Advertisement

மின்னல் – 7

                துவாரகா கழுத்தின் மீது ரத்தினசாமி கை வைக்க சரியாய் தனக்கு பின்னே இழுத்து கொண்டான் அதிரூபன்.

அந்த ஷணம் ரத்தினசாமிக்கு தான் இங்கே எதற்கு வந்திருக்கிறோம்? யார் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கவிருக்கிறது என்று எதுவும் நினைவிலில்லை.

அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் துவாரகா தன் குடும்பத்தின் மத்தில் தனக்கு முன் தன் மகனுக்கு நெருக்கமாய் நின்றுகொண்டிருந்தது தான்.

அதிலும் மணமகள் கோலத்தில் அவளுடன் அதிரூபன் சேர்ந்து வாங்கிய ஆசிர்வாதம் அவருக்கு நொடியில் அனைத்தையும் விளக்கி அவரை மதம் பிடித்த யானையாக மாற்றியது.

அனைத்தையும் மறந்தார். துவாரகாவை இங்கேயே கொன்றுபோடும் அளவிற்கு ஆத்திரம் பொங்கியது.

“விட்டுவச்சது தப்பால போச்சு…” என்று தன் கையை முறுக்கியவர் மகனை பார்த்து,

“அதிபா, என்ன காரியம் பண்ணிட்டிருக்க?…” மகன் மீதான பாசத்தை துவாரகா மீதான ஆவேசம் அங்கே வென்றுகொண்டிருந்தது.

“பார்த்ததும் நீங்களே கணிச்சிருப்பீங்க இல்லையாப்பா?…” அவன் திருப்பி கேட்க இத்தனை  பேர் மத்தியில் பதில் சொல்லாமல் கேள்வியாய் கேட்க வெகுண்டு நின்றார்.

“நீ நகர்ந்து நில்லு அதிபா. இவள் இங்க இருக்கிறது சரியில்லை. நீ எடுத்திருக்கிற முடிவும் சரியில்லை. இதுக்கு நான் ஒருக்காலும் ஒத்துக்க முடியாது…”

“இதுதான் என் விருப்பம் அப்பா. என்னால துவாரகாவை விடமுடியாது…”

“இத்தனை பேர் கூடியிருக்கிற சபையில என்னை அவமானப்படுத்தனும்னு முடிவு பண்ணியிருக்கியா? இன்னும் கொஞ்ச நேரத்துல சி.எம் வரப்போறாரு. இப்படி என் மானத்தை வாங்கனும்னா காத்துக்கிட்டு இருந்த?…”

கோபம் கரையுடைத்தாலும் குரலை அடக்கியே உறுமினார். வெளியில் கேட்டுவிடாதபடிக்கு ஓரளவு தன்னை கட்டுக்குள் வைத்தே பேசினார்.

“ஒருவேளை இவங்களுக்கு ஆதரவு குடுக்கனும்னு நினைச்சு பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கனும்னு முடிவு பண்ணுனியாப்பா?…”

அவர் கேட்டதும் ஒருநொடி ஆச்சரியப்பட்டவன் பின் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.

“வாட்? குட் ஜோக்ப்பா. இதிலிருந்தே உங்களோட அறியாமையை என்னால புரிஞ்சுக்க முடியுது…” என்று சொல்லி அடக்கமாட்டாமல் சிரித்தான்.

“அதிபா, என்ன கிண்டலா?…” அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர் என்று பெயர்பெற்ற ரத்தினசாமியால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘எனக்கா அறியாமை?’ என்று அவரின் மனம் வெதும்பியது.

“பின்ன என்னப்பா? நீங்க என்ன பேசறீங்கன்னு உங்களுக்கு புரியுதா?…” இன்னமும் நக்கலாகவே பேசியவனை கண்டு கடுப்பானவர்,

“எல்லாம் புரிந்துதான் சொல்றேன். நீ செய்யும் காரியத்திற்கு வேற என்ன அர்த்தம் இருக்க முடியும்?…” என்றவரை இப்பொழுது முழு தீவிரத்தோடு பார்த்தவன்,

“ஒரே அர்த்தம் தான். லவ்…”

“இதை என்னை நம்ப சொல்றியா?…”

“அது உங்க விருப்பம்…” விட்டேற்றியாக பேசியவனை இயலாமையோடு பார்த்தவர்,

“நீ நினைக்கிறது நிச்சயம் சரியா வராது அதிபா. ஒரு அப்பாவா நான் சொல்றதை கேளு…” கிட்டத்தட்ட கெஞ்சவே செய்தார்.

“என்னை பற்றி தெரிந்திருந்தும் நீங்க இப்படி பேசறது தான் ஆச்சரியமா இருக்கு. நான் எடுத்த முடிவை இதுவரை யாருக்காகவும் மாத்தினதில்லை. என்னைக்கும்  மாத்திக்கவும் மாட்டேன்…”

ஸ்திரமாய் சொல்லிவிட்டு பிடிவாதமாய் நின்ற மகனை கவலையோடு பார்த்தார் ரத்தினசாமி.

தன் பின்னால் ஒட்டிக்கொண்டு நின்றிருந்த துவாரகாவை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்தவன்,

“இவளுக்கு பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கற அளவுக்கு என்ன குறை இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?. நீங்க கோடி கோடியா கொட்டிகுடுத்தாலும் இப்படி ஒருத்தி உங்களுக்கு மருமகளா கிடைக்கமாட்டா. அதுக்குன்னு கொட்டிகுடுக்க சொல்லலை. எதுவும் தேவை இல்லை…” என்றவன்,

“துவாரகாவை நான் விரும்பறேன். அவளை தவிர வேற யாரையும் என்னால என் வாழ்க்கைக்குள்ள வரதை அனுமதிக்க முடியாது. உங்க கௌரவத்துக்காக என் வாழ்க்கையை நான் இழக்க முடியாது…” வீம்பாய் சொல்லி நிற்க,

“இதை நீ முதல்லையே சொல்லியிருக்கலாமே அதி. இப்ப அஷ்மிக்கும், அவர் அப்பாவுக்கும் என்ன பதில் சொல்ல? இப்படி கடைசி நேரத்துல பொண்ணு மாறினா பார்க்கிறவங்க, நம்ம சொந்த பந்தம் எல்லாம் என்ன பேசுவாங்க?…”

பத்மினி பதறிக்கொண்டு கேட்க அவரையே கண்ணீருடன் துவாரகா பார்த்திருந்தாள். அன்னபூரணி அருகில் கூட வரவில்லை. அவர் ஒருபுறம் குனிந்த தலை நிமிராமல் நின்றிருக்க ஸ்வேதாவின் புண்ணியத்தில் விஷால், சந்தோஷ், அர்னவ் என மொத்த குடும்பமும் ஒன்றாக நின்றனர்.

விஷாலை பார்த்ததும் உடல் நடுங்க அதிரூபனை விட்டு விலக முயன்றாள் துவாரகா. அவளின் கணநேரத்தில் ஒதுக்கத்தை உணர்த்தவன் விடாமல் இறுக்கிப்பிடித்து அவளின் பார்வை சென்ற திக்கில் பார்க்க அங்கே விஷால் நின்றிருந்தான்.

அதுவரை அதிரூபனிடம் இருந்த நிதானம் எங்கோ பறக்க விஷாலை பார்த்த பார்வையில் அவன் எரிந்து சாம்பலாகாதது ஒன்றுதான் மிச்சம். அப்படி ஒரு ஜுவாலை.

“மாமா, பயமாயிருக்கு. நெஞ்செல்லாம் அடைக்குது…” என முணங்கியபடி அவனின் தோளில் முகம்புதைக்க அவளை தாயுமானவனாய் தான்கிக்கொண்டவன் உச்சியில் உதடுபதித்து நிமிர்ந்தான்.

‘இவளை எப்படி இந்த குடும்பத்தில் இவர்கள் மத்தியில் சந்தோஷமாய் வாழவைக்கபோகிறேனோ?’ என்ற சஞ்சலம் வெகுவாய் ஆட்டிப்படைத்தது.

“ஒண்ணுமில்லடா. நான் தான் பக்கத்திலையே இருக்கேன்ல…” அவளின் முதுகில் தட்டிகொடுத்தவன் மொத்த கவலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு நிமிர,

“இப்ப இந்த மேடையில எங்க கல்யாணம் நடக்கனும். நடந்தே ஆகனும்…” பிடிவாதமாய் கூற,

“என் ரத்தம் உனக்கே இவ்வளவு தைரியம்னா உன்னை பெத்த எனக்கு எவ்வளவு இருக்கும். அதிபா. இவ இருக்கறதால தான பித்துபிடிச்சு பேசற. இவளே இந்த உலகத்துல இல்லாம பண்ணிட்டா…” என்று வெறிகொண்டு கத்தியவர் விஷால் அர்னவ் புறம் திரும்பி,

“விஷால். கூப்பிடுடா நம்ம பசங்களை. இந்த நாயை இழுத்துட்டு போய் காத்தோட காத்தா கரைச்சுவிட்டுருங்கடா…” என்று சொல்ல விஷாலை மிக தீர்க்கமாய் பார்த்தான் அதிரூபன்.

அவனின் பார்வையின் வேகத்தில் அவர்களை நெருங்கும் துணிச்சல் கொஞ்சமும் வரவில்லை விஷாலிற்கு. அவனுக்கு தெரிந்துபோனது துவாரகாவை தாங்கள் கடத்தியது அதிரூபனுக்கு தெரிந்துவிட்டது என.

அதிலும் அதிரூபனின் அணைப்பில் இருந்த துவாரகாவின் பயப்பார்வையும் அதைக்கொண்டு அதிரூபன் தன்னை பார்த்த பார்வையும் விஷாலை கொல்லாமல் கொன்றது.

உண்மையில்  துவாரகா அன்று பயந்து கெஞ்சியதில் கிடைத்த ஒருவித போதை, இன்று அதே பயந்த பார்வை அமிலத்தில் மூழ்கிய உணர்வை கொடுக்க  செத்துதான் போனான்.

சந்தோஷ் சொல்லும்பொழுதெல்லாம் பெரியப்பாவிற்காக எதுவும் செய்வேன் என மார்தட்டியவன் இப்போது தன் அண்ணனின் முன் விரலையும் அசைக்கமுடியாமல் நின்றுகொண்டிருந்தான்.

“அண்ணே பொறுமையா இருங்க. முதல்ல தம்பிக்கிட்ட சமாதானமா பேசி அஷ்மி கழுத்துல தாலி கட்டவைப்போம். அதுக்கப்பறம் இந்த பொண்ணை என்ன செய்யலாம்னு யோசிப்போம். இது பிடிவாதம் பிடிக்கிற நேரமில்லைண்ணே…”

சங்கரன் தன்மையாக அவரிடம் எடுத்துக்கூறினாலும்  அவருக்கும் துவாரகாவை கண்டு வெறுப்புதான். விஷாலிடம் சொன்னதை தானே செய்துவிடுவார் தான். ஆனாலும் அதற்கு இது நேரமல்ல என கணக்குபோட்டார்.

இவர்கள் அனைவரும் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்த துவாரகாவிற்கு அதிரூபன் ஒருவனே தனக்கு காவல் என்னும் எண்ணம் இன்னும் அதிகமாய் வலுப்பெற்றது.

வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நேரத்தில் ஒரு மரத்துண்டு கிடைத்தால் எப்படி இருக்கும்மா அப்படி ஒரு மனநிலையில் தன்னை உயிர்காக்க வந்தவனாய் அவனை இன்னும் அழுத்தமாய் கட்டிக்கொண்டாள்.

“இத்தனை பேர் இருக்கோம், வெக்கமே இல்லாம அண்ணனை எப்படி கட்டிப்புடிச்சிருக்கா  பாருங்கம்மா…” ஸ்வேதா அன்னபூரணியின் காதைகடிக்க அவளின் கையை வலிக்குமாறு கிள்ளிவைத்தான் சந்தோஷ்.

“வாயை மூடு ஸ்வேதா. அவங்க உனக்கும் மூத்தவங்க. வயசுக்கு மீறுன பேச்சு உன்கிட்ட ரொம்ப அதிகமாயிடுச்சு. வாயை மூடிட்டு சின்னபொண்ணா நடந்துக்கோ. இல்ல அடிச்சு முகரையை பேத்திடுவேன் ராஸ்கல்…” என்று கோபமாய் சந்தோஷ் அவளிடம் பேச அதிர்ந்து வாயை கப்பென மூடிக்கொண்டாள் ஸ்வேதா.

அன்னபூரணி மகனை பார்க்க அவனோ அவரின் புறம் திரும்பவும் இல்லை.

“அதிபா, அப்பா சொல்றதை கேளுய்யா. உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க. அஷ்மிதா ரொம்ப நல்ல பொண்ணு…” சங்கரன் பேசிக்கொண்டிருக்க,

“கொஞ்சம் நாங்களும் பேசலாமா?…” என்று ராஜாங்கத்தின் குரல் பின்னாலிருந்து கேட்க அனைவருமே அதிர்ந்து போயினர்.

ராஜாங்கம் இங்கே இருப்பார் என எவரும் நினைக்கவில்லை. அவர் வந்ததை கவனிக்கவும் இல்லை. அஷ்மிதாவுடன் முன்னால் வந்து நின்றவர்,

“என்ன பேசிட்டிருக்கீங்க மிஸ்டர் ரத்தினசாமி?…” அவரின் பேச்சில் தெரிந்த ஒட்டாத தன்மையும் மிஸ்டர் ரத்தினசாமி என்ற அழைப்பும் அனைவரையும் பதறச்செய்தது.

அதிரூபன் துவாரகாவை அங்கிருந்த சேரில் அமர்த்தி தண்ணீர் பாட்டிலை திறந்து அவளுக்கு கொடுக்க காதில் புகைவராத குறையாய் அதை கண்ட ரத்தினசாமி அதை தட்டிவிட போனார்.

அதை கண்டுகொண்ட அஷ்மிதா தன் தந்தைக்கு கண்ணை காட்ட ரத்தினசாமியின்  கையைபிடித்து இழுத்து நிறுத்திய ராஜாங்கம்,

“என்ன பண்ண போறீங்க? கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா? அந்த பொண்ணு உங்களோட அராஜகத்தால பயந்துபோய் இருக்குது. ஒரு வாய் தண்ணீர் குடிக்க விடாத அளவுக்கு இரக்கமில்லாதவங்களா நீங்க?…” என்றவர்,

“அங்க பாருங்க அந்த பொண்ணை எப்படி பார்த்துக்கறார் உங்க பையன். எந்தளவுக்கு அந்த பொண்ணுமேல காதலா இருக்கார்ன்னு நீங்க முதல்ல தெரிஞ்சுக்கோங்க…”

“இல்லைங்க அவன் ஏதோ விவரமில்லாம…” சங்கரன் ஆரம்பிக்க,

“எதுங்க விவரமில்லை. உலகம் பூரா சக்சஸ்ஃபுல்லா பிஸ்னஸ் பன்ற உங்க பையன் விவரமில்லாதவரா? அப்போ அப்படி விவரமில்லாத பையனை நான் என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் செய்துவைக்க முடியும்?…”

சங்கரனின் கேள்வியை வைத்தே அவரை மடக்கியவர் ரத்தினசாமியிடம் திரும்பினார்.

“உங்க சுயநலத்துக்காக இப்படி இன்னொரு பொண்ணுமேல உயிரா இருக்கிற பையனை நம்ம கௌரவத்துக்காக கட்டாயப்படுத்தி கட்டி வச்சா நாளைக்கு அவங்க வாழ்க்கை என்னாகும்?…”

ராஜாங்கம் இப்படி பேசுவார் என எதிர்பார்க்காத ரத்தினசாமி அதிரூபன் துவாரகாவை விட்டுவிட்டு ராஜாங்கத்திடம் அவரை சமாதானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் பேச ஆரம்பித்தார்.

“சம்பந்தி நான் சொல்றதை கேளுங்க. இப்ப உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னா இன்னைக்கு கூடியிருக்கிற ஜனங்க வாய்க்கு வந்தபடி பேசுவாங்க. நான் சொல்றதை விட நீங்க அதிபன்கிட்ட சொன்னா கண்டிப்பா கேட்பான்…”

“என்னன்னு கேட்க சொல்றீங்க? என் பொண்ணை வேண்டாம்னு மணமேடைக்கு வந்த பின்னால சொன்னவர்ட்ட என் பொண்ணுக்கு வாழ்க்கை குடுங்கன்னு கேட்கனுமா நான்? நெவர்…” என்றவர் அதிரூபனை பார்த்து திரும்பி நின்று,

“இன்னைக்கு வந்திருக்கிற உறவுக்காரங்களுக்காக என் பொண்ணுக்கு அவளுக்கு ஒத்துவராத வாழ்க்கையை நான் ஏன் ஏற்படுத்தி குடுக்கனும்? வந்திருக்கிறவங்க இன்னைக்கு பேசிட்டு நாளைக்கு அடுத்த வேற ஒருத்தரை பத்தி பேசிட்டு போய்டுவாங்க. அதுக்காகவெல்லாம் மேரேஜ் பண்ணுவாங்களா?…”

ரத்தினசாமியிடம் கேட்டுக்கொண்டே அதிரூபனை பார்த்து கண்ணடிக்க எவரும் உணராதவகையில் பார்வையில் மெச்சுதல் காட்டினான் அதிரூபன்.

“சபாஷ் டாடி. பின்றீங்க நீங்க…” என அவருக்கு விழிகளாலே கைகுலுக்கிக்கொண்ட அஷ்மிதா முகத்தை மட்டும் பாவமாய் வைத்துக்கொண்டாள்.

தனக்கும், தன் தந்தைக்கும் இதில் பங்கு கிடையாது,  தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற வரையில் தான் ரத்தினசாமி அடக்கி வாசிப்பார். இல்லையென்றால் அவரின் அணுகுமுறையே வேறாக இருக்கும் என்பதால் அதிரூபனின் திட்டம் இப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது.

ராஜாங்கத்தை பிடிக்காது என்றாலும் அஷ்மிதாவிற்காக இறங்கி வந்து பேசினார் பத்மினி.

“அண்ணே, என் புள்ளைக்கிட்ட நான் பேசறேன். நீங்க கொஞ்சம் தயவு பண்ணுங்க. அஷ்மிதா தான் என் மருமகன்னு நான் முடிவே பண்ணிட்டேன். என்னால எப்படி அவளை விட்டுக்கொடுக்க முடியும்?…” பத்மினி பேச  அஷ்மிதா அதிரூபனை பார்த்து புருவம் உயர்த்தி கண்ணடிக்க அவளை முறைத்தவன்,

“அம்மா என்னால அஷ்மியை கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அவ என்னைக்குமே என் ப்ரென்ட் தான். நாங்க ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்…” என கோபமாய் சொல்ல அவனிடம் திரும்பியவர்,

“இதை உனக்கு அவதான்னு நாங்க பேசினப்பவே சொல்லியிருக்கனும் அதி. உன்னோட காதலை நிறைவேத்திக்க இன்னொரு பொண்ணோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அதிகாரத்தை உனக்கு யார் குடுத்தது?…” என்றவர்,

“இத்தனைக்கும் அவ உன்னோட ப்ரெண்ட். இந்த கல்யாணம் நின்னு போய் அதனால அவளோட எதிர்கால பாதிக்கப்பட்டா யார் பொறுப்பாகறது? இத்தனை நாள்ல அந்த பொன்னுக்கும் உன் மேல ஒரு ஈடுபாடு வந்திருந்தா? பெண் பாவம் பொல்லாதது அதி…”

“அம்மா தப்புதான் நான் அஷ்மிக்கிட்ட சொல்லியிருக்கனும் தான். ஆனா அது துவாரகாவுக்கு ஆபத்தா முடிஞ்சிருக்கும். உங்களுக்கு தெரியாததா? ஒருவேளை சொல்லியிருந்தா சம்மதிச்சிருப்பீங்களா? இல்லை அப்பாட்ட பேசி சம்மதம் வாங்கியிருப்பீங்களா?…”

அவனின் கேள்வியில் இருந்த நியாயம் சுட தலைகுனிந்துகொண்டார். அதற்கு மேல் அவனிடம் என்ன பேச அவருக்கு புரியவில்லை.  முகத்தை மூடிக்கொண்டு விசும்ப அஷ்மிதாவிற்கு மனம் கேட்கவில்லை.

“ஆன்ட்டி, இங்க பாருங்க…” என முகம் நிமிர்த்தி அவரின் கண்ணீரை துடைத்தவள்,

“என்னைப்பத்தி கவலைப்படாதீங்க. நான் இதை சந்தோஷமாவே ஏத்துக்கிட்டேன். என் ப்ரெண்ட்டோட சந்தோசம் தான் எனக்கு சந்தோசம். அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு குடுங்க. அதுதான் பெத்தவங்க பிள்ளைங்களுக்கு செய்யற ஆசிர்வாதம்…”

“அதுக்குன்னு எங்கிருந்தாலும் வாழ்கன்னு எல்லாம் பாடமாட்டேன். என் கண்ணுமுன்னால தான வாழப்போறான். கல்யாணம் பண்ணிக்கட்டும். இப்ப அவனுக்கு இன்னொரு கடமையும் சேர்ந்திருக்கு. சீக்கிரமே எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை அவனே பார்த்து முடிச்சுவைப்பான்…” என்றவள்,

“ஆமாம் தானேடா?…” என புன்னகை பொங்க அதிரூபனிடம் கேட்க அவன் அவளை நோக்கி கை நீட்டினான். அவனின் கைபிடித்தவளை தோள் சாய்த்துக்கொண்டவன்,

“தேங்க்யூ டா…” என்று அணைத்துக்கொள்ள அஷ்மிதா துவாரகாவின் கைபற்றிக்கொண்டாள். எப்போதடா அவள் தன்னருகில் வருவாள் என காத்திருந்ததை போல அவளின் இடையை கட்டிக்கொண்டாள்  துவாரகா.

இதை பார்த்திருந்த ஸ்வேதாவிற்கு அஷ்மிதாவை நினைத்து ஆச்சர்யமாக போனது.

விஷாலும் அர்னவும் அஷ்மிதாவையே பார்த்திருந்தனர். விஷாளுக்கோ ஒரே குற்றவுணர்ச்சி.

‘ஒருவேளை தான் செய்த காரியத்தின் விளைவாக தான் அண்ணன் இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாரோ? இதனால் அஷ்மிதாவின் வாழ்க்கை போய்விட்டதே?’ என பரிதாபம் கொண்டான் அவள் மேல்.

இதற்குள் ராஜாங்கம் மேலும் ரத்தினசாமியை லாக் செய்ய போனிலேயே ஆவன செய்துவிட்டு வந்துவிட்டார்.

“ரத்தினசாமி, இப்போவாச்சும் உங்க பையனோட ஆசையை பூர்த்திபண்ணுங்க. பசங்க சந்தோஷமா இருந்தா தானே நமக்கும் மகிழ்ச்சி…”

ராஜாங்கம் என்ன சொன்னாலும் ரத்தினசாமியால் துவாரகாவை தன் மருமகளாக நினைத்தும் பார்க்கமுடியவில்லை. எப்போது சிக்குவார்கள்? துப்பிவிடலாம் என்று உள்ளம் முழுதும் விஷமாய் தேக்கிவைத்திருக்க அவளை தன் வீட்டினுள் வளையவர விடுவதா?

அஷ்மிதாவை திருமணம் செய்யாவிட்டலும் பரவாயில்லை. இந்த திருமணமே நின்றுவிட்டதென அறிவித்து யார் என்ன பேசினாலும் பரவாயில்லை. ஆனால் தன் மகன், தன் அதிபன் அவளின் கழுத்தில் தாலிகட்டிவிடகூடாதென உறுதியானார்.

மகன் அருகிலே நிற்பதையே பொறுத்துக்கொள்ள முடியாதவருக்கு வாழ்க்கை முழுவதும் தன் குடும்பத்தில் வந்து வாழ்ந்து தன் வீட்டின் மூத்த மருமகளாய் அதிகாரம் செய்து தங்கள் வம்சத்தை வயிற்றில் சுமந்து தன் சாம்ராஜ்யத்தின் ராணியாக கோலோட்சவிட்டுவிடுவாரா?

“விடமாட்டேன். சம்மதிக்க மாட்டேன். இந்த கல்யாணம் நடக்காது…”

ரத்தினசாமி இப்படித்தான் யோசிப்பார் என எண்ணியிருந்த ராஜாங்கம் ரத்தினசாமி சொன்னதை காதில் வாங்காதவர் போல,

“நீங்க ஏன் தயங்கறீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுதுங்க. சி.எம்ட்ட என்ன சொல்றதுன்னு தானே? அவர் எதுவும் தவறா நினைச்சுப்பாருன்னு தானே?…”

ராஜாங்கம் கேட்க அதையே காரணமாக சொல்லி இதை தடுத்துவிடலாம் என ரத்தினசாமி நினைக்க அதிலும் மண்ணை அள்ளிக்கொட்டினார் ராஜாங்கம்.

“அவர்க்கிட்ட நானே பேசிட்டேன். அவர்க்கு ரொம்ப சந்தோஷம். இங்க தான் கிளம்பி வந்துட்டு இருக்கார். இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல இருப்பார்…”

“என்ன சந்தோஷமா?…” என அதிர்ந்து கேட்க அஷ்மிதாவிற்கு ரத்தினசாமியின் முகம் போகும் போக்கை காண சிரிப்பு பீறிட்டது.

“மாட்னாருடா மயில்சாமி…” என அதிரூபனிடம் சொல்ல அவன் அவளை முறைத்தான்.

“இது ஒன்னை மட்டும் நல்லா கத்துவச்சிருக்க…” என்று திரும்பிக்கொண்டாள்.

“ஆமா மிஸ்டர் ரத்தினசாமி. இங்க நடந்த ஆர்க்யூமென்ட் எதையும் நான் சொல்லலை. நீங்க உங்க பையனோட காதல் விவரம் தெரிஞ்சமும் பெருந்தன்மையா முழு மனசோட அந்த பொண்ணை ஏத்துக்கிட்டதா சொன்னேன். அவருக்கு அவ்வளவு சந்தோசம். நேர்ல வந்து உங்களை பாராட்டனும்னு சொன்னார்…” ராஜாங்கம் சொல்ல தலையில் கைவைக்காத குறைதான்.

என்றைக்குமே ரத்தினசாமிக்கு ஒரு குறையுண்டு. தான் மத்திய அமைச்சராக இருந்தும் தனக்கு கிடைக்காத சில சலுகைகள் தொழிலதிபரான ராஜாங்கத்திற்கு சி.எம்மிடம் கிடைக்கும். அதும் முதலமைச்சரின் உறவினர் ராஜாங்கம் என்பதால் தான்.

ராஜாங்கத்தின் சம்பந்தி என தான் ஆகிவிட்டால் முதலமைச்சருக்கு தான் இன்றியமையாத ஒருத்தராக மாறிவிடவும், ராஜாங்கத்தின் மூலம் சில காரியங்கள் ஆகவேண்டியதாக இருப்பதனாலும் தான் இந்த சம்பந்தத்தையே ஏற்படுத்தியது.

அதிலும் ராஜாங்கத்திற்கு அதிரூபன் மேல் அப்படி ஒரு அபிமானம் உண்டு. ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல நான்கு என கணக்குப்போட்டவரின் மொத்த திட்டமும் கணமும் மணல்கோட்டையாய் சரிவதை கண்டு நெஞ்சுவலியே வந்துவிடும் போல ஆனது ரத்தினசாமிக்கு.

இனி இதிலிருந்து திரும்ப முடியாது என்பது மொத்தமாய் புரிந்துவிட நிமிர்ந்து மகனை பார்த்தார்.

அத்தனை கோபத்திற்கு பின்னும் அவனின் முகம் பார்த்ததும் அவரின் பாசம் அவனிடம் மண்டியிட்டது.

‘இந்த பொண்ணை தவிர வேற எந்த பொண்ணை நீ கை காமிச்சிருந்தாலும் கண்டிப்பா அப்பா சந்தோஷமா சம்மதிச்சிருப்பேன்ப்பா அதிபா. என்னால ஏத்துக்கவே முடியலைப்பா. இந்த பொண்ணால நான் உன்னை வெறுத்திட கூடாது அதிபா’

மனதிற்குள் புலம்பியவர் கண்கள் கசிந்துவிடும் போல ஆனது. நொடியில் சுதாரித்துகொண்டவரின் அரசியல் மூல இன்னொரு கணக்கையும் வேகமாய் போட ராஜாங்கத்தை பார்த்தார்.

ரத்தினசாமி ஏதோ பேச முயல்கிறார் என்பது தெரிய என்னவென பார்த்தார் ராஜாங்கம்.

“சம்பந்தி உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா இன்னொருயோசனை சொல்றேன். உங்க விருப்பம் தான்… என்ற ரத்தினசாமி,

“ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நிக்க வேண்டாமே. அஷ்மிதாவுக்கு சம்மதம்னா விஷாலுக்கு குடுக்கறேங்களா?…”

அவர் கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்து பார்க்க ஏற்கனவே கவலையோடு பார்த்திருந்த விஷால் இன்னும் ஆழமாக அஷ்மிதாவை பார்க்க அவளோ,

‘கண்ணுமுழியை நோண்டிடுவேன்’ என்று மிரட்டலாய் கண்களை உருட்டி மிரட்டி யாருமறியாமல் கையை காண்பிக்க அரண்டுபோனவன்,

“அம்மா பேய்… என திரும்பிக்கொண்டான்.

‘அந்த பயம் இருக்கட்டும்’ என மிதப்பாய் அவனை பார்த்துவிட்டு தன் தந்தையை காண அவரும் அஷ்மிதாவை பார்த்துக்கொண்டே,

“இல்லைங்க. சரிவராது. என்னதான் இருந்தாலும் அண்ணனுக்கு பேசின பொண்ணை தம்பிக்கு கட்டிவைக்கிறது என் மனசுக்கு சரியாப்படலை. அதோட என் பொண்ணுக்கும் இதுல விருப்பம் இருக்காது. இதை இப்படியே விட்டுடலாம்…” ராஜாங்கம் முடிவாய் சொல்லிவிட அங்கே மறுபேச்சில்லை.

அவருக்கு விஷாலுக்கு கொடுக்க விருப்பமே இல்லை. ஏற்கனவே துவாரகாவிற்கு நடந்ததை அஷ்மிதா சொல்லியிருந்தபடியால் ராஜாங்கத்தின் பார்வையில் விஷாலின் மீது அப்படி ஒரு வெறுப்பு உண்டாகிவிட்டது.

“இப்படியே நின்னுட்டே இருக்கவேண்டாம். போய் ஆகவேண்டியதை பார்ப்போம். சீப் கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. பொண்ணும், மாப்பிள்ளையும் இங்க இருக்கட்டும். நாம போய் வந்தவங்களை கவனிப்போம்…”

ராஜாங்கம் அனைவரையும் துரிதப்படுத்தி அங்கிருந்து கிளப்ப அனைவரும் மனமே இல்லாமல் கலைந்து சென்றனர். அஷ்மிதாவை மட்டும் அங்கே விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் தன் மணப்பெண் கோலத்தை கலைத்துவிட்டு வேறொரு உடையில் மிக சிம்பிளாய் தயாராகி வர எழுந்து சென்று கட்டிகொண்டாள் துவாரகா.

“நீங்க ரொம்ப நல்லவங்க டாக்டர். நீங்க பாவம்…” என மாற்றி மாற்றி சொல்ல,

“ரொம்ப பாவம் பார்க்கறியே? பேசாம நானே அவனை கட்டிக்கட்டுமா?…” என கேட்டதும் தன் வாயை கப்பென மூடியவள் பரிதாபமாக பார்க்க மளுக்கென்று கண்ணீர் துளிகள் விழியோரம் பொங்கிவிட்டது.

அதை பார்த்த அஷ்மிதா,

“அச்சோ கல்யாணப்பொண்ணு நான் என்ன சொன்னாலும் நம்பிடறதா?…” என கண்ணீரை துடைக்க,

“பயந்துட்டேன்…” என துவாரகா சொல்ல,

“ஆத்தா ஆரம்பிச்சுடாத. நீ பயந்துட்டேன்னு ஆரம்பிச்சாலே எனக்கு பயமாகிடுது…” என்று கைக்கூப்பி கிண்டலாய் சொல்ல சிணுங்கினாள் துவாரகா.

“கொஞ்சம் நல்லா தான் சிரியேன். சிரிச்சா அழகா இருப்ப. அப்பத்தான் எனக்கு உன்னை பிடிக்கும்…”

“என்ன நிஜமாவே உங்களுக்கு புடிக்குமா டாக்டர்?…” தலை சாய்த்து வியப்பாய் அவள் கேட்ட பாவனையே அஷ்மிதாவை கொள்ளை கொண்டது. அதிரூபனை விட்டுவைக்குமா?

“ஹ்ம்ம் ரொம்ப பிடிக்கும். எப்ப தெரியுமா?…”

“நான் விளையாட்டுக்கு சொல்றதை எல்லாம் நம்பற நீ அவன் சொன்னதை எதையுமே நம்பமாட்டேன்னு தலைகீழா நிக்கவச்ச பாரு. அப்ப இருந்து அவ்வளோ புடிக்கும். இவன் தான் எல்லாரையும் ஓடவச்சு பார்த்திருக்கேன். இவனையே ட்ரில் வாங்கின பாரு. அப்ப இருந்து நான் உன்னோட பெரிய ஃபேன் ஆகிட்டேன்…”

அஷ்மிதா சொல்ல சொல்ல கூச்சம் தாளாமல் தலைகுனிந்துகொண்டாள் துவாரகா. வெட்கத்தில் துவாரகா கட்டியிருந்த பிங்க் நிற புடவையை ஒத்திருந்தது அவளின் வதனம். கண்ணை திருப்பமுடியாமல் அவளையே பார்த்திருக்க,

“முகூர்த்த நேரம் முடியபோறது, பெண்ணை, மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ…” என்று ஐயர் கதறும் குரல் கேட்க,

“இங்க எல்லாமே உல்டாவா இருக்குடா. மாப்பிள்ளை போய் அதுக்கு பின்னால தான் பொண்ணு போகனும். இங்க அப்படி இல்லை. இன்னைக்கு உங்கப்பாவோட டான்ஸ் பெர்பாமென்ஸ் பார்க்கனும்னு நினைச்சேன்.அதுவும் முடியலை…”  என சலித்துக்கொள்ள,

“அதுதான் அந்த சிறப்பான தரமான சம்பவத்தை உங்கப்பா செஞ்சுட்டாரே. அது போதுமே…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே சந்தியா வந்துவிட்டாள் அவர்களை அழைத்துசெல்ல. வேறு ஒருவரும் வரவில்லை.

அவளின் முகத்திலிருந்தே நடந்ததை தெரிந்துகொண்டாள் என்பது புரிந்தாலும் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. மிதமான புன்னகையோடே மூவரையும் பார்த்தவள்,

“நேரமாச்சு போகலாம் அண்ணா…” என சொல்லி பொதுவாக பார்த்தாள்.

சந்தியாவிற்கு ஸ்வேதா மூலம் அனைத்தும் சொல்லப்பட்டிருக்க சந்தியாவின் என்னமோ அண்ணன் விருப்பம், அவன் வாழ்க்கை. அவன் தேர்ந்தெடுத்தது தவறாகவாய்ப்பில்லை.

இத்திருமணத்தால் அவன் சந்தோஷமாக இருப்பானென்றால் அது ஒன்றே போதும் என்று சொல்லி ஸ்வேதாவிற்கும் சில பல அட்வைஸ்களை சொல்லி சென்றாள். அப்படி ஒரு மரியாதை சந்தியாவிற்கு அதிரூபன் மேல்.

மணமேடைக்கு அருகில் வந்ததுமே பெண் மாறியதால் கூட்டத்தில் கசகசவென பேச்சுக்கள் கிளம்ப அதை கண்டுகொள்ளாமல் மேடையில் அமரப்போனவன் ஆணியடித்ததை போல நிற்கும் துவாரகாவை திரும்பி பார்த்தான். அவள் பார்த்த திக்கில் திரும்பியவனின் முகம் இறுகியது.

துவாரகாவை இழுத்துக்கொண்டு அங்கே சென்றவன் அன்னபூரணியையும் வைத்தியநாதனையும் பார்த்துவிட்டு,

“துவா இவங்கதான் என்னோட அத்தையும் மாமாவும். இனிமே உனக்கு சித்தப்பா, சித்தி…” என அறிமுகப்படுத்த அவனின் குரலில் இருந்த எள்ளலில் வாய் வரைவந்த வார்த்தை தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது.

‘அப்பா’ என கதறிய மனதை அடக்கியவள் தன் அன்னையின் நினைவில் கண் கலங்கினாள்.

“அத்தை இது துவாரகா. ரூம்லயே பார்த்திருப்பீங்கள. இவளுக்கு அம்மா மட்டும் தான். அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை. அப்பா செத்து பலவருஷம் ஆகிடுச்சு…”

இரக்கமின்றி அவன் சொல்லிய வார்த்தைகளை கேட்டதும் அன்னபூரணி அதிர்ந்து பார்க்க வைத்தியநாதனின் முகமோ சவத்தை ஒத்திருந்தது.

‘அப்படி சொல்லாதப்பா’ என அழவேண்டும் போல இருந்தது அன்னபூரணிக்கு. ஆனாலும் அமைதியாய் கண்ணீர் வடித்தார்.

அவர்களை பார்த்துக்கொண்டே மேடையில் வந்து அமர்ந்தவன் மந்திரங்களை சொல்லிக்கொண்டே துவாரகாவையும் பார்வையால் ஆறுதல் படுத்தினான்.

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புபடை வீரர்கள் சூழ முதலமைச்சர் வர நடுனடுங்கித்தான் போனாள். கை பிடித்து அவளை ஆசுவாசப்படுத்தியவன் முதலமைச்சர் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்க புன்னகையோடு அதை வாங்கி துவாரகாவின் கழுத்தில் முடிச்சிட்டான்.

அனைத்தும் நல்லபடியாக முடிந்தது ரத்தினசாமி கண்முன்னே. நடக்க கூடாததெல்லாம் நடந்துவிட தடுக்கமுடியாத இயலாமையில் தன் நெஞ்சு வலிப்பதை போல இருக்க மார்பை பிடித்துக்கொண்டு துவாரகாவை வெறித்தபடி அமர்ந்துவிட்டார் ரத்தினசாமி.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement