடக்கப்பட்ட புன்னகையில் லேசாய் நெளிந்தது.

சிறிது நேரத்தில் வந்த அஷ்மிதாவின் கையில் ஜூஸ் இருக்க அதைகண்ட பத்மினி என்னவென கேட்க ஒன்றுமில்லை என தலையசத்தவள்,

“துவா, நீ அவன் வீட்டுக்கு போ, போகலை. அது உன் விருப்பம். இப்ப இது நீ டேப்லெட் எடுத்துக்கற டைம். ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. மார்னிங் கூட போடலை. நானும் மறந்துட்டேன். இந்தா இந்த ஜூஸ் குடிச்சுட்டு டேப்லெட் போட்டுக்கோ…”

துவாரகாவின் அருகில் அமர்ந்து அவளின் கையில் டேப்லட்டை திணித்துவிட்டு தண்ணீர் பாட்டிலை கொடுக்க அதை வாங்கிய துவாரகா அந்த மாத்திரைகளை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன துவா? இன்னும் கைல வச்சுட்டே இருக்க. போடு…”

அஷ்மிதா சொல்ல அவளை சந்தேகமாய் பார்த்த துவாரகா யோசனையோடு அமர்ந்திருந்தாள். இதையெல்லாம் அதிரூபன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.

‘என்னதான் பன்றான்னு பார்ப்போமே’ என்னும் பாவம் தான் அவன் முகத்தில்.

“எனக்கு டேப்லெட் வேண்டாம்…” அங்கிருந்த மேஜையில் அதை வைத்துவிட,

“ஏன்? நீ டெய்லி போடறதுதானே? ஏன் வேண்டாம்?…” அஷ்மிதா கோபமாய் கேட்க,

“எனக்கு பயமா இருக்கு. இது ஸ்லீப்பிங் டேப்லட்னு தோணுது. என்னை தூங்க வச்சுட்டு அங்க தூக்கிட்டு போய்ட்டா…” அசராமல் கூற அஷ்மிதா தான் அசந்துபோனாள்.

“அடிங்க, பச்சப்புள்ள மாதிரி இருந்துட்டு நீ இவ்வளவு யோசிப்பியா? பாவமே அழுது அழுது டயர்ட் ஆகிட்டியேன்னு உனக்கு போய் ஜூஸ் எடுத்துட்டு வந்தேன் பாரு. என்னை சொல்லனும்…”

வேண்டுமென்றே கோபம் கொள்வதை போல பேசி அங்கிருந்து எழுந்துகொண்டு,

“டாட், வாங்க போகலாம். எனக்கு இதெல்லாம் தேவையா?…” என ராஜாங்கத்தையும் அழைத்தவள் அந்த ஜூஸை சந்தியாவின் கையில் கொடுத்துவிட்டு,

“இவளுக்கு இவ்வளோ நேரம் பாட்டுபாடினதுக்கு உனக்குத்தான் தேவை. நீயே குடிமா…” என சொல்லி கிளம்ப அந்த ஜூஸை வேகமாய் வாங்கிக்கொண்டாள் துவாரகா.

“டேப்லட் தான வேண்டாம்னு சொன்னேன். ஜூஸ் வேண்டாம்னு எப்ப சொன்னேன்? நானே குடிக்கிறேன்…” என சொல்ல,

“ஒன்னும் தேவை இல்லை. இதுலயும் எதாச்சும் கலந்திருக்க போறேன்…” என்று முறுக்கிக்கொள்ள,

“அச்சோ, கோச்சுக்கிட்டீங்களா டாக்டர். ஸாரி…” என்றவள் மடமடவென ஜூஸை பருகிவிட்டு அஷ்மிதாவை பார்த்து புன்னகைத்து,

“இப்போ கோவம் இல்லையே…” என கேட்க,

“ஏன் இல்லாம, டேப்லட் எடுத்துக்கல…” என்றதற்கு கெஞ்சுவதை போல முகத்தை சுருக்கி அவளை துவாரகா பார்க்க அவள் அதிபனிடம்,

“சரியான கிரிமினல்டா நீ. மயில்சாமிக்கு தப்பாம பிறந்திருக்க. ஆனாலும் உன் போண்டா டீ உனக்கு மேல இருக்கா. நீ இனி அவளுக்கும் சேர்த்து யோசிக்கனும்…” என்றதற்கும் அவளை முறைக்க,

“என்னை ஏன்டா முறைக்கிற? பாவமே, தெரிஞ்ச பையனாச்சே, இப்படி முறைச்சும், யோசிச்சும் காலம் முழுக்க போய்டுமேன்னு பரிதாபப்பட்டா நீ இன்னும் முறைப்ப…” என்றவள்,

“உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கே மாஸ்டர் ப்ளான் போட்டா அப்பறம்…”

“நீ கொஞ்சம் வாயை மூடேன் அஷ்மி…” சிரித்துக்கொண்டே அவளிடம் பல்லைகடிக்க,

“நைட் உனக்கு முக்கியமான சடங்கு வேற ஏற்பாடு பண்ணனும். என் ஹெல்ப் கண்டிப்பா அங்க தேவைப்படும். வேண்டாம்னா சொல்லு இப்படியே கிளம்பிடறேன்…” என்று வம்பிழுப்பவளை தட்டிவைக்கமுடியாமல் மனைவியை பார்க்க அஷ்மியோ துவாரகாவிடம்,

“போய்ட்டு போ. கொஞ்ச நேரம் தூங்கு. நான் இவங்களை பார்த்துக்கறேன்…” என்றதுமே மீண்டும் விரைப்பாய் நிமிர்ந்து அமர்ந்தவள்,

“தூக்கம் வரலை. நான் உட்கார்ந்தே இருக்கேன்…”

“அப்போ எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருப்ப? மண்டபம் காலி செய்யனுமே…” அஷ்மிதா கேட்டதும் டக்கென அதிரூபனை தான் பார்த்தாள்.

அவனோ இவளை கண்டு புன்னகைக்க இவளின் மனம் தடுமாற ஆரம்பித்தது. அவனோடு சென்றுதான் பாரேன் என ஒரு மனம் சொல்ல, அங்குதான் மிருங்கங்களையும் விட மோசமான மனிதர்கள் வாழ்கின்றனர். அங்கா செல்ல போகிறாய் என இன்னொரு மனமும் வாட்டி எடுத்தது.

அவளின் சஞ்சலம் கண்டு அருகே வந்தமர்ந்தவன் மற்றவர்களை கிளம்ப சொல்லும் பொழுதே கண்ணை சுற்றிக்கொண்டு வந்தது. உறக்கம் வருவதை போல இருக்க முயன்று விரட்டியவள் அஷ்மிதாவின் கையை பிடித்து நிறுத்தி,

“டாக்டர் நீங்களும் இவங்களோட விட்டுட்டு போகாதீங்க. கூடவே இருங்க…”

சொல்லும் பொழுதே அரைமயக்க நிலைக்கு ஆற்பட்டாள் துவாரகா. அவளின் அநாதரவு போன்ற அழைப்பு அஷ்மிதாவை விட ராஜாங்கத்தையும், பத்மினியையும் பாதித்தது.

‘கவலை இன்றி சந்தோஷமாய் இருக்கவேண்டிய இப்படி ஒரு சூழ்நிலைக்கு இப்பெண்ணை கொண்டுவந்துவிட்டார்களே, இனி அதிபன் தான் இவளை நன்றாய் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என ராஜாங்கமும்,

‘அதிபனுடனான தனிமைக்கு கூட அஞ்சும் பெண் எப்படி அவனுக்கு சரிப்பட்டுவருவாள்?’ என பத்மினியும் நினைக்க,

“நான் பார்த்துப்பேன். நீங்க கிளம்புங்க. இன்னும் பைவ் மினிட்ஸ்ல இவளோட வரேன்…” என சொல்லி அவர்களை அனுப்ப,

“டாக்டர், போகாதீங்க…” என்ற புலம்பலோடு முழுதாய் மயங்கி அதிபன் மடியிலேயே சரிந்தாள் துவாரகா. அவளை வாகாய் மடியில் படுக்கவைத்தவன்,

“மிசஸ் அதிரூபனுக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுதுப்பா. என்ன ஒரு முன்னெச்சரிக்கை…” என்று வாய்விட்டு சிரித்தவன் துவாரகா மேஜையில் வைத்த மாத்திரைகளை பார்த்துவிட்டு,

“ஆனாலும் நீ ரொம்ப யோசிக்கிறடா.  வரவேண்டாம்னு நினைச்சு நீ இவ்வளோ யோசிக்கிறப்ப உன்னை வரவைக்க, என்னோட வாழவைக்க நான் எவ்வளவு யோசிப்பேன். இந்த மாமனை ரொம்ப குறைச்சு எடை போட்டுட்டையே…”

உறங்கிக்கொண்டிருந்தவளின் மூக்கை நிமிண்டியவன் நேரம் போவதை கண்டு கிளம்ப எண்ணி அவளை லேசாய் அசைத்துபார்த்தான். கொஞ்சமும் அசையாமல் சீரான உறக்கத்தில் துவாரகா இருக்க ஒரு பெருமூச்சுடன் சந்தியாவை அழைத்தவன்,

“இங்க இருக்கிற திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிடு சந்தியா. டைமாகுது. உன் அண்ணி எழுந்துக்கறதுக்குள்ள எல்லையை தாண்டிடனும்…” என சொல்ல அவனை பார்த்து சிரித்தவள் துவாரகாவை கனிவோடு பார்த்தாள்.

“அண்ணியை சொல்லியும் தப்பில்லையே அண்ணா. அவங்க வேணும்னா பன்றாங்க…” வருத்தத்தோடு சொல்லியவள்,

“ஆனாலும் ப்ளான் பண்ணி பன்றீங்க எல்லாம். உங்களை இப்படி பார்த்ததே  இல்லை. ஹேப்பியா இருக்கு எனக்கு…”

“இப்படியே அண்ணனும் தங்கச்சியும் கதை பேசிட்டு இருந்தா உங்களை நாடுகடத்திட போறா உங்க அண்ணி. கிளம்புங்க…” என்றபடி வந்த அஷ்மிதா,

“பேக்கிங்கலாம் நான் அப்பவே முடிச்சுட்டேன். எடுத்துட்டு போகவேண்டியதுதான்…” என சொல்லி  அங்கிருந்த பேக் அனைத்தையும் எடுத்துவந்து வெளியே வைக்க சந்தோஷ் வந்து அனைத்தையும் காரில் கொண்டு வைத்தான்.

அஷ்மிதா சந்தோஷிடம் பேசியே பலநாட்கள் ஆகிவிட்டது. அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. பேசவும் முற்படவில்லை.

அவள் அவனை முறைக்கும் அளவிற்கு கூட வைத்துகொள்ளாமல் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் விலகியே சென்றான்.  அதிலும் அவளுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது என இன்றைய நிகழ்வுகளில் புரிந்துகொண்டவன், ஆம் புரிந்துதான்கொண்டான்.

துவாரகா விஷால் தன்னை அழைத்து சென்றதை பற்றி சொல்லிய போது அனைவரின் முகத்திலும் அத்தனை அதிர்ச்சி. ஆனால் அஷ்மிதா சலனமே இன்றி விஷாலை முறைத்து பார்த்ததை வைத்தே புரிந்துகொண்டான்.

அது அவனை இன்னும் கீழாக தன்னை நினைக்க வைத்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் பேச?

ஒருவேளை நீயா இப்படி பண்ணின என சட்டையை பிடித்து சண்டை பிடித்தால் கூட விளக்கம்  அளிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை கூட கொடுக்க அஷ்மிதா விரும்பவில்லை என்பதை உணர்ந்து தானே விலகினான்.

அவனை கடுகடுவென பார்த்துக்கொண்டே அஷ்மிதாவும் காரை நோக்கி செல்ல சந்தியா,

“எல்லாரும் கிளம்பியாச்சு அண்ணா. நீங்கதான் வரனும். மத்த வேலைகளை நம்ம ஆளுங்க பார்த்துப்பாங்க. மீடியா ஆளுங்க எல்லாரும் கிளம்பியாச்சு. இல்லை, விஷால் கிளப்பிட்டான். நீங்க வாங்க…”

அவன் கேட்காத தகவலையும் கூறி அவனை ஆசுவாசப்படுத்த ஒரு புன்னகையோடு மடியில் இருந்தவளை தன் கைகளில் ஏந்திகொண்டான்.

“வீட்டு வாசப்படி மிதிக்கமாட்டேன்னு சொன்னா உன் அண்ணி. அது படியே இப்ப வாசல்ல கால் வைக்காம வீட்டுக்குள்ள போக போறா…” என சிரிக்க,

“அண்ணா நீங்க இருக்கீங்களே?…” என்ற சந்தியா,

“அண்ணி எழுந்துக்க போறாங்க…” என சொல்லவும்,

“ஆமா, வா போகலாம்…” துவாரகாவை கைகளில் அள்ளிக்கொண்டு வந்தவனை கண்ட ரத்தினசாமி,

“இதெல்லாம் இவனுக்கு தேவையா? இப்படி விருப்பமில்லாத பொண்ணை எதுக்கு வீட்டுக்கு வர சொல்லி கட்டாயபடுத்தனும்? விட்டது சனியன்னு தலைமுழுகாம…”

பத்மினியிடம் எரிச்சலாய் பேச அவர் அமைதியாக திரும்பி பார்த்துவிட்டு தொண்டையை கனைத்து,

“இதை அப்படியே பூரணிட்ட சொல்லிடுங்க. அவங்க பதில் சொல்லுவாங்க…” என பேச அதிர்ந்து பார்த்தார் ரத்தினசாமி. பத்மினியிடம் அன்னபூரணி பேசியது எல்லாவற்றையும் ஏற்கனவே ஒன்றுவிடாமல் அர்னவ் கூறியிருந்தான்.

“அதி, பார்த்து கீழே…” என பத்மினி மகனிடம் போக அவனோ ரத்தினசாமியின் அருகே நெருங்கியவன்,

“எனக்கு இதுதான் தேவை. அவளுக்கு என்மேல விருப்பம்தான். அது எனக்கு நல்லாவே தெரியும். வீட்டுக்கு வரத்தான் விருப்பமில்லை. உங்களுக்கும் விருப்பம் இல்லைனா சொல்லிடுங்க, நாங்க தனிக்குடித்தனம் இப்பவே இப்படியே கிளம்பிடறோம்…”

இப்படி சொல்வான் என எதிர்பார்க்காத ரத்தினசாமியின் முகம் விளக்கெண்ணை குடித்ததை போல மாற மகனை முறைத்தால் கூட அதற்கும் ஏதாவது பேசுவான் என எண்ணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

மனைவியோடு காரில் அமர்ந்தவன் அனைவரும் காரில் ஏறிவிட்டனரா என பார்த்துவிட்டு ரத்தினசாமி வராததை கண்டுகொண்டு தன் மொபைலில் அவரை அழைத்தான்.

விஷாலிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் மகனின் அழைப்பை பார்த்த உடனேயே,

“அதிபா, அப்பா பேசறேன்பா…” வழக்கம் போல சொல்லிவிட்டு நாக்கை கடித்தார். அதற்குள் அதை கேட்டுவிட்டவனின் முகமே லேசாய் கனிந்தது.

‘இவருக்கு என் மீதான அன்பு மட்டும் மாறவே மாறாது’ என நினைத்துகொண்டவன்,

“நாங்க நம்ம வீட்டுக்கு வரப்போ நீங்களும் அங்க இருக்கனும். எங்க கூடவே கிளம்பி வாங்கப்பா…”

“இல்லப்பா அதிபா, இங்க வேலைகள் நிறைய இருக்கு…” பிடித்தமின்மையை வேலை இருக்கிறது என காரணம் காட்டி தவிர்க்க நினைக்க,

“அதை விஷால் பார்த்துப்பான். கூடவே சித்தப்பாவும் வந்துடுவாங்க. நீங்க கிளம்புங்க…” என்று சொல்லி வைத்துவிட கோபப்படக்கூட நேரமில்லாமல் விஷாலிடம் சொல்லிவிட்டு வேகமாய் வந்தவர் அதிரூபனுக்கு முன்னால் இருந்த காரில் ஏறிக்கொண்டார்.

அதில் ராஜாங்கமும், அஷ்மிதாவும் இருக்க ஒரு நொடி இறங்கிவிடலாமா என கூட யோசித்து பின் தான் ஏன் இறங்க வேண்டும்? என்ற இறுமாப்போடு சட்டமாய் அமர்ந்துகொண்டார்.

அவரின் தோரணையே ராஜாங்கத்திடம் மௌனமொழி பேசியது.

‘உன் தொழிலில் நீ ராஜாவானால் என் அரசியல் வட்டத்தில் நான் ராஜா. உன்னை விட எதிலும் நான் சளைத்தவன் இல்லை’ என்பதாக பொருள் பட அதை புரிந்துகொண்ட ராஜாங்கம் மெல்லிய புன்னகையோடு ரத்தினசாமியிடம் பேச ஆரம்பித்தார்.

தான் பெண் கேட்டு மறுத்துவிட்ட கோபம் ரத்தினசாமிக்கு இருந்தாலும் ஏனோ அவர் பேசும்பொழுது தவிர்க்க முடியவில்லை.

பேச்சுக்கள் குடும்பத்தை பற்றியோ, இன்றைய திருமணம் பற்றியோ இல்லாமல் பொதுவானதாக இருக்க ரத்தினசாமியின் இறுக்கம் கூட கொஞ்சம் தளர்ந்தது. பேசிக்கொண்டே வர வர வீடும் வந்துவிட்டது.

அடித்துப்போட்டதை போல உறங்கிய மனிவியை கவலையாக பார்த்தவன் மீண்டும் கைகளில் ஏந்திக்கொண்டு வாசலுக்கு வந்து நின்றான். சந்தியா ஆலம் சுற்ற வந்து நிற்க பத்மினி,

“இப்படியே எப்படிப்பா ஆரத்தி எடுக்க?…”

“ஏன்மா? எடுத்தா என்ன? இவளை நான் இப்போதைக்கு இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகனும். அவ்வளவு தான். வேற எதையும் யோசிக்கிற நிலையில் நான் இல்லை. இப்போ எடுக்கறீங்களா இல்லையா?…”

எந்த நிமிடம் முழித்துகொள்வாளோ? வாசலில் வைத்து வரமாட்டேன் என சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்துவிடுவாளோ என உள்ளுக்குள் பயந்துதான் இருந்தான்.

அதையெல்லாம் வெளியில் காண்பித்துவிட முடியுமா? இவர்கள் இத்தனை கேட்டால் பொறுமையிழந்து எதையாவது தானே சொல்லிவிடுவோம் என அஞ்சி அடக்கி வாசித்தான்.

“என்ன தம்பி ரொம்ப திணறுற போலவே? எம்புட்டு முக்கினாலும் முனங்கினாலும் அனுபவிச்சு தான் ஆகனும். கெத்து காண்பி. இல்ல வெத்துவேட்டுன்னு போய்டுவாங்க…”

அதிபனின் காதில் அஷ்மிதா சரியாக ராங் டைமில் என்ட்ரியை பதிவு செய்ய அவளை முறைத்தவன்,

“அடிங்க…” என பொங்க,

“டேய் பார்த்து பார்த்து, பொண்டாட்டியை கீழ போட்டுடாத. பொத்துசுரக்காய் விழுந்து சிதறுனா சல்லிக்கும் தேறாது தம்பி…” என லந்து செய்ய,

“அஷ்மி…” ராஜாங்கம் அழைத்ததும் அமைதியாக நின்றாலும் அவளின் கண்கள் கேலியில் சிரித்துக்கொண்டே இருந்தது தன் நண்பனை பார்த்து.

“அம்மா, இன்னும் எவ்வளவு நேரம் தான் யோசிப்பீங்க. சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்து இவ எழுந்ததும் தான் எங்களை உள்ள கூப்பிடனும்னா அது இந்த ஜென்மத்துல நடக்காது…”

அடக்கப்பட்ட கடுப்பில் அதிரூபன் சொல்ல பதறிக்கொண்டு வந்ததோ ரத்தினசாமி.

“அதுதான் அதிபன் சொல்றான்ல. எடேன். எல்லாமே நம்ம விருப்பபடியா நடந்திருக்கு. இதுமட்டும் என்ன உனக்கு?…”

மகனிடம் காண்பிக்க முடியாத கோபத்தை மனைவியிடம் அவர் காண்பிக்க அதிரூபன் பார்த்த பார்வையில் வேகமாய் உள்ளே சென்றுவிட்டார்.

அவருக்கு அவர் கவலை. பத்மினி யோசிக்க யோசிக்க பொறுமையிழந்து மகன் அவளோடு தனியே சென்றுவிட்டால் துவாரகாவிற்கு அவள் இஷ்டப்படி கணவன் நடக்கிறான் என்கிற அகம்பாவம் தலைவிரிக்கும். தங்கள் மீதான பயம் அற்றுபோகும்.

அதன் பின் கொஞ்சமும் தங்களை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்றுவிடுவாள். அவள் கை ஓங்க ஆரம்பித்தால் அகிலாவை சொல்லவே வேண்டாம். சும்மாவே அத்தனை திமிர். இதில் என் மகன் அவர்கள் கைக்குள் என்றால் கேட்கவா வேண்டும். அதற்கு ஒருபோதும் இடம் தரக்கூடாது என நினைத்தார்.

அதையும் மீறிய விஷயம் தன்னால் தன் மகன் அதிபன் முகம் பாராமல் அவனின் குரல் கேட்காமல் இருக்க முடியாது. அவனை பிரிந்து வாழ்வதை நினைக்கவே பயந்தார் சூட்சமமும், நயவஞ்சகமும் நிறைந்த பெரிய அரசியல்வாதி.

ரத்தினசாமி பேசிவிட்டு போனதும் இவர்களுக்கு சந்தியாவை வைத்து ஆரத்தி சுற்றியவர் மகனின் மார்பில் சுகமாய் தஞ்சம்புகுந்து தூக்கத்தில் லயித்திருக்கும் மருமகளுக்கு நெற்றியில் திலகமிட்டு உள்ளே அழைத்து சென்றார்.

அங்கே அன்னபூரணி அமர்ந்திருக்க இவர்களை கானபிடிக்காமல் ஸ்வேதா முகத்தை வெடுக்கென திருப்பிக்கொள்ள ரத்தினசாமி தன் தங்கையின் அருகில் அவரின் கையை பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

அதிபனோ வேகமாய் தனதறைக்கு மாடி ஏறி சென்றவன் முதலில் அவளை படுக்கையில் படுக்க வைத்தான். அதன் பின்னே கையை நன்காக உதறியவன் தனது ஷர்ட் பட்டங்கள் இரண்டை கழட்டி பின்னே தூக்கிவிட்டு தானும் கால் நீட்டி கட்டிலில் அமர்ந்துகொண்டான்.

அவனுக்கும் ஓய்வை கேட்டது அவனின் உடல். ஆனால் ஓய்வெடுக்க முடியாமல் சிவந்த விழிகளோடு விழித்துகிடந்தான். அரைமணி நேரம் சென்று கதவு தட்டப்பட,

“அம்மா டோர் ஓபன்ல தான் இருக்கு. உள்ள வாங்க…” கதவை திறந்துகொண்டு வந்ததோ  சந்தியாவும், அஷ்மிதாவும்.

“ஏன் நாங்கலாம் உன் ரூம்க்கு வரக்கூடாதா? ரொம்பத்தான் பன்ற. உன் கல்யாணத்துக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கேன். என்னை ஒரு வார்த்தை வான்னு கூப்பிட்டியா நீ?…”

வழக்கம் போல தன் லூட்டியை அவிழ்த்துவிட அவளை சந்தியா வியப்பாய் பார்த்தாள்.

“நீங்க ஹெல்ப் பண்ணுணீங்களா?…” என கேட்க,

‘அவசரப்பட்டுட்டியே அஷ்மி. முந்திரிகொட்டை முந்திரிக்கொட்டை’ என தன்னையே திட்டிக்கொண்ட அஷ்மிதா,

“அதான் உன் அண்ணன் இவளை தான் கட்டிப்பேன்னு சொல்றப்போ அழுது கலாட்டா பண்ணாம அமைதியா விட்டுகொடுத்தேன் பாரு. அத சொன்னேன்…” என சமாளித்து ஹிஹிஹி என சிரித்துவைக்க அதிரூபனும் கடகடவென சிரித்துவிட்டான்.

“நீயெல்லாம் ஒரு டாக்டர்ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க…”

“உன்னை யாருடா நம்ப சொன்னா? இந்த பயந்தாங்கொள்ளிய எழுப்பி விடு. நாள் முழுக்க டாக்டர், டாக்டர்ன்னு சொல்லியே உன் மண்டையில் நல்லா ஏத்திவிடுவா…” என்றதும் குறும்பு தலைதூக்க அவளை பார்த்தவன்,

“எழுப்பிடவா? நிஜமாவே?…” இரு புருவத்தை தூக்கி அடக்கப்பட்ட சிரிப்போடு கேட்க,

“ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் துணிச்சல். என் வீக்னஸ் வச்சே என்னை லாக் பன்றியா? நான் கோவமா கிளம்பறேன். இன்னைக்கு நீயே அனுபவி…”

“ஓகே கிளம்பு…” அதிரூபன் சொல்லியே விட,

“சத்தியமா சொல்றியாடா? என் ஹெல்ப் உனக்கு வேண்டாமா?…” பாவம் போல கேட்க அவளின் தலையில் தட்டியவன்,

“வேண்டவே வேண்டாம். டேப்லெட் இல்லாமலே என் பொண்டாட்டியை சமாளிக்க எனக்கு தெரியும்…” மிதப்பாய் சொல்ல,

“ஓவரா பன்றியே. சரியில்லை. என் செல்லாக்குட்டி எழுந்துக்கட்டும். அப்பறம் இருக்கு உனக்கு. அஷ்மின்னு கதறிட்டு நீ போன் பண்ணத்தான் போற…” என்றவள்,

“நல்லா சந்தோஷமா இருந்து தொலை…” என முறுக்கிக்கொண்டு கிளம்பிவிட,

“அவங்க கோவமா போறாங்க அண்ணா. ராஜாங்கம் அங்கிள் வீட்டுக்கு கிளம்பறாங்க. உங்கட்ட சொல்லிட்டு போகத்தான் அஷ்மி வந்தாங்க…” சந்தியா கவலையாய் பார்க்க,

“அவளுக்கு என் மேல கோவமே வராது. அவ பாஷைல என்னை வாழ்த்திட்டு தான் போறா…” என்றவன்,

“நான் ப்ரெஷ் ஆகிட்டு கீழே வரேன்னு சொல்லிடு சந்தியா…”

“இல்லை அண்ணா, நீங்க ரெஸ்ட் எடுக்கனுமாம். அம்மா சொன்னாங்க. அண்ணி சார்பா அவங்களே விளக்கையும் ஏத்திட்டாங்க. இந்த குங்குமத்தை அண்ணிக்கு வச்சிவிடுவீங்களாம். அப்படியே இந்த ஜுஸ், ஸ்நாக்ஸ் உங்களுக்கு…”

தான் கொண்டுவந்ததை டீப்பாயில் வைத்துவிட்டு செல்லவும் அதிரூபன் முகம் கழுவ மட்டும் தோன்றாமல் குளித்துவிட்டு வேறுடைக்கு மாறி வந்தான். மணியை பார்க்க அது ஐந்தரையை காட்டியது.

துவாரகாவிடம் லேசாக அசைவுகள் தெரிய அவளருகே அமர்ந்தவன்,

“துவா…” என அழைக்க கஷ்டப்பட்டு கண்களை திறந்தவளுக்கு விழிகள் அப்படி எரிந்தது.

“கண்ணெல்லாம் எரியுது மாமா…” கண்களை கசக்கிக்கொண்டே எழுந்து அமர்ந்தவள் அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள்.

அவளின் பார்வையும், முகமாறுதலும் அதிரூபனுக்குள் கிலியை பரப்பியது.

“இது உங்க வீடா?…” சந்தேகமாய் கணவனை கேட்க பதில் சொல்லாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அதிரூபன்.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement